இந்திய மாநிலங்களை, அதன் தலைநகரங்களைப் பற்றி, பப்பு, படித்த சமயத்தில் கேட்டது, இன்றும் நினைவில் நிற்கிறது.
"ஆச்சி, நாம ஒவ்வொரு ஸ்டேட் கேப்பிடலுக்கும் போலாமா...என்னை கூட்டிட்டு போறியா?"
இந்த
கோணத்தில் நான் என்றைக்கும் நினைத்தே பார்த்ததில்லை. இந்த நாட்டில்
பிறந்து இத்தனை வருடங்கள் வாழ்ந்திருந்தாலும், தமிழ்நாட்டை தாண்டி செல்ல
என்றைக்கும் தோன்றியதில்லை. சாகித்திய அகாதமியில் வெளியாகும், மாநில
வாரியான கதைபுத்தகங்களை, ஒவ்வொரு புத்தக சந்தையிலும் வாங்கி மிகுந்த
விருப்பத்தோடு வாசித்திருக்கிறேன். அதைத்தாண்டி, அந்த மாநிலங்களுக்கு,
அவற்றின் தலைநகரங்களுக்கெல்லாம் செல்லலாம் என்று தோன்றியதில்லை.
அந்த வருட இறுதியில், ஹைதராபாத் சென்றோம்.
அடுத்து,
சில மாதங்கள் கழித்து, பப்புவிடமிருந்து இன்னொரு கேள்வி.இந்தியாவின்
வரலாற்று சின்னங்களை அப்போது கற்றுக்கொண்டிருந்தாள். அதோடு, நமது முக்கிய
நதிகளையும். அன்றிரவு, அவள் கேட்டது, இன்னும் காதில் எதிரொலிக்கிறது.
"ஆச்சி,
யமுனா ரிவர் எப்படி இருக்கு தெரியுமா? மாஸ்டர் காட்டினார்ப்பா...எங்க
ஸ்கூல் மெட்டிரீயல்ல இருக்கு. ஃப்புல்லா தண்ணி....எப்படி, போகுது தெரியுமா?
அதோட ஓரத்துலேதான் தாஜ்மகால் இருக்கு. நாம யமுனா வழியா தாஜ்மகால் பார்க்க
போலாமா?"
யமுனாவின், படத்தைதான் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்.
அவளது
கண்களில் மினுமினுத்த ஆர்வம் ஒரு நட்சத்திரத்தின் ஜொலிஜொலிப்புக்கு
இணையானது. அந்த ஒளியை மறுதலிக்க இயலாமல், நானும் தலையாட்டி வைத்தேன்.
அதன்பிறகு, ஒருநாள், அவளாகவே பெரிம்மாவிடம் ஒன்றை அறிவித்தாள், "என்
பர்த்டேவுக்கு நான் இந்தியாவோட கேபிடல்லேதான் இருப்பேன்."
அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. :)
அன்றிலிருந்து,
பப்புவின் இந்த ஆசையை, தக்க வைக்க இந்தியாவின் வரைபடத்தை உற்று நோக்க
தொடங்கினேன். இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்! தெரியாத ஊர்களின் ரயில்
நிலையங்களை தடவித் தடவி அறிந்துக்கொள்கிறேன்.. அந்த ரயில் நிலையங்களை
அவளுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
இந்த ரயில் நிலையங்களின்,
வலையமைப்பு என்றுமே எனக்கு ஒருவித பிரமிப்புதான். பப்புவுக்கும் அதை கடத்த
முற்பட்டேன்.ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடமாக ஒரு தேர்ந்த தையல்காரரைப்
போல இணைக்க தலைப்பட்டேன். வெளிநாடுகளுக்கு போவது பற்றி நினைப்பதற்கு முன்,
உன் நாட்டை பற்றி நீ அறிந்துக்கொள்ள வேண்டும் என்று அவளுக்கு சொல்லாமல்
சொல்ல நினைக்கிறேன்.
இந்தியாவின் வரலாற்று சின்னங்களை மட்டுமல்ல...
காடுகளையும், கடல்களையும்,மலைகளையும், நதிகளையும் அவள் அறிந்துக்கொள்ள
வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நாகரிகமும்,வரலாறும், சுவாரசியமும் புகழ்
பெற்ற நகரங்களுக்கு மட்டுமே சொந்தமில்லை, அந்த நகரங்களின் பல மைல்களுக்கு
அப்பால் உள்ள சாதாரண கிராமத்திலும் கூட இருக்கிறது என்பதையும், அதை
நாம்தான் தேடி கண்டடைய வேண்டும் என்பதையும் அவள் உணர விரும்புகிறேன்.
ஊர்களையும், அவற்றின் பாதைகளோடும் கூட.. மக்களை, அவர்களின் உணவை, அவர்களது
போக்குவரத்தை, கலாசார அடையாளங்களையே இயன்றவரை பின்பற்றக்
கற்றுக்கொண்டிருக்கிறோம்..
அதனாலேயே,கிழக்கிலும் மேற்கிலும்,
தெற்கிலும், வடக்கிலும் இருக்கும் ஊர்களை பற்றி கனவு காண்கிறோம். அந்த
ஊர்களுக்கு எங்கள் வீட்டிலிருந்து பாதையை வரைகிறோம். சிலநாட்களே விடுமுறை
கிடைத்தாலும், அந்த ஊர்களை நோக்கி, எங்கள் பைகளை தூசிதட்டி சுமக்கிறோம்.
அப்படி,
இந்த விடுமுறைக்கு நாங்கள் நாங்கள் தடம் பதித்தது உத்தராகாண்ட் மாநிலம்.
முற்றும் முழுவதுமாக, இணையத்தில் தேடி தேடி, இந்த பயணத்தை வடிவமைத்து,
பப்புவின் நாடகம் அரங்கேறும் நாளுக்காக காத்திருந்தேன். அவளது, நாடகம்
முடிந்த அடுத்த நாள் பயணம். சென்னையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில்
இருந்து டேராடூனுக்கும் செல்வதாக திட்டம். விமானத்தில் செல்ல ஆசையாக
இருப்பதாக வேறொரு பயணத்தில் அவள் கூறியிருந்தது சரியாக நினைவுக்கு வந்து,
சென்னையிலிருந்து டெல்லிக்கு மட்டும் விமானத்தில் பயணம்.
பெரிய
சூட்கேஸ்களை கொடுத்துவிட்டு, அவரவர் கைப்பைகளோடு செக்கிங்க்கிற்கு வந்தோம்.
செக்கிங் முடிந்து, திரும்ப கைப்பைகளை பெற்றுக்கொள்ள வருமிடத்தில்,
பப்புவின் பையை தனியாக வைத்திருந்தார்கள். எங்களுடையதை எடுத்துக்கொண்டு,
அவளது பைக்காக காத்திருக்கையில், ஒரு பெண் வந்து 'இந்த பை யாருடையது
?'என்றார். பப்பு என்னுடையது என்றதும், 'எதற்காக இதில் ஐந்து
கத்தரிக்கோல்கள் வைத்திருக்கிறாய்?' என்றார். அப்போதுதான், எனக்கு தூக்கி
வாரிப்போட்டது. அவர் பார்த்த பார்வையோ, நாங்கள் ஏதோ திட்டத்துடன் வந்தது
போல இருந்தது.
ஒவ்வொரு பயணத்துக்கும், பப்பு அவளது பையை தயார்
செய்வாள். அதில், சகல சொத்துகளும் இருக்கும். க்ரேயான்கள், நோட்டு
புத்தகங்கள், கதைபுத்தகங்கள், க்யூப், தாயம், சிலசமயங்களில்
பல்லாங்குழியும் புளியங்கொட்டைகளும், நூல்கண்டும் ஊசியும்,ஓரிகாமி
பேப்பர்கள்...அதோடு பைனாகுலர். ஒருமுறை, ஆக்ஸ்ஃபோர்டு சின்ன அகராதி கூட
இருந்தது.
இந்த பையை தயார் செய்தல் என்பது,மிகுந்த கடமையாக
பொறுப்புணர்வோடு நடைபெறும். இடையில், புகுந்தால் தேவையற்ற சண்டைகள்
வருமென்பதால், எல்லாம் முடிந்தபின் கிளம்புவதற்கு முன்பாக நான் மட்டும்
(பப்புவின் நம்பிக்கையை பெற்று) ஸ்கீரினிங் செய்வது வழக்கம்.
முக்கியமாக,
பயணத்தின் இடையில், எங்காவது நடக்க வேண்டிய இடங்களில் அது என் முதுகைதான்
தேடி வருமென்பதால், முடிந்த அளவு, இரக்கமேயில்லாமல், விடைத்திருத்தும்
ஆசிரியரைப்போல் நடந்துக்கொள்வேன். அதேபோன்று, இந்த முறையும்
செய்திருந்தேன். ஆனால், அதன்பிறகு, அவள் சிறு சில்லறை சாமான்களை
ஏற்றியிருந்தாள். அது பரவாயில்லை, பெரிய அளவில் ஒன்றும் கனமாகயிராது என்று
விட்டுவிட்டேன்.அது இப்போது என்னை ஏமாற்றியிருக்கிறது. பார்த்திருந்தாலும்,
கத்தரிக்கோலை கொண்டு செல்லக்கூடாது என்று எனக்கு தெரியாததால், ஒன்றை
மட்டும் விட்டுவிட்டு மீதத்தை காப்பாற்றியிருப்பேன்.
"ஐந்து"
என்றதும், 'அய்யய்யோ..வீட்டில் ஒன்றுமே இருக்காதா' என்றுதான் முதலில்
தோன்றியது. எதற்கு எடுத்து வந்தாய் என்று சந்தேகத்தோடு அந்த பணியாளர்
கேட்டதும், "நான் கிராஃப்ட் செய்வேன்" என்றாள் பப்பு. புன்னகையோடு
அவர்,"எங்கே, விமானத்திலா?" என்றதும் "ஆமாம்" என்றாள். பிறகு, தேடி எடுத்து
அனைத்தையும் அவர்களிடம் தாரை வார்த்துவிட்டு, விமானத்துக்கு
காத்திருந்தோம்.
வீட்டுக்கு சென்றால், பால் கவர் கத்தரிக்ககூட ஒரு
கத்தரிக்கோல் இருக்காதே என்ற நினைப்பு வந்ததும், "ஒன்னு எடுத்துட்டு வந்தா
பத்தாதா?" என்று அவளிடம் சொன்னதற்கு, "கத்தரிக்கோல் எல்லாம்
எடுத்துக்கிட்டு வரக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?" என்று லாஜிக்காக
கேட்டாள். எனக்கும், இப்போதுதான் தெரியும் என்பது அவளுக்கு எப்படி
தெரியும்! :)
விமானத்துக்கு,உள்ளே செல்ல அழைத்ததும், உற்சாகமாக
கிளம்பியவள், விமானத்தில் ஏறி அமர்ந்து ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து
வெளியே பார்த்ததும் ஒருமாதிரியாகி விட்டாள். வழக்கமான உற்சாகம்
குறைந்தாற்போலிருந்தது.மேலும், அவளது பையை வேறு மேலே வைக்கவேண்டியிருந்தது.
பப்புவின் சொத்தே, அவளது பைதான். ஒரு நொடி கூட அதை விடாமல் பாதுகாப்பாள்.
ரயிலில், அமர்ந்த மறுநிமிடம், அவளது பெர்த்தில் கடைவிரித்து மும்முரமாக
வரைய, எழுத, வெட்டி ஒட்ட தொடங்குவாள்.
இங்கோ, உட்கார மட்டுமே இடம்.
கால்களை நீட்ட கூட முடியாது. ஜன்னல் வழியாக பார்த்தால் விமானங்கள்
வருவதும், பணியாளர்கள் ஊர்திகளில் செல்வதுமாக இருந்தனர். "எனக்கு
ட்ரெயிந்தான்ப்பா பிடிக்கும், அப்போதான், ஜாலியா ஜன்னல் வழியா ஊரெல்லாம்
பார்த்துக்கிட்டு போலாம். இனிமே ட்ரெயின்லேயே போலாம்" என்றாள். எல்லாம்
விமானம் கிளம்பும் வரைதான். அதன்பிறகு, ரசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
விமானம், தரையில் இறங்கும் சமயம் உறங்கிவிட்டாள்.
குதூப்மினாரை,
மேலிருந்து பார்க்க வேண்டுமென்பது பப்புவின் ஆசை. குதூப்மினாரின் கைடு
ஒருவர், மேலிருந்து குதூப்மினாரை பார்த்தால் ஒரு விரிந்த தாமரையைபோல்
இருக்கும் என்று சொல்லியிருந்தார். அதிலிருந்து, டெல்லியை பற்றி பேசினால்,
குதூப்மினாரைப் பற்றிய இந்த விவரிப்பு இருக்கும். ஆனால், இப்போது,
குதூப்மினாரை மேலிருந்து பார்த்தது நாந்தான். பப்புவின் கண்களுக்கு
ஒருவேளை, அந்த விரிந்த தாமரை தெரிந்திருக்குமோ என்னவோ?! :)
2 comments:
Mullai,
This comment is to say "hello" to you. I felt very happy to read about Pappu after a long time. She is growing.... enjoy!
வணக்கம் செல்வநாயகி...எப்படி இருக்கீங்க? :) திடீர்ன்னு பார்க்கறேன்...பப்பு,ரொம்ப பெரியவளாகிட்ட மாதிரி இருக்கு! :-) :-)
Post a Comment