கடந்த டிசம்பர் 2013 இறுதியில், உறவினர்களை சந்திக்க ஒரு சுற்றுப்பயணம்
சென்றோம். பப்புவின், இந்திய சின்னங்களை பார்க்கும் பட்டியலில் தில்லிக்கு
அடுத்து மும்பை வந்துவிட்டிருந்தது. 'கேட்வே ஆஃப் இந்தியா' பார்க்க
வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தாள். சிலநாட்களில், அந்த லிஸ்டில்
"அடுத்ததா பிக் டெம்பிள் பார்க்க போலாம்ப்பா!1000 இயர்ஸ் இல்ல" என்பதும்
சேர்ந்துக்கொண்டது. இந்த விடுமுறையை சாக்கில் கொண்டு - இரண்டு நாட்கள்
மட்டும் தஞ்சை மற்றும் கும்பகோணம் பயணம்.
பொதுவாக, எந்த ஊருக்குச்
செல்ல வேண்டும் என்றாலும் கூகுளை அலசி ஆராய்வதுண்டு. குறைந்தது, எங்கெங்கு
செல்ல வேண்டும் என்றாவது ஒரு லிஸ்ட் இருக்கும் முக்கியமான இடங்கள்,
மியுசியம் என்பது போல! இந்த முறை, எந்த விதமான முயற்சியும்
மேற்கொள்ளவில்லை. அலுவலகத்தில் ஒரு நண்பரிடம் விசாரித்ததோடு சரி. 'எல்லாம்
நம்ம ஊருதானே' என்ற அலட்சியமும் காரணமாக இருக்கலாம். கையில், ASI World
heritage series "Chola Temples" மட்டும் இருந்தது. அலுவலக நண்பர் பல
கோயில்களை,பாடல் பெற்ற தலங்களை தரிசித்தவர். அவரிடம்
பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சின்ன லிஸ்ட் கொடுத்திருந்தார்.
கும்பகோணத்தை
நாங்கள் எட்டும்போதே மணி ஐந்து. அருகில் இருக்கும் கோயில்களை பார்க்கலாம்
என்று கிளம்பினோம். லிஸ்டில் முதலில் இருந்த, சாரங்கபாணி கோயிலுக்குச்
சென்றோம். நாங்கள் சென்ற நேரம் கோயில் முழுக்க சாத்தியிருந்தார்கள்.
எதற்கு சாத்தியிருக்கிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை. அபிஷேகம் என்று
கூறினர் அருகில் இருந்தவர்கள். சற்று நேரத்தில் கதவை திறந்து ஒரு பல்லக்கு
போன்ற ஒன்றில் சாமியை எடுத்துச் சென்றனர். நாங்கள் உள்ளே சென்றோம்.
கூட்டமாக இருக்கும் கோயிலுக்குச் செல்வது பப்புவுக்கு இதுதான் முதல்முறை.
பொதுவாக
நாங்கள் எந்த கோயிலுக்கும் சாமி கும்பிட என்று செல்வதில்லை. பழங்கால
கோயில்கள், தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் கோயில்களுக்கு மட்டும்
செல்வதுண்டு. மேலும், அந்த கோயில்களி லெல்லாம் பெரிதாக கூட்டம் ஒன்றும்
இருக்காது. வரும் ஒன்றிரண்டு பேரும் எங்களைப் போலவே கோயிலின்
சிற்பக்கலையை, தொன்மையை பார்க்க வந்தவர்களாகவே இருப்பார்கள்.
அடித்துப்பிடித்துக்கொண்டு செல்ல வேண்டியதும் இல்லை. கோயிலில் இருப்பவரே,
நம்மை அழைத்து கோயிலைப் பற்றியும் அதன் சிறப்புகளையும் கூறிவிடுவார். இந்த
கோயிலில்தான் முதன்முதலாக கூட்டத்தையும், வரிசையில் சென்று பார்க்க
வேண்டியிருப்பதையும் பப்பு பார்க்க நேரிட்டது. கோயிலை சுற்றி வரும்போது,
ஒரு பெரியவர்/அர்ச்சகர் எங்களை அழைத்தார்.
அவர் அழைத்ததை பார்த்து
அவரை நோக்கிச் சென்றோம். படிகள் எங்களை தரைக்குக் கீழே அழைத்துச் சென்றன.
திருப்பதி சாமி பாதாளத்தில் இருக்கிறார் என்றும் புத்தாண்டை முன்னிட்டு சில
நல்ல வார்த்தைகளையும் கூறினார். கோயிலில் அந்த இடம் மட்டும்தான் கூட்டம்
இல்லாமல் இருந்தது. பாதாள வெங்கடாசலபதியை பெரும்பானோர் கண்டுக்கொள்வதில்லை
போலும். மெயின் டெயிட்டியைவிட இந்த இடம் அமைதியாக இருந்தது. நாயக்கர்
காலத்து சிலையாக இருக்கலாம்.
கோயிலை விட்டு வெளியே வந்தோம்.
அடுத்ததாக, அருகில் இருக்கும் கோயில் என்னவென்று விசாரித்ததில், இங்கு
தடுக்கி விழுந்தால் கோயில்கள்தானாம். எல்லாமே பழங்கால கோயில்கள்தானாம்.
சரி, கும்பகோணத்துக்கு பெயர்காரணமான கோயிலை பார்க்க முடிவாயிற்று. அடுத்த
ஸ்டாப் - ஆதி கும்பேஸ்வரர் கோயில்.
இந்த கோயில் மதிலே மிகப்பெரிதாக
இருந்தது. அதேபோல், கோயில் ஆக்கிரமித்திருந்த இடமும்.இந்த கோயிலின்
முடிவில் மற்றொரு கோயிலின் ஆரம்பம். உள்ளே சென்றதும் யானை ஒன்று
நின்றுக்கொண்டிருந்தது. ஒருவர், காசை கொடுக்க வாங்கிக்கொண்டு யானை அவரை
ஆசீர்வதித்தது. பப்புவை பொறுத்தவரை கோயில்களில் இப்படி யானையை நிறுத்துவது
தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. யானை, பறவைகள், முயல்களை இப்படி கூண்டுக்குள்
அல்லது ஓரிடத்தில் அடைக்கக்கூடாது என்ற எண்ணமுடையவள், யானையைப் பார்த்து
பரிதாபப்படலானாள். அதற்கு அதிக வாய்ப்பு கொடுக்காமல் உள்ளே நுழைந்தோம்.
இடதுபக்க சுவரில், கோயிலின் புராணம் "படம் பார்த்து கதை சொல்" பாணியில்
வரையப்பட்டிருந்தது. பப்பு சற்றுநேரம் பார்த்துக்கொண்டு நின்றாள். ஐஸ் ஏஜ்
மாதிரி என்று சொல்லிக்கொண்டாள். அதைத் தாண்டி உள்ளே சென்றோம்.
எந்த
கோயிலுக்குச் சென்றாலும், அதன் சுற்று சுவர்களையும், தூண்களையும் பார்த்து
அதில் இருக்கும் சிற்பங்களை பற்றி பேசிக்கொள்வோம். பப்புவுக்கும் அதே
பழக்கம் வந்துவிட்டது. புத்தகங்களில் "ஐ ஸ்பை" விளையாடுவது போல
சிற்பங்களிலும் விளையாடுவோம். இந்த கோயில்களில், பப்பு தானாகவே
தூண்களையும், சுவர்களையும் ஆராயத்தொடங்கினாள். அதோடு, மேற்கூரைகளையும்
உற்றுநோக்கத் தலைப்பட்டாள். "தூண்லியே பார்க்கறேன்னு மேலே பார்க்க
மறந்துடாதே" என்று எனக்கு எச்சரிக்கை வேறு.
வெளியில் வந்தோம். ஒரு சிறு கண்காட்சி இருந்தது. எதுவும் தேறவில்லை.
வழியில் முராரி ஸ்வீட்ஸில் 'டிரை ஜாமுன்' வாங்கிக்கொண்டு தங்குமிடத்தை அடைந்தோம்.
ASI
புத்தகத்தை புரட்டினேன். கூகுள் மேப், தாராசுரம் அருகில் இருப்பதாக
காட்டியது. யுனெஸ்கோ பராமரிக்கும் இடம். சோழர்களின் சிற்பகலையை, வாசித்த
பொன்னியின் செல்வனை பற்றி பேசிக்கொண்டே நித்திராதேவியை தழுவினோம். ;-)
2 comments:
பப்பு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள்.இத்தனை சின்னவயசில்.இந்திய சுற்றுப்பயணம் வாய்த்திருக்கிறது.அதுவும் பொதுச்சிந்தனையுள்ள தாயுடன் கைகோர்த்து. வாழ்த்துக்கள் மருமகளுக்கு
very good and intresting article
Post a Comment