Tuesday, February 10, 2009

ஒட்ட'கம்' இருக்கா?

படம் வரையும் நோட்டுப்புத்தகம் தீர்ந்துப் போனது. அருகிலிருக்கும் கடையில் கிடைத்ததென்னவோ சார்ட் அட்டைகள்தான். வெட்டிக் கொடுத்தபோது, பப்புவுவிற்கும் வெட்டுவதற்குதான் ஆசையேத் தவிர வரையவில்லை! என்ன செய்யலாம்...பப்புவிற்கு வரைதலும் மெழுகுக்-வண்ணக்குச்சிகளும்(crayons) ஆயாசத்தைத் தந்த ஒரு பொழுதினில் செய்தோம் இதை! முதலில் ஒரு படத்திற்கு நான் செய்தேன், அவளைப் பார்க்க வைத்து.



என்னப் படம் வரையட்டும் என்றபோது அவள் சொன்னவை சூரியனும், நிலாவும். அப்புறம் நானாகக் ”ஸ்டார் வரையலாமா” எனக் கேட்டு வரைந்தது நட்சத்திரமும், மேகமும்! ஒருவேளை சூரியனும், நிலாவும் மட்டுமே வரைய முடியும் என்று நினைத்திருந்திருக்கிறாள் போல!!





மற்றப் படங்களில் glue போட அவளுக்கு உதவி தேவைப்பட்டது..சீராக இழுக்க!




வண்ணப் பொடிகள் போடுவதுதான் அவளுக்கு மிகவும் கவர்ந்த பகுதி!








இதோ வெளியே வந்து விட்டது பப்புவின் ஸ்டார், மினுமினுப்போடு!! செய்து முடித்து நிமிர்ந்தபோது எஙகளிருவர் மேலும் மிச்சமிருந்தன, நட்சத்திரத் துகள்கள்...சிரித்துக் கொண்டே உதறியபோதும்!


Monday, February 09, 2009

Height of self-love??

மு.கு : இக்கவிதை என்பது பழைய நோட்டுப்புத்தகத்திலிருந்து அல்ல..எனது டைரியிலிருந்து! :-) எனது அறையில் ஒரு ஆளுயரக் கண்ணாடி இருந்தது. அவ்வப்போதும், அல்லது போகும் போதும் வரும்போது நின்று ஒரு பார்வைப் பார்த்துக் கொள்வது மிகப் பிடித்தமானதொன்றெனக்கு! அதன் மிகைப் படுத்தலே இக்கவிதை!!

என் கண்ணாடிக்கு..

எனக்குள், என் பூட்டிய அறைக்குள்
என் உறவுகளனைத்தும்
உன்னுடனும், புத்தகங்களுடனும்தான்!
என்னுடய உலகினில்
செய்திகள் எதுவாயினும்
நான் பகிர்ந்துக் கொள்வது
உன்னுடன்தான்....
உன்னுடன் மட்டும்தான்!
என் வாழ்வின் அர்த்தங்களையும்
வெற்றிகளையும்
முன்னேற்றங்களையும்
நான் பகிர்ந்துக் கொள்வது
உன்னுடன்தான்!
எனக்குள் நிகவும் மாற்றங்களை
எனக்கு உணர்த்தும் நண்பன்
நீதான்..
நீ மட்டும்தான்!
எனக்குள் நான் நேசிப்பதெல்லாம்
உன்னையும்
உனக்குள் தெரியும் என்னையும்தான்!

என்றும் நேசமுடன்
உன்
நிஜபிம்பம்!!




சொல்ல மறந்தது : "I am sixteen..going on seventeen" - phase டைரி!!

Friday, February 06, 2009

பப்பு டாக் & ali haider song!!

பப்பு கத்திரிக்கோல் எங்கே?

தெரியலயே..

நேத்து கட் பண்ணிட்டு இங்கேதானே வச்சேன்? பார்த்தியா?

இல்ல நான் பாக்கல!

சிறிதுநேரத்தில் ஆயாவின் அலமாரியிலிருந்துக் கிடைக்கப் பெற்றது!!

இருக்கு பப்பு, ஆயாகிட்டே இருந்துச்சு!!

நீதான் எங்கேயாவது தொலைச்சிட்டியோன்னு நினைச்சேன்...சாரி ஆச்சி!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்!!




பப்பு சீக்கிரம் சாக்ஸ் போடு!

......


போட்டுட்டியா?!

......


ஆயா : இதோ, நான் வந்துப் போட்டுக்கறேன், என்னைக் கூப்டுக்கிட்டு போ!

பப்பு: ஆச்சி யாரோட அம்மா?

(சிலசமயங்களில், ஆச்சி உங்க அம்மாவா? என்றும் மாறும்! ஆச்சி பப்புவின் அம்மா, ஆயாவின் அம்மா இல்லை, அதனால் ஆச்சி சொல்வதெல்லாம் பப்புவிடமே..(அதை நாங்கக் கேட்கமாட்டோம் அது வேற விஷயம்!)..மேலும் ஆச்சியோடு செல்லும் உரிமை பப்புவிற்கு மட்டுமே என்பது உள்ளர்த்தம்!)







90களில் உங்கள் பதின்மங்களைக் தொலைத்திருப்பீர்களேயானால், இந்தப் இந்திப் பாப்பாடலை கண்டிப்பாக ரசித்திருப்பீர்கள்! அலி ஹெய்தரின் மற்றப் பாடல்கள் பிறிதொரு பதிவில்! அதுவரை, இப்பாடலைக் கேளுங்கள்!!

Thursday, February 05, 2009

கல்லிலே கலை வண்ணம் கண்டார்..





குட்டிக் குட்டிக் கூழாங்கற்கள் கிடைத்தன!! பேப்பரில், நோட்டுப்புத்த்கங்களில் பெயிண்ட் அடித்து ஓய்ந்துப் போய், டேபிள், அலமாரிகளில் வண்ணம் அடிக்கத் துவங்கியிருந்தாள் பப்பு. ஏதாவது பிசிக்கலாக வேண்டும் போலிருக்கிறது....கூழாங்கற்களில் அடிக்கச் சொல்லலாமேயென்று ஆரம்பித்து...




















இப்படியாகத் தொடர்ந்தது!! ஜெம்ஸை நினைவூட்டுகினறன..இல்லையா?!














இதிலிருந்து ஐந்துக் கற்களைப் எடுத்துப் பத்திரப்படுத்தியிருக்கிறேன்..கல் விளையாட்டு விளையாடும்போது பயன்படுத்திக் கொள்ளலாமென!!

Wednesday, February 04, 2009

பூனையாரே...பூனையாரே



கொஞ்சம் இல்லை..ரொம்பவே பழசுதான். இருந்தாலும் மேட்டர் பஞ்சத்தை தீர்க்க பப்புவை விட்டா வேற யாரு!?!

Tuesday, February 03, 2009

சுட்டிப் பையன் பபிள்ஸ்!!

பபிள்ஸ் சீரிஸ் புத்தகங்கள் பப்புவிற்கு மிகவும் பிடித்தம். பபிள்ஸ் என்ன பண்ணான், அவங்க அம்மா என்ன சொன்னாங்க என்பது ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் மிகப் பிரசித்தம். பபிள்சை நாங்கள் ஒரு லைப்ரரியில் தான் சந்தித்தோம். அதே போல் பெப்பர் என்றும் சீரிஸ் வருகிறது.

மூன்று விஷயங்கள் எங்களைக் கவர்ந்தவை (அ) பபிள்சை பற்றிச் சொல்ல..

1. ஆங்கில வார்த்தைகளை எளிதாக அறிமுகப் படுத்த (வார்த்தைகள் தான், வாக்கியங்கள் அல்ல!!)
2. ஒவ்வொரு கதையும் அன்றாட நிகழ்ச்சிகளில் அடிப்படையில் அமைந்திருப்பது
3. கதைக் குறித்தான நினைவுட்டல் கேள்விகள்

பப்பு, சபரிக்கு பரிசளித்ததும் இந்த சீரிஸின் ஒரு கதையே! பெரும்பாலும், மூன்று வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கத் தான் எனக்குப் பிரியம். முத்துலெட்சுமியுடன் சபரியை பார்க்கப் போகிறோம் என்றதும் எந்த சந்தேகமுமில்லாமல் என் மனதில் தோன்றியது பபிள்ஸ்தான் சீரிஸ்தான்! Hope sabari enjoys with Bubbles!!

அம்மாக்களின் வலைப்பூவிலும் இதுக் குறித்து!

Sunday, February 01, 2009

Y...Y...Y!?!

காய்கறி கடையில், அடுத்தவர் கூடையிலிருக்கும் காய்கள் மட்டும் எப்போதும் ப்ரெஷ்-ஆக இருப்பது போல் தோன்றுவது ஏன்?

”கழுவிட்டு சாப்பிடு” என்று ஒவ்வொரு முறையும் நினைவூட்ட வேண்டியிருக்க,பப்பு ஆரஞ்சுப் பழத்தை மட்டும் சொல்லத் தேவையில்லாமலே கழுவிவிட்டு சாப்பிடுவது ஏன்?

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் (தொடர்பதிவு)

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் எழுத அமித்து அம்மா சொல்லியிருக்காங்க! நன்றி அமித்து அம்மா!

அவங்களே சொல்லியிருக்கற மாதிரி, உண்மையில் நாம் பேசுவது தமிழா என்பதில் சந்தேகமே! காலையில் எழுந்து “பல் விளக்கு” என்று பப்புவிடம் சொல்லாமல், “ப்ரஷ் பண்ணியா?” என்றுதானே கேட்கிறேன்!! ஆனால், என் ஆயா அப்படி கிடையாது. அவர் உபயோகிப்பதில் பாதியளவுதான் நான் தமிழ் வார்த்தைகள் பேசுகிறேன். அவர் சொல்லும் பல வார்த்தைகள் தூயத்தமிழேயானாலும், கிண்டல் செய்திருக்கிறோம் அவரை அவ்வார்த்தைகளை வைத்து!! உறவினர்கள் தொலைபேசியில், “பப்புவை கூப்பிடுங்க” எனும்போது பப்பு உடனே வராவிட்டால், “சீக்கிரம் வா, காத்துக்கிட்டிருக்காங்க இல்ல” என்பார். ஆனால் நான், “சீக்கிரம் வா, வெயிட் பண்றாங்க இல்ல” என்கிறேன்!

இந்தப் பதிவில் என் ஆயா உபயோகிக்கும், ஆனால் அவர்களுக்கு இரண்டாவது தலைமுறையான நான் உபயோகிக்காத, சட்டென்று நினைவில் வரும் வார்த்தைகளை கணக்கில் கொண்டுவர பார்க்கிறேன். இப்படித்தான் வார்த்தைகள் வழக்கொழிகிறது போல!!

ஆயாவின் சொற்களை உச்சரிக்கும் முறையும் சரியாக இருக்கும். உதாரணத்திற்கு, பல்லி..அதை நாங்கள் “balli" என்று சொல்வோம். (நாங்கள் என்பது நானும், தம்பியும் என்று பொருள் கொள்க!)ஆனால் உண்மையில் அது "palli" யே!!

நான் ஒருகாலத்தில், ஆங்கில பாடல்கள், தம்பி ஒரு படி அதிகம் போய் ராக் என்று வீடே அதகளமாக இருக்கும், ஓடவிட்டிருக்கும் இசையில்! ஆயா சொல்வார்கள், “என்ன சத்தம் இது, கேட்கவே நாராசமா இருக்கு?!!” கண்டிப்பாக நாங்கள் இந்த வார்த்தையை எக்காலத்திலும் உபயோகித்ததில்லை, “ஆயா, எப்படி இருக்கு, நாராசமாவா..நாராசமா இருக்கா ஆயா” என்று அவர்களை எரிச்சலூட்டியதைத் தவிர! (Plz people, do not mistake me, I was so raw that time, என்ன பண்றது டீன்ஸ்!!)

ஏதாவது அனத்திக்கொண்டு, அல்லதுத் தொல்லைச் செய்தால், “ஏன் சிங்கிநாதம் பண்றே?” என்பார்கள். அதற்கும் கிண்டல்தான்! பிறிதொருநாளில் வீட்டில் உறவினர்கள்/நண்பர்கள் குழுமியிருந்தபோது எழுந்த பேச்சினில் ஆயா புரிய வைத்தார்கள், அது சிங்கிநாதம் இல்லை, உண்மையில் “சிணுங்கல் நாதமே!!”!
எனக்கு அதிலிருந்து ஒரு பெருமையே..ஏனெனில், நான் அரற்றுவதையும் ஆயா நாதமென்று சொல்லியிருக்கிறார்களேயென்று!! (ஆனா, பப்பு அப்படி செய்யும்போது நான் சொல்கிறேன். “சும்மா நை நை பண்ணாதே”!! :-))

பப்புவின் அரணாகயிறு (அரை ஜாண் (?) கயிறு/ அரைஞான் (??) கயிறு ) நெகிழ்ந்தபோது, ஆயா அம்மாவிடம் வாங்கிவர சொன்னது, “அரம்ப்ளி/லி”. அது ஒரு முக்கோண வடிவத்தில் சங்கிலிகளைக் கோர்த்ததுபோல் இருந்தது. அவர்கள் காலத்தில் மெல்லிய தகடு போல் இருக்குமாம்! அதன் ஒரு முனையில் கயிறைக் கட்டி மாட்டவேண்டியது! அவர்கள் சொல்லும் வரை எனக்குத் தெரியாது, மேலும் பிற்காலத்தில் உபயோகப்படுத்துவேனா என்பதும் சந்தேகமே..வார்த்தையையாகவோ அல்லது பொருளாகவோ!!

பப்புவிற்கு பல் முளைத்து ஈறுகள் ஊறும்போது கையில் கிடைப்பதைக் வாயில் வைப்பதுமாயிருந்தாள். நான் “டீதர்” வாங்கியதைப் பார்த்து சொன்னார்கள், ”எங்க அண்ணா உங்க மாமாவுக்கு சீப்பாங்கழி வாங்கிக் கொடுத்தாங்க” என்று. அது விரல் நீளத்தில் மேலே உருண்டையாக மரத்தாலான அந்தக் காலத்து டீதர். ஆனால், அது இப்போது கிடைப்பதில்லை. எங்காவது மியூஸியத்தில் காணக் கிடைக்கலாம்.


பதிவு நீண்டுக் கொண்டிருப்பதால், தொடர நான் அழைப்பது,

பார்வைகள் கவிதா
சிறுமுயற்சி முத்துலெட்சுமி
விரிந்த சிறகுகள் திவ்யாபிரியா

அவர்களின் சுவாரசியமான லிஸ்டை எதிர்நோக்கி!!

Friday, January 30, 2009

ஜனவரி மாதத்தின் வெதர் ரிப்போர்ட் !




பப்புவிற்கு டெர்ம் ஹாலிடேஸ் தொடங்கியபோது ஆரம்பித்தோம். அவர்கள் பள்ளியிலும் இதைச் செய்வார்களாயிருக்கும்! Juz to keep her engaged for some time! வானத்தைப் பார்த்துவிட்டு என்னத் தெரிகிறது, எப்படி இருக்கிறது என்று சொல்லி அதற்கேற்ற படத்தை தெரிந்தெடுத்து ஒட்டவேண்டும். வானத்தைப் பார்த்து "என்னத் தெரிகிறது" என்று கேட்கும்போது சொல்வாள் குறும்புசிரிப்போடு, "தவளை தெரியுது", சிங்கம் தெரியுது" என்று கலையும் மேகங்களின் உருவங்களைக் கண்டு, சில சமயங்களில் "கொய்யாக்கா தெரியுது" என்று பக்கத்து வீட்டு கொய்யாமரத்தை பார்த்து்! அவள் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது எனக்கு இரண்டாம்பட்சமே தவிர, செய்யும் செயலை அனுபவித்து ரசித்து செய்யவேண்டுமென்பதே! And looks like my baby got my point right! :-)

மாத காலண்டர் இங்கேயிருந்து!
இணையத்திலிருந்து குட்டி கிளிப் ஆர்ட்ஸ் கிடைத்தது,நன்றி டூ இணையம்!!

பள்ளி ஆரம்பித்த பின்னர், இதை செய்வது நின்றுபோயிற்று!உருளைக்கிழங்குக்காவது அவ்வப்போது தண்ணீர் கிடைக்கிறது..பார்ப்போம் பெப்ரவரியிலாவது முழுமையான ரிப்போர்ட் செய்ய முடிகிறதாவென!

Thursday, January 29, 2009

பப்புவுக்கு ஒரு குறிப்பு..

டியர் பப்பு,

நீ சிடி பார்க்கும் நேரத்தில் நான் வீட்டின் ஏதாவதொரு மூலையில்தான் இருப்பேன். என் துணிகளை மூட்டைக் கட்டிக் கொண்டு, வீட்டை விட்டு ஓடி விட மாட்டேன், சர்வநிச்சயமாக! (I wish I could do that..**siiighhh**..My wishlist is big you knw!!) வேலை முடிந்ததும் உன்னோடு வந்து அந்த சிடி நிமிடங்களைப் பகிர்ந்துக் கொள்வேன். பார்ப்பதை விட்டுவிட்டு நீ என்னை வந்து கூப்பிட்டுக்கொண்டு இருப்பது, மகிழ்ச்சியாக, பெருமிதமாகத்தான் இருக்கிறதெனக்கு எனினும்... வரையும்போதும், பொம்மைகளுடன் விளையாடும்போதும், மற்ற நேரங்களில் இண்டிபெண்டண்ட்-ஆக இருப்பது போல, சிடியும் பார்த்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்குமெனக்கு! நீ என்ன நினைக்கிறாய்??

அன்புடன்
அம்மா!!

Tuesday, January 27, 2009

1000 பேர் படுகாயம்,300 பேர் பலி : மருத்துவ உதவி தேவை!

முல்லைத்தீவில் 300 -க்கும் அதிகமானோர் பலி. 1000 பேர் படுகாயம்!
மிக விரைவில் மருத்துவஉதவி தேவை! இன்னும் 24 மணிநேரத்துக்குள்ளாக உதவி கிடைக்காவிடில் மேலும் பலர் உயிரிழக்கும் அபாயம்!!

மேலதிக விபரங்களுக்கு

http://tamilnet.com/art.html?catid=13&artid=௨௮௧௫௩

(சிநேகிதியின் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றச் செய்தி)








பட்டாம்பூச்சி - பப்புவிடமிருந்து!

குடுகுடுப்பையாரின் புதிய வண்ணத்துப் பூச்சியைத் தொடர்ந்து...!



இது பப்பு செய்த பட்டர்பிளை, சாக்லேட் காகிதத்திலிருந்து. இரண்டு முறை செய்துக் காட்டியபிறகு, அதைத் தொடர்ந்து இதை செய்தாள். முதல் முறை கீழ்பாகம் மேலே வந்திருந்தது,மடிப்புகளில்லாமல். திரும்பத் திரும்பச் செய்ததில், வசப்பட்டது பட்டாம்பூச்சி கைகளில்!!

இந்த பட்டர்பிளை விருது பப்புவிடமிருந்து பறந்துச் செல்கிறது நன்றிகளுடன், பப்பு @ சித்திரக்கூடத்தை வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்! உங்கள் அனைவரது ஆசிகளும், வாழ்த்துகளும், ஊக்கமும் பப்புவை என்றும் சூழ்ந்திருக்கும்!

Special Thanks to her friends who made an effort to visit her over the weekend!!
எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அன்பு அவர்கள், ஞாயிறன்றும், "பார்வைகள்" கவிதா அவர்கள், திங்களன்றும் பப்புவைச் சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தனர். உங்களது பரிசுகளும், அன்பும், உங்களுடன் தனது உலகத்தை பகிர்ந்துக் கொண்டதிலும் பப்புவுக்கு மிக்க மகிழ்ச்சி! அவள், உங்களிருவரையும் தனது நண்பர்கள் என்றுதான் அடையாளப் படுத்துகிறாள். அவளோடு பொறுமையாய், அவளுக்குச் சமமாய், பேசி, பேச்சைக் கேட்டதற்கு நன்றிகள் பல!!

Sunday, January 25, 2009

குட்டி நாயோட அம்மா எங்கே போச்சு?




அன்று பப்புவின் பள்ளிவேனுக்காக காத்துக் கொண்டிருக்கையில், எதிரிலிருந்த மரக்கிளையிலிருந்து கரைந்ததொரு காகம். “அவங்க அம்மா எங்கே?” என்று கேள்வியும் என் எதிரில் வந்து விழுந்தது. வழக்கமான கேள்விதான். தெருவில் தனியாய் செல்லும் குட்டி நாய், குதித்தோடி வரும் கன்றுக்குட்டி அல்லது தனியாய் கூவும் குயிலின் ஒற்றைக் குரல் இதில் ஏதாவதொன்றுப் போதும், பப்புவிடமிருந்து இந்தக் கேள்வியை வெளிக்கொண்டுவர!
இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலும் இந்தக் கேள்வியைத் தான் நான் எதிர்நோக்க வேண்டியிருந்தது!

புத்தகம் - Rabbit's Happy day மேலும் படிக்க... அம்மாக்களின் வலைப்பூக்கள்

Friday, January 23, 2009

O Sanam...teri yadoon ki kasam - லக்கி அலி!!

லக்கி அலி!1996-ல் வெளிவந்த சுனோ (Sunoh) தான் இவரது முதல் ஆல்பம். இவரது ஆல்பங்களில் தெரிந்த தனித்துவமும், பாடும் விதத்தில் இருந்த ஸ்டைலும்..இவரது அடையாளம். அடுத்து முக்கியமாக சொல்லவேண்டியது அவரது பாடல்கள் காட்சியமைக்கப் படும் விதம்! ஒருவித wanderness, தனிமை..எதையோ தேடியலையும் நாடோடித்தனம்...இந்தமாதிரி தான் தீம்! சுனோ-வில் என் மனம் கவர்ந்த.. எனக்கு மட்டுமல்ல..அப்போது V-channel-ல் எப்போதும் போடும் பாடல், O sanam!
பிரமிடுகளிடையே தேடியலையும் காட்சிகள்..ஒரு பெரிய வளையத்துடனான சாவி..ஹஸ்க்கி வாய்ஸில் பாடல்..இதுதான் ஓ சனம்!எனது பெரும்பான்மையான் சாயங்கால/பின்னிரவுப் பொழுதுகளை நிரப்பியது இப்பாடலே! சொல்வதைவிட, கேட்டலே நன்று!!

Get this widget | Track details | eSnips Social DNA



ஓ சனம் பாடலில் வரும் புர்க்கா அணிந்தப் பெண் இவரது மனைவி! லக்கி அலியின் தந்தை ஹிந்தி படவுலகில் முக்கியமானவ்ர். விக்கிபீடியாவில் தேடினால் மேற்செய்திகள் கிடைக்கலாம்! ஹிந்திப்படங்களிலும் பின்னனி பாடியிருக்கிறார். கஹோ நா பியார் ஹே - ஹ்ரித்திக்-கின் படமென்று நினைக்கிறேன்!

எனது டாப் 10 பாப் பாடல் பட்டியலில் ஓ சனம் என்றும் இடம் பெற்றிருக்கும்!! More on Lucky Ali later!

Thursday, January 22, 2009

நான் வரைகிறேனே மம்மி!!

பப்பு சுவரில் கிறுக்கத் தொடங்கியக் காலத்தில், சிலேட்டும், நோட்டுப்புத்தகங்களும் அவள் கண்களில் படும்படி பார்த்துக் கொண்டதில் கொஞ்சம் கொஞ்சமாய் மறையத் தொடங்கியது அவ்வழக்க்ம். ஆனால், கிறுக்கியபோதோ தடுத்ததில்லை, கிறுக்காதபோதோ அதை ஊக்கப் படுத்தியதுமில்லை!ஆனால், நான் மரங்களுக்கான அவுட்லைனை வரையத் துவங்கியபோது
அவள் கையிலும் கொடுத்தேன், உனக்கு அந்த சுவர், எனக்கு இந்த சுவர் என்று! (எல்லாம் ஒரு சேஃப்டிக்குத்தான்!) அப்படி அவள் வரைந்தவற்றில் இதோ,

ட்ரையாங்கிள் பாரு, ஆச்சி:



அநேகமா மரமாக இருக்கலாம்:



இது பாப்பா என்று ஆரம்பித்தவள், அவளது கையை வைத்து ட்ரேஸ் செய்து விரல்கள் மட்டும்:



வரைவதை மட்டும் அவள் விழித்திருக்கும்போது செய்து, பெயிண்டை அவள் தூங்கியது அடித்தேன். ஜாலியாகத்தான் இருந்தது அவளது துணை!அவளுக்கு முன்னால், ஏசியன் பெயிண்டை தொட விருப்பமில்லை. இப்போதுவரை அந்த பெயிண்ட், அவளது ஃபெவிக்ரில் பெயிண்ட் என்றுதான் நம்பிக்கொண்டிருக்கிறாள். :-)

அவளது குட்டிவிரல்கள் வரைவதைப் பார்த்ததும், என் மனம் எதிர்க்காலத்தை கற்பனை செய்யத் துவங்கியது! ஒரு பெரிய இண்டீரியர் டெக்கர் ஆபீஸ், ஆர்ட் செண்டரை பப்பு நடத்துவதையும், சன் டீவியில் ஒரு ஆண்டர்ப்ரன்னராக அவளது நேர்காணலையும், அவளது இந்த ஆர்வத்திற்குக்கான வேர்கள் அவளது அம்மாவிடமிருந்துப் பெற்றதாகவும், எப்படி அவளது அம்மா இயற்கையின் வண்ணங்களை அறிமுகப்படுத்தினாளென்றும்..ஹ்ஹா..**siiighhhhhh**

(என்னைவிட பப்பு சுவரில் எழுதுவதை/கிறுக்குவதை முகில்தான் ஊக்குப்படுத்துவார் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்!!)

Wednesday, January 21, 2009

நோ டைட்டில்.....

பூஹ்ஹூ..ஹூம்ம்..பூஹ்ஹூ...ஹூம்ம்...என்ன பண்றேனா..ஹூம்..ஹூம்..அழுதுக்கிட்டிருக்கேன்..
பூஹ்ஹூ...ஹூ...ஏன்னா கேக்கறீங்க..ஹூஹூ...பப்பு என்னை என்ன சொல்லிட்டாத் தெரியுமா?பூஹ்ஹூ..ஹூ..ஹூஹூ....நான் எங்க அம்மாவை அப்படி சொன்னப்போ எனக்கு பதினைந்து வயசு!! பூஹ்ஹூ...ஹூம்ம்..ஹூ..ஹூஹூ...என்னைப் போய்...ஹூ..ஹூஹூ..என்னைப் போய் அப்படி சொல்லிட்டாளே!!ஹூ..ஹூஹூ...என்ன சொன்னாளா?...
ஹூ..ஹூஹூ..ஹூம்ம்..பூஹ்ஹூ.. ஷீ செட்...ஷீ செட்....ஹூம்ம்..ஹூ..ஹூஹூ..சொல்லும்போதே எனக்கு அழுகை
தாங்கலியே....ஹூ..ஹூஹூ...நீ ஏன் ஆயா மாதிரி குண்டா இருக்கேன்னு..ஹூ..ஹூஹூ..சொல்லிட்டாளே!!! பூஹ்ஹூ..
ஹூம்ம்..பூஹ்ஹூ..!!!

குறிப்பு:

முளைத்து மூணு இலை கூட விடாத (!) உங்கள் சிறு வாண்டு, உங்களைப் பார்த்து இபப்டி சொன்னால் எப்படி உணர்வீர்கள்? அதுவும், நாம் ரொம்ப குண்டு எல்லாம் இல்லை, ஓக்கேவாகத்தான் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது!! எனக்கு ஓரிரு நிமிடங்கள் ஒன்றும் புரியாமல், அழுவதா சிரிப்பதாவென்றுத் தெரியாமல்..போயிற்று!
But it was really hard you know...

Tuesday, January 20, 2009

சகுனத்திற்குப் பின் ”உலகம்”

சினிமாவில் காட்சி முடியும் நேரம்.சீனிவாசனும் அவரது நண்பர் பரந்தாமனும் பார்த்துக் கொண்டிருந்தனர். கதாநாயகியை அவளது தந்தை அடித்துக்கொண்டிருந்தார், அவள் காதலித்தக் குற்றத்திற்காக. சீனிவாசன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். அழுதுழுது கண்கள் வீங்கிப் போயிருந்தன.

கதாநாயகனை, கதாநாயகியின் தந்தை ஆள் வைத்து அடிக்கும் காட்சி. அதற்கும் கண்கலங்கினார் சீனிவாசன். கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டபின் கூறினார், “பாவம் அந்த சின்னஞ்சிறுசுக, என்ன தப்பு பண்ணுச்சுங்க? இப்படிக் கொடுமைப் படுத்தறானுங்களே! இவன மாதிரி அப்பாவையெல்லாம் நிக்கவைச்சு சுடணும்” என்றார்.


சினிமா முடிந்தது. முடிவு...நாயகனும், நாயகியும் தங்கள் கதையை முடித்துக் கொள்கின்றனர். வரும் வழியில் பரந்தாமனிடம், “பாவம்டா, அதுங்க இப்படியா வக்கையை முடிச்சுக்கணும், எங்கேயாவது ஓடிப் போய் இருக்கலாமில்ல” என்று புலம்பிக்கொண்டே வந்தார். வீடு வந்து சேர்ந்தார்.

சாப்பாடு போடும் போது அவ்ரது மனைவி சொன்னார், “என்னங்க, நம்ப பொண்ணு யாரையோ லவ் பண்றாளாம், ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்ததா வேலைக்காரி சொன்னா”.

எங்கே அவ, கூப்பிடு”

வந்து நின்றவளைப் பார்த்து “என்ன அம்மா என்னவோ சொல்றாளே, உண்மையா”?

”ஆமாப்பா”

“எனண்டி, என்னையே எதிர்த்து பேசறியா(எங்கே எதிர்த்து பேசினாங்கன்னு கேட்கப்பிடாது!!!ஏதோ அப்போ எழுதிட்டேன்)நாளையிலேர்ந்து நீ எங்கயும் போக வேணாம். வீட்டிலேயே இரு. மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடறேன். காதலாம், கத்தரிக்காயாம்” (யப்பா என்னா வசனம்!!) என்றார், சினிமாவில் மட்டும் காதலை ஏற்றுக்கொள்ளும் அந்தத் தந்தை!!


குறிப்பு: என்ன தலைப்பு இது என்கிறீர்களா, என்னோட பழைய நோட்டுல, ”சகுனம்”-ன்ற தலைப்புல இருக்குக் கதைக்குப் அடுத்து ”உலகம்”-ன்ற தலைப்புல இந்தக் கதையை எழுதியிருக்கேன். அதான்!! :-)

Sunday, January 18, 2009

ப்ராஜக்ட் பப்பு - I

பப்புவிற்காக வீட்டில் ஒரு இடத்தை ஆயத்தம் செய்துக் கொண்டிருக்கிறேன். அவளது அறையென்று சொல்ல முடியாமாவென்றுத் தெரியவில்லை. ஆனால், அவளது ஆக்டிவிட்டிஸ்-க்காக ஒரு இடம் தேவை, மேலும் பழக்கங்களில் ஒரு ஒழுங்கினை ப்ராக்டிஸ் செய்யவும்!! நான் ரொம்ப ஒழுங்கெல்லாம் கிடையாது,(எடுத்ததை எடுத்த இடத்தில் வைப்பது மாதிரியான). சோ, பப்புவோடு சேர்ந்து நானும் ஒழுங்கினைப் பழக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன்!!;-)

சுவாரசியமாக்குவதற்காகவும், அந்த இடத்தை பப்புவிற்கு பிடித்தமானதாக்குவதற்காகவும்(she is into wilflife nowadays!!) சில ஐடியாக்கள்!!

முதல் கட்டமாக, அறையின் ஒரு பக்க சுவரில் இரண்டு மூலைகளிலும் இரு மரங்களை வரைந்திருக்கிறேன், பொந்து உட்பட! இந்த தளத்திலிருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டேன்!! (நன்றி : இணையம்! )









முதலில் பென்சிலால் இந்த மரங்களை வரைந்துக்கொண்டேன். 15-20 நிமிட வேலை!!








நன்றி டூ ஏசியன் பெயிண்ட்ஸின் சின்ன டப்பா!! இது இரண்டாவது நாள். 45-55 நிமிடங்களானது!!








இது மூன்றாம் நாள். இலைகள் வண்ணம் தீட்டும்போது கொஞ்சம் ஒழுகிவிட்டிருக்கிறது.
சரி செய்யும் வேலை பாக்கி. இதுவும் ஒரு மணி நேர வேலை!! (.- இ-திருஷ்டி பொட்டு-என் திறமையைப் பார்த்து யாராவது கண்ணு வச்சிட்டா :-)) !!)



மரங்கள் ரெடி, இப்போது அவள் மரங்களின் கீழே உறங்கலாம், கதைகள் படிக்கலாம்...மரத்தடியில் அமர்ந்துக் கொண்டு அவளது நண்பர்களோடு பேசி விளையாடலாம்!!

அடுத்து, அவள் படுத்துறங்க தேவை ஒரு மெத்தை!! மீதி அடுத்தப் பாகத்தில்!!


உதவிய உபகரணங்கள்:

Friday, January 16, 2009

ரவுண்ட் அப்



(II-ஆம் டெர்ம் - கடைசிநாளன்று)

கடந்த ஒரு வாரமாக இரண்டாம் டெர்ம் முடிந்து விடுமுறையில் இருக்கிறாள் பப்பு!
அவள் வீட்டிலிருக்க, நான் அலுவலகம் செல்வது கொஞ்சம் கஷ்டம், கொஞ்சம் ஜாலி!
முதல் டெர்மிற்கும், இரண்டாம் டெர்மிற்கும் இடையில் நான் கண்ட வித்தியாசங்கள், மாற்றங்கள்..

1. சிலிண்டர் பாக்ஸ், பிங்க டவர், லாங் ராட், கலர் பாக்ஸ் I, II எனபன அவள் வீட்டில் சொல்லும் சில உபகரணங்கள். மாண்டிசோரி ரிலேடேட் என அறிகிறேன்!

2. மிக முக்கியமான ஒன்று, பப்பு பள்ளி சேரும் வரை தமிழ் தவிர வேறு எந்த மொழியையோ, மொழி குறித்த பிரக்ஞையோ அவளுக்கு இல்லை(யெஸ், நோ தவிர). ஆனால், இப்போது ஆங்கில வார்த்தைகள் அர்த்தத்துடன் தெரிகிறது..சில சமயங்களில், badly in need of english! ஆங்கிலத்தில் உரையாட அவ்வளவு விருப்பப்படுகிறாள், ஆனால் வார்த்தைகள் கைவர வில்லை இன்னும்!! சரியாகச் சொல்லவேண்டுமானால், கோபத்தைக் காட்ட ஆங்கிலத்தை நாடுகிறாள், #%#$%$%^%^&கோ!! ஏதாவது சொல்லிவிட்டு அது ”கோ”-வில் முடிந்தால், கோபத்தில் திட்டுகிறாளென்று அர்த்தம்!!

3. நிறைய ரைம்ஸ்..!! நான் எந்த ரைம்ஸூம் சொல்லிக்கொடுத்ததில்லை...இதுநாள் வரை! மாண்டிசோரி ரைம்ஸ் தவிர மற்ற ஆங்கில ரைம்ஸ் எல்லாம் அவளாக சிடி பார்த்துக் கற்றுக்கொண்டதுதான்! எனக்குத் தெரிந்த ரைம்ஸ், ஜானி ஜானியும், ட்விங்கிள் ஸ்டாரும், ரோ ரோ யுவர் போட்டும், இன்னும் சில் சொற்பங்களே. ஆனால், ரைம்ஸ் கற்று அதனால் பெரிதாக என்ன ஆகிறதென்றெ என் சோம்பலே காரணம். (instead, I may try some tongue twisters, an interesting & funny stuff always!! )

4. பள்ளி செல்லும் வாரதினங்களில் ஏழு மணி தாண்டிதான் எழுகிறாள். வாரயிறுதிகள், விடுமுறை தினங்களில், மிகச்சரியாக 6.30 அல்லது 6.50 க்கு எழுந்து எங்களையும் எழுப்பி விடுகிறாள்.(grrrrrrrrr) கிழமைகளின் பெயர்கள் தெரியுமே தவிர இன்று என்ன கிழமையென்று தெரியாதபோதும் பப்பு இப்படியிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.


5. செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறாள். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போது,
அவள் நட்டுவைத்த உருளைக்கிழங்கு செடிக்கு மட்டும் அதிக கவனிப்பு!! (நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாததால், முளை விட்ட உருளைக்கிழங்கை அவளே நட்டாள். அது ஒருஅடிக்கு மேலாக வளர்ந்துள்ளது.)

Wishing you a happy III term, baby!

Thursday, January 15, 2009

கெமிஸ்ட்ரி பத்தி உங்களுக்கு என்னத் தெரியும்?

ரொம்ப நாளாச்சு ஏதாவது கிறுக்குத்தனமா கேள்வி/புதிர் போட்டு..இந்தக் கேள்வி பத்தாவதுப் படிக்கும்போது எங்க கிளாஸிலே செம ஹாட்டா இருந்துச்சு. என்னக் கேள்வியா..

ஒரு மாலிக்கிள் ஆஃப் பொட்டாசியம் அயோடைடு, ரெண்டு மாலிக்கிள்ஸ் ஆஃப் சல்பர் சேர்ந்தா என்ன கிடைக்கும்? (கேட்டலிஸ்ட் இருக்கு, அதை மறந்துட்டேனே..மூன்லைட் கேட்டலிஸ்ட்!)

என்னோட பெஞ்ச்மேட் ஹேமாதான் இந்தமாதிரி கிறுக்குத்தனங்களிலே எனக்கு வலதுகை மாதிரி!ம்ம்..அவ ஒருபடி மேலே போய், இந்த வினையோட பை-ப்ராடக்ட் கூட கண்டுபிடிச்சா, பாவம், இப்போ சிங்கப்பூர்லே குப்பைக்கொட்டிக்கிட்டிருக்கா!!!

Monday, January 12, 2009

ஒரு வெள்ளிக்கிழமை மாலை...



(இந்த கைகளுக்குச் சொந்தமான வலைப்பூ எது?!)

எங்கள் டீமை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பெண்மணியைச் சந்திக்க பப்புவும், நானும் எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றோம். போய்க்கொண்டிருக்கும்போது ஒரு போன். “நான் முத்துலெட்சுமி பேசறேங்க”, என்றதும் எனக்குத் தெரிந்த 4 முத்துலெட்சுமிகளில் யார் என்று ஒரு குயிக் சர்ச் ஓடியது. பள்ளியில் கூடப் படித்த முத்துலெட்சுமியா, ஆனால் குரல் அப்படி இல்லை, ஜூனியர் முத்துவா கொஞ்சம் குரல் ஒத்துபோகுது, இல்லை இப்போ ரீசண்டா
திரும்ப மெயிலில் சந்தித்த முத்துஅக்காவா என்று கடக்டவென்று ஒரு பேட்டர்ன் & வாய்ஸ் மேட்ச். இதற்குள் 20-40 செகண்டுகள் கடந்துவிட்டிருந்தன. திரும்ப “நாந்தாங்க முத்துலெட்சுமி பேசறேன், எங்க இருக்கீங்க” என்றதும், அட இந்தம்மணியை பார்க்கத்தானே போய்க்கிட்டிருக்கோம்னு பொறி தட்டியது!!யெஸ்..அந்த பெண்மணி கயல்விழி-முத்துலெட்சுமி! அந்த டீம் - டாக்கிங் குரூப் டீம்!(சிறுமுயற்சி முத்துலெட்சுமி, இல்ல முத்துலெட்சுமி கயல்விழி-ன்னா உடனே புரிஞ்சுருக்குமோ!!)அறிமுகம், தயக்கம் எதுவுமே இல்லை..பேசுவதற்கு டாபிக்குகள் தானாக வந்துக் கொண்டேயிருந்தன! முதல்முறையாக்ப் பார்க்கிறோம், ஆனால் பேச பல டாபிக்குகள் இருந்தன.ப்ளாக் நண்பர்களை மீட் செய்வதில் உள்ள அட்வாண்டேஜ் போல!!


(The famous Kids of blogdom )

அப்படிப்பேசிக்கொண்ட்டேயிருந்த போது, this friendly lady made an entry. மேலே இருக்கும் கைகளுக்குச் சொந்தக்காரர்! அதிகம் மறுமொழிவதில்லையென்றாலும், தவறவிடாத பதிவு கவிதாவின் “பார்வைகள்”. தெரியுமா, என்ற போது, ”ஓ தெரியுமே” என நான் சொன்னதும் ஜெர்க்கானவர், ”இல்லல்ல, உங்க பதிவுகள் மூலம்தான்”, என்றதும் கொஞ்சம் ஆசுவாசமானார்.

Pappu remained quiet! ட்ரெயினை பார்த்துக் கொண்டேயிருக்க விரும்பினாள், அவள்!
பப்புவும் சபரியும் பரிசுகள் பரிமாறிக்கொண்டார்கள்! And, pappu thank muthu aunty
for the Bhindis!! கவிதா ஆன்ட்டியுடன் சொப்பு விளையாட வெயிட்டிங்

Friday, January 09, 2009

பழசும் புதுசும்!

இது புதுசு :

அதிரவைத்தக் கணங்களையும்
இசைத்துச் சென்ற நொடிகளையும்
ஒரு பேழைக்குள்
சேமிக்கத்
தொடங்கினேன் நோவாவைப் போல்!
தரைதட்டியபோது
கனத்துவிட்ட காலத்துளிகளின்
எஞ்சிய சிறகுகளை
முத்தமிட்டு
பறக்கவிட்டேன் அன்புவெளியில்..
எண்ணங்களின் திரைகள்விலக்கி
எதிர்ப்பார்ப்புகள் ஏதுமற்று
காத்துக்கொண்டிருக்கிறேன்
மண்ணுருண்டையிலிருந்து
திரும்பிவரும்
நுனையிலைக்காக!!

இது பழசு: சகுனம்

”ச்சே!ச்சே”! நான் நல்லக் காரியமா பொறப்படற போதுதான் இவன் வந்துத் தொலைப்பான். ச்சே, ஏந்தான் இப்படி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிறான்களோ!

நீங்களே சொல்லுங்க சார்! ஒருநாள, ரெண்டுநாள்னா பரவாயில்லே! தெனமுமா?வெவஸ்தையில்லே, இந்த மனுஷனுக்கு!இவன் எதிர்லே வந்து தொலையறதுனாலே நான் போற காரியம் எதுவும் ஒழுங்கா உருப்படியா முடிய மாட்டேங்கறது சார்!

ஒரு நியாயம் சொல்லுங்க சார், எனக்கு! நேத்தும் இப்படிதான், பக்கத்துத் தெரு கோபலன் கிட்டே போய் ஐம்பது ரூபாய் கடன் வாங்கலாம்னா இவன் எதிர்ல வந்துட்டான்! போன காரியம் அவ்ளோதான்!

என்ன சார், நினைச்சிருக்கான் இவன் மனசுல?” என்று என்னிடம் கேட்ட பூனைக்கு என்ன பதில செல்வதெனத் தெரியாம்ல் விழித்தேன் நான்!

Thursday, January 08, 2009

வண்ணத்துப் பூச்சி விருது


"சித்திரக்கூடம் சந்தனமுல்லை: இவங்களுடைய பதிவை தவறாமல் படிப்பதுண்டு. இவங்களுடைய பதிவுகள் அருமையாக இருக்கும். பப்புவின் அசைவுகளையும், குரும்புகளையும் அவர் மட்டும் ரசித்து ஆனந்தபடுவது மட்டும் அல்லாது, பதிவில் இவை அனைத்தையும் எழுதி எங்களை ரசிக்கவும் ஆனந்தப்படுத்தியும் சந்தோஷப்படுபவர்." என்றுத் தமிழ்தோழி பட்டர்பிளை விருது கொடுத்திருக்கிறார்!

தமிழ்தோழி, இது எனக்கொரு எதிர்பாராத சர்ப்ரைஸ்! இன்னும் எழுத ஆர்வத்தை தூண்டுகிறது, உங்களின் அங்கீகாரம்! (மாட்டிக்கிட்டீங்களா?!!) நான் ரொம்ப புவர், மறுமொழியளிப்பதில்! இனி அப்படி இருக்கக்கூடாதென எண்ணிக்கொள்கிறேன்!



"சந்தனமுல்லை (ஆச்சியைப் பத்தி நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை, பப்பு பேரவையை நடத்தும் அத்தனை பேருக்கும் இவர் அத்துப்படி)"
என்று சொல்லி பட்டர்ப்ளை அவார்டுவிருதுக் கொடுத்த அமித்து அம்மாவுக்கு நன்றிகள். சொல்லப்போனால், அமித்து அம்மாதான் நான் முதலில் தொலைபேசிய பதிவர்!

கொடுத்த விருதினை விதிமுறைகள்படி ஏழுபேருக்கு அளிக்கிறேன்! பெற்றுக்கொண்டவர்கள் 7 பேருக்கு அளிக்கும்படி விதிமுறை சொல்கிறது!

கானாஸ் - கானாவின் றேடியோஸ்புதி பதிவுகள். ஒருமுறையும் மிஸ் செய்ததில்லை. விடை கண்டிப்பாக தெரியாது என்றாலும்!
அதிலும், சுவாரசியமாக இசையோடு இணைந்த பழைய நிகழ்ச்சிகளை எப்படிதான் திரட்டுகிறாரோ!!


சிநேகிதி
- சிநேகிதின் எல்லாப் பதிவுகளும் எனக்கு விருப்பம். அதிலும் சைக்காலஜி பதிவுகள், மிக அருமையாக எழுதுவார். அப்படியே, ஈழத்து நினைவுகளும்!!

ஆகாயநதி - பொழிலோடு இவர் செலவிடும் நேரங்களை பற்றிய பதிவுகளுக்காக!

குடுகுடுப்பை - இவரின் நாஸ்டால்ஜிக் காலேஜ் பதிவுகள் மற்றும் அவரது மகள் ஹரிணியை பற்றி அவ்வப்போது எழுதுவதற்காக!!


சின்ன அம்மிணி
- மௌயினின் சாகசக் கதைகள் சமீபத்தில்தான் படித்தேன்! அப்புறம் அவரது நகைச்சுவைப் பதிவுகளுக்கும்!

நிலாவும் அம்மாவும் - நிலா எழுது கடுதாசிக்காக!

தமிழன் -கறுப்பி - இவரின் கவிதைகளும், கவிதை நடையில் இருக்கும் பதிவுக்களுக்கும்....மிக அருமையான கவிதைகள்..!


உண்மையில் தமிழ்தோழிக்கும்,அமித்து அம்மாவிற்கும் கொடுக்க ஆசை. ஆனால், என்னை முந்திக்கொண்டார் ஜமால்!
ராமலஷ்மி-க்கும், சீனா ஐயாவுக்கும் கொடுக்க நினைத்தேன். ஆனால், அவர்களின் கடல் போன்ற எழுத்துலகிற்கு முன்,
நான் எம்மாத்திரம். பெரியவர்களுக்கு சிறியவளான் நான் விருது கொடுப்பது நல்ல பண்பன்று என்று தோன்றியது.
ஆயில்ஸ்-கு கொடுக்க சொல்லி பப்பு உத்தரவு. ஆனால், அமித்து அம்மா முந்திக்கொண்டார்! :-)

Wednesday, January 07, 2009

சோட்டா ரீசார்ஜ்

பப்புவை வேனில் அனுப்ப காத்துக்கொண்டிருந்தோம், வேன் வருமிடத்தில். எங்கள் தெருவில் மாடுகள் எப்போதும் நடைபழகிக்கொண்டிருக்கும். நாங்கள் நின்றுக் கொண்டிருந்த இடத்தை நோக்கி ஒரு மாடு வந்துக்கொண்டிருந்தது, ஒரு ஐந்தடி தூரத்தில். உடனே பப்பு, ”என்னைத் தூக்கு தூக்கு” என்று சொல்லத் துவங்கினாள். ”ஒன்னும் பண்ணாது பப்பு, அது போய்டும்”
என்று சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன். வேகமாய் பப்பு சொன்னாள்,

“நான் குட்டி பொண்ணுடி, தூக்குடி”!!

அவள் பெரிய பெண்ணா, குட்டி பெண்ணா என்று தீர்மானிப்பது சந்தர்ப்பங்களும், பப்புவும்தான்!!



இரவில் தூக்கத்திலிருந்து திடீரென் எழுந்த பப்பு, கால் விரல்களில் கடைசியைக் காட்டி,

“இது ஏன் குட்டியா இருக்கு? இது சரியா சாப்பிடலையா?”

அடுத்த விரலையும் காட்டி,

”இதுவும் சரியா சாப்பிடலையா” என்று கேட்டுவிட்டு தூங்கிப் போனாள். அதை சொல்ல ஏன் அந்த நடுஇரவு நேரத்தை தேர்ந்தெடுத்தாள் என்பது எனக்கு புரியாத புதிர்!!




எனது நண்பர்களின் அம்மாக்கள் மொபைல் உபயோகிக்க கற்றுக்கொண்டப்போது,
நீங்கள் எனக்கு குறுஜ்செய்தி அனுப்பினீர்கள், T1 லைப்ரரியை உபயோகித்து!!

எனது நண்பர்களின் அம்மாக்கள் மெசேஜ் அனுப்பியபோது
பப்புவின் குரலை ரெக்கார்ட் செய்து ரிங்டோனாக மாற்றிக்கொண்டீர்கள் நீங்களாகவே!!

எனது நண்பர்களின் அம்மாக்கள் கணினியை இயக்கக் கற்றுக்கொண்டபோது
நீங்கள் எனக்கு மெயில் அனுப்பினீர்கள்,மூன்றாவது முறையாக உருவாக்கிய ஐடிமூலமாக!!

எனது நண்பர்களின் அம்மாக்கள் மெயில் அனுப்பியபோது
நீங்கள் ஆர்குட் ப்ரொபைலையும், ப்ளாக்கர் ப்ரொபைலையும் உருவாக்கிக்கொண்டீர்கள்!

இப்போது எனது பள்ளித்தோழிகள் பலரின்,கல்லூரித் தோழிகள் சிலரின்,
நண்பர்கள் லிஸ்டில் நீங்களும்!!


(நேற்று என் பெரிம்மாவும் நானும் ஆர்குட்டில் ஸ்கராப் செய்துக் கொண்டிருந்தோம்!!
ஒரு நீண்ட உரையாடலுக்குப் பிறகு அவர்கள் ஸ்க்ராப் புக்கிலிருந்த என் ஸ்க்ராப்-களை
அழித்தபோது, “என்ன பயமா, ஏன் டெலீட் செய்தீர்கள்” என நான் கேட்டதற்கு,அவர்களின் பதிலைப் பார்த்து நெடுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்!

namma rathahtile bayamma?what a disgrace!lesa nadukkam mattumdhan.!!!

சாரி பெரிம்மா, என்றைக்கும் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாய், பாராட்டாய் இருந்ததில்லையெனினும், கிண்டல் செய்யாமல் இருந்ததில்லை!! (இப்போது மட்டும் மாற்றிக்கொள்ள முடியுமா?!!)

you always made me proud, proud of me...proud of yourself!

Tuesday, January 06, 2009

ஒளியும் ஒலியும்

பப்புவுக்குத் தெரியாமல் எடுத்தது இந்த வீடியோ! கடைசியில் கண்டுகொண்டவள், "கோ" என்று கோபத்துடன் விரட்டியதும் ஓடிவந்துவிட்டேன்!( பின்னனியில் கேட்பது வீடு சுத்தம் செய்யும் சத்தம், கண்டுக்கொள்ளாதீர்கள்!) "i am tiny seed sleeping" என்ற ரைமுக்கு
அவளது பொம்மை நண்பர்களை ஆக்ஷன் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறாள்!






இது ஜனகன மன, பப்புவின் தற்போதைய பேவரைட்டில் முதல் மூன்று இடத்துக்குள்ளா இருக்கிறது! நல்லவேளை, இந்த வெர்ஷ்னில் அவளாகவே முடித்து விட்டாள்! இல்லையென்றால், "பாக்ய விதாத"விற்கு பிறகு, ஜனகன என்று தொடங்கிவிடும். ஜனகன மன பாடும் போது எழுந்து அசையாமல் நிற்கவேண்டுமென்று விரைவில் கற்றுக்கொண்டால் பரவாயில்லை, கொஞ்சம் தப்பிக்கலாம்!

Get this widget | Track details | eSnips Social DNA



இது என்ன பாடல் என்று சொல்லவும்! சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு "பப்பு சிடி" பரிசு!!;-)))

Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, January 04, 2009

பப்பு 2009



புது வருடம் பற்றியொன்றும் பெரிதாக புரிதலில்லையென்றாலும், பப்புவிற்கு அது ஏதோ ஒரு
சிறப்பான நாள் என்று மட்டும் தெரிந்திருந்தது. “ஹேப்பி நியூ யர்” என்றும் “ஹேப்பி பர்த்டே டூ யூ” என்றும் அவளை வாழ்த்தியவர்களுக்கெல்லாம் திருப்பி வாழ்த்திக் கொண்டிருந்தாள். தீபாவளிதான் அவளுக்கு தெரிந்த, நன்கு புரிந்த பண்டிகை, ”ஹேப்பி பர்த் டே”வுக்குப் பிறகு.

முழுதாக படங்கள் பார்த்ததில்லை இதுவரை, ரைம்ஸ் சிடிகள், கதை சிடிகள் நீங்கலாக! அதனால், படங்களை, குழந்தைகளுக்கான படங்களை பப்புவிற்கு அறிமுகப்படுத்த விரும்பினோம், புதுவருட பரிசாக என்றும் கூட கொள்ளலாம்! ஜங்கிள் புக் டிவிடி-தான் வாங்குவதாகதான் பிளான், ”george of the jungle"-ஐ பார்க்கும் வரை! (அவள் கண்டிப்பாக இதை ரசிப்பாள் என்று அனுமானம் பொய்க்கவில்லை.) கெட் ஒன் ஆஃபர் இருந்ததால், "thomas and friends" -யை தேர்வு செய்தேன். அவளது ட்ரெய்ன் விளையாட்டுக்கு உதவலாமென்று!!(movies + chocolate - Not a bad idea to spoil a kid, huh!)அந்த யம்மி ப்ளம் கேக், எங்கள் பக்கத்துவீட்டு ஆன்ட்டியின் கைமணம்! Thanks, Eva aunty!

இரண்டுமே ஹிட்!! முழுவதுமாக பார்க்கவில்லையெனினும், கடைசிவரை பார்த்தாள். ஜார்ஜின் காட்டுப்பகுதி-தான் இஷ்டம்! பேசும் குரங்கு, தாவும் மனிதன், சிங்கத்துடன் சண்டை, மரவீடு, நாயாக தன்னைக் கருதிக்கொண்டிருக்கும் யானை என்று முதல் பகுதிதான் அடிக்கடி பார்க்கிறாள்! தாமஸ் தனியாக பயணம் செய்துக்கொண்டிருக்கிறார், ஜார்ஜ் போரடிக்கும் வரை தாமஸ் காத்திருக்கத்தான் வேண்டும் போல!!

சென்ற வருடம், apple tree ரைம்ஸ் சிடிகளும், பெபிள்ஸ் சிடிகளும், ஜாதகா டேல்ஸ் (நன்றி வல்லியம்மா!)-மாக ஓடியது. அனிமேஷன் கதாபாத்திரங்களிலிருந்து இப்போது நிஜ உலகிற்கு எட்டிப் பார்க்கிறாள் பப்பு!

Friday, January 02, 2009

How are you today, sir?

இந்த வீடியோ எடுத்து 2 மாதங்கள் ஆகிறது! பப்பு ரைம்ஸ் பாடுவது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டாலும், இதை புதிதாகக் கற்றுக்கொண்டு பாடியபோது கண்கள் அகல
எக்சைட்டடாக பார்த்துக் கொண்டிருந்தேன்! முதலில் பம்கின் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..பின்னர் thumpkin என்றுத் தெரிந்தது, கூகுளில் தேடியபோது..(கூகுளில் தேடியதற்கு பதில் அவளது பள்ளி புத்தகத்தில் தேடியிருந்தால் உடனே தெரிந்திருக்குமே என்று
சொல்வீர்களேயானால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:-))) பின்னர் thumpkin, பட்டர்பிளையாகவும், க்ரோக்கடைலாகவும் மாறியது!!




வரிகள்

Where is Buttterfly?
Where is Butterfly?
Here I am, here I am.
How are you today?
Very well, thank you.
fly away, fly away.



ஒரிஜினல் வீடியோ!





ஒரிஜினல் - வரிகள்

Where is Thumbkin?
Where is Thumbkin?
Here I am, here I am.
How are you today?
Very well, thank you.
Go away, go away.

Tuesday, December 30, 2008

ஒரு வருடக் கடைசியில்...

பதிவுகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்...இதுவே ஒரு சாதனைதான் என்னைப் பொறுத்தவரையில்!! :-)

2008 - தமிழ்மண நட்சத்திரமாகவும், வலைச்சர ஆசிரியராகவும் மட்டுமன்றி பல நண்பர்களையும், புதிய வலைப்பூக்களையும் சந்திக்க முடிந்தது! எனது முதல் Tag அளித்த காட்டாறுக்கும், என் பதிவுகளை வாசிக்கும், வாசித்து பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள், வாழ்த்துகள்! என்னை தொடரும் நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்!

2008- பப்பு பள்ளி செல்வதையும் பள்ளி சூழலுக்கு செட்டிலானதையும் கண்டது. பப்பு புதிதாக பல விஷயங்களைக் கற்றுக் கொண்டாள்,பல விஷயங்களை கற்பித்தாள், எங்களுக்கு!

2008- எனக்கும் முகிலுக்கும் நிறைய தெளிவுகளை, குடும்பத்தின் அவசியத்தை, வாழ்க்கை பற்றிய புரிதல்களை தந்தது!திடநம்பிக்கையை, மன வலிமையை சற்றே அசைத்துப் பார்த்தது! எனக்குள் இருந்த எனது இன்னொரு பரிணாமத்தை அடையாளம் காட்டியது! சூழ்நிலைகள் எவ்வாறாயினும், தாங்கிடும் திடன் கொடுத்த கடவுளுக்கு நன்றி! முடிவாக, காலத்தைப் பார்த்து சூளுரைக்க முடிந்தது, "Tough times Never last, But tough people do!" Finally I have learnt the art of letting go things!

இதை தட்டச்சுக்கொண்டிருக்கும் நேரத்தில், சிறிது பின்னோக்கி பார்க்கையில், எனக்கு ஆதரவளிக்க ஒரு அன்பான குடும்பமும், ஊக்கமளிக்க உறவினர்களும் இருப்பதை உணரமுடிகிறது..நன்றிகள் ஆயாவிற்கும், அம்மாவிற்கும், பெரிம்மாவிற்கும், ஆன்ட்டி - அங்கிளுக்கும்!!


(படம்: நன்றி-கூகுள் உபயம்.)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009!!

Tuesday, December 23, 2008

12 விஷயங்கள் - பப்புவை பற்றி!

1. சந்தனச்சாலையில்
சின்ன சீதாப் போனாளே - என்று புத்தகத்திலிருந்த் வாசித்துக் காட்டினேன். சிலதினங்கள் கழித்து
என்னிடம் வந்து அந்த ட்யூனிலேயே பாடுகிறாள்,

ஆச்சி போனாளே
சந்தனமுல்லை வந்தாளே


2. நொண்டி அடிக்கிறாள். 2 அல்லது மூன்று ஸ்டெப்-கள் தான். ஆனால், பேலன்ஸ் செய்வதைப் பார்க்க அவ்வளவு கண்கொள்ளாக் காட்சியாயிருக்கிறது..

3. தான் கற்ற/கேட்ட கதைகளின் பாத்திரங்கள், நிகழ்வுகளை தன்னுடன் தொடர்பு படுத்திக் கொள்கிறாள். திராட்சை வாங்கி கழுவிக்கொண்டீருந்தேன். அது கொத்தாக இருந்ததை பிரித்துக் எடுக்கும்போது, ”நரி இப்டி இப்டி ஜம்ப பண்ணுச்சு, ஆச்சி”, என்று சொல்லி குதித்துக்காட்டினாள். பின், நரி நல்லாருக்காதுன்னு சொல்லிட்டு ஓடிடுச்சு” என்று சொல்லி வட்டமடித்து ஓடினாள். எப்போது திராட்சை வாங்கினாலும் இந்தக் கதையை நினவுகூர்கிறாள், அந்த திராட்சைதானா இதுவென்ற கேள்வியுடன்!

அம்மா, மைக்ரோவனி வைக்க பௌல்கள் வாங்கி வந்திருந்தார், ஒவ்வொரு அளவுகளிலும். “இது குட்டிக் கரடியோட பௌலா” என்று எடுத்துக் கொண்டாள், கோல்டிலாக்ஸ் கதையை நினைவுகூர்ந்தபடி!

அதே போல் வடை செய்திருந்தபோதும், வடையை வாயில் வைத்து கடித்துக் கொண்டு, நரி கேக்குது என்று கற்பனை நரியை காட்டுகிறாள்.

4. அவள் கண்ட கனவுகளைப் பற்றி எங்களிடம் கேட்கிறாள்/சொல்கிறாள். ஏன் சிங்கம் ஓடுச்சு என்றும் பூனை ஆயாவின் கைத்தடியை எடுத்துக்கொண்டு சமயலறைக்குள் ஓடியதாகவும், அவள் பூனையிடமிருந்து அதை பிடுங்கிக் கொண்டு அதை விரட்டியதாகவும் என்று பலப்பல கனவுகள். சிங்கம் வந்து என் முதுகில் கடித்ததாகக் கூறி என் முதுகில் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தாள் இரண்டு மூன்று நாட்கள் வரையில். (அதுதான் அவள் எனக்குக் கூறிய முதல் கனவு)


5. அம்மான்னு கூப்பிடனுமா, மம்மியா?

மழையின் நிமித்தம் வீட்டில் இருந்த பப்புவிடம் விடைபெற எண்ணி 'பை சொல்லு" என்று கிளம்பும்போது எதிர்கொண்ட கேள்வி இது.எனக்குள் சில எண்ணங்களைக் கிள்றி விட்டது. அம்மா என்பதும் மம்மி என்பதும் என்னைத்தான் குறிக்கிறது என்று அறிந்திருக்கிறாள். பக்கத்துவீட்டினரோ, தண்னிர் எடுக்கும் பையனோ எவரோ ஒருவர் "மம்மி" யைக் குறித்து கேட்டிருக்கவேண்டும். அந்த வார்த்தையைக் கேட்பதொன்றும் புதிதல்ல பப்புவுக்கு. (எனினும், சிலசமயம் நாங்கள் தெளிவாகச் சொல்லிவிடுவதுண்டு, "மம்மி,டாடின்னு இல்ல,
அம்மா,அப்பான்னுதான் பழக்கியிருக்கிறோமெ"ன்று.)சிலசமயம் மம்மி,மம்மியென்றும் விளித்திருக்கிறாள். ஆனால் இப்போது அவளுக்கு கேள்வி, அவள் எதைத் தொடரவேண்டுமென்று! உனக்கு எப்படி கூப்பிடபிடிக்குமென்றேன்.
"அம்மா"
சரி, அப்படியேக் கூப்பிடு!
பை,அம்மா!!

6. முன்பு டீவியில் நாம் வைத்ததைப் பார்ப்பாள், அல்லது டோரா வேணுமென்றும் பும்பா வேண்டுமென்றும் கேட்பாள். இப்போதோ, ரிமோடில் சுட்டி டீவியை கண்டுபிடித்து வைக்கத் தெரிகிறது.முன்பு வால்யூம் கூட்டத் தெரியும். இப்போது சானலும்..மக்கள் வேணுமா, விஜய் வேணுமா..என்றும், எனக்கு சுட்டிதான் என்று எந்த வரிசையில் இருந்தாலும் வைக்கிறாள்!
(is this a milestone??lol)

7.கச்சாமுச்சா என்ற வார்த்தை அவளுக்கு அவ்வளவு சிரிப்பாயிருக்கிறது. அந்த வார்த்தையை சொல்லி சொல்லி ஒரு ஜோக்-குக்கு சிரிப்பது போல் சிரிக்கிறாள். அவள் "தண்ணொளி" என்று கூப்பிடுவாளாம். ஆனால் சஞ்சய், "தண்ணு வளி" என்று கூப்பிடுகிறானாம். "தண்ணு வளி" என்று சொல்லிவிட்டு, laughing at her own joke.

8.ஆச்சி, எனக்கு அப்பாதான் பிடிக்கும்.
உடனடியாக,
எனக்கு உன்னைப் பிடிக்காது!

எனக்கு இதற்கு எப்படி ரியாக்ட் செய்யவதெனத் தெரியவில்லை.
அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விட்டுவிடுவதா இல்லை குழந்தைகளுக்கேயுரிய அந்தந்த நேரத்து உணர்ச்சிகள் என்று விட்டு விடுவதா? கடமையிலிருந்து தவறிவிட்டேனென்று வருந்துவதா அல்லது முகிலைப் பார்த்து பொறாமைப் படுவதா?
அல்லது ஒரு காலத்தில் நானும் என் அம்மாவை ஒதுக்கினேனே என்று இயல்பாய் எடுத்துக் கொள்வதா?

9.சிலசமயங்களில் என்மீது படுத்துக்கொள்வாள் பப்பு...பாதுகாப்பு உணர்வுக்காகவோ அல்லது
தூக்ககலக்கதில் இதம் வேண்டியோ! அப்படியொரு பொழுதில் சொன்னாள், "உன் வாசனை வருது" என்றாள்.ஆச்சர்யத்துடன், எங்கேர்ந்து வருது என்றபோது, என் நெஞ்சைக் காட்டினாள். ஓ..அது என் வாசனையல்ல பப்பு, என் நெஞ்சில் நான் சேமித்து வைத்திருக்கும் உனக்கான அன்பின் வாசனை!!


10."எனக்கு ஒடம்பு சரியில்ல..பவுடர்பில் டாக்டரை வரச்சொல்லு"
- டாக்டர் பவுடர்பில்-லை சந்திக்க அவ்வள்வு ஆசையாயிருக்கிறாள்..அதேபோல் பீட்டர் பான் - ஐயும்! அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை,நானும் அவரை சந்திக்க அந்தவயதில் அவ்வளவு ஆவலாயிருந்தேனென்று!கதையென்று நினைத்துச் சொல்வது அவளுக்கு எவ்வளவு நிஜமாயிருக்கிறது!! probably, one fine day she will know the reality!

11.பப்பு தனிமையை உணர்கிறாள். அவள் வயதையொத்த ஒரு நட்பு அவளுக்கு தேவையாயிருக்கிறது இப்போது. தானாக கற்பனை செய்துக் கொண்டு பேசுவதும், பொம்மைக்குச் சொல்லிக் கொடுப்பதும், அதன் கையை பிடித்து இழுப்பதுமாக செல்கிறது அவளின் விளையாட்டு நேரங்கள். யாராவது குழந்தைகள் வீட்டுக்கு வந்துவிட்டு சென்றபின் "ஏன் போய்ட்டாங்க" என்ற வளின் கேள்வி ஓயாததாய் இருக்கிறது. சிறிது சிறிதாக அவள் ஒரு புதிய கட்டத்திற்கு செல்வதை உணர முடிகிறது..அவளுக்கு விளையாட இப்போது பெரியவர்க்ள்
தேவையில்லை..அம்மா,அப்பா..ஆயா..தாத்தா..அவளுடன் பேசவும்,சேர்ந்து விளையாடவும் அவளுக்குத் தோதான,அவள் ஈடான ஒரு சிறுமியோ/சிறுவனோ தான்!

12.என்னைப் போல் துப்பட்டா போட்டுக்கொள்வதும், என்னைப் போல் கண்ணாடி முன்நின்று தலைவாரிக் கொள்வதும், பையை கையில் எடுத்துக் கொள்வதுமாக...பப்பு என்னை பின் தொடரும் காப்பி கேட்டாகத்தான் இருந்தாள் இதுவரை! என்னைப் போலவே யாரும் செய்தால் ஒதுக்கும் நான், அவளின் செய்கைகளை ரசிக்கத் தொடங்கினேன், அதிலும் ஒரு பெருமிதம் இருக்கத் தான் செய்தது! என்னை நகலெடுத்த பப்பு இப்போது அவளது ஆன்ட்டியின் மேனரிசங்களை...அவர்களைப் போல் சிரிப்பதும், பொம்மைகளிடம் அவர்களைப் போல் பேசுவதும், "#$%#$%#$% கோ" என்று..."#$@#$ ஸ்னாக்ஸ் டைம்..கோ" என்றும் ஆங்கிலத்திலுமாக மோதி ஆன்ட்டி புராணமாயிருக்கிறது. சிரிப்பாயிருக்கிறது, சிலசமயத்தில் பொறாமையாயும் ;-)!!

Monday, December 22, 2008

நானும் மனிதர்களும்

(உபயம் : பள்ளிக்காலத்து கதை நோட்டு)

மு.கு: இது அனுபவமில்லை, கற்பனையென்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? (ஒரு சில வாக்கியங்கள் எனது மற்றும் என் கிளாஸ் தோழிகளின் அனுபவங்கள். )


நான் மாடியில் இயற்கையின் மடியில் போதையுற்று இருந்தேன். நான இலைகளின் இனிய கீதத்தில் மயங்கியிருந்தேன். கீழே, காற்றில் ஓடும் சருகுகளின் சப்தத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். மேகப்பட்டாடையை கிழித்துக் கொண்டு எட்டிப் பார்க்கும் நிலவின் குறும்பை ரசித்து மெய் சிலிர்த்தேன்.

கீழே, வீட்டில் சலசலப்பு. இன்று சன் டீவியில் “நீங்கள் கேட்ட பாடலாம்.”

ஓ, சொல்ல மறந்துவிட்டேனல்லவா!
நான் 16 வயதுடைய இளம்பெண்.

கீழேயிருந்து அம்மா கூப்பிட்டாள்.

”கேட்ட பாடல்”கூட கேட்காம என்ன பண்றா, மாடியில” - பக்கத்து வீட்டு பெண்ணின் சந்தேகம்.

“என்ன செய்றா மாடில் இவ்வளவு நேரம்”? - ஒரு அம்மாவின் கேள்வி.

“இந்த நேரத்தில என்ன வேல, மாடில? காலங் கெட்டுக் கிடக்கு, பொண்ணுங்களை அப்படியே
சுசந்திரமா விட்டுட முடியாது” - ஓசி டீவி பார்க்க வந்த ஒருவரின் லெக்சர்.

ஓ, உங்களுக்குத் தெரியுமா? தென்றலின் தீண்டுதலின் சுகம்? நீங்கள் அறிவீர்களா பிறைநிலவின் புன்சிரிப்பை?

பிறைநிலவு எனை நோக்கிச் சிரித்தது என்று நான் சொல்வேனாகில் நீங்கள் பக்கத்து விட்டு சந்திரன் உன்னை பார்த்து ஜொள்ளுவிட்டானா என்பீர்களே?

பறவைகளின் மோகனராக கொஞ்சலில் என மறந்தேன் என்றால் மோகன் உனைப் பார்த்து சீழ்க்கையடித்தது என் காதில் எபப்டி விழாமல் போயிற்று என்று கேட்பவராயிற்றே நீங்கள்?

பக்கத்துவீட்டு சரளா ஓடிப்போனதையும், அம்புஜத்தின வீட்டுக்காரன் சின்ன வீடு வைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி பேசும் உங்களிடம் நான் என் ரசனைகளை எப்படி பகிர்ந்துக் கொள்வேன்?

சினிமாவிலே வாழ்ந்து, கனவிலே சஞ்சரித்துவிடும் உங்களிடம் என்னை எப்படி அறிமுகப் படுத்திக்கொள்வேன்?

என் வயதொத்த சக மாணவனுடன் பேசினாலும் சந்தேகக் கண்களுடன் பார்க்கும் உங்களுக்கு எங்கள் நட்பை எப்படி புரிய வைப்பேன்?

பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தேன்.வராண்டாவில் மோகன் மாமா. உள்ளே நுழைகிறேன். அவர் பேசியது என் காதில் பாய்ந்தது, வஜ்ரமாக.

“உங்க பெண்ணை நான் கடைத்தெருவில் ஒரு பையனுடன் பார்த்தேன், காலங் கெட்டுக் கிடக்கு, என்ன இருந்தாலும் வயசுப் பொண்ணு. அடுத்த நிமிஷம் என்ன செய்வான்னு யாருக்கு என்னத் தெரியும்? நம்ப மானம் காத்தில பறக்கறதுக்கு முன்னாடி கண்டிச்சு வையுங்க”.

அப்பாவிற்கு கோபம் மூக்கின் மேல் வந்தது. “மாமா சொல்றாரே, உண்மையா”?

ஒருமுறை இருவரையும் தீர்க்கமாய் பார்த்துவிட்டு “மாமா, உங்க பெண்ண இப்பதான் அருண் ஐஸ்கிரீம் வாசலில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். எதுக்கும் கண்டிச்சு வையுங்க, ஏதாவது தப்பு நடக்கற்துக்குள்ளே. உங்க தங்கச்சி காய்கறி காரன்கிட்டே கலகலன்னு அப்படி என பேசுவா? கொஞ்சம் கண்டிச்சு வைங்க, ஏடாகூடாம நடக்கறதுக்கு முன்னாடி” - என்றபடி செருப்பை காலிலிருந்து வீசியெறிந்துவிட்டு, மாடியில் சென்று கதவை படீரென சாத்திவிட்டு அழ ஆரம்பிக்கிறேன் நான்!!




தமிழ்பிரியன் அண்ணா, உங்க குழலோவியத்தில் இந்த கதையை கொஞ்சம் பரிந்துரைப்பீர்களா?:-))

Thursday, December 18, 2008

காலையில் தினமும் கண்விழித்தால்...

காலைநேரங்கள் பரபரப்பானவை. ”படுக்கையை விட்டு எழு, பப்பு பள்ளி செல்லவேண்டும்” என்பதுதான் என் மூளை எனக்குக் கொடுக்கும் முதல் கட்டளையாயிருக்கும். அதுவும் 7லிருந்து 8 மணிவரை ஒரு நிமிடம் கூட வீணாக்கக் கூடாது. பப்புவின் மனமும் கோணாதவாறு! 7 மணிக்கு எழுப்பி துப்புரவாகி பால் குடிக்கச் செய்து 8.05-க்கு வீட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் நாங்கள். அதிலும் எல்லாம் விளையாட்டாகவே செய்ய வேண்டும். எல்லாவற்றையும் தானாக செய்யவேண்டுமென்றும் பப்புவுக்கு! அதற்கேற்றவாறூ வளைந்து செய்து முடித்தல் வேண்டும். so, every minute is crucial for me.

பேஸ்ட் நானே வச்சிக்கறேன்,
ஓக்கே.
இல்லை, உனக்கும் நானே வைப்பேன்..
ஹ்ம்ம்..ஓக்கே!

நானே சோப் போட்டுக்கறேன்..
இந்தா உன் கையில்..பிடி..முகத்தில தேச்சிக்கோ!
நானே தண்ணி ஊத்திக்கறேன்!
இந்தா மக், தண்ணி மேலே எப்படி ஊத்திப்பே?!

இதன் நடுவில், குளிப்பாட்டி முடித்திருப்பேன்.

நானே ட்ரெஸ் போடறேன்..
சரி, பால் எடுத்துக் கொண்டு வர்றதுக்குள்ள..
ஆனால், பால் கொண்டு வந்திருந்தாலும், ஆற்றிக்கொண்டிருந்தாலும்...எந்தநிலையில் விட்டுச் சென்றோமோ அப்படியே இருக்கும்.
சட்டையைப் போட்டுவிட்டால்,

பட்டன் நானே போட்டுக்கறேன்..

சரி போடு..நான் உன் பேக் ரெடி பண்றேன்.
பேக் ரெடியாயிருந்தாலும்,பட்டன் ஒன்றுதான் மாட்டப்பட்டிருக்கும்!
மூட் ஸ்பாயில் ஆகக் கூடாது, அதே சமயம் உன்னால் முடியாது என்றும் தோணிவிடக் கூடாது!சோ, பொறுமை..பொறுமை..என்ன பப்பு போட்டுட்டியா?

”இது உள்ளே போகவே இல்லை”என்று அவளுக்கும் தன்னால் செய்யமுடியவில்லையே என்றும் ஒருவித அழுகை/கோபம் கலந்த உணர்ச்சியிலிருப்பாள். (பள்ளி செல்லவாரம்பித்தலிருந்து இதைக் காண்கிறேன்..அதாவது, அவளால் நினைத்தவாறு அல்லது அந்தப் பெர்பெக்‌ஷன் வரவில்லையென்றால் அந்த ஏமாற்றம்..அல்லது ப்ரஷ்ட்ரேஷன்!!)
உடனே, பாய்ந்துப் போய் காப்பாற்று..ம்..எங்கே இதோ உன்னாலே முடியுமே..நீ இதை பிடி, இங்க நேரா..ம்..அப்படிதான் இதோ வந்துடுச்சே!!

இப்படி நாலு பட்டன்களையும் போடச் செய்து..(நீதான் பவர்புல், அவளுக்கு செய்யும் திராணி இல்லை என்று உன் செய்கைகளால் மறந்தும் தோணிவிடும்படி செய்துவிடாதே!!)


பிறகு இருக்கிறது பாலுண்ணும் படலம்!
ஆகாஷ்தாஸ் கதை சொல்லு!
இது நானே உருவாக்கின ஒரு தொடர் கதை. ஆகாஷ் தாஸ் அவளது பள்ளித் தோழன்!
சாகசங்கள், விலங்குகள் நிரம்பிய ஒரு தொடர். பப்புவும் ஆகாசும் முக்கிய நபர்கள். வெண்மதி கெஸ்ட் ரோல். கண்டிப்பாக பப்பியும் சைக்கிளும் கூடவே வரும்! பின்பு இந்தக் கதைகளைப் பற்றி!

ஆகாஷ், பீச்-க்கு போனான்...பப்பி...பந்து..

பால் அப்படியே இருக்கும்.மணி 7.45 ஆகியிருக்கும்! கதையை நிறுத்தினால் குடிப்பாளென்று நினைக்கக் கூடாது!

நீ சொல்லல..என்று ஒரு ஸ்ட்ரைக் ஆகிவிடும்.

நோ, நோ.. உன் கோபம் எல்லாம் இங்கே வேலைக்காகாது! பொறுமை..பொறுமை..
ஒருவழியாய் குடித்து முடிக்கையில், மணி 8 ஆகியிருக்கும்.

தலைவாரி, காலணிகளைப் போடுகையில்,

நாந்தான் பக்கிள்ஸ் போடுவேன்..

ஓக்கே..ஓக்கே
குனிந்தப்படி, போட்டுமுடிக்கையில் மணி 8.05ஐ தாண்டியிருக்கும்!ஓ..8.15-க்கு வேன்!

வெரிகுட், சூப்பர் பப்பு, அழகா போட்டுட்டியே..(உள்ளுக்குள் பொங்கும் அவசரத்தை மறைத்துக் கொண்டு!)

“உச்சா வருது!”-இதுதான் பொறுமையின் எல்லை!!!

திரும்ப எல்லாம் கழற்றி, மாட்டி முடிந்து நிமிர்கையில், கண்கள் கடிகாரத்தை நோக்கி..ஆ 8.15 ஆக் போகுது!!

“ஆச்சி கோவமா இருக்கியா?!”

“ஆச்சி கோவமா இருக்கியா,சிரி..சிரி!!” --என்று அந்த பிஞ்சுக்குரலை நோக்கி, இல்லையே கண்ணா..என்று புன்னகைத்தபடி வேனை நோக்கி நடைபோடுவோம் அந்த நாளின் சூரியக்கதிர்களையும் வானவில்லையும் சந்திக்க !!

Wednesday, December 17, 2008

கனாக் கண்ட காலங்கள்!!!

கனவுகள் பற்றி ஒரு பதிவு படித்தேன், தேவன்மயத்தின் வலைப்பூவில்! எனக்கும் கனவுகளைப் பற்றி சொல்ல ஆசை வந்துவிட்டது! கனவுகள் வருவது சாதாரணம்தான்..ஆனால் அதன்கூட நாம் செய்யும் காமெடிதான் மேட்டரே!!

நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பேன்..(ஆமா, தூங்கினாதானே கனவு வரும்!!). ஏதோ ஒரு கனவு. கனவிலேயே எனக்கு கால் வலி. வலியென்றால் நிஜமான வலி! உடனே விழிப்பு வந்து, பார்த்தால் நானே காலை சுவரில் மோதிக் விட்டிருக்கிறேன்! இன்னொரு கனவும் மறக்கமுடியாதது, என்னவென்றால் கீழே விழுவது போல. பார்த்தால் படுக்கையிலிருந்து தரையில் இருக்கிறேன்! நல்லவேளை, பொண்ணு படிக்குது என்று தனி ரூம் கொடுத்திருந்ததால் பிழைத்தேன் தம்பி என்றொரு சதிகாரனிடமிருந்து!!

ரெகுலராக சில் கனவுகளும் வரும், அதுவும் பரீட்சை சமயத்திலும், பரீட்சைக்கு பின்பும்! அதாவது, நான் செல்வதற்குள் பரீட்சை ஆரம்பாகியிருக்கும், அல்லது முதல் பாதி முடிந்திருக்கும் அல்லது ஹால் டிக்கட் கொண்டுபோகாமல் சென்றிருப்பேன்.. அந்தக் கனவு அவ்வளவு நிஜமாயிருக்கும்..இதயம் படபடக்க வேர்த்துக் கொட்டி எழுந்துப் பார்த்தால் மணி இரண்டு அல்லது மூன்று இருக்கும். அப்போது ஒரு நிம்மதி வருமே..அதற்கு ஈடு எதுவுமேயில்லை!

இன்னொரு விஷயம், ஏதாவது விரும்பத்தகாதது நடந்திருந்தால் இது கனவாக இருக்கக் கூடாதா என்று நினைத்துக்கொள்வேன்! உச்சபட்ச காமெடி, கனவிலும், இது கனவாக இருக்கக் கூடாதாவென்று நினைத்துக் கொள்வது போல் வரும்!! :-))

சின்னவயதில் பகலில் மதியம் தூங்கி அந்திசமயம் எழுந்ததும் அடுத்தநாள் காலை போலிருக்கும். அப்போது பல்விளக்கியெல்லாம் காமெடி செய்திருக்கிறேன்! சமீபத்தில் பப்புவும் அப்படி செய்ய முற்பட்டாள்.

நினைவு தெரிந்து வந்த முதல் கனவு இன்றும் மனதிலிருக்கிறது. நிறைய கதைகள் கேட்ட பாதிப்பு என்று நினைக்கிறேன். ராட்சசன் வந்து எங்கள் வீட்டு கொல்லையிலுள்ள பனை மரத்தை பிடுங்கி பல் விளக்குகிறான். அன்று பகல் முழுவது பயந்த பயமும் இன்றும் நினைவிருக்கிறது! :-)))


கனவில் உளறுவது இன்னொரு காமெடி. மாமா பையன் புகழேந்தி கனவில் உளருவான். நாம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுவான்! கனவில் சொல்லாததையெல்லாம் உளறியதாகச் சொல்லி கலாட்டா செய்து காலி செய்யும் கூட்டமும் எங்கள் வீட்டில் பஞ்சமில்லாமலிருந்தது!

கனவென்றால் மறக்கமுடியாமல் நினைவுக்கு வருவது காலேஜில் நடந்த சம்பவங்கள் சில.
தினமும் கலாட்டா, ஜாலி, கிண்டல் தானே வாழ்க்கை அப்போது. ராகிங் செய்தவங்கதான் பிற்காலத்தில் நமக்கு எல்லாம் உற்ற தோழிகள்/அக்காக்களாகி விட்டிருப்பார்கள். அவர்கள் செய்த ராகிங்களுக்கெல்லாம் நம்மிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள் அப்புறமாக! அப்படி என்னை கலாட்டா செய்தவர்களிடம் சொன்னது இது!


"அக்கா, நேத்து நைட் எனக்கு ஒரு கனவு வந்துச்சுக்கா, என்ன தெரியுமா, அதுல நீங்க வர்றீங்க. அப்புறம் ஜெய்ஸ்ரீ, கலா, தேவி எல்லாரும் வர்றாங்க. நாம எல்லாம் ஹெவன் - ல இருக்கோம் அக்கா, அங்கே உள்ளே போனது சொல்றாங்க, நீங்க இந்த ஹால்ல நடந்து போகணும். அங்அக் ஒரு தட்டு வரும்,. அதை மட்டும் மிதிக்கவேக் கூடாது! நானும் பயந்து பயந்து நடந்து வர்றேன், பார்த்தா ஜெய்ஸ்ரீ அக்கா வர்றாங்க, அவங்ககூட யாரோ ஒரு ஆள். அசிங்கமா பார்க்கவே
சகிக்கல! என்னான்னு கேட்டா, அவங்க சொல்றாங்க, நான் அந்தத் தட்டை மெதிச்சுட்டேன், இந்த ஆளை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க, பார்த்து போ அப்படின்னு! அப்புறம் பார்த்தா தேவிக்காவும்! அவங்களும் அதே சொல்றாங்க! நானும் பயந்துகிட்டே வர்றேன்..பார்த்தா நீங்க வர்றீங்கக்கா! ஆனா உங்களுக்கு மட்டும் நல்ல அழகான் ஹஸ்பண்ட்! அப்போ நான் உங்களைக் கேக்கறேன், அக்கா நீங்க்தான் தட்டை மெதிக்கலையான்னு. அப்போ உங்க கூட இருந்தவர் சொல்றார், "இல்ல, நாந்தான் தட்டை மெதிச்சுட்டேன்"ன்னு!"

-அப்படின்னு சொல்லிட்டு ஓடியே வந்துட்டேன்!!

உஷாக்கா, ஐ மிஸ் யூ சோ மச் உஷாக்கா! அந்த முல்லையும் இப்போ இல்லை, அந்த உஷாக்காவும் இருக்க மாட்டாங்கன்னும் தெரியும்.வாழ்வின் உளிகளில் வெவ்வேறு பரிணாமங்களில் நாமிப்போது! ஆனா, நம்ம காலேஜ் காம்பஸ்-ல கண்டிப்பா ஏதாவதொரு முல்லையும், உஷாக்காவும் கண்டிப்பா இருப்பாங்க..எத்தனை பேட்ச் வந்தாலும்!

Tuesday, December 16, 2008

நீங்கள் மடிப்பாக்கம் வழிச் செல்பவராயின், ஒரு வேண்டுகோள்...


மடிப்பாக்கத்தின் பாலையா கார்டன் பேருந்து நிறுத்தத்திற்கு அப்பால் மெயின் ரோடை ஒட்டி ஏரி முடிவடையும். சமீபகாலமாக, கடந்த பெருமழைக்குப் பின், மிக மோசமான் துர்நாற்றம் வீசுகிறது. குடலை பிடுங்கும் துர்நாற்றம் என்றால் அதுதான்! அந்த ஏரியின் கரை சிறிது மேடாக இருக்கும். உண்மையில் அந்த இடம், மண்பகுதியாக இருந்தது, இந்த மழையில் நீர் நிரம்பி, மட்காத கழிவுப் பொருட்கள் சேர்ந்து இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது. அந்தக் கரையில் மேல் ஒரு கூடாரம். காற்றடித்தால் கூட சேர்ந்து பற்க்கும் படையான ஒரு கூடாரம். இரண்டு சிறுவர்கள், ஒரு சிறுமி மற்றும் கைக்குழந்தையுடன் தாய் மற்றும் தந்தை! அவர்களின் தொழில் வீட்டு அலங்கார பொருடகள் விற்பது. (அந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது பார்த்ததுதான். இன்னும் சிலரும் இருக்கலாம்.)


அவ்வீட்டு வாயிலில் காணக்கிடைப்பவை சுட்ட மண்ணினால் ஆன கலை வேலைப்பாட்டுப் பொருட்கள், அலங்கார வாயில் தொங்கல்கள் மற்றும் சில உருவ பொம்மைகள். காலையில் ஒரு பெண் அமர்ந்து அந்த பொருட்களுக்கு சாயம் பூசிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பாதுகாப்பான நாலு சுவர் கூட இல்லாத ஒரு வீட்டில் இருந்துதான், ஒரு வீட்டை அழகாக்குவதற்கான, வீட்டின் எல்லா மூலைகளுக்கான அலங்காரப் பொருட்கள் தயாராகிறது.இதைப் படிக்கும் நீங்கள், அந்தப் பகுதியைக் கடக்க நேரிட்டால் என்னிடம் ஒரு வேண்டுகோள் உண்டு உங்களுக்கு! ஏதாவது ஒன்று அவர்களிடம் வாங்குங்கள்..தொங்கும் மணிகளோ, பூச்சாடியோ அல்லது யானையோ..உங்களால் முடிந்த ஏதாவதொன்று!! குளிர்காலத்துக்கேற்ற ஒரு ஆடையாவது, குழந்தைக்குப் பாலாவது அல்லது வாழ்க்கையின் மீதான நம்பிக்கையாவது அவர்களுக்கு கிடைக்கலாம் நம் மூலமாக!!


பி.கு : நெடுநாட்களாக நான் வாங்கவேண்டுமென்றிருந்த தொங்கும் மணிகளை வாங்கவியலாமல் போனது, இங்கு வாங்கவேண்டுமென்றுதான் போல!!!

Monday, December 15, 2008

வா ஓடி போகலாம்

மு.கு: இது அடுத்தக் கதை. திகில் கதையாக்கும்!!ஓக்கே..ஸ்டார்ட்!!


அவர்கள் இருவரும் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தனர். அவர்கள் என்பது ஒரு பெண்னும், ஒரு ஆணும். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நடந்தனர்.

அவன் கேட்டான், “யாராவது பார்த்தாங்களா, கௌரி, நாம வரும்போது”. அவள் கூறினாள்,” நல்லவேளை, யாரும் பார்க்கலை”.

அவர்களிருவம் பயத்தினால் கையை கெட்டியாக பற்றிக் கொண்டு ஓடத் துவங்கினர். கௌரி கூறினாள், “என்னால் இனிமே முடியாது, மெதுவாப் போலாம்”.

அவன் கூறினான், “அதோ தெரியுதே, அதுகிட்ட போயிட்டா ஒண்ணுமே தெரியாது. வா, போலாம். அப்புறம் ஜாலிதான்.”

அவர்கள் அன்கே போனதும் “ஹோ” எனக் கத்தியபடி, “கௌரியும் சங்கரும் வந்தாச்சு, வாங்க விளையாடலாம்” என்றபடி விளையாடத் துவங்கியது அந்தச் சிறுவர் கூட்டம்!!

Saturday, December 13, 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள் : ராப்




இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராப்!

ராப் எனக்கு எப்படி அறிமுகமானது பாப் பாடல்கள் பற்றின என்னோட பதிவுகள்னுதான் நினைக்கிறேன்! ராப்-இன் ஃபேவரிட் பாடல் எனக்குத் தெரியாததனால், என்னோட ஃபேவரி பேண்ட் Bombay Vikings-இன் சூப்பர் டூப்பர் பாடல், நாளை பிறந்த்நாள் கொண்டாடும் ராப்பிற்காக!!

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, December 12, 2008

பப்புக் குறிப்புகளும், பப்புவுக்குக் குறிப்புகளும்!!



(படத்தில் தெரியும் அந்தச் சின்னஞ்சிறு கைகள் செயதன, இந்த வட்டத்தை!)

பப்புவுக்கு இப்போது எல்லாமே ஷேப்ஸ்தான்! வட்டங்கள், முக்கோணங்கள் மற்றும் சதுரங்கள் ஆளுகின்றன அவளது கற்பனையை! முக்கோணம் செய்து எங்களைக் கூப்பிட்டு காட்டியவள், காமெரா எடுத்து வருவதற்குள் கலைத்து வட்டமாக்கி விட்டாள்! எழுதும் போதும் எழுத்துக்களால் ஒரு கட்டத்தை அமைக்கிறாள்.

இப்போது உணவில் விளையாடுவது மகிழ்ச்சி தருகிறது அவளுக்கு. சாதத்தை தண்ணீரில் போட்டு, காயையும் சேர்த்து...பின் தம்ளருக்கு மாற்றியென. நானும் எந்த கட்டுபாடுகளை வீச வில்லை, இந்த முறை! அவளுக்கு மகிழ்ச்சி தருகிறது எனில், அதில் ஒரு புதிய முறையை கற்கிறாள் எனில், செய்வதில், செய்யும் முறையில் ஆழ்ந்து போகும் விஷயமெனில் அதைக் கலைப்பானேன்?!

ஜனகன மன பாடக் கற்றுக் கொண்டுள்ளாள். “பாக்ய விதாதா” வும், பஞ்ஞ்ஞாஆஆப சிந்துவும்” அடிக்கடி வரும், எந்த சீக்வென்ஸாயிருந்தாலும்! இப்போதுதான் ஜீரத்திலிருந்து மீண்டிருக்கிறாள், ஆனால் சளி இருப்பதால் குரல் பதிவு லேட்டர்!!

உண்மையில் இந்தப் பதிவை போட இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளவேண்டுமென எண்ணவில்லை, ஆனால் அப்படி ஆகிவிட்டது. பப்புவின் பள்ளியில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் அவளது முன்னேற்ற மறுபார்வைகள் (progress review - தமிழ்ல என்னப்பா??) நடந்தேறியது. இதோ பப்புவுக்கான ஒரு சின்னக் குறிப்பு:

பப்பு,

உனது பள்ளியின் ரெவ்யூ எனக்கு ஆச்சர்யங்களெதையும் தரவில்லை. நீயாகவே என்ன வொர்க் செய்ய வேண்டுமென்றும், அதை ”well co-ordinated hand movements"களிலும் செய்து விடுகிறாய். வேலை செய்யும்போது எதுவும் உன் கவனத்தை திசைத் திருப்புவதில்லை போலும்! நிறைய நேரங்களில் நானும் அதை உணர்ந்திருக்கிறேன், எப்போதும் இப்படி இருக்கவேண்டுமெனவும் ஆசைப்பட்டிருக்கிறேன்!

சப்தங்களை அறிந்துணர்வதிலும், பொருட்களை கண்டறிவதிலும் உனக்கு அதிக ஆர்வமே. பாடுவதிலும், பாடல்கள் கற்பதிலும் மகிழ்ச்சியாய் உணர்கிறாய், எப்போதும் போல்!! ஆனால் பப்பு, ஆங்கிலத்தில் பேச இன்னமும் நன்றாய் பழக வேண்டும். இனிமேல், முயற்சிக்கலாம் என்ன?!

முக்கியமாக, பள்ளியின் உனது சூழ்நிலையில் நீ பொருந்திவிட்டாய் என்றும் சொல்லப்படாத விதிகளை புரிந்துக் கொண்டாயெனவும் அறியும்போது கவலைகள் நீங்கியது. நீ கற்பது என்பது அடுத்த விஷயம், ஆனால் உனக்கான ஒரு இடத்தை, அந்த இடத்தில் நீயாக accomadate ஆவது..சுழல ஒரு மையத்தை உராய்வுகளின்றி நீயாகவே அமைத்துக் கொள்வதே என் விருப்பம்! I always want you to be independent, to be on your own!

100 நாட்கள் நடைப்பெற்ற பள்ளிக்கு, 60 நாட்கள் சென்றிருக்கிறாய். ஜூலையில் சேர்ந்ததால் ஒரு மாத வருகை தடைப்பட்டிருக்கிறது.

பொதுவாக உன்னைப் பற்றி, “a well-mannered kid with smiling face". அந்த புன்னகை என்றும் உன் முகத்தில் நீடிக்க எல்லாம் வல்ல ஆண்டவரை வேண்டிக்கொள்வோம்!

பல நேரங்களில் நாமிருவருமே பெருமை கொண்டவர்களாகி விடுகிறோம், சில நேரங்களில் உன்னாலும், சில நேரங்களில் என்னாலும். இந்ததடவை உன்னால்!! நன்றி, மகளே!

உன் அம்மா!

Wednesday, December 10, 2008

yaaron sun lo zara

என் ஆயா பப்புவையை எதற்கோ அப்படில்லாம் செய்யக்கூடதென்றதற்கு கோபமடைந்த பப்பு அவசரமாகச் சொன்னாள்,

ஆயா, நீங்க.... பாவக்காஆஆ!

ஆச்சர்யத்துடன், எது அவளை இவ்வாறு சொல்ல வைத்திருக்கக் கூடுமென்ற யோசனையில்,

பப்பு, நீ என்னடா அப்போ?

நான்..நான் ஸ்ட்ரோபெர்ரி!






பப்புவின் ஆயா ஊரிலிருந்து வந்திருந்தபோது இரவு அவர்களுடன் தூங்க விரும்பி "நான் ஆயா கூட தூங்கறேன் " என்றாள், அவர்களுடன் அடுத்த அறையில் படுத்துக் கொண்டு. இரண்டு முறை கூப்பிட்டுவிட்டு, நானும் தூங்கச் சென்றேன். அவர்களிருவரும் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.

சிறிது நேரம் கழித்து, ஆச்சி கூப்பிடுது, போய் பார்த்துட்டு வரேன் என்ற குரலும், அதையடுத்து கதவைத் திறந்து, கூப்பிட்ட இல்ல, ஆச்சி என்று சொல்லிவிட்டு என்னருகில் படுத்துக் கொண்டாள்!

நான் கூப்பிட்டதுபோல நினைத்துக் கொண்டாளோ அல்லது, ஆயாவை காயப்படுத்தக் கூடாதென்று நினைத்தாளோ, ஆனால் அவள் செய்கை என்னை புன்னகைக்க வைத்தது!!








இது என்னவென்று ஊகிக்க முடிகிறதா?

பழசா இல்ல நியூஸ்பேப்பரா என்று கேட்டுவிட்டு வெட்டத் துவங்கியபோது மற்றுமொரு குப்பை என்றுதான் தோன்றியது. "இந்தா ஆச்சி, காசு, வச்சிக்கோ" என்ற போது சிரித்துக் கொண்டே வாங்கி மேஜை மேலே வைத்தேன். என் அசிரத்தை பிடிக்காமல், "எடுத்து உள்ள வை, ஆச்சி" என்று சொல்லிவிட்டு, இன்னும் அதிகமாக காசு தயாரிக்கும் வேலையில் மூழ்கிப் போனாள், பப்பு!

If only money can be made like this....;-)

Monday, December 08, 2008

மனிதம் நேசிப்போம்!

அவந்திகா ஆரம்பிச்சு, முத்துலெட்சுமி தொடர்ந்து, என்னை வந்து சேர்ந்திருக்கிறது இந்த டேக்!

தாக்குதல் செய்யப் போகிறார்கள் என்று செய்தி கிடைத்தும் தடுக்க இயலவில்லை என்றால், என்ன மாதிரி நாட்டில் வாழ்கிறோம் என்றுத் தெரியவில்லை. அரசியல்வாதிகள் கடமையை உணர்ந்துதான் செயல்படுகிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. நம் நாட்டின் மிகப் பெரும் சக்தியே மனித வளம்தான்! அதிலும் இளைஞர்கள் சதவீதம் நமது நாட்டில் அதிகம் என்று எங்கோ படித்திருக்கிறேன். அந்த சக்தி நமது அரசியலுக்குள் வந்தால் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்!


ஆனால், முத்துலெட்சுமி சொன்னதுபோல், யாராவது நமது பிள்ளைகள் அரசியலுக்குப் போகிறேன் என்றால், நாம் முதலில் செய்வது அட்வைஸ். படிச்சு, நல்ல வேலைக்கு போகிற வழியைப் பாரு! இதற்கு காரணம், இன்றைய அரசியல் சூழலில் நிலவும் போக்குதான். யாரு யாரை எப்போ போட்டுத் தள்ளுவாங்களோ என்ற அடிப்படை பயம்!! முதலில், அரசியலில் வர சில அடிப்படை தகுதிகளை வைக்கவேண்டும். படிப்பு மட்டுமே என்று சொல்லவில்லை, ஒரு basic morale..மனிதம் உணர்ந்து மனிதர்களை மதித்து வழிநடத்தும் தலைவர்கள் இருந்தால்..ஹ்ம்ம்!


ஆனால், தீவிரவாதம்..அப்பாவி மக்களை கொல்லும் இந்தத் தீவிரவாதத்தால் சாதிக்கப் போவதுதான் என்ன? புரியவில்லை!

நான் டேக் செய்ய விரும்புவது,

அமித்து அம்மா,
ஆகாயநதி,
ஜமால்
வித்யா!
வெயிலான்

ஒரு சோனி வாக்மேனும் சில சென்டிமென்ட்-களும்

ஸ்கூல் படிக்கும்போது எங்களிடம் ஒரு வாக்மேன் இருந்தது. எங்களிடம் என்றால் எனக்கும், என் தம்பிக்கும் சேர்த்து!வீடீயோகான் என்று நினைக்கிறேன். அதை எந்தளவுக்கு உபயோகிக்க முடியுமோ அந்தளவுக்கு தேய்த்தாயிற்று. காலேஜ்-க்கு ஹாஸ்டலுக்கு போகும்போது கண்டிப்பாக அதை எடுத்துச் செல்ல முடியாது. ஆனால், நான் வாங்கியிருந்த கேஸ்ட்-டுகளை எடுத்து பெட்டியில் போட்டுக் கொண்டேன். (என்ன ஒரு நல்லெண்ணம் பாருங்க, என் தம்பி கேட்டுடக் கூடாதாம், என்னோட கேஸ்ட்-களை!)

புது வாக்மேன் வேண்டுமெனக் கேட்டதற்கு, படிக்கத்தானேப் போறே, அப்புறம் வாங்கிக்கலாம் என்று வீட்டிலிருந்து பதில். நானும் ஓக்கே என்று ஒரு சோக முகத்தை காட்டிவிட்டு, பேக் செய்த காசெட்டுகளை எல்லாம் வைத்துவிட்டு சென்றேன், ஒரே ஒரு கேசட்டைத் தவிர.அது Khamoshi. ஒரு மாதம் சென்றது. ஒரு நாள் மதியம் மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை வார்டன் வந்து பார்த்துட்டு போ என்று சொன்னபோது வழக்கம் போல் கடிதம் என்று நினைத்துப் போனவளை வரவேற்றது நீட்டாக துணியின் ஓரங்கள் தைக்கப்பட்ட ஒரு பார்சல். வாவ்! பெரிம்மாவிடமிருந்து! பிரித்த போது வந்து விழுந்தது, பேரிச்சம் பழ பேக்கட்டுகளும், காய்ந்த திராட்சையும், ஒரு சோனி வாக்மேனும், என் பேவரிட் கேசட்டுகளும் மற்றும் ஒரு லெட்டரும்.

dedicating this song to my perimma,The wonderful personality I have by myside!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பி.கு. அந்த வாக்மேன் இப்போது உபயோகிப்பாரற்று, பெட்டியிலிருந்தது ஹெட்போன்கள் பழுதடைந்து!. அதைப் பார்த்தபோது நினைவுக்கு வந்த கொசுவத்தி!