கடந்தவாரம் ஆம்பூருக்கு சென்றிருந்தோம். என் தம்பி விஐடி-யில் படித்து கொண்டிருந்ததால், தற்காலிகமாக வீட்டை காட்பாடியில் மாற்றியிருந்தோம்.இப்போது அவனது படிப்பு முடிந்துவிட்டதால், திரும்ப ஆம்பூருக்கு குடிவந்துவிட்டோம். பப்பு ஆம்பூருக்கு செல்வது இதுவே முதன்முறை. காட்பாடி ஆயா என்பது பப்பு என் பெரிம்மாவுக்கு வைத்திருக்கும் பெயர்.அவளது மொழியில் ஆம்பூர் இப்போது ”புது காட்பாடி”யாகிவிட்டிருக்கிறது. :-).
வீட்டினுள் நுழைந்தவுடன், மீன் தொட்டியை பார்த்த பப்பு உடனடியாக சொன்னாள்,
“இந்த மீன் தான்
எங்க வீட்டுல இல்ல!!!
மை காட்!!
தூங்கும் சமயத்தில், “வீட்டுக்கு போலாம்,அம்மா!!”.
”இதானே பப்பு, வீடு. எங்க இருக்கோம், நாம? வீட்டுலதானே இருக்கோம்!!” - நான்.
இல்ல,
நம்ம வீட்டுக்கு, பப்பி, ஆதில்லாம் இருப்பானே!!”
ம்ம்...how clear the message is!
எனது வீடு ( என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது) வேறு, பப்புவின் வீடு வேறு!!
நான் கவனித்ததில் இன்னொன்று, எந்த புதிய, அல்லது அவளைக் கவரக் கூடிய பொருளைப் பார்த்தாலும், “ஆயா, இது எனக்கா?” அல்லது “இது என்னுதா?” என்று கேட்பது.
ஆமாம், இது உன்னோடதுதான் என்று பதில் வரும்வரை அந்த கேள்வி ஓயாது!! :-)
சொத்துப் பிரிச்சிட்டோம்ல
பப்பு டாக்டராகவோ அல்லது ஏதாவது பெரிய ஆளாக வேண்டுமென்பதைவிட, ஒன்றே ஒன்று அவளுக்கு வர வேண்டுமென்று விரும்புவேன. அது, புத்தகங்கள் மேல் பிரியம். என்னிடம் நிறையக் கதைப்புத்தகங்கள் உண்டு. என் சிறுவயதிலிருந்து இன்றுவரை. அவையெல்லாமே பத்திரமாக பாதுகாக்கப் பட்டுவந்திருக்கின்றன. (கோகுலம்,பூந்தளிர்,
பாப்பா மஞ்சரி, அம்புலிமாமா, சம்பக் இவையெல்லாம் தெரிந்தவர்களுக்கு கொடுக்கப் பட்டுவிட்டன!!) யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று வீட்டில் சண்டைப்போட்டு, சிறுவயதுக் கதைப்புத்தகங்களை அட்டைபெட்டிகளில் பத்திரமாக பரணில் வைத்திருந்தேன். எடுத்து வைக்கும் போது எனது அடுத்த தலைமுறைக்கு வேண்டும் என்ற தொலைநோக்கு எல்லாம் கிடையாது. அவை என்னுடையவை. ஒருபோதும் அவற்றை இழக்க எனக்கு மனமில்லை. என்னைப் பொறுத்தவரை அவை எனது பழைய நண்பர்கள் மாதிரி .ஆனால், இன்று அவை பப்புவின்
உடமையாகிவிட்டன. அவற்றை அவளுக்கு கொடுத்தபோது, மகிழ்ச்சியே எனக்கு மேலோங்கியிருந்தது.

அதில் பெரும்பகுதி, ரஷ்ய, உலக நாடோடிக் கதைகள். ராதுகா பதிப்பகம் அல்லது நியு செஞ்சுரி பதிப்பகம்! இப்போதும் அவற்றை வெளியிடுகிறார்களா எனத் தெரியவில்லை!! மேலும், ஒரு தலையணை சைஸ் தேவதைக் கதைகள் புத்தகம் என்னிடம் ஊண்டு.அதைப் படிக்க பப்பு இன்னும் வளர வேண்டும். (அதுவரை, அது எனக்கு!! :-)))) ஏழுநிறப் பூ என்றொரு புத்தகம்.
என் ஆல் டைம் பேவரிட். அதில் வரும் பெண்ணான ஷேன்யாவின் பெயரையே பப்புவுக்கு
சூட்ட விரும்பினேன்!!
என்னுடைய ஃபேவரிட்டான, அந்தோன் சேகவின், பள்ளத்து முடுக்கில், அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறைகள் (The roots), குஷ்வந்த்சிங், ஆர்.கே.நாராயண் புத்தகங்களையும் எடுத்து வந்தேன். எல்லா விடுமுறைக் காலங்களில், அவை தவறாமல் படிக்கப் பட்டுவிடும். ஒருசில புத்தகங்களை திரும்ப திரும்ப படிப்பதில் ஒரு சுகம்!! ஏழு தலைமுறைகள், மனதை கனக்க வைக்கும் புத்தகம். கிண்ட்டாவும், கிஜ்ஜியும், கோழி ஜ்யார்ஜூம்...சிறுவயதிலிருந்து ஆப்பிரிக்கா மீது ஈர்ப்பு வர இப் புத்தகமும் ஒரு காரணமாக இருக்கலாம்!!
படிப்பதின் அலாதி சுகத்தை பப்புவுக்கு அறிமுகப் படுத்துவதே எனது நோக்கமாயிருந்தது. விளையாட்டுச் சாமாங்கள் வாங்கும்போதெல்லாம், கண்டிப்பாக புத்தகம் வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். பல கிழிந்துவிட்டன. ஆனால், இப்போது அவளுக்கு புத்தகத்தை மதிக்கத் தெரிந்திருக்கிறது. கொண்டாடத் தெரிந்திருக்கிறது. வரும் கால எப்படியோ..ஆனால் இப்போது "வா அம்மா, படிக்கலாம்!" என்று அந்தப் பழையப் புத்தகங்களை வாரியணைத்தப்படி என்னை இழுததப்போது என் கண்களில் பனி படர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை!!