Wednesday, April 21, 2010

ஜூன் '09 - ஏப்ரல் '10

பப்பு,

பள்ளிக்கூடத்தின் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை - முக்கியமான எல்லா தினங்கள்,நிகழ்ச்சிகள் - சாதனைகள் - இன்னபிற - என் நினைவிலிருந்து!

1. பள்ளியின் முதல் நாள் - ஜூன் 09
2. ரெட் டே - ஜூன் 09
3. ஃபேமிலி டே - ஜூலை 09
4. மாதாந்திர பிறந்தநாள் - ஜூலை 09

5. யெல்லோ டே - ஆகஸ்ட் 09
6. ஆஃப்டர் ஹேர் கட் & மாதாந்திர பிறந்தநாள் - செப்டம்பர் 09
7. பிரவுன் டே - செப்டம்பர் 09
8. நான்காம் பிறந்தநாள்- அக்டோபர் 09
9. குழந்தைகள் தின ஃபேன்சி ட்ரெஸ் பரேட் - நவம்பர் 09
10. பிங்க் டே - டிசம்பர் 09
11. பள்ளி ஆண்டு விழா - பிப்ரவரி 10
12. 'ஆங் சான் சூ கி மாதிரி இருக்கே'ன்னு ஆயா சொன்னதும் அதே ஆங்கிளில் எடுக்க முயன்றபோது - மார்ச் 10

13. ப்ளூ டே - ஜூலை 09
14. கராத்தே நிகழ்ச்சி - டிசம்பர் 09
15. இக்கல்வியாண்டின் இறுதிநாள் - ஏப்ரல் 10

பிலாக் & வொயிட் டே, கோல்ட் & சில்வர் டே போன்ற சிலவற்றை எடுக்காமல் விட்டுவிட்டேன்,பப்பு! ( நீ, கேமிராவை பார்த்தாலே தன்னிச்சையாக செயற்கையான புன்னகை செய்வதாக, நீண்ட நாள் புகாரொன்று என் மேல் உள்ளது! )

Sunday, April 18, 2010

குட்டீஸ் பென் ஃப்ரெண்ட்ஸ் - அறிவிப்பு!

மொத்தம் 16 குட்டீஸ் - 3 வயதிலிருந்து 10+ வயது வரை!!

பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் - வாழ்த்துகளும்!
:-)

இந்நேரம், ஆர்ட் பென் ஃப்ரெண்டை பற்றிய விபரங்களுடன் ஒரு மடல் தங்களின் மின்முகவரியின் அழைப்புமணியை அடித்துக்கொண்டிருக்கும் என நம்புகிறேன். (மடல் கிடைக்கப்பெறாதவர்கள், யாரேனுமிருப்பின் தெரியப்படுத்துங்கள் - ஒருவேளை, ஏதேனும் மின்முகவரிகளில் நான் தவறு செய்திருக்கக்கூடும்.
)

அடுத்தது, குட்டீஸ் செய்ய வேண்டியது( தேவைப்பட்டால், பெற்றோர் உதவியுடன்)

1. வரையுங்கள்/பெயிண்டிங் செய்யுங்கள்

2. தங்கள் அன்பு நண்பருக்கு அனுப்புங்கள்

3. முதன்முதலில் அனுப்பும்போது மறக்காமல் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். “என் பெயர் சிந்து, நான் சென்னையில் வசிக்கிறேன்,வயது 4 1/2. எனக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்.பீச்சில் விளையாடுவது விருப்பமானது” என்பது போல.

4. மடலிலோ அல்லது முகவரி பெற்று தபால் மூலமோ தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உலகை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!


5. ரிப்பீட் - முதல் ஸ்டெப்பிலிருந்து!

குழந்தைப்பருவத்தை பொக்கிஷமாக்குங்கள்!


என்னால் மட்டும் இயலுமென்றால், ஒவ்வொரு குட்டீஸும் அவர்களது எண்ணங்களை, உணர்வுகளை ,உலகை - அவர்கள் கலையால் - வரையும் போதும், மடலில் பேசிக்கொள்ளும்போதும் உடனிருப்பேன்!! :-)
(அம்மாக்கள் வலைப்பூவிலும் வெளியாகியது.)

Wednesday, April 14, 2010

Summer camp @ Blogdom!



ஹூஹூ! வாழ்த்துகள் குட்டீஸ் - ஆர்வத்துடன் அனுப்பிய பெற்றோருக்கும்! குட்டீஸ் பேனா நண்பர்கள் - இதுவரை ஏழு குழந்தைகள் பதிவு செய்திருக்கின்றனர்.

2 வயதிலிருந்து 12 வயதுவரை இருக்கும் சிறுவர் சிறுமியர் - ஆர்ட்/வரைவதில் விருப்பம் கொண்ட பேனா நண்பர்கள் மூலமாக தங்கள் உலகை பரிமாறிக் கொள்ள விருப்பமிருப்பின் வருகிற வெள்ளிக்கிழமைக்குள்ளாக எனக்குத் தெரிவிக்கவும். (வயது வரம்பு முன்பு பத்து வயதுவரை என்று குறிப்பிட்டிருந்தேன். தற்போது மாற்றியிருக்கிறேன். )


1. தங்கள் குழந்தையின் பெயர், வயதுடன் (மற்றும் gender preference இருந்தாலும்)
mombloggers@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும். வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினால் நலம்.

2. பதிவர்கள் மட்டுமல்லாமல் வாசகர்களும் தங்கள் குழந்தைகளை பதிவு செய்யலாம்.

2. தங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற இன்னொரு குழந்தையுடன் மேட்ச் செய்து விபரங்களை வருகிற சனிக்கிழமை தங்களுக்கு மடல்மூலம் தெரிவிக்கிறேன்.

3. அடுத்தது, தங்கள் பேனா நண்பருக்கு வரையுங்கள். உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்.

4. மின்மடல் மூலமாகவோ அல்லது தபால்கள் மூலமாகவோ பரிமாறிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பமும் வசதியும் சார்ந்தது. கூடவே, கடிதங்கள்அனுப்புவதும்.

5. நேரமும், விருப்பமுமிருப்பின், பேனா நண்பர் தங்களுக்கு அனுப்பியதை தங்கள் தளத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள். அந்த சுட்டியை அனுப்பினால் மகிழ்வேன். அல்லது
mombloggers@gmail.com முகவரிக்கு அனுப்பினால், ”அம்மாக்கள் வலைப்பூ”வில் பகிர்கிறேன்.

குழந்தைகளோடு நேரத்தை பகிர்ந்துக்கொள்வோம். டீவியிலிருந்து கொஞ்ச நேரம் திசைதிருப்புவோம். அவர்களுக்குள் இருக்கும் கற்பனைத் திறனை அறிவோம். அனைவருக்கும்
நன்றிகள்!!

Tuesday, April 13, 2010

கொலம்பஸ்..கொலம்பஸ்...

"(2-12 வயது) குட்டீஸ் பென் ஃப்ரெண்ட்ஸ்-க்கு பதிவு செய்ய விபரங்களுக்கு இங்கே செல்லவும்"


கம்(Glue) கூட வண்ணங்களைக் குழைத்து கம்பையிண்டு பண்ணி "கம்-பெயிண்டு" பண்றது (அப்புறம் பெயிண்டிங் பிரஷை எடுக்க நாங்க டக்காஃப் வார் நடத்தினது குடும்பக்கதை!), கம்-லே முதல்லே வரைஞ்சு அது காஞ்சதும் மேலே பெயிண்டிங் பண்றது...
இந்த மாதிரி நுண்கலைகளுக்கு அணுகவும் - "ஐடியாமணி" பப்பு!







மேலே இருக்கிற படமும், கீழே இருக்கும் படமும் பப்புவின் கண்டுபிடிப்பு டெக்னிக்கில் வரையப்பட்டது. இந்த ப்ராசஸிலே என்ன வரைஞ்சோம்கிறதைதான் மேடம் மறந்துட்டாங்க - அட்ஜஸ்ட் ப்லீஸ்!


(இது சூரியனாம்! - கம் -லே வரைஞ்சு காய்ஞ்சதும் அது மேலே கலர்.)

இது மரம் . அப்லோடு பண்ணும்போது ரொடோட் ஆகிடுச்சு..கொஞ்சம் தலையை 45 டிகிரி கோணத்தில் காக்காய் போல வைத்துக்கொண்டு பார்க்கவும்...ஹிஹி!

தேஷ்னா, அர்ஷித் கைலாஷ், வர்ஷிணிக்கு கொடுக்கிறதுக்காக வரைஞ்சு, பையில் வைக்கிறதுக்கு முன்னாடி கிளிக்கியது. இதெல்லாம் என்னவா? என்னது இது சின்னப்புள்ளத்தனமா... கேட்டுக்கிட்டு..ஆர்ட்-னு சொன்னா அனுபவிக்கணும்..ஆராயக்கூடாது!




கட் பண்ணின ஸ்ட்ரா துண்டுகள்(20 ரூ பாக்கெட்!), ஐஸ் குச்சியை (50 குச்சிகள் 5 ரூபா!) உடைச்சு
அதிலே பெயிண்டை தொட்டு வரைஞ்சதுதான் இந்த பின்னவீனத்துவ மாடர்ன் ஆர்ட்!


அவளது பள்ளிக்கு இந்த வருஷத்தின் கடைசிநாள் இன்று . நாளையிலிருந்து விடுமுறை. அடுத்த வருஷத்திலேருந்து வெண்மதி வேற ஸ்கூலுக்கு போய்டுவான்னு ஒரே ஃபீலிங்ஸ்! உலகம் சின்னது பப்பு, சீக்கிரம் வெண்மதியை மீட் பண்ணலாம்! ஹாப்பி ஹால்ஸ், பேபி! :-)

Monday, April 12, 2010

சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!

”வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம், மேனி நுடங்காது ...”

”நாடினேன்..நாடி ஓடினேன்...கண்டுகொண்டேன் நாராயணா என்னும் ...”


”பாலும் தெளிதேனும்...”

”அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை...”

வரிசையாக ஏழு குட்டீஸ் வயதுவாரியாக கையைக் கூப்பியபடி நின்றுக் கொண்டிருந்தோம். பெரிய அத்தை ஒவ்வொரு வரியாகச் சொல்லச் சொல்ல பின்னாலேயே சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தோம்.மாமா பித்தளை தீபாராதனை தட்டில் கற்பூரத்தை ஏற்றி எல்லா சாமிபடங்களுக்கும் காட்டி கீழே வைப்பார். பின்னர், தம்ளரிலிருக்கும் தண்ணீரை மூன்று தடவை தட்டிற்கு அரை வட்டமாக விரலாலேயே பாத்தி கட்டுவார். கற்பூரம் எரிந்துக் கொண்டிருக்கும். கொஞ்சம் உயரமாக எரிந்து நெருப்பின் சீற்றம் குறைந்து, கீழே தட்டுக்கும் மேலே எரிவதற்கும் நடுவில் ஒரு கருப்பான வெற்றிடத்தைக் காட்டியபடி லேசாக ஒரு நளின நடனம் ஆடி அடங்கும். தம்ளரிலிருக்கும் துளசி இலைகள் எல்லோர் கையிலும் கொடுப்பார் மாமா. வலது கையில் வாங்கி எச்சில் படாமல் தூக்கி வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். கையில் ஒட்டியிருக்கும் தண்ணீரை தலையில் தடவிக்கொள்ள வேண்டும். பிறகு விபூதி - குங்குமம். பெரியவர்களுக்கு கையிலும், சிறியவர்களுக்கு நெற்றியிலும், கழுத்திலும் பூசி விடுவார். நெற்றியிலிருந்து கழுத்துக்கு பூச வரும்போது வாயை லேசாக திறந்தால் ஒரு சிட்டிகை வாயிலும் விழும். பெண்களாக இருந்தால் விபூதிக்குப் பிறகு குங்குமமும் வைத்துவிடுவார். தாத்தாவிற்கும்,இளங்கோ மாமாவிற்கும் தனிப்படையல். அப்போது மட்டும் ஆயா வந்து நிற்பார்.

வீட்டில் எதிர்பாராத இரண்டு பெரிய இழப்புகள்,அதைத் தொடர்ந்து ஒரு திருமணம், பிரச்சினைகள் என்று அடுத்தடுத்து நடந்ததன் காரணமாக ‘சாமி இருந்தா இப்படி நடந்திருக்குமா...சாமியே இல்லே'என்று வெறுத்துப் போயிருந்த வீட்டில் அத்தைகளும், குழந்தைகளும் வந்தபின்பு நடந்த முக்கிய மாற்றமிது. அதன் பக்க விளைவுகள்தான் இந்த 'வாக்குண்டாம்'.....அத்தைகளின் பெருமுயற்சிகளுக்குப் பிறகு மாமாக்கள் கொஞ்சமாக கொஞ்சமாக் மாறிக்கொண்டிருந்தார்கள்.அத்தைகள் கில்லாடிகள்தான். “எனக்கு நோம்பு கயிறு கிடைச்சிருக்கு, தீபாவளிக்கு நோன்பு வைக்கணும்” என்று பெரிய அத்தையும், ”கிழக்காலே வயல் மூலையிலே கிடைச்ச சிலை, விடாம வச்சிப் படைக்கணும்” என்று சின்ன அத்தையும் ஆரம்பித்து, வருடத்தின் எல்லா வெள்ளிக்கிழமைகள், சனிக்கிழமைகள், நினைவுதினங்கள், சதுர்த்திகள்,அமாவாசைகள், தீபாவளி , பாம்பு பஞ்சாங்கத்திலிருக்கும் இன்னபிறவெல்லாம் பரபரப்பாக கொண்டாடப்பட்டன. எங்களுக்கு கேட்கவா வேண்டும், கும்மாளமும் கொண்டாட்டமும்தான்.

நடுவில் எதையோ விட்டுவிட்டேனே..ஆமாம், பாட்டுல்லாம் பாடி முடிந்ததும் கற்பூரம் எரியும்போது மாமா,அத்தை,அம்மா எல்லோரும் கண்மூடி கை கூப்பி நிற்பார்கள். நாம் முழித்து பார்த்துக்கொண்டிருந்தோமானல் சைகையாலேயே கண்ணை மூடி கையை கூப்பச் சொல்லுவார்கள்.ஆனால் என்ன வேண்டிக் கொள்ளணுமென்றுதான் தெரியாதே...”சாமி நான் நல்லா படிக்கணும், எனக்கு நல்ல புத்திக் கொடுங்க”என்று வேண்டிக்கொள்ள சொல்லிக்கொடுத்தார்கள். நானும் போகிற கோயில்களிலெல்லாம் சத்தம் போட்டு (லைப்ரரிலே படிச்சனே அந்தக் கதைதான்!)வேண்டிக்கொண்டு நிற்பேன். அநேகமாக அது முதல் வகுப்பென்று நினைவு. அதுதான் சாமியிடம் கண்மூடி சிரத்தையாக வேண்டிக்கொண்டது. அப்போதும் சாமி என்பவர் பெரியவர்.. கோயிலுக்குள் இருப்பார். நாம் கேட்டதைக் கொடுப்பார்.அப்புறம் நான் நல்லா படிக்கணும்..நல்ல புத்தி கிடைக்கணும். மனதில் பதிந்தது அவ்வளவுதான்...இப்படி சாமி எனக்கு அறிமுகமானது வடலூரில்தான்.

ஒருமுறை, விளையாட்டில் சண்டை வந்தபோது நானும் சுஜாக்காவும் ப்ரெண்ட்சாகி விஜிக் கூடவும் சசி கூடவும் டூ விட்டோம். அப்போது நாங்களிருவரும் 'விஜிக்கு ஜூரம் வரணும்' என்று வேண்டிக்கொண்டதுதான் சாமி எனக்குக் கொடுத்த நல்ல புத்தி. மனதிற்குள் வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியம் புலப்பட்டதும் அப்போதுதான். நல்லவேளையாக விஜிக்கு ஜூரமெல்லாம் வரவில்லை. சாமி ஒரு உண்மையான பக்தையை இழந்துவிட்டார்.இதெல்லாம் வடலூரில் விடுமுறை நாட்களில்தான்.


பெரியப்பாவின் நினைவுதினத்துக்காக, திருவண்ணாமலை ரமணாசிரமம் போகிற பழக்கம் இருந்தது.ஆசிரமத்திற்கு எதிரில் அவர்களது காட்டேஜில் நான்கு நாட்கள் வாசம். ஒரு மாதத்திற்கு முன்பே லெட்டர் போட்டால் நமது பெயரில் புக் செய்துவிடுவார்கள். அப்போதெல்லாம் ரமணாஷ்ரமம் அவ்வளவாக பிரசித்தி அடையவில்லை. இளையராஜால்லாம் அங்கே போக ஆரம்பிக்காத நேரம். நினைவு நாள் அன்று அன்னதானம் கொடுக்கவும் ஏற்பாடு செய்திருப்பார்கள். அங்கு ஆன்மீகத் தேடலைவிட எங்களுக்கு ஆங்கிலப் புலமையையும் இந்திப் புலமையையும் காட்டி வெள்ளைக்காரர்களை நண்பர்கள் பிடிப்பதே பொழுதுபோக்கு. அம்மா, பெரிம்மா, ஆயா, சாந்தா அத்தை எல்லாரும் தியான மண்டபத்திற்கும் பஜனையிலும் நூலகத்திலுமாக இருக்க நாங்கள்
வெள்ளைக்காரர்களையும், குஜராத்திக்காரர்களையும் ராமலிங்க சாமி ஜோதியாக மறைந்ததையும், அவர் ரகசிய சுரங்கப்பாதை வழி நடந்தே திருச்சிற்றம்பலத்திற்கு சென்றதையும், ஒரே நேரத்தில் சென்னையிலும் கருங்குழியிலுமாக காட்சி தந்ததையும் சொல்லி தனிச்சானல் ஓட்டிக் கொண்டிருந்தோம். நாங்கள் ஏதோ ராமலிங்கசாமியையே நேரில் கண்டு விட்டவர்களாகவே நினைத்துக்கொண்டு மரியாதையாக நடத்துவார்கள். அவர்களது நண்பர்களிடம் அறிமுகப்படுத்துவார்கள். அதுவும் போரடித்தால், தியான மண்டபத்திற்கு அருகாமையில் இருக்கும் குளத்தில் கல்லெறிந்துக் கொண்டோ, அங்கே உலவும் மயில்கள் எப்போது தோகை போடுமென்றோ அல்லது லஷ்மி பசுவின் சமாதியைத் தாண்டி இருக்கும் மலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டோ பொழுதைக் கழிப்போம்.


ஆம்பூரில் எல்லா சாமிக்கும் தடா. சாமி படங்களோ சம்பிரதாயங்களோ கிடையாது. எல்லா நாளும் நல்ல நாளே..எல்லா நேரமும் நல்ல நேரமே. சாமியும் கிடையாது, பூதமும் கிடையாது என்பதே நம்பிக்கை.அந்த நம்பிக்கையை யாரும் எங்கள் மேல் திணித்தது இல்லை. சாமி இருக்கிறாரென்ற நம்பிக்கையையும் யாரும் எங்கள் மேல் திணிக்கவும் இல்லை. எப்போதும் எல்லாவற்றுக்கும் சுதந்திரம் இருந்தது. யாராவது என்னையும் தம்பியையும் கோயிலுக்கு கூட்டிப் போகிறேன் என்று சொன்னால் அனுமதி கிடைத்திருக்கிறது. சாந்தா அத்தை அல்லது குணா அத்தையோடு துணைக்குக் கோயிலுக்கு சென்று அவர்களோடு நவக்கிரகங்களை சுற்றியிருக்கிறேன்.

பெரியப்பாவின் நண்பர் மூலம் வீட்டுக்கு வந்த “இயேசு அழைக்கிறாரை” ஒரு இதழ் விடாமல் படித்திருக்கிறேன். எதிர் வீட்டுக் கிறிஸ்டியன் ஆண்ட்டி வீட்டுக்குச் சென்று ஜெபங்கள் செய்திருக்கிறேன். அவர்களைப் போல கண்ணீர் விட்டு ஜெபம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறேன். அவர் என் பேரையும் ஜெபத்தில் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கும். 'இயேசு அழைக்கிறார்' நின்று போனபின் அவர்கள் வீட்டிலிருந்து பைபிள் வாங்கி வாசித்திருக்கிறேன். கொஞ்ச நாட்கள் யோகா கற்றுக்கொண்டபோது தியானமெல்லாம் செய்து ஒரு ஞானி தோற்றமெல்லாம் கொடுத்திருக்கிறேன். கணக்கு பரீட்சைக்கு எந்த கேள்வி வர வேண்டுமென்று தியானித்திருக்கிறேன். எல்லாம் கொஞ்ச நாட்கள்தான்.

சாமி இல்லையென்று வாதிட முடியாதது போன்று இருக்கிறாரென்று நம்பவும் முடியவில்லை. ஆனால், சிலை வடிவத்திலோ அல்லது எட்டு கை,நாலு தலை கொண்டோ இருக்குமென்றும் நம்ப முடியவில்லை.மேலும் வீட்டிலிருந்த தி.க புத்தகங்களையும் 'உண்மை' இதழையும் படித்து கடவுளர்கள் மேலேயும் இந்து மதத்தின் மேலேயேயும் எனக்கு வெறுப்பு வந்திருந்தது. (அதுவும் ‘கடவுளர்கள் பிறந்த கதை”ன்னு ஒரு புக் இருக்கும்..செம ROTFL புக்.)

மேலும்,எப்போதும் எனக்கு மற்றவர்களை வித்தியாசமாக இருக்கப் பிடிக்கும். அதனால், எல்லோரும் விழுந்து விழுந்து சாமி கும்பிடும்போது வித்தியாசத்திற்காக சாமி கும்பிடாமல் இருக்கப் பிடித்திருந்தது. டீனேஜ் வந்தபோது எல்லாவற்றும் rebelliousஆன குணம் வந்திருந்தது.அடையாளங்கள் எதுவும் இல்லாத அடையாளத்தையே விரும்பியிருக்கிறேன்.” ஒரு மதத்தை பின்பற்றித்தான் நல்ல விஷயங்களை கத்துக்கணும்னோ இல்லே அந்த மதத்தைச் சார்ந்து இருந்தாத்தான் நல்லவங்களா இருக்கமுடியும்னோ இல்லே, எங்கேயிருந்தாலும் அதை எடுத்துக்கலாம், முடிவா மனுஷங்களா இருக்கணும்” என்று எங்களை வளர்த்தது பெரிம்மாதான். சடங்குகள், அதனைக் குறித்தான அலட்டல்கள் பற்றியும் லேசான தெளிவு இருந்தது.


Happy Go lucky girl-ஆக இருந்த எனக்குள்ளும் தேடல்கள்,பயங்கள், தயக்கங்கள், உள்மனப் போராட்டங்கள், வெளிப்போராட்டங்கள், மனக்குழப்பங்கள், சுற்றியிருந்தவர்களுடன் பிரச்சினைகள்...சண்டைகள் குறிப்பாக - டீனேஜில் இல்லையென்று சொன்னால் நான் பொய் சொன்னவளாவேன். பெற்றோரிடம் , எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் நீங்கள் சொல்லிவிடுவீர்களா தெரியவில்லை.. என்னால் முடியாது. சொல்லியிருந்தாலும் என்ன நடந்திருக்குமென்று ஊகிக்க முடியவில்லை. என்னைச் சுற்றி எப்போதும் மனிதர்கள் இருந்துக்கொண்டே இருந்தாலும், அவர்கள் யாராலும் நிரப்பப்படாத ஒரு வெற்றிடம் எனக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது.


எதிர்காலம் குறித்தும், ”எப்படி இருக்கும், நான் நல்லா இருப்பேனா” என்று கலக்கம் வந்திருக்கிறது. தேவையற்ற கவலைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். சில சமயங்களில் ஸ்தம்பித்திருக்கிறேன்..சமயங்களில் சோர்ந்து முடங்கி அமர்ந்திருக்கிறேன்.. ”டோண்ட் கிவ் அப், டோண்ட் கிவ் அப்” என்று முற்றிலும் எல்லாவற்றையும் அறிந்த யாராவது என்னிடம் சொல்லமாட்டார்களா என்று எண்ணியிருக்கிறேன். ”ஆச்சி, யூ ஆர் கோயிங் டு லிவ் அ க்லோரியஸ் லைஃப்” - என்றும் ”நான் இருக்கேன், நீ பயப்படாம இரு” என்று உத்திரவாதம் கொடுத்து பொறுப்பெடுத்துக்கொள்பவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று உள்ளுக்குள் தேடியிருக்கிறேன். பிரச்சினைகளின்போது, 'Things are gonna be alright'...'everything is gonna be fine here'..என்று என்னை அமைதிப்படுத்த ஆற்றுப்படுத்த மனிதர்களைத் தாண்டி யாரையோ எதையோ எதிர்பார்த்திருக்கிறேன்.

உண்மையில், எனக்குள் இருந்த பயங்களை நானேதான் தின்று செரிக்க வேண்டியிருந்தது. என்னை நானேதான் ஆற்றுப்படுத்திகொள்ள வேண்டியிருந்தது. எனது தோல்விகளை, அவமானங்களை நானேதான் கடந்து வர வேண்டியிருந்தது. வாழ்க்கையின் குறுக்குரோட்டில் நின்றபோது எனக்கான திசைகளை நானேதான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. நான் செய்வது சரியா, சரியாகச் செய்கிறேனா என்றெல்லாம் குழப்பங்கள் வந்தபோது நானேதான் பட்டுத் தெளிய வேண்டியிருந்தது. உண்மையில் யாரும் யாருடனும் இல்லை, இருக்கவும் முடியாது என்று நானாகவே உணர வேண்டியிருந்தது. என் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டியது நானேதான் என்ற முடிவுக்கும் வந்திருந்தேன்.

அந்த சமயத்தில்தான் எனக்குக் கிடைத்தது, எம் எஸ் உதயமூர்த்தியின் ”எண்ணங்கள்” புத்தகமும், அதைத் தொடர்ந்து ராபர்ட் ஷெல்லர் மற்றும் நார்மன் பீலே புத்தகங்களும். எல்லாம் தன்னம்பிக்கை டானிக்குகள்தான். பாசிடிவ் அப்ரோச்சை பைபிளின் மூலாதாரத்தைக் கொண்டு எழுதப்பட்டவை. இந்து மதமே பிடிக்காமல் இந்து மத அடையாளங்களையே வெறுத்த எனக்கு இது பிடித்திருந்தது.

முகிலுக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால், என்னை வற்புறுத்தியது இல்லை. I juz love the way he understands me. முகில் என்னை புரிந்துக்கொண்டதைப் போல வேறு யாராவதாக இருந்தால் புரிந்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. இப்போதும், நான் ஆம்பூரிலிருந்ததைப் போலத்தான் இருக்கிறேன். இன் லாஸ்-களின் விருப்பத்திற்காக இருவரும் ஒருமுறை திருப்பதி சென்றதுண்டு. அதைத் தாண்டி, ஒன்றாகக் கோயிலுக்கெல்லாம் சென்றது இல்லை. ஊருக்குச் சென்றால் கண்டிப்பாகக் குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு செல்வது வழக்கம். மாமியாரை புண்படுத்திவிடாமலிருக்க அங்கே சில காம்ப்ரமைஸ்களை செய்வதுண்டு. ( அவர் வைத்துவிடும் குங்குமத்தையும், பூஜைக்குப் பின் துப்பட்டாவில் வாங்கிக்கொள்ளச் சொல்லும் பூ,தேங்காய்,பழம்...முதலியன.)

நாங்கள் வாழும் வீட்டிலோ அல்லது வாழ்க்கைமுறையிலோ எந்த அடையாளங்களும், சம்பிரதாயங்களும் இல்லை. எந்த சம்பிரதாயங்களோ நம்பிக்கைகளாலோ கட்டிப்போட்டுக்கொள்ளாமல் ஃப்ரீயாக இருக்கப் பிடித்திருக்கிறது. இதே மனநிலை எப்போதும் வாய்க்கவே விரும்புகிறேன்.எல்லா நாட்களும் ஒன்று போலவேதான் விடிகிறது எங்களுக்கு. அம்மா அல்லது மாமியார் வந்தால் மட்டுமே பூஜை அலமாரி தூசு தட்டப்படும்.பப்புவும் அவர்களுடன் சேர்ந்துக்கொள்வாள். சொல்லப்போனால், ஒரு ரெகுலரான பூஜையை பப்பு இதுவரை பார்த்ததே இல்லை,நானும்தான். ஏன், சாமியின் பெயர் கூட அவளுக்கு இதுவரை தெரியாது. அம்மாவுடன் சேர்ந்து பாடல்கள் ('வாக்குண்டாம்....LoL') பாடுவாள். மாமனார் வந்தால் பப்புவை கோயிலுக்கு அழைத்துச் செல்வார். விபூதி /குங்குமத்தைப் பார்த்தால் வைத்துக்கொள்கிறாள். எதையும் நாங்கள் தடுப்பதுமில்லை. ஊக்கப்படுத்துவதுமில்லை. 'சாமி கண்ணு குத்திடும்' என்று சாமியை வைத்தும் பயமுறுத்தியதில்லை. என்னையே யாரும் அப்படி செய்யாதபோது நான் என் மகளுக்குச் செய்வேனா?



ஒரு அவியல் ஃபேமிலியில் வளர்ந்த எனக்கும் எப்போதாவது கேள்விகள்/ குழப்பங்கள் எழுந்திருக்கிறது. (ஒருவேளை இதுதான் ஆன்மீகத் தேடலோ?) ' நான் ஏன் இந்த வீட்டுலே பொறந்தேன்' (ச்சே, பேசாம நாம் வேற வீட்டுலே பொறந்திருக்கலாம்டா, குட்டி!!)...'நிஜமா மறுபிறவி இருக்கா'...'இறந்த பிற்கு என்ன ஆவேன்' ..' எதுக்காக நான் பிறந்தேன்'... 'மனசு உண்மையா'..'மூளை உண்மையா'..'ரெண்டும் ஒண்ணா'..இல்லே 'உணர்வுகள்தான் நானா'... 'இந்த உணர்வுகள், நினைவுகள் மட்டும்தான் நானா'... 'ஏன் ஒரு சிலருக்கு வாழ்க்கை ரொம்ப ஈசியா இருக்கு..ஒரு சிலருக்கு வாழ்க்கையே பிரச்சினையா இருக்கு' - ஆனா இதுக்காக ரொம்பவெல்லாம் மெனக்கெட்டது இல்லே. வாழ்க்கையை புரிஞ்சுக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?

ஆயாவின் ஐந்து பிள்ளைகளுள் என் அம்மாதான் கடைசி. அம்மாவை உண்டான போது, ‘இது வேண்டாமெ'ன்று ஆயா மருந்து சாப்பிட்டாலும் மீறி பிறந்திருக்கிறார் அம்மா. (அதுதான் எங்கம்மா கலர் கம்மியானதுக்கு காரணமாம். LoL)

அப்படி பிறந்த அம்மா, என்னை பெற்றபோது “பொண்ணா” என்று என்னைப் பார்க்காமலேயே நிராகரித்து ஹாஸ்பிடல் வார்டைத் தாண்டிச் சென்றவர் என் அப்பாவழி தாத்தா.

25 வருடங்கள் கழித்து, அவர் என்னைப் பார்க்க வந்தபோது அவரை நான் நிராகரித்தேன்.

அப்பா இறந்தபிறகு, 'சொத்துகளில் பாத்தியதைக் கொண்டாட மாட்டேனெ'ன்று கையெழுத்து கேட்க வந்தவரை நிராகரித்து, 'கையெழுத்து போடமாட்டேன், ஆனால் அதே சமயம் சொத்துகளில் பங்கு கேட்கவும் மாட்டேனெ'ன்று சொல்லி அனுப்பினேன்.

'எவரும் எவருடைய வாழ்க்கையையும் தீர்மானித்துவிட முடியாது' என்றபடி தன்போக்கில் போய்கொண்டிருக்கிறது வாழ்க்கை!

”குத்துவிளக்காக,குலவிளக்காக” என்று முன்பு எழுதிய இடுகையில் 'வில் பப்பு ஃபாலோ அ ரிலீஜியன்', அதைப்பத்தி அப்புறம் பார்ப்போம்ன்னு எழுதியிருந்தேன். அதனை ஒட்டி எழுத வாய்ப்பளித்த தீபாவிற்கு நன்றிகள்! தொடர்வதற்கு நான் அழைக்கவிரும்புவது,

'ஆன்மீகச் செம்மல்' ஆயில்ஸ்
'அம்மன் எஃபெக்ட்' அமித்து அம்மா
நோயாளிகளின் பிணி தீர்க்கும் பூங்குழலி
என் செல்ல G3
சாமியாடிய சின்ன அம்மிணி
பதிவில் கண்ணாமூச்சு விளையாடும் தீஷுக்குட்டி

Saturday, April 10, 2010

லட்சுமணனின் "ஒடியன்"!


பதிவர் & சமூக ஆர்வலர் 'நாதாரி' லட்சுமணன் அவர்களின் “ஒடியன்” புத்தக வெளியீட்டு விழா நாளை இனிதே நடக்க அன்பும், வாழ்த்துகளும்! :-)

Thursday, April 08, 2010

குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ்

சாயங்காலம் அலுவலகத்திலிருந்து நான் வந்தால் போதும்..கதவை திறக்க ஓடி வருவாள். உள்ளே நுழையும் முன், ”ஆபிஸிலே என்ன சாப்பிட்டே, லஞ்ச் பாக்ஸ்லே இருந்ததையெல்லாம் ஃபுல்லா சாப்பிட்டியா” என்று அவளிடம் விசாரணை நடப்பதுபோல என்னிடமும் விசாரணை நடத்துவாள். சென்ற வாரத்தில் ஒரு நாள் உள்ளே நுழைந்த என்னை கண்டுக்கொள்ளாமல், அவளது பையை எடுப்பதும் எதையோ எடுத்துப் பார்ப்பது பின் மறைத்து வைத்துக்கொள்வதுமாக இருந்தாள்.

'எனக்கும் காட்டு பப்பு, என்னது அது' என்றதற்கு 'நான் உன் ஃப்ரெண்ட் இல்ல, தேஸ்னா ஃப்ரெண்ட்” என்று மறைத்து வைத்துக்கொண்டாள். கலர்கலராக ஒரு பேப்பரில் ஏதோ வரைந்திருந்தது. ரொம்ப கேட்டால் ஓவராக பிகு பண்ணிக் கொள்வாள் என்று லூசில் விட்டுவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து 'நான் உனக்கு மட்டும் காட்டறேன், அப்பாக்கு கிடையாது' என்று சொல்லிவிட்டு காட்டினாள். ஒரு அட்டையில் கேட்டர்பில்லர், மரம், பூ, தென்னை மரம் என்று குட்டி குட்டியாக படங்கள் வரைந்து வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தது. தேஷ்னா, பப்புவுக்குத் தந்ததாம் அது. அவங்க அப்பா வரைஞ்சதும் தேஷ்னா கலரடிச்சு பப்புவுக்கு கிஃப்ட் கொடுத்தாளாம்.

வீட்டிலிருக்கும் பழைய டைரிகள் எல்லாம் இப்போது பப்பு வசம். எழுதுவது, வரைவது, பெயிண்டிங் அப்புறம் கிழிப்பது என்று எல்லாவற்றும் எளிது. திடீரென்று பேப்பர் கேட்கும்போது தேடி அலைய தேவையில்லை. அன்றிரவு படுக்கையில் பார்த்தால் பாதி படுக்கையை டைரியிலிருந்து கிழித்த பேப்பர்கள் நிறைத்திருந்தது. டைரி முன் அட்டையும் பின் அட்டையுமாக இளைத்திருந்தது. 'பப்பு என்னது இது..ஏன் இப்படி கிழிச்சு வைச்சிருக்கே' என்றதற்கு நாளைக்கு தேஷ்னாவுக்கு தருவதற்கு இவள் வரைந்துக் கொண்டிருக்கிறாளாம். எல்லாவற்றிலும் ஏதேதோ கிறுக்கல்கள். பேனாவால், க்ரேயான்ஸ்-ஆல்... 'அய்யோ..இதை எப்போ க்லீன் பண்ணி எப்போ படுக்கிறது' என்று ஆயாசமாக இருந்தது.

”போதும்,எடு பப்பு” என்று கெஞ்சியதற்கு பிறகு பெரிய மனசு பண்ணி எல்லாவற்றையும் அடுக்கி வெளியே எடுத்துச்சென்றாள். அடுத்த நாள் காலை லஞ்ச்பாக்ஸ் வைக்க பையை திறந்தபோது அந்த பேப்பர் கட்டுகள் - கலை கல்வெட்டுகள் பையை நிறைத்திருந்தன. இரவு பையில் வைத்துச் சென்றிருக்கிறாள் போல.

இது இப்போது தினமும் நடக்கும் வழக்கமாகிவிட்டது. தினமும் ஏதாவது பேப்பர் கொண்டு வருவதும், இவள் ஏதாவது ஆர்ட் ஒர்க் செய்து எடுத்துச் செல்வதுமாக! எல்லாம் தேஷ்னா,சுதர்சன்,கீர்த்தி, அர்ஷித் கைலாஷ்-க்கு கொடுப்பதற்காம். க்ரூப் இப்போ பெரிசாகிடுச்சுன்னு நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் எனது இந்த ஐடியாவிற்கு வித்திட்ட தேஷ்னாவிற்கு ஒரு தேங்ஸ்! :-)

இந்த ஐடியா ஒன்றும் புதிதில்லை. pen friends என்ற பெயரில் நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிமுகமானதுதான்.

இதே பேனா நண்பர்கள் தங்களது டிராயிங் மற்றும் பெயிண்டிங்குகள், வண்ணங்கள் மூலம் தங்கள் உலகை பரிமாறிக்கொண்டால் எப்படி இருக்கும்?
அதுவும் குட்டீஸ்?!

ஒரு கடிதமாக இருக்கலாம் அல்லது புதிதாக கற்றுக்கொண்ட வார்த்தையாக இருக்கலாம் ஏன் கதையாகக் கூட!

உங்களுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் பத்து வயதிற்குள் குட்டீஸ் இருந்தால் எனக்கு ஒரு மடலிடுங்கள். ”குட்டீஸ் பேனா நண்பர்கள்” என்று சப்ஜெக்டில் குறிப்பிட்டு, தங்கள் குழந்தையின் பெயர்,வயதுடன் மின்மடலிடுங்கள்.மேலும் , gender preference இருந்தாலும் தெரிவியுங்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை வரை இந்த ஆஃபர் உண்டு. எத்தனை பேர் சேர்கிறார்கள் என்பதையும் குட்டீஸின் வயதைப் பொறுத்தும் கொண்டு மேட்ச் செய்து உரியவர்களிடம் தெரிவிக்கிறேன்.அப்புறம் என்ன..குட்டீஸ்-கள் டிராயிங்குகளை/
கடிதங்களை ஸ்கேன் செய்து மின்மடல் மூலம் பரிமாறிக்கொள்ளலாம்..அல்லது முகவரிகளைப் பெற்றுக்கொண்டு கடிதங்களாகவும்(surface mail) பரிமாறிக் கொள்ளலாம்..அது உங்கள் வசதி! என்ன சொல்றீங்க?

பதிவரின் குழந்தையாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாசகரின் குழந்தையாகக் கூட இருக்கலாம். உங்களுக்கும் உங்கள் குட்டீஸுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தால், டிராயிங்/கடிதங்களை அனுப்பவும் பெறவும் ஆர்வமிருந்தால் mombloggers@gmail.com என்ற ஐடிக்கு மடலிடுங்கள். அடுத்த சனிக்கிழமை அறிவிப்புகள் வெளியாகும்.

இன்னும் வேறு ஐடியாக்கள் இருந்தாலும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

ஒன்றரை மாசம் லீவு..எப்படியாவது பொழுதை போக்கணும் இல்லே.. எது எப்படியாயினும், தேஷ்னாவுக்கும் பப்புவுக்கும் எனது அன்பும் நன்றிகளும்!
(Cross posted in ammaakalin valaipoo too!)

Wednesday, April 07, 2010

குப்புறபடுத்து குமுறவைக்கும் ஒரு யதார்த்த(!) முயற்சி

“பொறுப்பு பொறுப்பு”-ன்னு சொல்றாங்களே, அது உனக்கு கொஞ்சமாவது வந்திருக்கா?

”இத்தனை வருஷமா உயிர் வாழ்ந்து என்னத்தை சாதிச்சிருக்கே?”

”குறிக்கோளோட வாழணும்னு யாராவது சொல்லும்போதெல்லாம், அப்படின்னு ஒண்ணு இதுவரைக்கும் உனக்கு இல்லவே இல்லையே, அதை பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்திருக்கியா”

”வளர்ந்து நான் அதுவா இருப்பேன்..இதுவா இருப்பேன்னெல்லாம் கனவு கண்டு எல்லாரையும் நம்ப(!) வைச்சியே, அதுலே எதுவாவது ஆகியிருக்கியா”

“என் பர்த்டே அன்னைக்குத்தான் வேர்ட்ஸ்வொர்த்தும் பொறந்தார்ன்னு சொல்லிக்கிறியே...வேர்ட்ஸ்வொர்த் அப்படி சொல்லிக்க முடியுமான்னு கொஞ்சமாவது யோசிச்சியா?”

-இப்படி முகத்திலறையும் (!) கேள்விகளை சில சமயங்களில் என்னை நானே கேட்டுப்பேன்...அந்த 'சில சமயம்' வருஷத்திலே ஒரு தடவைதான்னாலும் இந்தக் கேள்விகள் என்னை ரொம்ப ஃபீல் பண்ண வைச்சுடும்..

நேத்து சாயங்காலமும் அப்படி ஒரு சமயமாகி போனதுலே இப்படி கேள்வி கேட்டு குமுறிக் குமுறி ஃபீல் பண்ண வேண்டிய நேரமா போச்சு...ரொம்ப ஃபீலிங்ஸ்-னா உடனே படுத்துத் தூங்கிடறதுதானே என்னோட பழக்கம்...சோ, படுத்து தூங்கிட்டேன்...இந்த மாதிரி ஸ்டுப்பிட் கேள்விகளை கனவுலே கூட யாரும் என்னைக் கேக்கலை...

ஆனா, இன்னைக்குக் காலையிலே என்னை எழுப்பின ஃபோன் கால்கள், வந்த மெசேஜ்-கள் எல்லாம் ‘ச்சே..நீ அவ்ளோ யூஸ்லெஸ் இல்லே முல்லை'ன்னு நம்பிக்கைக் கொடுத்தப்புறம்தான் படுக்கையிலேருந்து எழுந்திருச்சேன்..(இல்லை...தூக்கத்தை கெடுத்திட்டீங்களே-ன்னு நான் திட்டவே இல்லை..;-) )

ஓக்கே...இப்போவரைக்கும் இந்த போஸ்ட் என்னன்னே தெரியாம படிக்கறவங்களுக்கு...ஒரு யூஸ்லெஸ் ஆளோட பர்த்டே இன்னைக்கு.. அதனாலேதான் இந்த கேவிக்கேவி கண்ணீர் வர வைக்கும் முயற்சி..:-)


பிறந்தநாள் கொண்டாடறதை எல்லாம் 16 வயசோட ஏறக்கட்டியாச்சுன்னாலும், காலேஜ்லே அதுக்கு வேற மீனிங் கிடைச்சது..நடுராத்திரி முகத்துலே
தண்ணியை கொட்டி எழுப்பி, கேக்கை முகத்துலே அப்பி,அதே போஸோட ஃபோட்டோ எடுத்து, என்னைத் தவிர மீதி எல்லோரும் ஹீரோயின் மாதிரி போஸ் கொடுத்து, தூங்கறவங்க எல்லாரும் பதறியடிச்சு எழுந்துக்கறா மாதிரி ‘ஹாப்பி பர்த்டே'ன்னு கத்தி..அதுக்கெல்லாம் பிராயசித்தமா ‘ட்ரீட்'ன்னு அனனிக்கு முழுக்க என் பர்சை காலி பண்ணி.... (‘இந்த பர்த்டே கொண்டாடறது எல்லாம் வேஸ்ட்..இதுலே என்னோட பங்கு ஒண்ணும் இல்லே..”ன்னு எவ்ளோ கதறி இருப்பேன்!!)


சில சமயம் பிறந்தநாட்கள் பற்பல நினைவுகளை கொண்டுவந்து விடுகின்றன இதுபோல...ஒருவேளை வயசாய்டுச்சுனா இப்படிதான் ஆகும்போல..'என்ன சேர்த்து வைச்சிருக்கே..என்ன சாதிச்சிருக்கே'-ன்னு !

அப்போதான் மனசுக்குள்ளே ஒரு சின்னக் குரல் 'குழந்தைங்க குழந்தைங்களா இருந்தா போதும்... குழந்தைங்கள்ளாம் என்ன பெரிசா சாதிக்கணும்'..

அந்த சின்னக்குரலுக்கு என் நன்றி! :-)


அதனாலே, வயசாகுதேன்னு ஃபீல் பண்ணலை...Because I am not. And probably, never will be.

Monday, April 05, 2010

அங்காடித் தெருவில் ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ்...

சாந்தி சின்னம்மா, ஆத்துக்கு போகும்போதெல்லாம் என்னையும் கூட்டிட்டு போவாங்க. இப்போவரைக்கும் நான் ரொம்ப நெருக்கத்திலே கால் வைச்சி விளையாடினதுன்னா சேத்தியாதோப்பு ஆறுதான். சின்னம்மா குளிச்சி, அன்னக்கூடையிலே இருக்கற துணியெல்லாம் துவைச்சு எடுத்துக்கிட்டு வர்ற வரைக்கும் நானும் ஆத்திலே விளையாடுவேன். அந்த ஆத்துலே இறங்கறதுக்கு நிறைய படிக்கட்டு இருக்கும்..அதுலே தண்ணிலே எந்த படிக்கட்டு வரைக்கும் தெரியுதோ அந்த படிக்கட்டு வரைக்கும் விளையாடுவேன்..அங்கே நிறைய குட்டி குட்டி மீன் வரும். சின்னம்மா நல்லா நீந்துவாங்க..அங்கே குளிக்க வர்ற எல்லா அத்தைங்களுமே நல்லா நீந்துவாங்க..திடீர்னு தண்ணிலே ஜிக்-ஜாக் மாதிரி தெரியும்..அது பாம்பாம். தண்ணிபாம்புல்லாம் ஒண்ணும் செய்யாதுன்னு சொன்னாலும் அதுக்காகவே இறங்க மாட்டேன்.

சாந்தி சின்னம்மாவுக்கு ரெண்டு பசங்க. அசோக்-ஆனந்த். அசோக்குக்கு என்னோட வயசுதான். செல்வம் சித்தப்பா வழியாதான் சின்னம்மா சொந்தம்..ஆனா, எனக்கு சின்னம்மாவைத்தான் புடிக்கும்.அதனாலே சின்னம்மாவைதான் முதல்லே சொல்வேன். செல்வம் சித்தப்பா குடிப்பார்ன்னு இளஞ்செழியனும், சுரேஷும் சொல்லியிருந்தாங்க. அதனாலே பயம். சாந்தி சின்னம்மாவுக்கு முடி நீளம் - எங்க அம்மா மாதிரியே. அவங்களை எல்லாரும் ‘கருப்பா இருந்தாலும் களையான முகம்'னும் ‘சிரிச்ச முகம்'ன்னும் சொல்லுவாங்க. நான் அஞ்சாவது வகுப்புக்கு வந்ததும் சேத்தியாதோப்புக்கு போய் தங்கறதுல்லாம் குறைஞ்சுடுச்சு.அவங்க எல்லாம் வடலூருக்கு வந்தா பார்க்கிறதோட சரி.


நான் செவன்த்துக்குப் போனப்போ சாந்தி சின்னம்மாவும், சித்தப்பாவும் ஆம்பூருக்கு வந்தாங்க. அசோக் ஆனந்த்லாம் வரலை. 'படிக்கற நேரத்துலே கதை புக் படிக்காதே'ன்றதுதான் நான் ஆயாக்கிட்டே வாங்கற திட்டா இருந்துச்சு. அன்னைக்கும் அப்படி சொன்னாங்க. சின்னம்மாவும், ‘ஆமாம்மா, படிக்கற பசங்களை கெடுக்கறதே இந்த கதை புக்தான்,அசோக் கூட இதேதான்'ன்னு சொன்னாங்க. அசோக் கோகுலம்-லாம் படிக்க மாட்டான். காமிக்ஸ் புக்ஸ்தான். எனக்கும் கொடுத்தான். ஆனா, எனக்குதான் புடிக்கலை..அதுலே எதை முதல்லே படிக்கணும், யார் சொல்றதை முதல்லே படிக்கணும்னு தெரியாம குழப்பமா இருந்துச்சு. வரிசையா படிக்கறதுக்கே தெரியலை..அதனாலே எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லே.


ஆங்..சித்தப்பாவும் சின்னம்மாவும் வந்தாங்க இல்லே..செல்வம் சித்தப்பா துபாய் போகப்போறாராம். அதை சொல்லிட்டு போறதுக்குத்தான் வந்தாங்களாம். சின்னம்மா-வோட அம்மா சேத்தியாதோப்புக்கு வந்துடுவாங்களாம். அதுக்கு அப்புறம், சின்னம்மாவை அந்த வருஷ பொங்கலுக்கு பார்த்ததோட சரி. ஆனா அசோக் எல்லா லீவுக்கும் ஆம்பூர் வருவான். அவனுக்கும் எனக்கும் சண்டைதான் வரும். ஏன்னா, அவனும் எங்க பெரிம்மாவை பெரிம்மான்னு கூப்பிடுவான்.அதனாலே எனக்கு பிடிக்காது. அவன் செய்றது எதுவும் எனக்கு பிடிக்காது.


ஒருநாள் சாயங்காலம் விளையாடிட்டு வந்தப்போ பெரிம்மாவை ஹால்லே காணோம். நுழையும்போதே பெரிம்மா பெரிம்மான்னுதான் ஓடி வருவேன்..தேடிக்கிட்டு ரூம் உள்ளே போகும்போது ஆயா 'சத்தம் போடாதே.. பெரிம்மாவுக்கு தலைவலி'ன்னு சொன்னாங்க. பெரிம்மா படுத்திருந்தாங்க. பெரிம்மா எப்பவும் - நாங்க தூங்காம படுக்கமாட்டாங்க. யாரும் பேசிக்காம வீடு ரொம்ப அமைதியா ஒரு மாதிரி இருந்தது. அப்படி இருந்தா, ஊர்லே ஏதோ நடந்திருக்கு இல்லேன்னா ஏதோ பிரச்சினைன்னு அர்த்தம். ஏன்னா, விஜயன் மாமா செத்துட்டாங்கன்னு போன்வந்தப்பவும் அப்படிதான் ரொம்ப அமைதியா இருந்துச்சு வீடு.


அடுத்தநாள்தான் தெரிஞ்சுது...செல்வம் சித்தப்பா துபாய்லே இறந்துபோய்ட்டாராம். போய் ஆறுமாசம்தான் ஆகியிருக்கு. ஹார்ட் அட்டாக்னு சொன்னாங்களாம்.வேற எதுவும் தெரியலையாம். அண்ணாதுரை சித்தப்பாதான் லெட்டர் போட்டிருந்தாங்களாம். என்ன பண்றதுன்னு எதுவும் தெரியலையாம். அப்புறம், மூணு மாசத்துக்குள்ளே பாடியை அனுப்புவாங்கன்னு சொல்லிகிட்டாங்க. எட்டாவது அரைபரிட்சை லீவுலே சாந்தி சின்னம்மா ஆம்பூருக்கு வந்தாங்க. இந்தவாட்டி ரொம்பநாள் வீட்டுலே இருந்தாங்க. யாராவது வீட்டுலே இருந்தா எனக்கு ஜாலி. ஆனா, சின்னம்மா முதல்லே கொஞ்சம் உம்ம்னு இருந்தாங்க..அப்புறம், என்கூட ஜாலியா பேச ஆரம்பிச்சுட்டாங்க. அவஙக்கூட டீவி பார்த்தா ஆயா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ஞாயித்துக்கிழமை சாயங்காலம் சினிமால்லா சின்னம்மா கூட பார்த்துஇருக்கேன். அதுலே ஒரு பழங்காலத்து ப்டம..ஒரே சோகம்.. அப்போ சின்னம்மா சொன்னாங்க..இதுக்கே இபப்டி சொல்றே, துலாபாரம்னு ஒரு படம் இருக்கு..பார்த்தா நமக்கே அழுகைவந்துடும். அவ்ளோ சோகமா இருக்கும்னு சொன்னாங்க..எனக்கு ஆச்சரியம்தான்..ஏன்னா சின்னம்மாவுக்கே லைஃப்லே எவ்ளோ சோகம் இருக்கு..அவங்க சினிமாவைப் பார்த்தா அழுவாங்களாம்!


அவங்க கும்பகோணத்துலே இருக்கிற ஏஜெண்ட் வழியாத்தான் சித்தப்பா போனாராம். இப்போ சித்தப்பா இறந்துட்டதாலே சின்னம்மா போக ட்ரை பண்றாங்களாம். நிறைய காசு கொடுத்திருந்தாங்களாம், அந்த ஏஜெண்ட்க்கு. அந்த ஏஜெண்ட்-டும் அனுப்பறேன்னு சொல்லியிருக்காராம். வீட்டு வேலைதான். சின்னம்மா அஞ்சாவது வரைக்கும்தான் படிச்சிருந்தாங்க. இன்னும் கொஞ்ச பேர் வரட்டும். பம்பாய்க்கு அனுப்பி அங்கேருந்து மொத்தமா துபாய்க்கு அனுப்பறேன்னு சொல்லியிருந்தாராம். பம்பாய்-க்கு போனாங்களாம் சின்னம்மா. அங்கே மூணு மாசம் வரைக்கும் தங்கி இருந்தாங்களாம். வேலை ஒண்ணும் இலலியாம். இன்னும் சில பொண்ணுங்கள்ளாம் இருந்தாங்களாம். எல்லாம் இதேமாதிரி வீட்டுவேலைக்குத்தானாம்.ஐம்பது அறுவது பேராவது சேரணுமாம்.அப்போதான் துபாய்க்கு அனுப்ப முடியும்னு சொல்லிட்டாராம் அந்த ஏஜெண்ட். அதுவரைக்கும் ஊருக்கு போய் இருக்க சின்னம்மாவுக்கு இஷ்டம் இல்லே. ஏன்னா, துபாய்க்கு போகப்போறேன்னு ஊர்லே சொல்லிட்டு இப்போ திரும்ப போறதுக்கு நல்லாயில்லை. அதனாலே ஆம்பூருக்கு வந்திருக்காங்க.


பம்பாயிலே ஒரே ரூம்லே இருவது பேர் தங்கணுமாம். இருக்கற ஒரே ஃபேன்லேருந்து காத்துக் கூட ஒழுங்கா வராதாம். கேட்டா இன்னைக்கு அனுப்பறேன், நாளைக்கு அனுப்பறேன்னு அந்த ஆள் சொல்லுவாராம். நிறைய பேரு குழந்தைகளை எல்லாம் விட்டுட்டு கூட வந்திருந்தாங்களாம். எல்லாருக்கும் வீட்டுக்கு லெட்டர் போடறதும், வீட்டுலேருந்து லெட்டர் வருதான்னு பாக்கறதும்தான் வேலையாம். கொஞ்சம் நர்ஸ் வேலைக்கு படிச்சவங்களும் இருந்தாங்க போல. ஆனா, அதிகமா வீட்டுவேலைக்குத்தானாம். அங்கே ஷேக்குங்க வீட்டுலே அவங்க சொல்ற வேலை செய்யணுமாம். அந்த ஷேக்குங்க ஏதாவது தப்பா நடந்துக்கிற மாதிரி இருந்தா அந்த வீட்டம்மாகிட்டே சொல்லிட்டா பாத்துப்பாங்களாம். எல்லாம் சின்னம்மா சொன்னதுதான். எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. எப்படி வேற ஊருக்கு போய் வீட்டுவேலை செய்ற அளவுக்கு சின்னம்மா தைரியமாகிட்டாங்கன்னு. அதுவும் அந்த ஏஜெண்ட்கிட்டே சண்டை எல்லாம் போட்டிருக்காங்க!

ஒரு ரெண்டு மாசத்துக்குப்புறம் சின்னம்மா போய்ட்டாங்க. அப்புறம், நாங்க மறந்துட்டோம்.நடுவுலே கொஞ்சம் சொந்தக்காரங்க மட்டும், 'சின்னம்மாவை கும்பகோணத்துலே பார்த்தேன், பேசாம போய்டுச்சு'-ன்னும், 'அந்த ஏஜெண்ட் வீட்டுலேதான் இருக்குது'ன்னும் கதை கட்டிட்டு இருந்தாங்க்க.ஆனா, ஆயாவும் பெரிம்மாவும் இதைப் பத்தி எதுவும் பேசிக்கலை. ஆனா நாங்க அவங்களைப் பார்த்து ரொம்ப வருஷமாகிடுச்சு. ராமமூர்த்தி மாமா மட்டும், ‘என்னா தைரியம், கண்டிப்பா பாராட்டணும், படிக்காத ஒரு லேடிக்கு, அதுவும் ஒண்ணும் தெரியாத நாட்டுக்கு போகணும்னா எவ்ளோ தைரியம் வேணும்”னு ஆச்சரியமா சொல்லிக்கிட்டு இருந்தார்.

சின்னம்மா இப்போ என்னோட கல்யாணத்துக்கு முதல் வருஷம்தான் துபாய்லேருந்து வந்தாங்க. அதேமாதிரிதான் இருந்தாங்க. சிரிச்ச முகம், நீளமான முடி. இப்போ சேத்தியாதோப்புலேயே ஒரு மெஸ் வச்சு நடத்துறாங்க. அசோக், ஆனந்துக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அசோக் மட்டும் சேத்தியாதோப்புலேயே ஒரு கம்ப்யூட்டர் நடத்துறான்.எல்லோரும் இப்போ நல்லா இருக்காங்க.
நேத்து அங்காடி தெரு பார்த்தப்போ எனக்கு சின்னம்மா ஞாபகம்தான் வந்துச்சு. அதுவும் அந்த ஒரே ரூம் இல்லே..ஹால்லே அத்தனை பேரு படுத்துக்கிட்டு, சாப்பாட்டு இடத்துலே தட்டுக்கு அலைஞ்சுக்கிட்டு இருந்ததை பார்த்தப்போ...சின்னம்மா சொன்ன ஹாலை ஏனோ நினைச்சுக்கிட்டேன்.

வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலே இருந்தப்போ எப்படித்தான் எங்களுக்கு அந்த ஐடியா வந்துச்சோ தெரியலை, ஆனா எல்லோருமே ஓக்கேன்னு சொல்லிட்டோம். ஒரே மாதிரி ட்ரெஸ் ஆறு பேரும் வாங்கிக்கலாம் - ப்ரெண்ட்ஷிப் டே-க்கு - அப்படின்றதுதான் அந்த ஐடியா. எங்கே கிடைக்கும்னதுக்கு கிடைச்ச ஒரே சாய்ஸ் - தி நகர்தான். அங்கே கிடைக்கலன்னா வேற எங்கேயுமே கிடைக்காதுன்னு வேற சொல்லி இருந்தாங்க.


ஒரு சனிக்கிழமை காலையிலே அங்கே போய் இறங்கி ஆல்மோஸ்ட் எல்லா கடையிலேயும் சல்லடை போட்டு சலிச்சிட்டோம். ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ் கிடைக்கவேயில்லை. அப்படியே இருந்தாலும், சைஸ் எல்லாம் குழந்தைங்க, ஸ்கூல் பொண்ணுங்க, பெரியவங்க ன்னு வேற வேற சைஸ்லேதான் கிடைச்சது. அதுக்காக நாங்க அந்த கடையிலே இருந்தவங்களை படுத்தினது கொஞ்சம் நஞ்சம் இல்லே. முதல்லே சுடிதார் வேணும்னு கேக்க வேண்டியது, அப்புறம் ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ் வேணும்னு சொல்ல வேண்டியது, அவங்க உடனே அந்த இன்சார்ஜ்-ஜை கூப்பிட்டு சொல்லுவாங்க, 'சார், ஆறு ட்ரெஸ் ஒரே மாதிரி வேணுமாம்'னு.

உடனே அவர் , ஒரு 'பொடன்சியல் கிளையண்ட் ட்ரீட்மெண்ட்' எங்களுக்குக் கொடுப்பார். அப்புறம், 'உள்ளே போய் எடுத்துட்டு வாம்மா'ன்னு யாரையாவது அனுப்புவார். சில இடத்துலே, அடுத்த தெருவுலே இருக்கற குடோனுக்கு அனுப்பி பார்த்துட்டு வரச் சொல்லுவாங்க. அப்படில்லாம் அலைய வைச்சு, நாங்களும் அலைஞ்சு கடைசிலே ஒருகடையிலே 'அடுத்த வாரம் வாங்க, கண்டிப்பா நீங்க கேக்கற மாதிரி கிடைக்கும்'னு சொன்னாங்க.

எப்படி ஃப்ளாட்பார்ம்லே ட்ரெயினைப் பார்த்தாலே வீட்டுக்குப் போய்ட்ட சந்தோஷம் கிடைக்குமோ அதே மாதிரி எங்களுக்கு அப்போவே ட்ரெஸ் கிடைச்ச சந்தோஷமும், ஒரே மாதிரி போட்டுக்கப் போறோம்னுதான் இருந்ததே தவிர சேல்ஸ் பீபிள் அலைச்சலையோ இல்லேன்னா மத்த கடையிலே கடையையே புரட்டிபோட்டுட்டு வாங்காம வந்தப்போ அவங்க படற கஷ்டத்தையோ நாங்க நினைச்சும் பாக்கல. அப்புறம் கொஞ்ச நாள்லே ரங்கநாதன் ஸ்ட்ரீட் மேலே இருந்த க்ரேஸ் போய்டுச்சு... அங்கே போய்ட்டு வந்தா அன்னைக்கு ஃபுல்லா செம தலைவலி வந்துடும் எனக்கு.


ஆனா, இந்த குட்டி குட்டி திங்ஸ் வாங்கற சந்தோஷம் இருக்கே.. குட்டி குட்டி பர்ஸ், டிசைன் டிசைனா ஹேர் பாண்ட் எல்லாம் எங்களுக்குன்னு இல்லே.. நல்லாருக்குன்றதுக்காகவே வாங்கியிருக்கோம். அதாவது, அவசியமே இல்லேன்னாலும், ' கடையிலேயே விட்டு வர்றதுக்கு மனசேயில்ல'ன்னு ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சு அதுக்காக வாங்குறது.. அப்புறம், யாராவது நல்லாருக்கு சொன்னா அதை அவங்களுக்கு கிஃப்ட் பண்றது....

சற்றும் மனந்தளராமல் அடுத்த வாரமும் போனதில் ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ் கிடைச்சுடுச்சு. அன்னைக்கு காலையிலே நாங்கதான் ஃப்ர்ஸ்ட் கஸ்டமர்ஸ். கடையெல்லாம் திறக்கறதுக்கு முன்னாடியே போய்ட்டோம். அப்போதான் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் வாசல்லே எல்லாரும் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு கும்பல் கும்பலா நிக்கறதைப் பார்த்தோம். நானும் லதாவும் கூட அங்கே ரெண்டு தடவை போயிருக்கோம். நம்ம பேக்கை வாங்கி அவங்க கேரிபேக் போட்டு தந்துடுவாங்க. அது எங்களுக்குப் பிடிக்கவேயில்லை. ஆனா, அங்கேதான் சீப்பா கிடைக்கும்னு ஹாஸ்டல்லே சொல்லுவாங்க. இந்த 'எம்பி எம்பியே' படிச்சவங்க இருக்காங்களே, "மத்த ஷோரும்லேல்லாம் விலை குறைக்க மாட்டாங்க.. இவங்க Strategy- யே வந்து பொருட்கள் மூவிங்க்லே இருக்கணும், விலை குறைச்சாலும் பரவால்லே.. அதுதான் செல்லிங் டெக்னிக்'ன்னு அலசி ஆராய்வாங்க...

ஏதாவது ஒரு ஃபெஸ்டிவல் கண்டுபிடிச்சு அதைக் கொண்டாட காரணமும் கண்டுபிடிச்சு கலர் கலர் பலூனை தோரணம் கட்டி பளிச்-னு இருக்கற பில்டிங்லே வேலை செய்றவங்களோட வொர்க்கிங் அட்மாஸ்ஃபியர்...அவங்க ஒவ்வொருத்தரோட குடும்ப பின்னணி...


ஆனா, ஒரு சில காட்சிகள், சில கேரக்டர்கள் - இன்னும் மனசை விட்டு அகலாம... இல்லேன்னா டயலாக்கோட ஒலிச்சுக்கிட்டே இருக்கு.

குப்பை பொறுக்கற தாத்தா, உடம்பெல்லாம் வாட்ச் மாட்டிக்கிட்டு விக்கிறவர், கர்சீஃப் விக்கிற கண்ணு தெரியாத தாத்தா, பத்து ரூபா டீ சர்ட்.... (ஆதம்பாக்கம்லே பறக்கும் ரயிலுக்கு தூண் கட்டிக்கிட்டு இருக்காங்க. ஆறுமாசம் முன்னாடி வரைக்கும் யாருமே இல்லாத அந்த ரோடுலே தூண்கள் கட்டி வாகனங்கள் போக வர ஆரம்பிச்சதும்.. அங்கே முளைச்ச தர்பூசணி கடை, இளநீர் கடைகள்..ஆச்சரியமாயிருந்துச்சு..எப்படி மக்கள் வாழ்க்கையை நடத்துறதுக்கு வழி கண்டுபிடிக்கறாங்கன்னு!)

'அப்பா இல்லாதவனா, அக்கா தங்கச்சி இருக்கறவனா பார்த்து எடுத்தாதான் வாயை மூடிகிட்டு வேலை செய்வான்'- என்று தேர்வு நடத்திட்டு அவர்கள் கடைக்கு முதல்முதலாக வந்திறங்கும் போது - 'எச்சிக்கையை நீட்டினா ஆயிரம் காக்கா, நம்ம ஊர் பசங்கன்னுதான் உங்களை இங்கே சேர்த்திருக்கோம்,ஒழுங்கா வேலை பாக்கணும்,புரியுதா'ன்னு அண்ணாச்சி கேக்கறதும், பசங்க எல்லாம் 'புரியுது அண்ணாச்சி'ன்னு தலையாட்டறதும்...

அந்த பப்ளிக் டாய்லெட்லே மூக்கைப் பொத்திக்கிட்டு அருவெறுப்போட நுழைஞ்ச அந்த ஆளுக்கு ஐடியா பொறிதட்டும்போது அவர் முகத்திலே தெரியற லேசான புன்னகையும்... ப்ளஸ் எக்ஸ்பிரஷனும்!

'சிமெண்டை கால்லே பூசிக்கிட்டு படுங்க'-ன்னு நடைபாதையிலே படுக்கும்போது ஒரு தாத்தா சொல்வாரே..

நாகம்மை அஸ்சாம் போகும்போது கனிகிட்டே, ' நான் இருந்துகிடுவேன்க்கா, நான் உன்னை மாதிரிக்கா, தைரியமாயிருப்பே..'

என்னோட ஹாஸ்டல் ரூம்மேட் ஷைனி அக்காவோட தங்கையை நாங்க காலேஜ் ஹாஸ்டல்லே சேர்க்கப்போயிருந்தோம். அந்த ஹாஸ்டலைப் பார்த்துட்டு அக்கா அவங்க தங்கச்சிக்கிட்டே கேட்டப்போ அந்தப் பொண்ணு மேலே இருக்கற வசனத்தைத்தான் சொல்லுச்சு.ஷைனி அக்காதான் அப்பா இல்லாத அவங்க குடும்பத்தை கவனிச்சிக்கிட்டு தங்கச்சிங்களையும் படிக்க வைச்சாங்க.

நாகம்மையை பார்த்தப்போ எனக்கு ஷைனி அக்காவும் அவங்க தங்கச்சியும்தான் கண்லே தெரிஞ்சாங்க!

இன்னொரு மறக்கமுடியாத சீன், அந்த குட்டிப்பொண்ணு பையை வாங்கிட்டு ஓடி வர்றது...

நாகம்மைக்கு மாதிரி என்னை ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சது, செல்வராணி...

'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' - செம..

பளிச்சுனு கலர்லே புடவை கட்ட சொல்லி அண்ணாச்சி சொன்னதும், கூட இருக்கற ஜால்ராஸ், 'அடுத்த படம் நீங்களே டைரக்ட் செஞ்சுடுங்க'-ன்னு ஐஸ் வைக்கறதும்.. அண்ணாச்சி அதை பெருமையா(!) ஃபீல் பண்ணி விளம்பர டைரக்டர்கிட்டே சொல்லி சிரிச்சுட்டு (இதே சீனை எத்தனை வாட்டி ரியல் லைஃப்லே பார்த்திருப்போம்) 'அடுத்தவங்க வாழ்க்கையிலே மண்ணள்ளி போட மாட்டேன்'ன்னு சொல்றதும்...


கனி ரோஷத்தோட லிங்குவை சட்டை செய்யாம இருக்கும்போது, கனியோட ஹாஸ்டலுக்கே வந்து சந்திச்சு பேசுவான். கனி கொஞ்சம்கூட இறங்கி வராதபோது, பளார்ன்னு கன்னத்துலே அறைவான். என்னதான் அதிகாரமேயில்லாத நிலையில் இருக்கிற கதாநாயகனுக்குக் கூட கதாநாயகியை அறைஞ்சுதான் ஆம்பிளைத்தனத்தை காட்டிக்க வேண்டியிருக்கு... ஒருவேளை இதுவும்தான் யதார்த்தமோ..என்னவோ!


கிளைமாக்ஸ்லே கனிக்கு கால் போனது சினிமாதானேன்னு அப்படின்னு தோண வைச்சுடுச்சு.. அந்த வடபழனி விபத்து உண்மையானதா இருந்தாலும். அப்புறம், அந்த தெரசா படம்லாம் காட்டி ஒரு பாட்டு - அதெல்லாம் இல்லாமலே இந்த படம் மனசை தொடற மாதிரிதான் இருக்கு.

இன்னும் சில கடைகளிலே ஒவ்வொரு தளத்துலேலேயும் கேமிரா இருக்குமாம். யார் யார் எப்படி வேலை செய்றாங்க, என்ன செய்றாங்கன்னு கவனிக்கறதுக்கு. ஒரு ரூம்லே உட்கார்ந்துகிட்டு அதை ஒருத்தர் பார்த்துக்கிட்டே இருப்பாராம். எல்லாம், 'கஸ்டமர் சர்வீசு'க்காகத்தான் சொல்லிக்கிட்டாலும் இப்படி ஒவ்வொரு நிமிஷமும் கண்காணிக்கறது - மனித உரிமை மீறல்னுதான் தோணுது...

கவர்மெண்ட் ஆபிஸிலே இது மாதிரி செஞ்சா என்ன ஆகும்?!

Friday, April 02, 2010

காப்பியும் கட்டாயக்கல்வியும்

வழக்கம்போல, ஆயாவின் டவாலியை மாட்டிக்கொண்டு கூடவே நடக்கிறேன். ஆயாவின் ட்ரேட் மார்க் - ஒரு குடும்பமே செல்லக் கூடிய கருப்பு குடை. அந்தக் குடைக்குள் செல்வது எனது கௌரவத்துக்கு இழுக்கு என்பதுபோல நான் தனியாக நடக்கிறேன். வடலூர் வரும்போதெல்லாம் ஆயாவோடு நெய்வேலி ட்ரஷரி-க்குச் சென்று வருவது வழக்கம். பெரும்பாலும் நானும் இளஞ்செழியனும் தான் ஆயாவுக்கு உதவியாளர்கள். அன்றைக்கு நான் மட்டுமே. ஆயாவோடு வடலூரில் நூறடி நடந்தால் நான்கடிக்கு ஒரு முறை ப்ரேக் போட வேண்டி இருக்கும். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று வடலூரில் சகலரையும் ஆயாவுக்குத் தெரியும். சகலருக்கும் ஆயாவைத் தெரியும். ‘மக வயித்து பேத்தியா' என்று என்னைப் பார்த்து ஒரு கேள்வியும் தொக்கி நிற்கும்.

அப்படி, அன்றைக்குத் தானாகவே வந்து சிக்கினார் ஒருவர். டிசைன் டிசைனாக போட்ட சட்டை, கரிய உடலோடு, இடுப்பில் துண்டு போல வேட்டி, கையில்- கழுத்தில் சிலபல மணிகள், சிங்கப்பல் டாலர் வைத்த கயிறு கழுத்தில். ‘டீச்சர்' என்று கூப்பிட்டு ஆயாவைப் பார்த்து கைகளைக் குறுக்காக கட்டிக்கொண்டார்.
ஆயா என்ற ஆலமரம் அந்த பட்சியைக் கண்டுக்கொண்டு ”அட, காப்பி ” என்றது. குசலங்கள் - நல விசாரிப்புகளுக்குப்பின், அவருக்கு நாலு குழந்தைகள், நெய்வேலியில் இருக்கிறார் என்ற செய்தியைத்தாண்டி கிளம்புமுன், காப்பி கரகரத்த குரலில் சொன்னார், “ஏன் டீச்சர், என்னை அன்னைக்கே நீங்க அடிச்சு பள்ளிக்கூடத்துக்கு துரத்தியிருக்கலாம் இல்ல, இன்னைக்கு நான் இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க மாட்டேனே,நானும் நல்லா இருந்திருப்பேனே!” . மனதை அறுத்துக்கொண்டிருக்கிறது இன்னமும் அந்தக் குரல்.

“நான் தலப்பாடா அடிச்சுக்கிட்டேன், இப்போ வருத்தப்பட்டு என்ன புண்ணியம், உன் பசங்களையாவது நல்லா படிக்க வை, படிப்புதான் எல்லாம் ” என்று ஆயா சொன்னபிறகு வீடு நோக்கி நடக்கத்துவங்கினோம். கொஞ்ச தூர மௌனத்திற்குப் பிறகு , வழியில் ஆயா சொன்னது :

தாத்தா விறகுக்கடை வைத்திருந்தபோது காப்பியின் பெற்றோர்தான் விறகு வெட்டவும்,கடையில் உதவியாகவும் இருந்தார்கள். காப்பிக்கு அப்போது ஆறு வயது. ஆயா, வள்ளலார் குருகுலத்தில் (வடலூரின் ஆரம்பப்பள்ளி)வேலை செய்துவந்தார். காப்பியை குருகுலத்தில் சேர்த்துவிடவும், மிட்டே மீல்ஸூக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியிருக்கிறார். காப்பிக்கு படிப்பில் நாட்டமில்லாததால், தொடரவில்லை. கொக்கு குருவி சுடுவதும், ஊரைச் சுற்றுவதுமாக நாட்களைக் கழித்துவிட்டு இப்போது பிழைப்புக்கே கஷ்டப்படுகிறார்.

காப்பி என்றில்லை...வடலூரில் மெயின் ரோட்டில் வரிசையாக இருக்கும் ஒவ்வொரு புளியமரத்தினடியிலும் வசிக்கும் நரிக்குறவ குடும்பத்து பிள்ளைகளின் கதை இதுதான். அதே வழியில், எல்லோரும் பள்ளிக்குச் செல்லும்போது இவர்கள் விறகுகள் பொறுக்கிக்கொண்டோ அல்லது காக்கா,காடை சுட்டுக்கொண்டும் சாயங்கால வேளைகளில் ட்ரான்ஸிஸ்டரில் பாட்டுக்கேட்டுக்கொண்டோதான் நாட்களைக் கழிப்பார்கள். எங்கோ ஒரு சிலர் மட்டும் பட்டதாரியாகி செய்தித்தாள்களில் இடம் பிடிக்கிறார்கள்.

பொங்கல்,மாட்டுப்பொங்கல் எல்லாம் முடிந்து காணும் பொங்கலன்று - பெண் குழந்தைகள் எல்லாம் தாழம்பூவால், சாமந்தியால் வாழைமட்டை சடை தைத்து மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டு அங்கேயும் இங்கேயும் நடை பயில் ஆரம்பிக்கும் நேரத்தில், ப்சங்கள் எல்லாம் கடைத்தெருவிற்கும், மைதானத்திற்குமாக சைக்கிளை எடுத்துக்கொண்டு அலைந்துக்கொண்டு இருக்கும்நேரத்தில் வாசலில் குரல் கேட்கும். கொட்டாய்க்கு முன்னால், வாசலுக்குத் தள்ளி ஒடுங்கிய தோற்றத்துடன் ஒருவர் ”ஐயா” என்றோ ”வாத்யாரே” என்றோ கூப்பிடுவார்.

யார் முதலில் போய் பெரியவர்களை கூப்பிட்டு வருகிறார்களென்று போட்டியில் மாமா , பெரிப்பா என்று கத்திக்கொண்டு ஓடுவோம். 'உள்ளே வாங்க' என்று அக்காக்கள் யாராவது கூப்பிடுவார்கள். கரிய உடம்பு. தண்ணீரை கண்டு பல வருடங்களான கோவணததை, வேட்டியா அல்லது துண்டாவென்றே தெரியாமல் இடுப்பில் இருக்கும் ஒரு துணி. கொட்டாயில், தூணுக்கு ஓரத்தில் குத்தவைத்து உட்கார்வார். இடுப்பில் இருக்கும் துணியில், இவ்வளவு நேரம் இருந்ததாவென்றே தெரியாமல் இருக்கும் வெற்றிலையை சுண்ணாம்பைக் கிள்ளி வாயில் அடக்கிக்கொள்வார். நாங்கள் எல்லாம் வினோதமாக அவரையே பார்த்தபடி இருப்போம். ஒருநிமிடம்தான். அப்புற்ம், 'ஹோ' வென்ற கூச்சலுடன் விளையாட்டு தொடங்கும்.


அம்மாவோ, அத்தையோ கொடுக்கும் தண்ணீரை வாங்கிக் தூக்கிக் குடித்துவிட்டு கீழே வைப்பார். மாமா வந்து சட்டைப்பையை எடுத்துவரச்சொல்லி ரூபாயை கொடுப்பார். “என்னா வாத்யாரே” என்றதும் “எல்லாம் சரி வரும், சரி வரும்..”என்று மாமா சொன்னதும் தலையைச் சொறிந்துக்கொண்டு நிற்பார். ஆயாவும் தன்பங்குக்கு கயிற்றுக்கட்டிலில், தனது தலைகாணிக்கு அடியிலிருக்கும் பையை துழாவி நாணயங்களைக் கொடுப்பார்.

மறக்காமல், ஆயா கேட்கும் கேள்வி, ”காத்தான், எத்தனை பசங்க” அப்புறம் ”என்ன படிக்குது”. அவர் பேசுவது அப்போது என்னால் புரிந்துக்கொள்ள முடியாதிருந்தது. 'எல்லாம் சும்மாதான் சுத்திட்டு இருக்குதுவோ '- என்பதுபோலத்தான் பதிலிருக்கும். இன்றுவரை, அவர்கள் அப்படியேதான் பொங்கலின்போது வந்து காசு வாங்கிச் செல்கிறார்கள். என்ன, வேட்டி சட்டை முழுவதுமாக அணிந்திருக்கிறார்கள். அவர்கள் யாரென்று சொல்லவில்லையே.. அவர்களை, வெட்டியான்களென்று மாமா சொன்னார்.

காப்பியும்,காத்தானும் இருபது வருடங்களுக்கு முன்பானவர்களென்றாலும் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை. சின்னமலை பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் மேலே கூடாரம் போல கட்டி செருப்புத் தைத்துக்கொண்டிருப்பார் அந்த தாத்தா. ஓரிரு முறை அவரிடம் செருப்புகளை செப்பனிட்டும் இருக்கிறேன். சில வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு பார்த்தபோது அந்தக்கடையில் பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் செருப்புத் தைத்துக்கொண்டிருந்தான்.

அம்மா வேலை செய்வது குள்ளஞ்சாவடி என்ற குக்கிராமத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில். எட்டாவது வரை இருக்கும் அந்த பள்ளிக்கூடத்தில் எத்தனை பேர் இருப்பார்களென்று நினைக்கிறீர்கள்? மொத்தம் 200 பேர். மூன்றே ஆசிரியர்கள். அந்த பள்ளிக்கூடத்திற்கு போஸ்டிங் போடுபவர்களெல்லாரும் ஒன்று ட்ரான்ஸ்ஃபர் வாங்கிச் சென்று விடுவார்கள் அல்லது காசு கொடுத்து வேறு இடத்திற்கு மாற்றல் வாங்கிச் செல்வார்கள். யாருக்கு வீடு அருகிலிருக்கிறதோ..அவர்கள் மட்டுமே ஜாயின் செய்வார்கள். பிள்ளைகளைக் கண்டிப்புடன் நடத்தும் வாத்தியாராக இருந்தால் கொஞ்சம் பயத்தோடுதான் காலந்தள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், ஏதாவது ஒரு குழந்தை பள்ளிக்கு போக மாட்டேன்று வீட்டில் அழுதால், அந்த ஆசிரியர் போகும் வழியிலோ அல்லது அடுத்தநாள் பள்ளிக்கூடத்திலோ ஒரு கும்பல் அரிவாளோடு வந்து மிரட்டிவிட்டு போகும்.

கல்வியை அடிப்படை உரிமை என்று சட்டமாக்கியிருப்பது பெற்றோர்களையும், சிறார்களை பணிக்கமர்த்துபவர்களையும் கொஞ்சம் பயமுறுத்தலாம். பள்ளிகூடத்திற்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் கூட்டுமா என்பது தெரியவில்லை.ஆரம்ப வகுப்புகளில் முப்பது முதல் நாப்பது வரை இருக்கும் மாணவர்களின் வருகை ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். எட்டாம் வகுப்பில் மொத்தம் பத்தோ பதினைந்தோ பேர்தான் தேறுவார்கள். இதற்கு முதல்காரணம் வறுமை. மற்றும் அறியாமை. 'பொம்பளை புள்ளை படிச்சு என்ன பண்ணப்போகுது,எங்கூட வேலைக்கு வந்தா கஞ்சியாவது குடிக்கலாம் என்ற எண்ணமும். நிறைய, பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கான் இடங்கள் காலியாகவே இருக்கின்றன. அவைகளை நிரப்பாமல்,வறுமையைப் போக்க வழிவகைகள் செய்யாமல் வெறும் சட்டத்தின் மூலம் காப்பிகளின்/காத்தான்களின் வாழ்வை மாற்றுவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

Wednesday, March 31, 2010

If people from Poland are called Poles,

... why aren't people from moscow called mosquitoes?!

"நீ, அமுதா ஆன்ட்டியை என்னன்னு கூப்பிடுவே?
"

"அமுதா-ன்னு "

"ஏன்?"

"அவங்க என் ஃப்ரெண்டு!"

"அப்போ வர்ஷினி உனக்கு ஆன்ட்டியா?" - பப்பு

Tuesday, March 30, 2010

பதிவர் வீட்டு...

...கட்டுத்தறியும் பதிவெழுதும்-ன்னு சங்க(த்துத்!) நூலிலேயே சொல்லியிருக்கும்போது பதிவரின் கணவர் எழுதாம இருப்பாரா?

இந்த மாதத்தில் வந்த முக்கியமான நாளுக்காக முகிலுக்கு என்ன பரிசுக் கொடுக்கலாம்னு யோசிச்சேன். முகிலுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறேனே.. அதை விட பெரிய பரிசு என்ன இருக்க முடியும்-ன்னு தோணினாலும், ‘நாம நினைக்கறதைவிட மத்தவங்க விருப்பப்படறதை நிறைவேத்தறதுதான் நாம கொடுக்கற பரிசு'ன்னு நான் பார்த்த தமிழ்சினிமா கத்துக்கொடுத்ததாலேயும் - இன்னைக்கு, Guest post by Mugil! :-)


இன்றைய(ஹிஹி..முகில் இதை எழுதினது ரெண்டு நாள் முன்னாடி) தினமணியில் படித்த செய்தி: செல்போன் வைத்துள்ள விவசாயிகளுக்கு வானிலை மாற்றம் குறித்த விவரம் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என்று, சென்னை மண்டல வானிலை மைய துணை இயக்குநர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

விவசாயி என்ன சொல்லவரார் தெரியுமா? விவசாயத்திற்கான மின்சாரம் கிடைக்கல! SMS மூலம் வானிலை தகவலா? முதல்ல மொபைல சார்ஜ் பண்ண மின்சாரம் குடுங்கடா!!

எது எப்படியிருந்தாலும் நம் தமிழக அரசுக்கு பட்ஜெட்டில் செலவுகணக்கு காட்ட இதுபோல இன்னும் சில யோசனைகள் கீழே!

1) மாடு மேய்ப்பவர்களுக்கு இமெயில் மூலம் தொலைந்த மாடை கண்டுபிடிக்க உதவி

2) டாஸ்மாக் குடிமகன்களுக்கு வழிகாட்ட கூகிள் மேப் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

3) மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டாதிருக்க நடுக்கடலில் சாக்பீஸால் கோடுகிழித்தல்

4) சாமியார்களை கவனிக்க சன்டிவி / நக்கீரன் கேமராவுடன் ஒப்பந்தம்

5) எதிர்க்கட்சி MLA-க்கள் தம் தொகுதி பற்றி சட்டசபையில் பேச நிதியுதவி

6) இலங்கை தமிழருக்காக பிரதமர், சோனியாஜி & பிரதிபாஜிக்கு கடிதசெலவு

7) ரேஷன் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லாமலிருக்க அரிசிவாரியாக பூட்டு

8) அமைச்சர் பெருமக்கள் கல்வி சேவைசெய்ய இலவச பொறியியற்கல்விக்கூடம்

9) புவிவெப்பமாவதை தடுக்க வீட்டிற்கோர் AC திட்டம்

10) தடங்கலற்ற மின்வசதி பெற போன் கம்பெனி டவர்மூலம் மின்விநியோகம்

11) கள்ளவோட்டு பிளாக்கர்களுக்கு தனி நீதிமன்றம்





ஆகா..ஓகோ-ன்னு பாராட்டி உடனே தனிப்லாக் ஆரம்பிக்கற தைரியத்தை முகிலுக்குக் கொடுத்துடாதீங்க நண்பர்களே! :-)

Monday, March 29, 2010

இலைகளின் மறுபக்கம்


மனிப்லாண்ட்,வேப்பஇலை, சீதாப்பழ மரத்தின் இலை, சில க்ரோட்டன்ஸ் இலைகளின் மறுபக்கம் - இலைகளின் நரம்புகளை தெளிவாகக் காணலாம்.(இந்த ரெண்டு தாள்தான் பாக்கற மாதிர் இருக்கு!)

என்ன, கை-கால்களில், போட்டிருக்கும் உடையில், சமயங்களில் சுவற்றிலும் விரல் ரேகைகள் படிந்து இருப்பது போன்ற பக்க விளைவுகளை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்! :-)

Saturday, March 27, 2010

இனிஷியலைப் பற்றி இனிஷியலாக...

சமீபத்தில் எனது நண்பரைச் சந்தித்தேன். அந்தத் நண்பரின் தந்தை ஒரு ஆராய்ச்சியாளர்- வீட்டில்தான். ஒவ்வொரு முறை போகும்போதும் வீட்டில் புதிதாக ஏதேனும் எலெக்ட்ரிக் உபகரணம் இருக்கும்..அவரே வடிவமைத்தது.
வீட்டில் ஸ்விட்ச்கள் இல்லாத சுவரே இல்லாத அளவுக்கு. அவரது உருவாக்கங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது நண்பர் சட்டென்று, "எங்கப்பா படைச்சதுலேயே சிறந்தது எதுன்னு நான் சொல்லட்டுமா" என்ற ஆரம்பித்தபோது ஆர்வமானோம். என்னது..என்னது என்று சொன்னது சிரிப்புடன் சொன்னார், "மிகச் சிறந்த படைப்பு நாந்தான்!" அவர் விளையாட்டுக்காக சொல்லியிருந்தாலும் - பதிவுலகில் காணக்கிடைக்கும் சில வாசகங்கள் நினைவுக்கு வந்தது. “இனிஷியல் இல்லாதவனா நீ” அல்லது “இனிஷியல் தெரியாதவன்” என்ற வாசகங்களை நேரடியாகக் கேட்டதைவிட பதிவுலகில் பார்த்ததே அதிகம்.

” தந்தையுடைய படைப்பு மட்டுமா நாமெ”ன்ற கேள்வியும் அதைத் தொடர்ந்து எழுந்தது. அம்மாவின் பங்குஇருந்தாலும், எல்லோரும் தந்தையின் படைப்பு என்றுதானே சொல்லிக்கொள்கிறோம். எத்தனை பேர் அம்மாவின் பெயரையும் இனிஷியலாக போட்டுக்கொள்கிறோம்? இன்னாரது பிள்ளை என்று சொல்லும்போது தந்தையின் பெயரையே முதலில் குறிக்கிறோம். தந்தையின் பெயர் தெரியாதவர் எனபது இழுக்கானதொன்று சொல்பவர்கள் தாயின் பெயரையும் இனிஷியலாக சேர்க்க வேண்டுமென்று சொல்லாதது ஏன்? நாலரைப் பால் அர்ஜூனுக்கு ஐக்யூ அதிகம் வேண்டுமென்றால் மட்டும் அர்ஜூன் அம்மா வேண்டும். சஃப் எக்செலின் விலை குறைந்தாலும், ரின் மீது பைசா வசூலானாலும் கவலைப்பட தேவையானவர்கள் அம்மாக்களே. ஆனால், ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்து மட்டும் அப்பாதான் போட வேண்டும்...இப்படியும் சில பள்ளிக்கூடங்கள் இருக்கத்தானே செய்கின்றன!

எனது சிறுவயது கதை புத்தகங்களில், நோட்டுகளில் T.சந்தனமுல்லை என்றுதான் பெரிம்மா எழுதியிருப்பார். நானும் அப்படி எழுதியிருக்கிறேன். ஆனால், ஏதோவொரு தருணத்தில் எல்லா பள்ளி ரெக்கார்டுகளிலும் அது R.சந்தனமுல்லையாகி போனது. ஆனாலும், ரொம்ப நாளைக்கு T.R.சந்தனமுல்லை என்று பொறித்துத் தள்ளியிருந்தேன். எனக்கு செய்த தவறிலிருந்து கற்றுக் கொண்ட பாடமோ என்னவோ, என் தம்பிக்கு
ஆரம்பத்திலிருந்தே எல்லா ரெக்கார்டுகளிலும், அம்மா-அப்பா இருவரின் பெயர்களுமே இனிஷியலாக இருக்கிறது.

சொல்லப்போனால், எங்கள் இருவரையும் உருவாக்கியது, பெரிம்மாவும், ஆயாவும், அம்மாவும்தான். உருவாக்குதல் எனபது பிறப்பை தருவது மட்டுமில்லைதானே? அவர்களின் கூட்டுப் படைப்பாக இருந்துக் கொண்டு என்னால் நான் அப்பாவின் படைப்பு மட்டுமே என்று சொல்ல முடியுமா அல்லது சொன்னால் அது நியாயமாகுமா என்று எண்ணிப் பார்க்கிறேன்.

அப்படியே இருந்தாலும், அவர்களுக்கு உரிய நேரத்தில் தகுந்த இடத்தில் அதற்கான மரியாதையை நான் தந்திருக்கிறேனா என்று எண்ணும்போது என் மனம் குற்றவுணர்ச்சி கொள்கிறது. குறுகி போகிறது. எங்கள் திருமணம் இந்து முறைப்படி நடந்தது. திருமண சடங்குகளில் ஒன்று, பாத பூஜை செய்ய வேண்டும். இந்த சடங்குகள் எதையும் அறிந்தவளில்லை. ஒரு தாம்பாளத்தில் பெற்றவர்கள் அல்லது பெற்றவர்கள் இடத்தை பெற்றவர்கள் நிற்க, அவர்களது காலை கழுவி பொட்டு வைக்க வேண்டும். என் தந்தை காலமாகி இருந்தார். தாம்பாளத்தில் ஏறி நின்றவர்கள் பெரிய மாமாவும் அத்தையும். ஒருவேளை இந்த சடங்கு, பெற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதெனில் அதில் நிற்க வேண்டியவர்கள் யார்? பெரிம்மாவும் அம்மாவும் தானே. பாத பூஜை அந்த மரியாதையை, நன்றியை, feeling of gratitude-ஐத் தான் குறிக்கிறதெனில், உண்மையில், பெரிம்மாவுக்கும் -அம்மாவுக்கும் அல்லவா நான் கொடுக்க வேண்டும்! தயக்கத்துடன் நிமிர்ந்து பார்க்கிறேன். சுற்றிலும் உறவு முகங்கள் - இருபக்கங்களிலிருந்தும். கடைசியிலிருந்து எட்டி பார்த்தது அம்மாவின் முகம். பெரிம்மா மேடையிலேயே இல்லை. விருப்பமில்லாமலேயே கடமையை முடித்தேன். (பெரிம்மாவிற்கும் அம்மாவிற்கும் இதனைப் பற்றிய வருத்தமிருக்குமா எனத் தெரியவில்லை.) பெரிம்மாவும் அம்மாவும் இதைப் பற்றி துளிக்கூட எண்ணியிருக்க மாட்டார்களென்றாலும் ஆணை மட்டுமே முன்னிறுத்தும் எல்லா இடங்களிலும் இந்நிகழ்வு நினைவுக்கு வந்துவிடுகிறது!
அம்மா இல்லாமல் அப்பா மட்டும் இருந்து நடத்தும் திருமணங்களில் நிகழும் பாதபூஜை எப்படி இருக்கும்?

நமது குழந்தைகளுக்காவது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சம-மரியாதையை கொடுக்க இனிஷியலிலிருந்து ஆரம்பிப்போம்!

Thursday, March 25, 2010

பேருந்தில் நீ எனக்கு.....

எல்லாம் எங்க ஆயா பண்ணின சதி. எனக்கு அப்போவேத் தெரியும், எப்படியும் என்னோட பயாகிராஃபி வெளிவரும்போது, இந்த பக்கங்கள் ஒரு இருண்ட காலமாத்தான் இருக்கும்னு. இதையெல்லாம் தவிர்க்கணும்னு, அப்போவே சொன்னேன். 'பிஜி-க்காவது மெட்ராஸ் போறேன், என்னை விடுங்க'ன்னு. ”மெட்ராஸ் போனேனா நீ குட்டிச்சுவரா போய்டுவே”-ன்னு (இல்லன்னா மட்டும் ரொம்ப ஒழுங்கு!) பதில் சொன்னாங்க ஆயா. சரி, MAT ஸ்கோர்ல்லாம் நல்லாதானே வச்சிருக்கேன், நார்த்-க்காவது போக விடுங்கன்னு கதறினேன். கேட்டாங்களா? 'ஒண்ணும் வேணாம், நான் நிம்மதியா இருக்கணும்னா, ஆச்சி அந்த ஒன் அண்ட் ஒன்லி விமன்ஸ் யுனிவர்சிடிக்குத்தான் போகணும்” -ன்னு பெரிம்மாக்கிட்டே கைகேயி அவதாரம்தானே எடுத்தாங்க. அங்கே பேருந்து-ன்ற பெயரிலே ஸ்வராஜ் மஸ்தா ஒன்னு இருந்துச்சு. ஆனா, அதுலே காதல் இல்லே. காதலே இல்லேன்னப்பறம் காதல் ஜோடி மட்டும் எப்படி இருக்கும்? ச்சே...அங்கே ஜோடியே இல்லே...காதல் மட்டும் எப்படி இருக்கும்? சரி...ஏதோ ஒண்ணு..

ஒருவேளை, நான் மெட்ராஸ்லே மட்டும் படிச்சிருந்தேன்னா, இந்நேரம் இந்த தொடர்பதிவுலே சொல்றதுக்குத்தான் எத்தனை கதைகள் என்கிட்டேயே இருந்திருக்கும்! ப்ச்! நீங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான். அப்படியே, நான் ஆம்பூரிலேருந்து கொடைக்கானல் போகணும்னா, ஜோலார்பேட்டையிலே எட்டுமணி ட்ரெயின் ஏறி விடிகாலைல திண்டுக்கல்-லே இறங்கி, அங்கே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாயிண்ட் அடிச்சு, மதுரைலேருந்து வந்து வத்தலகுண்டுலே வெயிட் பண்ணிக்கிட்டிருக்கிற இன்னொரு க்ரூப் கூட ஜோதியிலே ஐக்கியமாகி ”போறாளே பொன்னுத்தாயி”-ன்னு காட் ரோடிலே மலையேறினா கீழே இறங்க ரெண்டு மாசமாவது ஆகும். இதுலே, தினமும் பேருந்து பயணம் எங்கே?!

அந்த பேருந்துலே, காதல் எபிசோட் முடிஞ்சு கல்யாண எபிசோடை ஆரம்பிக்க வர்ற ஜோடிங்களை வேணா பாக்கலாம்...எல்லாம் ஹனிமூன் கப்பிள்ஸ். ”சின்ன பசங்க நம்மக்கூட வர்றாங்களே, கொஞ்சமாவது டீசண்டா நடந்துப்போம்”னே கிடையாது. ஒரே கொஞ்சல்ஸ்தான். எங்களுக்கு, அக்கம்பக்கத்துலே மாட்டினா அவ்வளவுதான். ஆனா, அதெல்லாம் புரிஞ்சுக்கற நிலைமைலே இருப்பாங்கன்றீங்க? பாதிபேருக்கு புரியவும் புரியாது...ஏன்னா எல்லாம் ஒரே குஜ்ஜூஸ். முழங்கை வரைக்கும் வளையல் போட்டு பாதி தலைவகிடு வரைக்கும் குங்குமம் அப்பின கேஸ். சரி..விஷயத்துக்கு வாங்க.


தினமும் பேருந்துலே நான் பார்த்த காதல்-ன்னா அது சென்னைக்கு வந்தப்புறம்தான். சைக்கிள் வீலை ரிவர்ஸுலே சுத்துங்க, ப்லீஸ்! ப்ராஜக்ட்-க்காக ரெண்டு அப்பாவி பொண்ணுங்க சென்னை மண்ணை மிதிக்கறாங்களா...யெஸ்! 'எஜமான் காலடி மண்ணெடுத்து'- ன்னு பேக்ரவுண்ட்லே பாட்டு கேக்குதா...அதேதான்...
கட் கட்...கட்...

ஸ்கூட்டி வாங்கற வரைக்கும் பஸ்லேதான் நானும் லதாவும் ஆஃபிஸ் போவோம். எட்டேமுக்காலுக்கு கரெக்ட்டா பஸ் டாண்ணு ஸ்டாப்லே வந்து நிக்கும். அதே சமயம், சரியா ஸ்டாப்-க்கு மேலே ஒரு ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் க்ராஸ் பண்ணும். (டைமிங்பா!)அப்போல்லாம், ஆடி மாச பஸ்தான்(லேடீஸ் அந்த பக்கம், ஜெண்ட்ஸ் இந்த பக்கம்). ஜன்னல் சீட்டுலே உட்கார்ந்திருக்கிற அந்த அக்காவோட கண்ணு பஸ் ஸ்டாப்பை ஸ்கேன் பண்றதை பார்க்கிற எந்த சாதாரண மனுசனுக்கும் 'அவங்க யாரையோ தேடறாங்க'ன்னு புரியும். எங்களை மாதிரி மரமண்டூஸ்-க்கு , 'ஒரு சீட் பக்கத்துலே காலியா இருக்கு'ன்னு சொல்ற மாதிரி தோணுச்சு. அந்த சீட்லே லதா உட்கார்ந்துக்கிட்டா. நான், நின்னுக்கிட்டு ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அப்புறம், பஸ் நகரும்போது ஃபுட்போர்டுலே ஏறுறவங்க வந்து அவங்க சொத்துகளை ஜன்னல்கிட்டே இருக்கறவங்க கிட்டே கொடுத்துட்டு ஏறுவாங்க தானே.. அதுமாதிரி இந்த அக்கா மடிலேயும் யாரோ கொடுத்த ஒரு லஞ்ச் பாக்ஸ்,இன்னும் சில நோட்டுகள். அதைப்பார்த்து அந்த அக்கா லேசா சிரிச்ச மாதிரி இருந்தது. நமக்குத்தான் பாம்புக்காது...ச்சே.. பூனைக்கண்ணு... இந்தவிஷயத்தையெல்லாம் நல்ல நோட் பண்ணுவோமே.
அப்புறம்தான் தெரிஞ்சது, அந்த அக்கா தினமும் டெர்மின்ஸ்லேருந்தே ஏறிடுவாங்க. அந்த அண்ணா ஏதோ காலேஜ் ஸ்டூடண்ட் போல. (நோட் புக்!!) அந்த அக்கா எங்கியோ வேலை செய்றாங்க போல. சிலநாட்கள், ஒரு ஆண்ட்டி கூட ஆஃபிஸ் விஷயமா பேசிக்கிட்டிருக்கிறதையும் பார்த்திருக்கோம். ஒரே ஆஃபிஸா இருப்பாங்க போல.

டிக்கட் வாங்கணும்னா, பக்கத்துலே இருக்கறவஙகிட்டெ காசை கொடுத்தாப் போதும்.அப்படியே ஒவ்வொருத்தரா பாஸ் பண்ணி கடைசிலே உட்கார்ந்திருக்கற கண்டக்டர்வரை ரீலே ஆகி டிக்கட் நம்ம கைக்கு வந்து சேரும்.
நாங்க, பெரும்பாலும் அந்த அக்காக்கிட்டே தான் கொடுப்போம். அவங்க, கண்டக்டர் பக்கத்துலே நின்னுக்கிட்டு இருக்கற அண்ணாகிட்டே பாஸ் ஆகிற வரைக்கும் பார்த்துக்கிட்டே இருப்பாங்க. அப்போ, நானும் லதாவும் ஒருத்தரை ஒருத்தர் இடிச்சுக்குவோம், கிண்டலோட. நாமதான், சினிமாலேக்கூட செண்டி சீன் வந்தா சீனைப் பார்க்காம பக்கத்துலே உட்கார்ந்து இருக்கிறவங்க ரியாக்‌ஷனைப் பார்ப்போமே...கண்ணுலே தண்ணி வருதா... கிண்டல் பண்ணி சிரிக்கலாம்னு. அதே மாதிரி அந்த அண்ணாவும் அக்காவை ஓரக்கண்ணாலே பார்த்துக்கிட்டு இருப்பார்.

அக்கா கையிலே எதாவது புக் வைச்சிருப்பாங்க வேற. சிட்னி ஷெல்டன். ஆனா, முழுசா படிக்கற மாதிரியும் தெரியாது..படிக்காத மாதிரியும் தெரியாது. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், அந்த அண்ணா,எப்படியாவது நகர்ந்து அக்கா பக்கத்துலே வந்துடுவாங்க. அப்புறம் ஒரே சைட் தான். ஒரு நாடகம் பாக்கிற மாதிரியே இருக்கும். நானும் லதாவும் நமுட்டு சிரிப்பு சிரிச்சுக்குவோம். அவங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சுதான்னு தெரியலை....தெரிஞ்சிருந்தா சபிச்சிருப்பாங்க!


இப்படியே ஒரு ரெண்டு மாசம் போயிருக்கும். ஒருநாள், வேலன்டைன்ஸ் டேன்னு நினைக்கறேன். அந்த அக்கா பிங்க் கலர் ட்ரெஸ்லே வந்திருந்தாங்க. பார்க்கிறதுக்கு ஃப்ரெஷ்ஷா இருந்தாங்க. அந்த அண்ணா, ஒரு க்ரீட்டிங் கார்டோட ரோஜாவை கையிலே வச்சிக்கிட்டு ஏறினார். அன்னைக்கு அக்காவுக்கு சீட் கிடைக்காததனாலே நின்னுக்கிட்டுதான் வந்தாங்க. அண்ணா, ரோஜாப்பூவைக் கொடுத்ததும் அக்காவும் வெட்கப்பட்டுக்கிட்டே வாங்கிக்கிட்டாங்க. எல்லாரும் பார்த்தும் பாக்காத மாதிரி இருந்தாங்க. ஒரு ரெண்டு ஸ்டாப்பிங் தள்ளி டிக்கெட் கொடுக்க பஸ்ஸை நிறுத்தினாங்க. அப்போ கொஞ்சம் பேரு இறங்கி ஜன்னல்கிட்டே நிப்பாங்க இல்லே.அது மாதிரி அந்த அண்ணாவும் இறங்கி போனார்.

அப்போதான் அது நடந்தது. இன்னொரு அண்ணா,அவர், பார்க்க கருப்பா, கொஞ்சம் ரஜினி மாதிரி ஸ்டைல்லாம் பண்ணிக்கிட்டு அக்கா பக்கத்துலே வந்தார். அக்கா முதல்லே ஒண்ணும் கண்டுக்கலை. திடீர்ன்னு,அவர் அந்த அக்காகிட்டே லெட்டர் மாதிரி ஒண்ணை கொடுத்தார். அந்த அக்கா வாங்கிக்கலை. அந்த அண்ணா “ஏண்டி, வெள்ளையா இருந்தா மட்டும்தான் லவ் பண்ணுவீங்களா” - ன்னெல்லாம் கேட்டுட்டு அந்த அக்கா கையிலே இருந்த ரோஸ், கார்டை கிழிச்சு போட்டுட்டு இறங்கிபோய்ட்டார். எல்லாரும் அப்படியே அதிர்ச்சியிலே உறைஞ்சு போய்ட்டாங்க. அந்த அக்காவுக்கு ரொம்ப அவமானமாகிடுச்சுன்னு நினைச்சோம்.
கொஞ்ச நேரத்துலே கண்டக்டர் விசில் கொடுத்ததும், எல்லாரும் ஏறிட்ட்டாங்க. அண்ணாவும், அக்கா பக்கத்துலே வந்தப்போ கீழே கிடக்கிற கார்டையும் ரோசையும் பார்த்துட்டாங்க. அக்காவுக்கு, இந்த அதிர்ச்சியிலே வார்த்தையே வரலை. விட்டா அழுதுடுவாங்க போல. அந்த அக்கா, கீழேருந்து எடுக்கறதுக்- குள்ளே எல்லாரும் உள்ளே வர ஆரம்பிச்சதுனாலே ரோசை பாக்காம மிதிச்சுக்கிட்டே போய்ட்டாங்க...பாவம், அந்த அண்ணா-வுக்கு அதை நிஜமா பிச்சு போட்டது யாருன்னு தெரியாது. எல்லாம் சினிமாலே வர்ற மாதிரியே...வர்ற மாதிரியே என்ன...சினிமா மாதிரியே இருந்தது.

நானும் லதாவும் எங்க ஸ்டாபிங்லே இறங்கினப்புறமும் ஆஃபிஸுக்கு போக மனசு இல்லாம , அந்த அக்காவையும், அண்ணாவையும், இன்னொரு கருப்பு அண்ணாவையும் சுமந்துக்கிட்டு போற அந்த பஸ்ஸையே பார்த்துக்கிட்டு நின்னோம். புழுதியை எழுப்பிட்டு போன அந்த பஸ்ஸோட நம்பர் மட்டும் கண்ணுக்குத் தெளிவா ....23C!

என்னது...அப்புறம் நடந்ததெல்லாம் உங்களுக்கும் தெரியுமா? நீங்களும் ''சுடச் சுட பார்த்து ரசித்தி'ருக்கீங்களா?! (என்ன பண்றது..எங்க ஆயாவோட சதியாலே நான் பார்த்த ஒரே 'பேருந்து காதல்' கதை...இதுதான்!)

சரி சரி...'எனக்கு ஆரம்ப சீன்லேயே தெரிஞ்சுடுச்சு'.. இல்லேன்னா ‘முன்னாடியே கெஸ் பண்ணிட்டேன்'-னெல்லாம் விட்டுட்டு உண்மையை சொல்லிட்டு போங்க...:-)

தொடர்பதிவிற்கு அழைத்த தீபா-விற்கு நன்றி!

சிலபல சுவாரசியமான 'உண்மைச்' சம்பவங்களை சொல்ல நான் அழைப்பது,

சின்ன அம்மிணி,
ஆயில்யன்
பின்னோக்கி
கமெண்ட் மட்டும் போடும் padmaja (நீங்க பின்னூட்டத்திலே கூட சொல்லலாம்,மேடம் ) :-)

Monday, March 22, 2010

பப்பு டைம்ஸ்

காலை தத்துவம் 1011 : (அதாவது, விழித்ததும் பப்பு உதிர்க்கும் தத்துவங்கள் சில)

ஆச்சி, நான், “எனக்கு ஜூரம்,”ன்னு வர்ஷினிக்கிட்டே சொன்னப்போ, வர்ஷினி வெண்மதிக்கிட்டே, “குறிஞ்சிக்கு ஜுரமாம்”ன்னு வெண்மதிக்கிட்டே சொன்னா.


என்னது...(பின்ன, காலையிலே கண்ணைத் திறந்த உடனே இப்படி பேச ஆரம்பிச்சா, புரிஞ்சுக்க நேரம் வேணாமா?)

நான், 'எனக்கு ஃபீவர்'ன்னு வர்ஷினிகிட்டே சொன்னப்போ, வர்ஷினி வெண்மதிக்கிட்டே “குறிஞ்சிக்கு ஃபீவர்”ன்னு சொன்னா.... ஃபீவர்-ன்னாலும் ஜூரம்-ன்னாலும் ஒண்ணுதான்.

(எனக்கு என்னவோ ஜூரம்-ன்னா ஃபீவர்ன்னு தெரியாத மாதிரி...அவ்வ்வ்)


காலை தத்துவம் 101 :

”ஆச்சி, நான் வர்ஷினி ஃப்ரெண்டே இருக்க மாட்டேன். விக்கி ஃப்ரெண்டேதான் இருப்பேன்! (ரொம்ப முக்கியம்...அதுவும் காலையிலே ஆறரைக்கு!)

காலை தத்துவம் 101.6 :

”வெண்மதி வர்ஷினி ஃப்ரெண்ட், வர்ஷினி என் ஃப்ரெண்ட், குறிஞ்சி விலாசினி ஃப்ரெண்ட், விலாசினி சுதர்சன் காதுலே “அர்ஷித் கைலாஷ் என்னை கிள்ளிட்டான்”ன்னு சொன்னதும் நாங்க பார்த்தப்போ இல்லே..கிள்ளவே இல்ல!”

(ஸ்ப்பாஆஆ...என்ன ஒரு ஆராய்ச்சி!)


"ஜான்சன்'ஸ் பேபி சோப்-ன்னு போட்டிருக்கா, big பேபி சோப்-ன்னு போட்டிருக்கா?"

"ஜான்சன்'ஸ் பேபி சோப். "

"நான் என்ன ஜான்சன்'ஸ் பேபி-யா...?”

“....”

”நான் ஜான்சன்'ஸ் பேபியா?, குறிஞ்சி மலர், பப்பு - ன்னு தானே எனக்கு ரெண்டு பேரு இருக்கு...பிக் பேபி சோப் போடு எனக்கு! "

...Which means, அவளுக்கு என்னோட சோப் வேணும்! ;-) மேடம் இப்போ கண்ணடிக்கறாங்க...பார்க்கதான் கொஞ்சம் டெரரா இருக்கு...

24 மணி நேரமும் கண்ணாடி முன்னாடி நின்னு தலைமுடியை சீவோ சீவுன்னு சீவி மூணு குடுமி போட ஆரம்பிச்சிருக்காங்க...சிலசமயங்களில், ட்ரெஸ் போட்டிருக்கோமான்னு இல்லையான்னு கூட கவலைப்படாம சீவறதைப் பார்த்தாத்தான் ...

ஓ...ப்ரியமான என் கடவுளே, கத்திரிக்கோல் கையில் கிடைத்தால் யாருக்கும் தெரியாமல் தானாகவே முடிவெட்டிக்கொள்ளும் அந்த சின்னஞ்சிறு என் மகளெங்கே?!!

Saturday, March 20, 2010

கோள்மூட்டி கோமளாவும், சுப்பாண்டியும், கபீஷூம்...

"ஆயா, அவங்கதான் கோள்மூட்டி கோமளாவா”ன்னு கேட்டப்போது நான் இரண்டாம் வகுப்பு. ஐந்து குடித்தனங்கள் இருக்கக்கூடிய வீட்டில் முதல் போர்ஷனில் இருந்தோம். கோமளா அக்கா அப்போதுதான் புதிதாக கல்யாணமாகி, எங்களுக்கு அடுத்த போர்ஷனில் குடி வந்திருந்தார்கள். தினமும் பால்காரர் ஹார்ன் சத்தம் கேட்டதும் பால் சொம்பு எடுத்துச்செல்வது என் டிபார்ட்மெண்ட். பென்சில் சீவலை மண்ணில் புதைத்து அதன்மேல் பாலை ஊற்றி ரப்பர் செய்யும் கலையில் நான் தேர்ச்சி பெற்றிருந்ததை, ஆயா அறிந்த நாள் முதல், அந்த பதவி பறி போயிற்று. அப்படி ஆயாவோடு பால் வாங்கிக் கொண்டு திரும்பும்போது எதிரில் வந்த கோமளா அக்காவிடம், ஆயா பேசிக் கொண்டிருந்தபோது நான் கேட்ட இந்தக்கேள்வியால் ஆயாதான் தடுமாற வேண்டியிருந்தது. ‘சின்ன பொண்ணுதானே' என்று சாக்கும் இருந்தது.

'கோள்மூட்டி' கோமளா - பூந்தளிரிலோ அல்லது கோகுலத்திலோ அப்போதுதான் நான் படித்திருந்த கதை. கோமளா என்ற பெண் எப்படி கோள்சொல்லி சண்டைகள் மூட்டி விடுவாள் என்பதை உணர்த்தும் ஒரு நீதிக்கதை. அதற்காக கோமளா என்று பெயர் வைத்தவர்களெல்லாம் கோள் சொல்வார்கள் என்று நினைத்தது என் ஏழு வயது அறியாமைதான். ஆனால், ஆங்கிலத்தில் கதைகள் படித்திருந்தால் இப்படி ஒரு அடைமொழியோடு கோமளா அக்காவையும், ஆயாவையும் தர்மசங்கடப்படுத்தியிருக்க முடியுமா? :-)

சரி, இப்போது எதற்கு இது என்கிறீர்களா? தூலிக்காவின் ”தாய்மொழியில் படிப்பதும் எழுதுவதும் பற்றி” என்ற தொடர் இடுகைக்காகத்தான்.
தாய்மொழியில் படிப்பது, எழுதுவது எல்லோருக்கும் எப்படி விருப்பமோ அப்படித்தான் எனக்கும்! டிங்கிள், சம்பக்,மிஷா, பூந்தளிர், கோகுலம், பாலமித்ரா,அம்புலிமாமா, ரத்னபாலா என்று இருந்தாலும் முதலில் தமிழ் புத்தகங்களை வாசித்தபின்பே சம்பக்கிற்கு மிஷாவிற்கும் தாவுவது என் வழக்கமாக இருந்தது. பின்னர் டிங்கிள் , சம்பக் வாங்குவதும் நின்றுவிட்டது. அதேபோல, பக்கத்துவீட்டு சுஜாதா அக்கா, விஜி அக்கா தமிழ் துணைப்பாட நூலில் வரும் கதைகளை வாசிப்பதும். நிலாவில் வடை சுடும் ஆயாக்கதையையும், சித்திரக்குள்ளன் கதையையும் எத்தனைதடவை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத சிறுவயது கதைகளையும் கொஞ்சமாவது ஆங்கிலத்தில் கற்பனை செது பார்க்க முடியுமா? அல்லது தூய தமிழ்மொழியில்தான் கற்பனை செய்து பார்க்க முடியுமா? கண்டிப்பாக என்னால் முடியாது - நிலவொளியில், ஆயா மேல் கால் போட்டுக்கொண்டு, ஆயாவின் குரலில்,ஆயாவின் பேச்சுவழக்கைத் தவிர வேறு எப்படியும் அக்கதைகளை என்னால் கற்பனை செய்து பார்க்கவியலாது.


புவனகிரியில், ஆயாவின் அக்கா ஒருவர் இருந்தார். வடலூருக்கு செல்லும்போதெல்லாம் அங்கு ஒரு விசிட் அடிப்பது வழக்கம். அங்கே சென்றால், குழந்தைகளுக்கு (நாங்கதான்) கதை சொல்லும் பணியை அவர் எடுத்துக் கொள்வார். ஆனால், என்னால் அவர் சொல்லும் கதைகளை முழுவதுமாக ஃபாலோ செய்ய முடிந்ததில்லை. பூச்செண்டு, மாடம் என்றெல்லாம் அவர் சொன்னபோது என்னவென்றே விளங்கவில்லை. மேலும் நிறைய வார்த்தைகள் அந்தக்கால தமிழ் வார்த்தைகள் - இப்போது என்னால் நினைவுக்குக் கொண்டு வர இயலவில்லை. ஆனால், எனது ஆயாவின் மொழி போல இணக்கமாக இருக்கவில்லை. மேலும் அவர் சொல்லும் கதைகள் விரைவில் முடியாது. நிறைய எபிசோடுகள் கொண்டவை அவை.அதனால் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்போம்.(அவர் ஒன்று சொல்ல நாங்களாக ஒன்று கற்பனை செய்துக்கொள்ள வேண்டியதுதான்!) விளக்கின் சுடரிலிலிருந்தும், உருண்டோடும் மிளகிலிருந்தும் சுட்டிப்பெண்கள் எழுந்து வருவார்கள். பூச்செண்டை கொடுத்த இளவரசன் குதிரை மேல் பறந்து வருவான். ஆனாலும், அவர் சொல்லும் ஒரு சில வார்த்தைகள் அப்போதே வழக்கொழிந்திருந்தன. மேலும், வடஆற்காடு - தென்னாற்காடு வட்டார வழக்கு வேறு படுத்தி எடுக்கும்.

ஆம்பூரில், 'க(ட)லக்கா' என்பது வடலூரில் மல்லாட்டை என்றாகும். உண்மையில், அது கடலைக்காய் மற்றும் என்பதும் மணிலாக்கொட்டை அல்லது வேர்க்கடலையே! நாங்கள் குறிப்பிடும் கருணைக்கிழங்கும், தென்பகுதியில் குறிப்பிடும் கருணைக்கிழங்கும் வேறுவேறு. பெரும்பாலும் சாப்பிடும் நேரத்தில்தான் இந்த ஆராய்ச்சியெல்லாம் நடக்கும். புரையேறுவது என்றால் என்ன என்பதை ஒரு தெலுங்கு நண்பருக்கு, ஆங்கிலத்தில் சொல்லி விளங்க வைக்க நாங்கள் பட்ட பிரயத்தனங்கள் (ஆமா, அதுக்கு இங்க்லீஷில் என்ன?)- கடைசியில் தெலுங்கில் 'புரை போயிந்தி' மாதிரியான ஒரு வார்த்தையே. அதேபோல, வடகம் என்பது குழம்புக்கு போட்டுத்தாளிக்க அம்மா செய்து வைத்திருக்கும் உருண்டைகள் - ஆனால்,மதுரை தேவி அக்காவிற்கு வடகம் என்பது நாங்கள் வத்தல் என்று குறிப்பிடும் வஸ்து. எனக்கு, வத்தல் என்பது மே மாசமானால் அத்தைகளும் அம்மாவும் காலையில் காய்ச்சி முறுக்கு அச்சில் பிழிந்து காய வைப்பார்களே.. அது!ஆனால், திண்டுக்கல் கல்பனாவிற்கு வத்தல் என்பது மிளகாய் வத்தல். இப்படி பேச்சுத்தமிழிலேயே எத்தனை விதங்கள்!

ஓக்கே..கமிங் பேக் டூ த பாயிண்ட்...
சிறுவயதில் எனக்கு ஆங்கில கதைப்புத்தகங்களும் தமிழ் கதைப்புத்தகங்களும் சமமாகவே கிடைத்தன. பெரும்பாலும் ரஷ்ய கதைப்புத்தகங்களும், ரஷ்ய மொழிப்பெயர்ப்பு புத்தகங்களும். இவற்றில், பொக்கிஷமாக கருதி இன்று வரை பாதுகாத்து வருவது - தலைகாணி சைஸுக்கு இருக்கும் இரு புத்தகங்கள் - உலக நாடோடிக்கதைகள் தொகுப்பு மற்றும் உலகின் அத்தனைத் தேவதைக்கதைகளின் தொகுப்பு. உலகநாடோடிக்கதைகள் தமிழிலும் தேவதைக்கதைகள் தொகுப்பு ஆங்கிலத்த்திலும் இருக்கும். அந்த ஆங்கிலப்புத்தகம், நாடோடிக்கதைகள் புத்தகத்தைப்போல தாட்கள் கிழியாமல், மூலைகள் மடங்காமல் பத்திரமாக இருக்கிறது.கதைகளை என் தாய்மொழியில் வாசிக்கவே விருப்பமாக இருக்கிறது. அறிவியல் பற்றிய நூல்கள் தமிழை விட ஆங்கிலத்தில் வாசிப்பதே எளிதாக புரிந்தது. 'துளிர்' என்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க நூல் ஒன்று வீட்டுக்கு வரும். அதில் எளிதாகவே கொடுத்திருந்தாலும், புரிந்துக்கொள்வது கொஞ்சம் கடினமாகவே இருனத்து. எல்லாமே, தமிழ்ப்படுத்திய வார்த்தைகள்தான்- அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுத்திருந்தால்தான் பொருள் விளங்கியது.அங்குதான் தாய்மொழிக்கும், பயிற்றுமொழிக்குமான இடைவெளி வருவதாக நினைக்கிறேன்.

பப்புவுக்கு தமிழ் புத்தகங்களையே தேடித்தேடி வாங்குகிறேன். ஆனால், தமிழில் toddlers-க்கான புத்ததங்கள் வெகு குறைவு. ஆங்கிலத்தில் எக்கசக்காமான
வெரைட்டி - எளிய வாக்கியங்களில் அழகான வண்ணமயமான படங்களுடன். நான்கு வயதுக்கு மேல்தான் தமிழில் ஓரளவு கிடைக்கின்றன. கடைகளில் பார்த்தவரையில், ஆறு வயதினருக்கு மேல் தமிழில் நல்ல கலெக்ஷன் உண்டென்று தோன்றுகிறது. அதனால், பெரும்பாலும் ஆங்கிலப்புத்தகங்களையே பப்புவுக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. எந்த மொழிப்புத்தகமாக இருந்தாலும் பப்புவுக்கு அதை அவளுடைய மொழியிலேதானே சொல்கிறேன்.அதனால், குந்தைகளுக்கான புத்தகங்கள் 'குழந்தை ஃப்ரெண்ட்லி' மொழியாக இருந்தாலே போதும்.

பப்புவின் பழக்கம் எப்படியெனில், எந்த ஒரு புத்தகமும் முதலில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வாரங்கள் - அலுக்கும் வரை - தொடர்ந்து அதையே திரும்ப திரும்ப சொல்லச் சொல்வாள். பிறகு, அதை கண்டுக்கொள்ளவே மாட்டாள். அப்புறம் எப்பொழுதாவது கண்ணில் பட்டால் எடுத்து தானாகவே கதைச் சொல்லிக்கொள்வாள். இப்படி ஒரு புத்தகம் அடுத்த ரவுண்ட வர ஆறுமாதங்களாவது ஆகும். மேலும், பப்புவுக்கு கதைச் சொல்வதாக நினைத்து சொல்வதில்லை. இருவரும் சேர்ந்து கதைப் வாசிப்பதுபோலதான் - புத்தகங்களை வாசிக்கிறோம். (குழந்தைமனசு!) சில புத்தகங்களை, எளிய வாக்கியங்களாக இருந்தால் படித்து காட்டுவேன்.அடுத்த சிலமுறைகளில் அவளும் கூட சேர்ந்து சொல்லுவாள் - மனப்பாடமாக. பெரும்பாலும் நீதிக்கதைகளை நான் வாங்குவதே இல்லை. (அப்படிப்பார்த்தால் - நான் படித்த நீதிக்கதைகளுக்கு எத்தனை நீதியுடனும் வாழ வேண்டும்...நீதிகள் கதைகள் மூலம் அறியப்படுவதில்லை என்பதே நான் அறிந்த நீதி!)என்னை பொறுத்தவரை - கதைகள் என்பவை சுவாரசியமாகவும்,ஜாலியாகவும், pleasure of reading-ஐயும் அறிமுகப்படுத்துவதாக இருக்கவேண்டும்.


சிறுவயதிலும் சரி - இப்போது சரி - உலகின் பல பகுதிகளில் இருக்கும் சிறுவர் கதைகளை படித்துவிட வேண்டும் என்ற தீராத ஆர்வம் எனக்குண்டு. உலகின் எந்தப் பகுதியிலிருந்து நண்பர்கள் மூலம் நான் பெறுவது - அந்தந்த ஊர்களில் கிடைக்கும் சிறுவர் புத்தகங்கள் அல்லது நாடோடிக்கதைப் புத்தகங்களே. பெரும்பாலும், அவையெல்லாமே அமசானிலும் கிடைக்கின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர் புத்தகங்களில் - எளிய வாக்கியங்களாலான கதைகள் அல்லது பேச்சு வழக்கிலான கதைகள் , தானாக படிக்கும் வயதினருக்கு formal language-இல் இருப்பதையே பரிந்துரைப்பேன். மேலும், மொழியைவிட அந்த புத்தகத்தின் illustrations-ஐ தான் - எப்படி பட விளக்கமாக் இருக்கிறதென்பதையே முக்கியமாக கவனிப்பேன். மேலும் நாடோடிக்கதைகளை அதன் வட்டார வழக்கிலேயே படிப்பதே சுவாரசியம்!

இத்துடன் எனது மொக்கையை முடித்துக்கொள்கிறேன். தூலிகா-வின் அழைப்பிற்கு நன்றி. இதை தொடர விரும்புபவர்கள் தொடரலாம். உங்கள் எண்ணங்களையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

Thursday, March 18, 2010

ஓ!வியம்

இது மேரி கோல்ட் -ன்னு சொன்னா நம்ப மாட்டீங்களா என்ன? இது மலையாம். அதை சுத்தி இருக்கற பச்சை டாட்ஸ், மாடுங்க - செத்து கிடக்காம். ரெண்டாவது தடவையும் கேட்டு உறுதிபடுத்திக்கிட்டேன், மாடுங்க செத்துதான் கிடைக்காம்! :-( என்னன்னு கண்டுபிடிக்க முடியுதா? குடை. ( வெயில் காலம் வந்துடுச்சு இல்லே...) கஸாட்டா ஐஸ்க்ரீம்-ன்னுதான் நானும் நினைச்சேன்...இல்லையாம், ரெயின்போவாம்! Choo choo train, Tucking down the track; Gotta travel on it, Never coming back;
Ooh ooh got a one way ticket to the moon!
ம்ஹூம்...பப்புவுக்கே தெரியலை...என்னன்னு தெரிஞ்சா எங்களுக்கும் சொல்லுங்க! :-) வெண்மதி பர்த்டேவுக்கு வரைஞ்சது - பீச் & பீச் அனிமல்ஸ்! 3D தர்பூசணி !



டிஸ்கி : மக்களே, இந்த படங்களையெல்லாம் பார்த்துட்டு, உணர்ச்சி-
வசப்படறவங்க, கொஞ்சம் பார்த்து உணர்ச்சிவசப்படுங்க...எங்களாலே சென்னையை விட்டுட்டு கத்தார்க்கெல்லாம் போக முடியுமா?! கருணை காட்டுங்க ப்லீஸ்! ;-))

Wednesday, March 17, 2010

StyleBhai

முந்தாநேத்துக்கு முதல் நாள், அதுக்கு முதல்நாளை ,அதுக்கும் முதல்நாளையெல்லாம் எப்படி சொல்வீங்க?

முந்தாநேத்த்த்து...

முந்தாநேத்த்த்த்த்த்த்து....

முந்தாநேத்த்த்த்த்த்த்த்த்த்த்து.....



உங்களாலே எவ்ளோ ஸ்லோவா மென்னு சாப்பிட முடியும்?

வாயிலே வைச்ச பூரியை மென்ன்ன்ன்ன்ன்ன்னுக்கிட்டே தூங்கிடற அளவுக்கு......!?!

*StyleBhai (Not so) Popular IndyPop Band in mid 90s.