Monday, March 15, 2010

யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி!

எங்கள் அலுவலகத்திற்கு பின்னாலிருந்து பார்த்தால் சைதாப்பேட்டை பாலம் தெரியும். பாலத்தின் கீழ் அழுக்கேறிய நீர் ஓடும் ஆறு - அது கூவம் என்று பொதுவாக அறியப்பட்டாலும் அதுதான் அடையாறு. அந்த தண்ணீரிலேயும் கால்களை அலைந்தும் குதித்தும் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். "அட, இவங்களுக்கெல்லாம் ஒண்ணும் வராதா? இந்த அழுக்கு தண்ணிலேயே குளிக்கறாங்களே?" என்று நினைத்தபடி பார்வையை கொஞ்சம் இடதுபுறம் திருப்பினால், கற்களை போட்டுக்கொண்டு துணிகளை துவைப்பதைக் காணலாம். வலது பக்கம் பார்த்தால் குப்பை கூளங்களை கொட்டியதால் உண்டான மேடுகளும், அருகிலேயே பன்றிக்குட்டிகளும், ஓரமாக நிற்கும் எருமைகளையும் பார்க்கலாம். இதற்கு நடுவில் குடிசை வீடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடுகளும், கொடியில் காய வைத்த துணிகள் காற்றிலாடுவதும் மக்கள் அங்கே வசிக்கிறார்களென்று சாட்சி சொல்லும்.முதன் முதலில், அந்த ஆற்றின் கரையில் கம்பீரமாக நிற்கும் அந்த கட்டிடத்தின் ஆளுயர ஜன்னல் அருகினில் நின்றபடி து வாகனங்கள் விரைந்து செல்லும் பாலத்தையும், அதன் தூண்களையும் நெளிந்து செல்லும் அழுக்கு நீரையும் பார்த்துக்கொண்டு நின்றபோது, நண்பர் சொன்னார் “இங்கேருந்து பார்த்த கடல் தெரியும்”. சற்றே நிமிர்ந்து விண்ணை முட்டும் கட்டிடங்களையும், டெலிபோன் டவர்களையும் தாண்டி நீல நிறத்தில் கடலும், சில கப்பல்களும் கண்களுக்குத் தென்பட்டன. உயரமான அந்த கட்டிடத்தில் கண்களை கொள்ளைக் கொள்ளும் கண்ணாடி ஜன்னலின் அருகில் நின்றுக் கொண்டு எங்களுக்குக் நேர்கீழே அடையாறின் அழுக்குநீரில் விளையாடும் அந்த பசங்களை, அதின் நின்றுக்கொண்டு துணி துவைப்பவர்களை, குளிப்பவர்களை, இயற்கை உபாதைக்கு ஒதுங்குபவர்களை கண்டுக் கொள்ளாதவர்கள் போல தொலைதூரத்தில் தெரிந்த கடலை ரசித்துக்கொண்டு நின்றோம். சமயங்களில் மேலே கடந்து செல்லும் விமானங்களையும் பெருமிதத்தோடு பார்த்தபடி .

இந்தக் கட்டிடத்திற்கு அருகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த மாநாகராட்சி பள்ளிக் கட்டிடம் வந்தது. அதே அடையாறு அல்லது கூவம் ஆற்றங்கரையில். முன்புறம் விளையாட்டு மைதானமும் இரு மரங்களையும் கொண்ட கட்டிடங்கள். சென்ற வாரத்தில் ஒரு நாள் மைதானத்திற்கு முன்புறம் இருக்கும் சாலையில் மெட்ரோ பாலம் வரப்போவதாகவும், அதற்கான தூண்களில் ஒன்று இந்த பள்ளிக்கூட மைதானத்தில் கட்டப்படப் போவதாகவும் இடம் குறித்துவிட்டு சென்றார்கள். அடுத்த நாளே அந்த காம்பவுண்டும், சாலையின் முடிவில் இருந்த மரமும் வெட்டி சாய்க்கப்பட்டது. பாலம் முழுவதுமாக கட்டப்படும்போது பள்ளிக்கூடம் இருக்குமா என்பதே சந்தேகம்தான். இப்படி எளிய மக்களை துரத்திவிட்டு யாருக்காக அந்த இடத்தில் பாலம்?


சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தை தாண்டி சென்றால் தாடண்டர்நகர் என்று ஒரு இடத்தை பார்த்திருக்கலாம்.விடியற்காலையில் அந்த இடத்தைக் கடக்க நேரிட்டால், நடைபாதையிலே பாயையோ அல்லது சாக்கையோ விரித்துத் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள்,அடிபம்பில் தண்ணீர் அடிக்க காத்திருக்கும் பெண்கள், அருகிலேயே ஒரு கோயில், ஆஸ்பெஸ்டாஸ் போட்ட வீடுகள், அல்லது சாக்குகளை மேலாக கட்டி அமைக்கப்பட்ட ஒற்றை அறை வீடுகள், மழை வந்தால் சகதியாகி விடும் தெருக்கள் - மெட்ரோ ரயிலும் மேம்பாலமுமாக என்னதான் உள்கட்டுமானத்தை நாம் உயர்த்தினாலும் - இந்த தெருக்களிலோ மக்களிலோ எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. வேண்டுமானால், அவர்களை ஏதாவது ஒரு ஏரியின் கரையில் இடம் பெயர வைக்கலாம். இந்த மாற்றத்திற்கு பொருளாதார வளர்ச்சி என்ற பெயர் வைத்துக்கொள்ளலாம்.

”அழகும், அசிங்கமும், கம்பீரமும்,ஆபாசமும்,ஆன்மீகமும் பின்னிப் பிணைந்து கிராம்பு மற்றும் ஆர்கிட் மலர்களின் புத்துணர்வூட்டும் நறுமணம் திறந்து கிடக்கும் சக்கடைகளிலிருந்து கிளம்பும் துர்நாற்றத்தை வெல்லப் போராடி கொண்டிருக்கும் நகரம்தான் ஜகார்த்தா” - ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகத்தில் மேற்கண்ட வரிகளை வாசித்தபோது ஜகார்த்தாவுக்குப் பதிலாக சென்னை என்றிருந்தால் கூட பொருந்தி வருவது போல தோன்றியது. ஒரு நாட்டின் உள்கட்டுமானத்தை, மின்உற்பத்தி மையங்கள், நெடுஞ்சாலைகள், கடல்நீர் சுத்திகரிப்பு மையங்கள், தொலைதொடர்பு வசதிகள் போன்றவற்றை அமைக்கத் தேவையான முதலீடுகளை உலகவங்கி போன்ற பன்னாட்டு நிதிநிறுவனங்கள் மூலம் கடனாகப் பெற - பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில்அரசியல் தலைவர்களை,நாட்டின் அதிபர்களை சம்மதிக்க வைப்பதே பொருளாதார அடியாட்களின் வேலை. உண்மையில், தனிப்பட்ட முறையில் இந்த அரசியல் வாதிகளை பணக்காரர்காளாக்குவதும்,அதே நேரம் அந்நாட்டை மீளமுடியாத பெரும் கடன்சுமையால் அடிமையாக்குவதும்தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

மெய்ன் என்ற அமெரிக்க நிறுவனத்தின் வேலையாளாக இருந்த ஜான் பெர்க்கின்ஸன் எழுதிய இப்புத்தகம் - அமெரிக்கா தனது புதிய காலனியாக்கத்தை - வளர துடிக்கும் நாடுகளில் தனது ஆக்டோபஸ் கைகளால் இறுக்குகிறது என்பதைப் பற்றி தெளிவாக பேசுகிறது. இந்தப் புத்தகத்தை படித்தபோது என் மனக்கண் முன், ஹோட்டல் மாரியட்-ல் கிறிஸ்மஸ் கேக் செய்ய பாதாம் பருப்புகளையும் பழங்களையும் கொட்டி கலக்கியபடி போஸ் தரும் பன்னாட்டு தூதரக அதிகாரிகளும், சமூக சேவை செய்ய வரும் பல அயல்நாட்டு முகங்களும், புதிய ஒப்பந்தங்களை வேலைகளை அவுட்சோர்ஸ் செய்ய கையில் அக்வாஃபினாவுடனும் லேப்டாப் பையுடனும் வளையவரும் முகங்களுமே - வந்து போனது. அந்த பிரதிநிதிகள்/தூதரக அதிகாரிகள் மட்டுமே தங்க கட்டப்பட்ட வீடுகள், ரெசார்ட்கள், அவர்கள் பிள்ளைகள் மட்டுமே படிப்பதற்கான பள்ளிகள், அவர்கள் வலம்வர வழங்கப்படும் சொகுசு கார்கள் - எல்லாம் வந்து நின்றது கண்முன்னால் டிவி ஹைலைட் போல.சில இடங்களில் ப.சிதம்பரத்தின் முகம் கூட வந்து நிற்கிறது.


முதலில் எந்த நாட்டையும் கடனாளியாக்குவது, அதன்பின் அதன் இயற்கை வளங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது - காடுகள், எண்ணெய் வளங்கள் - அதன்மூலம் வரும் வருவாய் மூலம் கடனை வட்டியுடன் அடைப்பது என்று அதிபர்களை நம்பவைப்பது - உண்மையில் இதுதான் திட்டமென்று கூறப்பட்டாலும் ஏகாதிபத்தியத்தை விரிவுபடுத்துவதும் அடிமைப்படுத்துவதுமே முழுமையான நோக்கம். அதற்குள் கடனை திருப்பிக்கொடுப்பது என்பதே சாத்தியமில்லாத ஒன்றாக ஆகியிருக்கும். அதற்கு பதிலாக அந்நாட்டின் கனிம வளங்களையும் நீராதாரங்களையும் எண்ணெய் வளங்களையும் உபயோகித்துக்கொள்ள ஒப்பந்தங்கள் அடுத்த கட்டமாக கையெழுத்தாகும். ஆனால், கடன் என்பது இருந்துக் கொண்டே இருக்கும். அமெரிக்கா தனது கரத்தை வலிமையாக்கி நாட்டை உறிஞ்சியபின் அந்நாட்டைத் தூக்கியெறிந்துவிட்டு அடுத்தநாட்டுக்கு - இப்படித்தான் ஜகார்த்தா, ஈக்வடார், கொலம்பியா, பனாமா...இப்படி அந்த தலைவர்களை மெல்ல மெல்ல பொருளாதார
வளர்ச்சி சி என்ற பெயரில் சூழ்ச்சி வலையில் விழ வைப்பதுதான் இந்த பொருளாதார அடியாள்களின் - மெய்ன் போன்ற நிறுவனங்களின் நோக்கம். அதன் அதிபர்கள் இந்த பொருளாதார அடியாட்களுக்கு மசிய வில்லையெனில் அடுத்த கட்டமாக “குள்ள நரிகள்” வருவார்கள். அவர்கள், இவர்களைவிட பயங்கரமானவர்கள். எதற்கும் துணிந்தவர்கள். நாட்டின் அரசியல்வாதிகள்/ அதிபர்கள் மசியவில்லையெனில் எதிர்பாராத விமான விபத்துகளால் மரணமடைவார்கள்.


இந்த பெர்க்கின்ஸ் அதை திறம்பட செய்பவர்.அதற்காக அவருக்கு பல வெகுமதிகள், பரிசுகள் என்ற பெயரில் லஞ்சங்கள். தன் வாழ்க்கை நிலை உயர வேண்டுமென்று அவரதுசெய்துக்கொள்ளும் சமரசங்கள் - இரவு பகலாக புத்தகங்களை கரைததுக்குடித்து தயாரித்து வழங்கும் econometrics திட்டங்கள் - கடைசியில் புலி வாலை பிடித்தது போல அவரால் வெளி வராமலே போவது என்று எல்லாமே இந்த புத்தகம் கூறுகிறது. ஈக்வடார் முதல் சவூதி அரேபியா வரை, பொருளாதார முன்னேற்றத்தில் அமெரிக்காவுக்கு அடிமையாகி போன நாடுகளின் நிலைகள், அரச குடும்பங்களுக்கும் அமெரிக்க அதிபர் புஷ் குடும்பத்தினருக்கும் இருக்கும் உறவுகள், இந்த குடும்பங்கள் வளர்த்தெடுத்த தீவிரவாத கும்பல்கள், அவர்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தில் இருந்த செல்வாக்கு போன்ற எண்ணற்ற விஷயங்களை - தீவிரவாதத்திற்கெதிரான போர் என்று சொல்லிக்கொண்டு போரிடும் அமெரிக்காவின் இன்னொரு முகத்தை தரிசிக்க முடிகிறது.


இந்தோனேஷிய மாணவி, பாண்டுங் அரசியல்வாதி, க்ளாடின், பொம்மலாட்டம் மூலமாக அரசியல் உணர்வூட்டும் பொம்மல்லாட்டக்காரர், ஜகார்த்தா,கொலம்பியா நாடுகளின் மேல் தட்டு வாழ்க்கைமுறை. நாற்றமெடுக்கும் ஆறுகள், குடிசைப் பகுதிகள், எண்ணெயை கசிய விடும் பேரல்கள் - இவையெல்லாம் வாசிக்கும்போது இந்தோனேஷியாவோ, கொலம்பியாவோ பனாமாவோ கண்கள் முன் நிற்காமல், இந்தியாவும், கூடங்குளமும், போபாலுமே, மஹாராஷ்ட்ராவுமே நினைவை ஆக்கிரமிக்கின்றன. எப்படி நம் வாழ்க்கையில் சப்-வேயும், மெ டொனால்ட்ஸ் பர்கரும், கேஃப்சி சிக்கன் பக்கெட்டும், மீட்டிங்குகளில் நம்முன் வைக்கப்படும் அக்வாஃபினா பாட்டில்களும், பிரியாணி வாங்கினால் கோக் இலவசம் என்று காம்போ ஆஃபர் வழங்கும் உணவகங்களும் இரண்டற கலந்தது நுகர்கலாச்சாரத்திற்கு அடிமையாக்கி இருக்கின்றன! நமது தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை ஆழ்துளை மூலமாக உறிஞ்சி எடுத்து விவசாயிகளை,குடிமக்களை தண்ணீருக்கு அலையவிடும் நமது அரசாங்கம்! அந்த ஆலைக்கழிவுகளை ஆற்றுத்தண்ணீரில் கொட்டி வளங்களை பாழாக்கும் ஆலைகள் - தட்டிக்கேட்ட முடியாமல் - அவ்வாலைகள் மினரல் வாட்டர் பாட்டில்களில் அடைத்து தரும் மினரல் வாட்டரை குடிப்பதுதான் நாகரிகமென்று கருதி வாழும் நாம் - இதை எதிர்த்து கேட்பவர்களை “தீவிரவாதிகள்” என்று முத்திரைக் குத்துவது! ஒரு வேளை, தண்ணீர் அல்லது எண்ணெய் வளம் வற்றினால் அந்நிறுவனங்களுக்கு இருக்கவே இருக்கிறது - இதர முன்னேற துடிக்கும் நாடுகள்!

உண்மையில், இந்தியா ஒளிர்கிறது என்றும் “யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி” என்று ரெமோ ஃபெர்னாண்டஸூடன் கூவியபோது இதுதான் நம் சாய்ஸ் என்று நினைத்தது எல்லாம் உங்களுக்கும் ரிவைண்ட் ஆகலாம். கலர்பிளஸ், காட்டன்ஸ், பெனிட்டன்-களின் கண்களை மயக்கும் சேல்கள், கண்ணாடிக் கதவுகள் பளபளக்கும் மால்களில் ஷாப்பிங் செய்த குற்றவுணர்வு - அதை தடுக்க உடனேயே ஏதாவதொரு ஹோமுக்கு இன்ஸ்டன்ட் தானம் செய்து மன திருப்தியடைந்துவிடும் நம் வாழ்க்கைமுறை!

எப்போதாவது உலக வங்கிக்கு இந்தியா கொடுக்க வேண்டிய கடன் இவ்வளவு - ஒவ்வொரு இந்தியனுக்கும் கடன்பட்டுள்ளான் என்று பேப்பரில் எண்களைப் பார்க்கும்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்? சிறுவயதில் - (பள்ளிக்கூடம் படிக்கும்போது என்று கொள்க)இந்தக் காசை பிரதமருக்கு ஒவ்வொருத்தரும் அனுப்பி உலகவங்கிக் கடனை தீர்த்துவிட்டால் இந்தியாவின் கடன் தீர்ந்துவிடுமென்றுதன் சின்னப்புள்ளத்தனமாக நினைத்துக்கொள்வதுண்டு. இப்போதுகூட, தண்ணீர் தினம் என்ற சொன்னதும் தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பது பற்றி பேசி செயல்படும் சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் பிரக்ஞையும் கடமை உணர்ச்சியும் கூட கோடி கோடியாக லாபம் சேர்க்கும் முதலாளிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ இருந்தால்...?

சில இடங்களில் பெர்க்கின்ஸ் இடத்தில் நமது ப.சிதம்பரமும், மன்மோகனும் கூட பொருந்தி வருகிறார்கள்.

பெர்க்கின்ஸ் தனது ஆசைகளைத் தீர்த்துக்கொண்டபின்பு மனசாட்சி விழித்திருக்கிறது. நமக்கும், நமது அரசியல்வாதிகளின் மனசாட்சிகளும் விழிப்பது எப்போது?

பெர்கின்ஸ் எழுதிய இன்னொரு நூல், பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் 'அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு'. விலை ரூ. 180/- 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' படித்தவர்கள் அனைவருமே இந்நூலையும் வாசிக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தின் முழு சூழ்ச்சியையும் உணர்ந்துக் கொள்ள இந்த இரு நூல்களும் உதவும்.

"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் " - ஜான் பெர்க்கின்ஸ். விடியல் வெளியீடு.
இந்த இடத்தில் தமிழில், அழகாக மொழிபெயர்த்த இரா.முருகவேளை குறிப்பிட்டே ஆக வேண்டும். மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வே இன்றி தங்குதடையில்லாமல் முழுவீச்சில் வாசிக்க வைப்பதற்கு இவரது மொழிபெயர்ப்பும் ஒரு காரணம். நன்றி முருகவேள்.

உலக தண்ணீர் தினத்துக்கான தொடர்பதிவுக்கு அழைத்த "சிறுமுயற்சி" முத்துலெட்சுமிக்கு நன்றி. நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்


"சிதறல்கள்" தீபா

"சின்னு ரேஸ்ரி" மாதேவி

"அந்தமான் தமிழோசை "க.நா.சாந்தி லட்சுமணன்

Friday, March 12, 2010

பப்பு டைம்ஸ்

நேற்றிரவு :

"பப்பு, வெண்மதி பர்த்டேவுக்கு என்ன வாங்கி கொடுக்கலாம்?"

"ம்ம்..நிஜமான போட் வாங்கிக் கொடுக்கலாம்! "

.....

"அவளுக்கு போட் ரொம்ப பிடிக்கும்.நாம பீச் வாங்கிக் கொடுக்கலாம், ஆச்சி!"

....

"சொல்லு, பீச் வாங்கிக்கொடுக்கலாமா?"


கொர்ர்ர்ர்ர்ர்.....



காலை 6.30.

நான் : இன்னைக்கும் மெய்ட் வரலை. பாத்திரம் எல்லாம் ஸிங்லே இருக்கு!

முகில் : பப்புவுக்கு என்ன லஞ்ச்? சப்பாத்தியா - குட்டி தோசையா?

பப்பு : இன்னைக்கு கராத்தேவா யோகாவா?

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, " that that man, that that worry"-ன்னு!!





இன்று காலை சாப்பிடும் நேரத்தில்,

"வெண்மதிக்கு கார்ட் கொடுக்கலாம், நீயே வரைஞ்சது...வரையலாமா?"

"வெண்மதிக்கு போன் பண்ணிக்கொடு, பேசிட்டு அவளுக்கு என்ன வரையணும்னு கேட்டுட்டு வரையறேன்."- பப்பு

"வெண்மதி தூங்கிக்கிட்டு இருப்பா..நீயே ஏதாவது அவளுக்குப் பிடிச்சது வரை. "

"ஏய், வெண்மதி சின்னது...அவ-கிட்டே கேட்டுட்டுத்தான் வரைஞ்சு கொடுக்கணும்! "

சின்னவங்கன்னா கேக்காம செஞ்சுதானே பழக்கம்!!

போனை செய்தால், வெண்மதி நிஜமாகவே தூங்கிக்கொண்டிருந்தாள்.

பப்புவே சமாதானமாகி, வெண்மதிக்கு பீச் பிடிக்குமென்று பெரிய சுறா, குட்டி மீன்கள், ஜெல்லி ஃபிஷ், ஆமை எல்லாம் வரைந்தாள். ஆனால், அவசரத்தில் வீட்டிலேயே விட்டுவிட்டு போய்விட்டாள்.

வெண்மதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :

Thursday, March 11, 2010

கண்டுபிடிக்க முடியுதா?







The Wonders மற்றும் BSB இன் இந்த பாடல்கள் நினைவூட்டும் தமிழ் பாடல்கள் எவை?

courtesy : you tube

Wednesday, March 10, 2010

கேர்ல்ஸ் டே!

பப்பு, இன்னைக்கு விமன்ஸ் டே!
உங்க ஆன்ட்டிக்கு விஷ் பண்ணு...

அப்படின்னா?

கேர்ல்ஸ் டே! விமன்-னா...கேர்ல்ஸ். ம்மு..மேன் சொல்றேல்ல..அது மாதிரி விமன்.

பாய்ஸ் டே?

வரும். ஆண்ட்டிக்கு ஏதாவது வரைஞ்சு எடுத்துட்டு போறியா?


அப்புறம், சாப்பிட்டுக்கிட்டே வரைஞ்சது/வரைஞ்சுக்கிட்டே சாப்பிட்டது கீழே.




இடம் சுட்டி பொருள் விளக்கம்:

பப்புவாம் அது..மவுண்டெய்ன் மேலே இருக்காங்களாம்..ஆண்ட்டிக்கு டான்ஸ் ஆடிகிட்டே பூ கொடுக்கறாங்களாம்..தலைக்கு மேலே ஆவி தாத்தாக்கு வீங்கியிருக்கற மாதிரி இருக்கறது அவளோட சிண்டு + ஹேர் பேண்ட். கண்ணுக்கு கீழே இருக்கும் கோடுகள் - ‘அம்மா இல்லே'ன்னா அழறாங்களாம்.(அம்மாவை வரையறது கஷ்டம்னு என்ன ஒரு சமாளிஃபிகேஷன்!)

மவுண்டெய்ன் வரையறதுதான் மேடம்-க்கு பிடிச்ச வேலை, அதுலே கோணல் மாணலா ரோடு போட்டு இதுதான் ஹேர் பின் பெண்ட்ன்னு சொல்லுவாங்க.


மகளிர் தினத்துக்கான என்னுடைய பதிவை வினவு தளத்தில் காணலாம். பெண்பதிவர்கள், வாசகர்களுக்கு, மகளிர் தினத்துக்கான வினவின் அழைப்பு இங்கே . நண்பர்கள் உற்சாகத்துடன் தங்கள் அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Monday, March 08, 2010

சுவிஸின் "ஆனந்தி" இதழில் .....



4 Tamil Media-வின் வெளியீடான சுவிஸ் தமிழ் மாத இதழ் "ஆனந்தி"-யில் வலைப்பூங்கா பகுதியில் வந்த சித்திரக்கூடம் பற்றிய அறிமுகம்! இது ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ் - ஆனந்திக்கும், 4தமிழ்மீடியாவுக்கும் நன்றிகள்!! சித்திரக்கூடத்தைத் தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!

சுவிசிலிருந்து இதனை எனக்கு அனுப்பித்தந்த "சாரல்" சயந்தனுக்கு நன்றிகள்!


பின்குறிப்பு: படித்துப் பார்க்காமல், வெறுமே 'வாழ்த்துகள்' என்று பின்னூட்டமிடுபவர்கள், "ஆனந்தி"யில் சித்திரக்கூடத்தைப் பற்றி எழுதியிருப்பதை 100 முறை வாசித்து, மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டிய தண்டனைக்கு ஆளாவீர்கள்!

'ஃபோட்டோ' காப்பியில் எழுதியிருப்பதை மேற்கோளிட்டு பின்னூட்டமிடுபவர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்!
:-)

Saturday, March 06, 2010

ஸ்டெல்லா புரூஸ் கவிதைகள்

ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தேன்னு நினைக்கறேன். அப்போ திடீர்ன்னு ஸ்கூல்லே அரைநாள் லீவு விட்டுட்டாங்கன்னு வீட்டுக்கு வந்தேன். கதவு உள்பக்கமா பூட்டியிருந்தது. எனக்கு அப்போல்லாம் ஒரு பழக்கம் - ரொம்ப ஜாலியா இருந்தேன்னா அப்படி செய்வேன் - கதவை திறக்கிற வரைக்கும் 'டொங் டொங்' -ன்னு தட்டிக்கிட்டே இருப்பேன்.பொதுவா, ஒரு சின்ன சத்தம் கேட்டாக் கூட எட்டிப் பார்க்கிற ஆயா அன்னைக்கு ரொம்ப நேரமா நிக்க வைச்சுட்டாங்க, நானும் க்ரில் நாதாங்கியை தட்டிக்கிட்டு 'ஆயா ஆயா' -ன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். 'வர்றேன்னு வர்றேன்'னு சொல்றாங்களே தவிர ஆயா லேட் பண்றாங்க. கதவை திறந்துட்டு என்னோட ரூமுக்குள்ளே நுழைஞ்சுக்கிட்டு கதவை லேசா ஒருக்களிச்சு சாத்திட்டாங்க. பையையும் செருப்பையும் வீசிட்டு முகம்- கை- கால் கழுவிட்டு ரூமுக்குள்ளே போறேன்.. ஆயா ஒரு நோட்டையும் இங்க் பேனாவையும் அவங்க பெட்டிக்குள்ளே வைக்கறது தெரியுது.

ஏதோ நோட்டை வைக்கறாங்கன்னு பெரிசா கண்டுக்கலை. ரஃப் நோட்டுக்காக ஆயா ஒரு குயர் வெள்ளைத்தாள் வாங்கி அதை வெட்டி எங்களுக்கு நோட் செஞ்சு கொடுப்பாங்க . அந்த ரஃப் நோட்டு மாதிரி இருந்தது. ஆயாவுக்கு, நாங்க ஸ்கூல்லேருந்து வந்தவுடனே கை கால் கழுவிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும். பையை சோபா மேலே வைக்கக் கூடாது. ஆனா நானும் சரி என் தம்பியும் சரி..திட்டு வாங்காம இதை ஒரு நாளும் செய்ய மாட்டோம். அன்னைக்கும் ஆயா திட்ட ஆரம்பிச்சாங்க..நான் உடனே ரூமுக்குப் போய் கதவை சாத்திக்கிட்டேன். அவங்களை எப்படி பழி வாங்கறதுன்னு நினைச்சப்போதான் 'டக்'னு ஐடியா. அந்த நோட் என்னவா இருக்கும்? அதை நாம ரஃப் நோட்டுக்கு எடுத்துக்கலாம்னு - ஆயாவோட பெட்டியை திறந்து அந்த நோட்டை எடுத்துட்டேன். அதுலே ஆயா முக்காவாசி வரைக்கும் எழுதி வைச்சிருந்தாங்க. அழகா இருந்துச்சு கையெழுத்து.

முதல் பக்கத்துலேருந்து படிக்க ஆரம்பிச்சேன். ஒரு பெண்ணோட கல்யாணத்துலேருந்து ஆரம்பிச்ச நினைவு. நிரைய கேரக்டர்ஸ். பூரணி தாரணி மாதிரி 'ணி'லே முடியற மாதிரி நிறைய பேருங்க( ஆயாவோட நிஜபேரு கல்யாணி). எந்த பேரு யாருன்னு கண்டுபிடிக்க முடியலை. கதையை ஃபாலோ பண்ணவும் முடியலை. ஏன்னா, அது வந்து, ஸ்டாலின் நடிச்ச ஒரு விடுதலை போராட்ட காலத்து சீரியல் பாஷையிலே இருந்தது. ஆயா என்னோட இந்த நாச வேலையை கண்டுபிடிச்சுட்டாங்க போல. 'என்ன பண்றே கதவ சாத்திக்கிட்டு'ன்னு குரல் கொடுத்தாங்க. 'வர்றேன்'னு பதில் குரல் கொடுத்துட்டு எவ்ளோ பேஜஸ் இருக்குன்னு பார்த்தா அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கு. 'கதைவை திற' ன்னு ஆயா சொன்னதும், அவங்களை வெறுப்பதேத்த, 'நான் உங்க நோட்டை எடுத்து படிக்கறேன்'னு சொன்னதும் ஆயாவுக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு.

ஆயாவுக்கு நான் எப்பவுமே ரொம்ப செல்லம். ஆனா, அன்னைக்கு ஆயா என்மேலே ரொம்ப கோவமாகிட்டாங்க. 'ஏன் என் உயிரெடுக்கறே-ன்ற மாதிரி ஏதோ சொன்னாங்க. நானும் கோவம் வந்து அந்த நோட்டை வைச்சுட்டேன். பெரியவங்க பேச்சை கேக்கறதுல்லே, பசங்கன்னா அப்படி இருக்கணும், இபப்டி இருக்கணும்னு திட்டு aka அட்வைஸ்! அப்புறம் அன்னைக்கு சாயங்காலம் விளையாடிட்டு வந்து பார்த்தப்போ அந்த பெட்டிலே ஒரு சின்ன நம்பர் லாக் தொங்குது.

அப்புறம் அதை நானும் மறந்து போயிட்டேன். ஆனா, ஆயா கதை எழுதறாங்கன்னு மட்டும் தெரிஞ்சது. ஒருவேளை சுயசரிதையா இருக்கும்னு நானா நினைச்சுக்கிட்டேன். அப்புறம் அந்த பெட்டியும் எங்கேயோ மேலே பரணுக்கு போய்டுச்சு. இப்போ கொஞ்ச நாள் முன்னே ஆயாவுக்கு
ஒரு நரம்பு ஊசி போட்டாங்க. அப்போ நாந்தான் அவங்க கையை பிடிச்சுக்கிட்டு இருந்தேன். ஊசி போட்டு முடிச்சப்பறம் குத்தின இடத்துலே பஞ்சை வைச்சு அழுத்திக்கிட்டு இருந்தப்போதான் ஆயா கையை கவனிச்சேன். அதிலேதான் எத்தனை சுருக்கங்கள்! அந்த ஒவ்வொரு சுருக்கத்துக்கும் பின்னாடி ஒரு கதை இருக்கும்தானே. இந்த கையாலேதான் ஆயா அந்த கதையை எழுதியிருப்பாங்க-ன்னு தோணுச்சு. வீட்டுக்கு வந்தப்பறம் மெதுவா ஆயாக்கிட்டே கேட்டா, 'ஆமா கதைதான் எழுதுனேன்'-னாங்க. 'அங்கேதான் மேலே எங்கேயாவது கிடக்கும்'னு சொல்லிட்டு 'படிச்சிருக்கியா'ன்னு கேட்டாங்க. 'எங்கே படிக்க விட்டீங்க'ன்னு சொன்னேன்.

அந்த நாவலை முடிச்சாங்களான்னு இல்லையான்னு ஆயாவுக்கு இப்போ நினைவில்லை. என்ன கதைன்னு கூட ஞாபகம் இல்லை. ஆனா ஆயா கதை எழுதறாங்கன்னு தெரிஞ்சப்போ எழுந்த ஒரு வித ஆச்சரியம் - பொறுமையா எல்லா பக்கங்களிலும் இருந்த சீரான அந்த கையெழுத்து! ஆயா நிறைய கதை படிப்பாங்கன்னு மட்டும்தான் தெரிஞ்சிருந்த எனக்கு - அதுவும், பழங்காலத்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்கன்னும், காலையிலே காஃபி போட்டு எங்களுக்குக் கொடுத்துட்டு 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சாமி'-ன்னு ஆரம்பிக்கும்போது, 'சில்வர் ஜூப்லி' கண்ட அந்த உலகப்புகழ் அருவா மனையை எடுத்துக்கிட்டு, காய்,வெங்காயம், தண்ணி குண்டான், அருவாமனைக்கு கீழே வைக்க பேப்பர் சகிதம் சமையலைறைக்கு பக்கத்தில் உட்கார்ந்து - காய்களை நாலாக எட்டாக அரிந்துக் கொண்டிருக்கும் ஆயா - அந்த அருவாமனையிலேருந்து வர்ற 'டக் டக்' சத்தத்தோட கேக்கற ஆயாவோட குரல் - பெரும்பாலும் ஆயாவும் பெரிம்மாவும் பேசிக்கறது அப்போதான் - நாட்டு நடப்பிலேருந்து நேத்து காய்கறிகாரன் பேரம் படியாத போனது வரைக்கும் - ஆயாவுக்குள்ளே இவ்ளோ இருக்கான்னு தெரிஞ்சதும் வந்த ஆச்சரியம்,பிரமிப்பு....!

இப்போ இந்த கொசுவத்தி எதுக்காக-ன்னா - சமீபத்துலே (!) அதே மாதிரி இன்னொரு ஆச்சர்யம் எழுந்தது - ஸ்டெல்லா புரூஸ் கவிதைகள் எழுதியிருக்காருன்னு தெரிஞ்சதும்.

ஸ்டெல்லா புரூஸ்-ன்ற பேரிலே கவிதைகள் எழுதலை. காளி - தாஸ் என்ற பேரிலே கவிதைகள், சிறுத்திரிக்கைகள் சூழல்லே எழுதியிருக்கார். அதே பேரிலே கவிதை தொகுப்பும் வெளியிட்டிருக்கார்.

இந்தத் தொகுப்புக்கு ஞானக்கூத்தன் ஒரு அழகான முன்னுரை எழுதியிருக்காரு. தொகுப்புல இருக்கிற முதல் கவிதைய பத்தி ஞானக்கூத்தன் விவரிச்சிருக்கிறதை வாசிக்கிறப்ப, ஒரு கவிதைய எப்படி அணுகி புரிஞ்சுக்கணும்னு நாம தெரிஞ்சுக்கலாம். தலைப்பு இல்லாம இருக்கிற அந்தக் கவிதை இதுதான்:

பொழுது விடிந்து

தினமும் நான்

வருவேனென்று

கடற்கரை மண்ணெல்லாம்

குஞ்சு நண்டுகள்

கோலம் வரைந்திருந்தன.

இந்தக் கவிதைக்கு ஞானக்கூத்தன் சொல்லியிருக்கிற விளக்கத்தை முன்னுரைலேந்து அப்படியே தரேன்...

''இக்கவிதையைக் காளி - தாஸ் சொன்னபோது அசத்தலாக இருந்தது. இக் கவிதை சில அமைவுகளைக் கொண்டிருப்பதாய்த் தெரிந்தது.

தினமும் வருகிறவன்

கோலமிடும் நண்டுக் குஞ்சுகள்

தினமும் கோலம்.

இப்படிக் கருத்துகள் அடுக்கப் பெறுகின்றன. இதில் 'வரைந்திருந்தன' என்று இறந்த காலத்தில் சொல்லியிருப்பதால் நண்டுக் குஞ்சுகள் கோலத்தை வளராதுவிட்டுப் போய்விடுவதால் நவிற்சிக்காரனுக்கு கவிதை சொல்பவன், தரப்படும் வரவேற்பில் அதன் பங்கு வரையறை உடையதாய் இருக்கிறது. ஆனால், இந்த வரையறை அதன் பெருமையைக் குறைக்கவில்லை. ஏனெனில் கோலமிடுதல் என்ற பணி மகத்துவம் உடையது.

'கோலம்'

இந்தச் சொல்லே மங்களமானது. கோலம் பெரிதானால் விழா பெரிதென்று பொருள். பெரிய விழா. பெரிய கோலம். ஒருவர் இருவர் சேர்ந்து போடமுடியாது. பலபேர் போட வேண்டும். அதனால்தான் நண்டுகள் என்று பன்மையில் கூறப்பட்டிருக்கிறது. போடுகிற இடம் பெரிது.

கடற்கரை மண்ணெல்லாம்...

இரண்டாவது அமைவு.

கோலம்

வீடு வெளி இரண்டு பிரதேசங்களிலும் கோலம் வரையப்படுவது மரபு. கோலம் இடப்பொருளாகத் தெரிகிறது. பார்வைக்கு இடப் பொருளானாலும் உண்மையில் அது காலப் பொருளானது. காலம் நன்றாக இருந்தால்தான் கோலம் வரையப்படுகிறது. இறப்பு நிகழ்ந்த வீட்டில் கோலம் வரையப்படுவதில்லை. இக் கவிதை 'பொழுது விடிந்து' என்று தொடங்குகிறது. பொழுது விடிந்து நீண்ட நேரமாகியும் ஒரு வீட்டில் கோலம் வாசலில் இடப்படவில்லை என்றால் அந்த வீட்டில் ஏதோ அமங்கலம் என்று பொருள். இக் கவிதை மங்கலமான விஷயத்தையும் சொல்கிறது.

வீட்டிலிருந்து வெளியே போகிறவர், வீட்டுக்கு வருகிறவர் ஆகிய இருவருக்குமே கோலம் பொதுவானதால் அது 'அகம், புறம்' என்ற தத்துவத்துக்கு அப்பால் செயல்படுகிறது. வீட்டில் இருப்பவர் வீட்டைவிட்டு வெளியே செல்வதென்றால் முதலில் வாசலில் பெயருக்காவது ஒரு சிறிய கோலமாவது போட்டு விட்டுத்தான் பிறகு அவர்களால் வெளியே செல்ல அனுமதிப்பது மரபு. ஏனென்றால் கோலமில்லாமல் வாசலைப் பிரேதம்தான் கடக்கிறது.

இக்கவிதையில் பொழுது விடிவு + விழாக்கோலம் என்ற அமைவு புலனாகிறது.

விழாத் தலைவர் 'யார்?' 'வருவேன்' என்று சொல்வது யார்? கடற்கரை, நண்டு என்ற சொற்களைக்கொண்டு பார்த்தால் 'வருவேன்' என்று சொல்வது 'சூரியன்'தான். ஆனால், கவிதை 'வருவேன்' என்ற சொல்லாட்சியில் ஒரு திருகலைக்கொடுக்கிறது. சூரியனுக்குத் தினகரன் என்று பெயர். அவன் தினத்தைச் செய்கிறவன். அதனால் தினகரன். 'வருவேன்' என்றவன் சூரியன் என்று பொருள் கொண்டால் கடலைப் புறப்பகுதியாகக்கொண்ட வீட்டுக்காரனான சூரியன் கோலமிட்ட கடற்கரையை வாசலாகக் கண்டு மகிழ்ந்து சொல்கிறான் என்று பொருள்படுகிறது. இதிலிருந்து ஒரு வாசகம் உருவாகிறது. அது கடக ராசியில் சூரியன் வருகிறான் என்பது. கடகராசி என்பது நண்டுக் கூட்டம். எனவே கடக ராசியில் சூரியனுக்கு வரவேற்புக் கூறி மகிழ்கிறது இக் கவிதை. வருவேன் என்ற செயல் கடற்கரைக்குப் போகிறவனையும் சாதாரண நிலையில் குறிக்கிறது. கடற்கரையில் நண்டுகள் விட்டுச்சென்ற தடங்களைக் கண்ட நெஞ்சில் இப்படி எழுந்து அமைகிறது கவிதை.''


கோலம் போடறத பத்தி எனக்கு சில மாற்று கருத்து இருந்தாலும், இந்தக் கவிதைக்கான விளக்கமா ஞானக்கூத்தன் எழுதியிருக்கறதை படிக்கிறப்ப 'அட'னு தோணுது.


அவரோட 'நானும் நானும்' புத்தகத்திலிருந்து சில கவிதைகளை பகிர்கிறேன்.

அது வேறு உலகம்

ஓணான் முதுகாய்த் தெரியும்

புளிய மரக்கிளைகளுக்கும்

இடமுண்டு

என் பால்ய உலகில்

சுட்டுப் பொசுக்கி தின்பதுண்டு

சிட்டுக் குருவிகளை

துவாரம் விழுந்த

கால்சட்டைப் பையில்

கைவிடச் சொல்லியிருக்கிறேன்

பக்கத்து வீட்டுப் பெண்ணை

கடிதமெழுதி சித்தியை

காதலித்த கணம்

கலைந்த உலகம்

இன்னும் சுழல்கிறது நினைப்பில்

கிழிந்த காற்றாடியாய்...

---------

''நானும் நானும்''


தெருக்காட்சியில்

ஓசையற்றுத் தெரிகிறேன்

தூரத்து அருவியாய்

அநேகமாக

நடமாடும் தாவரம் போல்

யாவருக்கும் தோன்றுகிறேன்

ற்தோவொரு பூவின்

விஸ்வ - ரூபமாகத் தெரிந்தாலும்

தெரிவேன் போலிருக்கிறது

ஆனால்; காலமும்

காலமின்மையும் சந்திக்கும்

நிமிர்கோடாய் நிற்பதுதான் என்முகம்

அதிலிருந்து ஓர்

நிசப்தம்

ஒலிப்பரப்பாகிறது எப்போதும்

-----------

இலக்கிய கோத்ரங்கள்

விலை உயர் சிற்றுண்டி நிலையம்

பழச்சாறு அருந்தும் தோழி தோழன்

நாய்கள் வளர்க்கும் சீமாட்டி

மாருதி ஓட்டும் கனவான்

எவருக்கும் சான்றிதழ் கிடையா

மேலும் தீண்டத் தகாதோர்

பட்டியலில் பலருண்டு

கரிசல் காட்டில் முகாமிட்டு

இலக்கிய தாசில்தார்

கையேடு வைத்திருக்கிறார்

தருவார்

இலக்கிய மாந்தர் முத்திரை

பத்தாம் தேதி நாஞ்சில் நாடு

இருபதாம் தேதி கொங்கு நாடு

ஆங்காங்கு சிபாரிசுத் தரகர் குலம்

பெருநகர தமிழில் அணுகாதீர் அய்யா

நாட்டுப் புற தமிழே உச்சம்...

------------

மண்


மண்ணில் உட்கார்ந்ததும்

சொந்தம்

இயல்பாக ஒட்டிக் கொள்கிறது

அதன் மெளனம்

நிறம்

அமைதி

கொஞ்சமும் தலையிடவில்லை

எத்தனை தூரம் நடந்தாலும்

உடன் இருக்கிறது

கவனித்துக் கொண்டே இருக்கிறது

ஒருநாள்

மண்ணோடு மண்ணாகிவிட

ஆதங்கம் வந்தது

சாய்ந்தேன்

மண்ணே இல்லாமல்

ஆகாயம் தெரிந்தது

---------

நான் ஏதோ மலையில்

கல்லுடைப்பதாக எண்ணி

அனைவரும்

அலட்சியமாக பார்த்தனர்

அவர்களுக்குத் தெரியவில்லை

நான்

மலையை உடைத்துக் கொண்டிருக்கிறேன்.

----------

ஒழிந்த நேரங்கள்

நான்

ஒழிந்த நேரத்தில் பிறந்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் வளர்ந்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் படித்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் எழுதினேன்

நான்

ஒழிந்த நேரத்தில் விளையாடினேன்

நான்

ஒழிந்த நேரத்தில் காதலித்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் சம்பாதித்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் கல்யாணம் செய்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் புணர்ந்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் பிள்ளை பெற்றேன்

நான்

ஒழிந்த நேரத்தில் குடித்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் தூங்கினேன்

நான்

ஒழிந்த நேரத்தில் சாமி கும்பிட்டேன்

நண்பர்களே வாருங்கள்

ஒழிந்த நேரம் பார்த்து

ஒழிந்த நேரம் ஒன்றில்

நான் செத்துப் போகும் முன்...

----------

"பாடைக் காட்சி"

நான்கு பேர் சுமக்க

கடற்கரையிலிருந்து பாடை கிளம்பியது

பேசியபடி நண்பர்கள் சிலர்

பாடையை தொடர்ந்தார்கள்

யாருடைய முகத்திலும் வருத்தமில்லை

ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு போனார்கள்

பாடையைத் தூக்கிக் சென்றவர்கள்

மிகவும் நிதானமாக நடந்தார்கள்

பாடை குலுங்காமலும்

அதிகம் அசையாமலும்

கவனித்துக் கொண்டார்கள்

நண்பர்கள் சிகரெட் பற்ற வைத்தார்கள்

சினிமா பற்றியும் அரசியல் பற்றியும்

விவாதித்தார்கள்.

பஸ்ஸிலும் தெருவிலும் பலர்

பாடைக் காட்சியை கண்டார்கள்

சாலத்தில் கழுத்தில் மாலை இல்லை

பின் போனவர்கள் யாரிடமும்

மரண காரியம் செய்யும் தோற்றமில்லை

பீடிக்கு தீ கேட்பதுபோல

ரிக்ஷாகாரன் ஒருவர்

நெருங்கி வந்து கேட்டான்

செத்து போனது யார் ஸார்?

ஒருவனும் அவனுக்கு பதில் சொல்லவில்லை

வெகுநேரம் சென்றபின் பாடை

திண்ணையிட்ட ஒரு வீட்டெதிரில்

இறக்கப்பட்டது.

எல்லோரும் மௌனமாக நின்றார்கள்

பாடையில் இருந்தவர் எழுந்து

வீட்டிற்குள் போனார்

தூக்கி வந்தவர்களுக்குப் பணம் தந்துவிட்டு

நண்பர்கள் உள்ளே சென்றார்கள்

வீட்டுப் பெண்கள் கலவரமடைந்து கேட்டார்கள்

என்ன கர்மம் இது

ஏனிப்படி பாடையில் வரணும்?

ரொம்பத்தான் களைப்பாக இருந்த்து

பஸ் டாக்ஸி ரிக்‌ஷா

எதிலும் ஏறப் பிடிக்கவில்லை

பாடையில் படுத்து நன்றாக

தூங்கிக் கொண்டு வந்தேன் என்றார்

மரணம் நிகழ்ந்த துக்கம்

முகங்களில் படர

பெண்கள் நிசப்தமானார்கள்

களைப்புடன் நண்பர்களும்

நாற்காலிகளில் சாய்ந்து

கண்மூட

வெற்றுப்பாடை

வீதியில் போனது.


ஒவ்வொருத்தருக்குள்ளேயும்தான் சொல்றதுக்கும் எழுதறதுக்கும் எவ்ளோ விஷயம் இருக்கு இல்லே? என் பக்கத்துலே இருந்த ஆயாவுக்குள்லே இருக்கற விஷயங்களை/கதைகளை/வாழ்க்கையையே என்னாலே இன்னும் முழுசா தெரிஞ்சுக்க முடியலை...ஸ்டெல்லா புரூஸூக்குள்ளேயும் எவ்ளோ இருந்திருக்கும்?!

மரச்சட்டம் போட்ட கண்ணாடிக்கு பின்னால் இருக்கற தாத்தா,மாமா ஃபோட்டாவெல்லாம் பார்த்து அவங்கள்ளாம் இப்போ எங்கேன்னு சின்ன வயசுலே கேட்டப்போ ராத்திரி வானத்தை காட்டி 'அவங்க நட்சத்திரமாயிட்டாங்க, அதோ அங்கே தெரியறாங்க'-ன்னு
சொல்லுவாங்க சின்ன மாமா. நாங்களும், ஆளுக்கொரு நட்சத்திரத்தை பார்த்துக்கிட்டு இருப்போம். "அதோ உன்னை பார்த்து கண் சிமிட்டறாங்க, பாரு"ன்னு சொன்னதும் எந்த நட்சத்திரம் மினுக்குதோ அதை தாத்தாவாவும், சின்ன நட்சத்திரங்களை மத்த ஃபோட்டாலே இருக்கறவங்களாவும் கற்பனை பண்ணிக்குவோம்.

பப்புவுக்காக என் தம்பி இருட்டுலே மினுக்கற நட்சத்திர ஸ்டிக்கர்களை ஒட்டி வைச்சிருந்தான்.

நேத்து இந்த கவிதையெல்லாம் படிச்சுட்டு, லைட் ஆஃப் பண்ணிட்டு, யோசிச்சிட்டு இருந்தப்போ மேலே இருந்த ஒரு பெரிய நட்சத்திரம் மினுக்கறா மாதிரி இருந்தது....

ஆத்மாநாமை நான் படிச்சதில்ல. ஆனா, அவரும் தற்கொலை செஞ்சு இறந்ததா கேள்விப்பட்டிருக்கேன். ஆத்மாநாம் மூலமா கவிதைல அறிமுகமான ஸ்டெல்லா புரூஸும் தற்கொலை செஞ்சுகிட்டாரு.

இந்த முரணை எப்படி புரிஞ்சுக்கறது?

Thursday, March 04, 2010

ஆர் எஸ் டி யூ வி.....எக்ஸ் ஒய்...

என் பெயர் ரஞ்சிதா.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுருட்டு சாமியாருடன் தற்கொலை செய்துகொண்டேன்.
திருச்சியில சில ஆண்டுகளுக்கு முன் கற்பழிக்கப்பட்டேன்.
நூற்றாண்டுகளுக்கு முன்பு என் உடல் அசையும்போது நான் மாதா ஹரி.
துவாரகாவின் உடலென்று மிதந்து வந்தேன்.
மணிப்பூரின் மனோரமாவாக
கண்ணகியாக
அகலிகையாக
டயனாவாக
ஜீவிதாவாக
இன்னும் என்னவெல்லாமோவாக
என் உடல் எப்போதுமே இருந்துக்கொண்டேதான் இருக்கிறது...
......................................
...................................
......................................
உங்களில் எவனொருவன் என்னைப் பார்த்தமட்டில்
கண்களாலேயே கற்பழிக்காமல்
என் அளவுகளை யோசிக்காமல் இருக்கிறானோ
அந்த யோக்கியவான் எடுக்கட்டும்
எனக்கான முதல் கல்லை!

Tuesday, March 02, 2010

சோழர்கால கல்வெட்டை பார்க்கணுமா?



எனக்கு நிறைய ஹோம்வொர்க் இருக்கு, அப்புறம் பேசறேன், பை!”


(ஆண்ட்டி எனக்கு ஹோம்வொர்க் தரலைன்னா என்ன, நானே ஹோம்ஒர்க் பண்றேன். )

Monday, March 01, 2010

ஸ்டெல்லா புரூஸ் - நினைவஞ்சலி!

ஆறாவது படிக்கும் போது குழந்தைகள் புத்தகங்களான ‘கோகுலத்திற்கும்' 'அம்புலிமாமா'விற்கும் மட்டுமே எனக்கு அனுமதி உண்டு. எனது ஹார்மோன்கள் வேலை செய்ய ஆரம்பித்திருந்த நேரமோ அல்லது கோகுலம் இதழ் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டிருந்ததில் சுவாரசியம் இழந்துவிட்டிருந்தேனோ தெரியவில்லை...16 வண்ணப்படக்கதைகள் கூட லயிக்கவே இல்லை. வேறு ஏதேனும் புத்தகங்களை படிக்கத் தேடிக்கொண்டிருந்தேன். ஆவியும் கல்கியும் மட்டும் படிக்கலாம். மற்ற புத்தகங்கள் எல்லாம் 'பெரியவங்க புக்'. பழைய அட்டை பெட்டிகளில் இருந்த 'முத்தாரம்' , 'கல்கண்டு'களிலிருந்து - 'உங்களுக்கு தெரியுமா', ‘ஜூப்ளியின் நம்பினால் நம்புங்கள்' முதலியனவற்றை படித்து போரடித்திருந்த நேரத்தில் கையில் கிடைத்தது 'மௌனமே காதலாக'. அதை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று எனக்கேத் தெரியாது. அதேபோல ‘ பச்சை வயல் மனது'ம். 'பச்சை வயல் மனது' கல்பனா கடைசியில் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்வது இன்னும் என் கற்பனையில் இருக்கிறது. இவை எல்லாம் பெரியவர்கள் தூங்கும் நேரத்தில் அல்லது விருந்தினர்கள் வந்திருக்கும் நேரத்தில் வாசித்து கண்டுகொண்டது.

ராமமூர்த்தி மாமாவினால் வீடு வந்து சேர்ந்தது “கரையோர முதலைகள்”. 'ஃபோட்டோ எடுக்கறதுக்கு முன்னால் ஆரஞ்சு வண்ண ஜாங்கிரிகள். சுத்தி வைக்கப்பட்டிருந்த ஜாங்கிரிகள். ஸ்வப்னாவுக்கு ஜாங்கிரி பிடிக்கும்'- என்ற ரீதியில் வாசித்துக் கொண்டிருக்கும்போது பெரிம்மா அறைக்குள் நுழைந்துவிட, பயத்தில், அந்த புத்தகத்தை, புத்தக அலமாரியின் சந்துக்குள் தூக்கிப் போட்டுவிட்டேன். பெரிம்மா இதையெல்லாம் கவனிக்காமல் 'இன்சைட் அண்ட் அவுட்சைட் ' புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார். ப்லாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்த இடுப்பு வரையிலான நிர்வாணமான பெண் சிலையின் அட்டைப்படம் கொண்ட அந்த புத்தகத்தை திரும்ப எடுக்க முயல்கிறேன். எடுக்க வரவில்லை. ஒட்டடை அடிக்கிறேனென்று பாவ்லா காட்டி புத்தகத்தை கண்டெடுத்து வாசித்து முடித்தேன். ஒரு நினைவுக்காக பார்த்ததில் தெரிந்தது - நாவலின் பெயரும், கிழே எழுதியிருந்த 'பாலகுமாரன்' என்ற பெயரும்.

எல்லா பரிட்சை விடுமுறைக்கும் மாமா வீட்டுக்கு வடலூர் பயணம். வீட்டில் ஒரு பெரிய அலமாரி - மர அலமாரி. அதை அலமாரி என்று சொன்னால் இன்றைய அலமாரிகள் கோபித்துக் கொள்ளக் கூடும். ஆறு கால்கள், இடையில் சட்டங்கள் வைத்து செய்யப்பட்ட பெரிய மரதாங்கி. அதில்தான், பெரிம்மாவின் ஆங்கில் இலக்கிய புத்தகங்கள், ஷேக்ஸ்பியர் முதல் ரென் அன் மார்ட்டின் வரை, அம்மாவின் வரலாற்று புத்தகங்கள், பெரிய மாமாவின் அரசியல் புத்தகங்கள், இளங்கோ மாமாவின் லெனின் புத்தகங்கள்...அப்புறம் காங்கிரஸ் வரலாறு, காந்தியன் தாட்ஸ்,சத்திய சோதனை, சுபாஸ் சந்திரபோஸ் - என்று சகலருக்கும் அடைக்கலம். அந்த புத்தகங்களை என்னவென்று எடுத்து அட்டைப்படம் பார்த்ததோடு சரி...'அஞ்சலையம்மாள், மெட்ராஸ் லெஜிஸ்லேஷன்' என்று படம் இருந்தால் ஒரு புரட்டு புரட்டி ‘ஹை ஆயா' என்பதோடு முடிந்துவிடும்.

அந்த மரதாங்கியைத் தாண்டி, அறைக்குள் சென்று வேவு பார்த்ததில் கார்ட்போர்டு பாக்ஸில் ஒரு உலகம் தூங்கிக்கொண்டிருப்பது தெரியவந்தது. எல்லாம் 70களில், 80 களில் வந்த ஆவியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், நாவல்கள், மற்றும் துணுக்குத் தொகுப்புகள். அதைத்தாண்டி கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வனை கொண்டு தொகுக்கப்பட்ட ஐந்து பாகங்கள். கல்கியினுடையது மட்டுமே அழகாக பைண்டு செய்யப்பட்டு பாகம் 1,2 என்றெல்லாம் எழுதப்பட்டு இருந்தது. மற்றவை , சாக்கு ஊசியைக் கொண்டு டொயின் நூலில் தைக்கப்பட்டவை. புதையலைக் கண்ட பூதம் போல எதை முதலில் எடுப்பதென்று தெரியாமல் பழுப்பு நிற அட்டையில் எழுதியிருந்த நடுத்தர அளவிலான ஒரு நாவலை எடுத்தேன். ‘அது ஒரு நிலாக்காலம்.'..

அதன்பின், ஒவ்வொரு விடுமுறையிலும் அந்த நாவலை வாசிப்பது பழக்கமாயிற்று. வெயில் தகிக்கும் பின்மத்தியான வேளையில் கொட்டாயின் மேலிருந்து சம்பந்தட்டியை கீழிறக்கி நீருற்றி, அதன் நிழலில் கயிற்றுக் கட்டில் போட்டு ஆயா படுத்து விடுவார்கள். எல்லா பசங்களோடும், தரையில் பலப்பத்தால் கட்டம் கட்டி புளியங்கொட்டையில் பல்லாங்குழியில் ராஜா, ராணி, மந்திரி விளையாடி தோற்றுப்போய் சண்டையிட்டு நான் சரணடைவது ‘அது ஒரு நிலாக்காலம். 'சுகந்தா' ஆம்பூருக்கு சென்றபின்னும் நினைவுகளில் வந்தார். வுமன்ஸ் எராவில் 'குவாலியர்' என்ற ஊரிலிருந்து ஏதேனும் வாசகர் கடிதம் எழுதியிருந்தால் சுகந்தாவின் நினைவு வந்தது. பக்கத்துவீட்டு கெஜாம்மா மதுரைக்குச் சென்றால், தேனிக்கு பக்கத்திலிருக்கும் ராம்ஜியின் வீடும், அவரது அண்ணாக்களின் மில்களும் எனக்குள் எட்டிப்பார்த்தன. வைகையை பற்றி பாடத்தில் படித்தால் ராம்ஜியின் குடும்பம் வைகை டேமுக்கு பிக்னிக் சென்றது ஞாபகம் வரும். அவ்வளவு ஏன்? இப்போதுக்கூட, கிண்டி கத்திப்பாராவை தாண்டினால் வரும் படைவீரர்கள் துயிலும் கல்லறைகளில் பூத்திருக்கும் ரோஜாமலர்களை காணும்போதெல்லாம் 'அது ஒரு நிலாக்கால'த்து ஆங்கிலோ இந்தியப்பெண் 'ரோஸ்மேரி' அங்கே உறங்கிக் கொண்டிருப்பதாகவேத் தோன்றும். (செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் மேம்பாலத்தைக் கடக்கும்போது தெரியும் கல்லறை தரும் உணர்வுகள் வேறு!) 'அது ஒரு நிலாக்கால'த்தின் கதாநாயகன் ராம்ஜியை பெல்பாட்டம் போட்ட ரஜினியாக, கல்யாண ஆல்பத்தில் இருக்கும் பெரியப்பாவாக, பழைய கறுப்பு வெள்ளை ஃபோட்டோவில் ஸ்டைலாக நிற்கும் இளங்கோ மாமாவாக(இளங்கோ மாமாவும் பெரிப்பாவும் மட்டுமே சென்னையை எட்டிப் பார்த்தவர்கள்.ராம்ஜியும் சென்னை.) - சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உயரமாக ,ஒடிசலாக, அலையலையாக ஸ்டெப் கட்டிங் வைத்திருந்தவராக உருவகப்படுத்தி இருந்தேன்.


பின்னர், ஆவியில் வந்த ஸ்டெல்லா புரூஸின் சிறுகதைகளைத் தவிர வேறு எதுவும் படிக்க வாய்க்காதிருந்தது. இன்றைக்கும், திருவல்லிக்கேணியைப் பற்றி கேள்விப்பட்டால், நாதமுனி என்ற பெயரும் அங்கே மேன்ஷனில் தங்கி இருந்த முதியவரும், விசேஷமான நாட்களில் வீட்டு நினைவில் ஏங்கும் அவரது தனிமையும், இறுதியில் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்ற அவரது மகனும் அங்கிருப்பதாகவே தோன்றும். 'அது ஒரு நிலாக்கால'த்துக்குப் பின் மனதில் அழுந்தி பதிந்த நாவல்கள் 'பனங்காட்டு அண்ணாச்சி'யும், 'மாயநதிகளும்தான்.

பனங்காட்டு அண்ணாச்சியின், அந்த காலத்து சோப்பு பிசினஸும், அவரது அம்மா கணவனை இழந்தபின் உறவினர்களிடமிருந்து சொத்துகளைப் பாதுக்காக செய்த தந்திரமும்...மாயநதிகளின் உலகநாதனைத்தான் மறந்துவிட முடியுமா! துவையல் அரைக்கச் சொல்லும் பாங்கும், அவரது இளம் மனைவியும், சிநேகமாக இருந்த பக்கத்துவீட்டு இளைஞனும், அதே தெருவில் வசித்து வந்த ஒரு தனித்த பெண்ணுக்கும், உலகநாதனுக்கும் இருக்கும் நுண்ணிய உணர்வுகளும் எனது கற்பனையில் உருவம் கொண்டனர். அந்த பெண்ணுக்கு கணவனில்லை. உலகநாதனுக்கோ மனைவில்லை. இவர் வரும் நேரங்களில் அந்த பெண் திண்ணையில் அமர்ந்து பேசிகொண்டிருந்தாலும் எழுந்து நிற்பாள். அவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த பேச்சுவார்த்தையுமிருக்காது. சொல்லப்போனால், அந்த பெண் உலகநாதனின் மகள் வயதிருப்பவள். ஆனால், அவர் எழுந்து நிற்பது உலகநாதனுக்கு கொடுக்கும் பரஸ்பர மரியாதை போல. இவரும் தலை நிமிர்ந்து நடந்து செல்பவர் அவள் எழுந்து நிற்பதை அறிந்ததும் தனது தலையை தாழ்த்திக்கொண்டு செல்வார். அதை ஆமோதிப்பது போல. அந்த பெண்ணிற்கு பதில் மரியாதை செய்வது போல. ஒருநாள், உலகநாதன் அந்த பெண்ணின் வயதுடைய வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு வந்ததும் , இந்த பெண்ணின் மரியாதை காணாமல் போகும். இளம்பெண்ணை மணம் செய்துக்கொண்டு மனைவி மேல் சந்தேகம் பீடித்து மனஉளைச்சலுக்கு ஆளான உலகநாதனுக்கு இந்த மரியாதையும் (!) கிடைக்கத்தாதது இன்னும் எரிச்சலை, கோபத்தைக் கூட்டும். வாசிக்க சுவாரசியமான நடை கொண்ட நாவல்.

கதைகள் படிப்பதில் இருந்த ஆர்வம் இந்த நாவலை எழுதியவர் யாரென்று தெரிந்துக்கொள்வதில் இருக்கவில்லை. (யார் எழுதியது என்றெல்லாம் பார்த்து வாசிக்கும் அளவுக்கெல்லாம் அறிவு இருக்கவில்லை..அப்போதும் சரி..இப்போதும் சரி! சுவாரசியமான கதையை படிப்பதே முக்கியமாக பட்டிருக்கிறது.)அப்படியே தெரிந்திருந்தாலும் அதை தெரிந்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேனென்ற மெத்தனம்தான். பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட அத்தியாயமானதால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் எண் போடப்பட்டு, அதன்கீழ் ஸ்டெல்லா புரூஸ் என்று எழுதியிருந்தது, சிரத்தை இல்லாமல் மனதிலும் பதிந்தும் போயிருந்தது. இந்தியா டுடேயின் இலக்கிய மலர்களில், எழுதுபவர் படம் போட்டு கீழே அவர் தற்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறார், எங்கிருக்கிறார் என்று சிறிய எழுத்தில் போட்டிருப்பார்கள். அதில், இந்த மாதிரி ஸ்டைலிஷ் பெயர்கள் இருந்தால் 'தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். எழுதுவது அவரது இலக்கிய ஆர்வம்' என்ற ரீதியில் ஒரு குறிப்பு எழுதியிருப்பார்கள். அதைப்போல, ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரை ஆவியில் பார்க்கும் நேரங்களில் 'அமெரிக்காவில் வாழும் பெண் போல' என்று நினைத்துக்கொள்வேன். மேலும் அவர் கதைகளும் அப்படித்தான் இருக்கும். அதாவது சொஃபஸ்டிகேட்டட் லைஃப் கொண்ட மனிதர்கள்.. அவர்கள் வாழ்வில் நடக்கும் உறவுமுறை சிக்கல்கள்.. காதல்கள்...பிரிவுகள்...உளவியல் ரீதியான குழப்பங்கள். எனக்கு அப்போது (இப்போதும்தான்) சோக ரசத்தை பிழிந்து வறுமையை வதக்கித் தரும் தரும் எழுத்துகள் ஒவ்வாதிருந்தன. ‘ நாமே அப்படி இருக்கும்போது நாம் படிக்கறதும் அப்படித்தானா இருக்கணும்' என்ற நினைப்பும் காரணமாக இருக்கலாம்.

இரு ஆண்டுகளுக்கு முன், ஆவியில் வெளிவந்த பேட்டியைப் பார்த்தே தெரிந்துக்கொண்டேன்...ஸ்டெல்லா புரூஸ் என்பவர் இங்கிருந்து எழுதுபவர் என்று. அவரும் சுஜாதாவைப் போல பெண் பெயரில் எழுதுபவர் என்று . அது ஒரு நிலாக்காலம் ராம்ஜி - அவரது, ராம்மோகனின் சொந்த வாழ்வின் ஒரு பகுதி என்பதை தெரிந்துக் கொண்டதும் அப்போதுதான். ஆச்சர்யமாக இருந்தது...அதே சமயம அதிர்ச்சியாகவும்..

அவரது மனைவியின் புகைப்படம் போட்டு, மருத்துவ செலவுகளுக்காக மிகுந்த கஷ்டத்திலிருப்பதாகவும், உதவ நினைப்பவர்கள் உதவலாமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த சில மாதங்களில் அதிர்ச்சியோ அதிர்ச்சி...அவர் தற்கொலை செய்துக்கொண்டது. சட்டென்று, 'உலகநாதனி'ன் நினைவும், குவாலியரிலிருந்து துயரம் தோய்ந்த கடிதங்கள் எழுதும் 'சுகந்தா'வின் நினைவும்தான் வந்தது. அவரது படைப்புகளில், உலகநாதனும் மற்ற கதை மனிதர்களும் தற்கொலை செய்துக்கொள்வர்...இவரும் தனிமையின் பாரம் தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டது, மேலும், எழுத்தாளர் சுஜாதாவும் மறைந்த சில தினங்களுக்குள்ளேயே இவரும் மறைந்தது ‘என்னடா இது, எழுத்தாளர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்களே' என்று தோன்ற வைத்தது எல்லாம் ஞாபகத்தின் அறையில் அடுத்தடுத்த செல்களில் சேமிக்கப் பட்டிருக்கிறது. மனித மனத்தின் சிக்கல்களை, குழப்பங்களை, எண்ண ஒட்டங்களை எழுதியவ்ர், உறவுகளுக்குள் வரும் சிக்கல்களை கதைமாந்தர்களோடு அலைய விட்டவர் எடுத்த முடிவு.....:-(
(வார்த்தைகளும், அட்வைஸுகளும் எப்போதும் எளிதுதான்.)

எதாவது முக்கியமான நிகழ்வுகளின்போது நான் உடனே தேடுவது தமிழ்மணம். யாராவது ஏதாவது அந்நிகழ்வு குறித்து எழுதியிருக்கிறார்களா என்று பார்ப்பது சில வருடங்களாகவே வழக்கமாகி விட்டது. அவரது மரண செய்தியை தாங்கிக் கொண்டு தமிழ்மணத்தில் பார்க்கிறேன்... ஸ்டெல்லா புரூஸ் பற்றி எந்த பதிவும் கண்ணில் படவில்லை. யாராவது ஸ்டெல்லா புரூஸ் பற்றி பதிவெழுத மாட்டார்களா என்று இருந்தது. யாருடனாவது 'அது ஒரு நிலாக்காலம்' அல்லது 'மாயநதிகள்' வாசித்தவர்கள் அல்லது தேன்மொழி, அவளது இன்ஸ்பெக்டர் கணவனது கதையைப் பற்றி பேசி பேசி ஆற்றிக்கொள்ள வேண்டும் போல இருந்தது. ஒரு வாரத்தில் அந்த அதிர்ச்சியும் சாதாரணமாகி விட்டது.


என்றைக்கேனும், நான் கதை எழுதினால் அது ஸ்டெல்லா புரூஸினுடையது போல இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அவருக்கு, ஒரு வாசகராக, என் பதின்ம வயதில் விதவிதமான மனிதர்களை, சூழ்நிலைகளை, காதலை, சந்தேகத்தை, குழப்பங்களை, மனத்தின் நுட்ப உணர்வுகளை அறிமுகப்படுத்திய ஸ்டெல்லா புரூஸுக்கு எனது நினைவஞ்சலிகள்!

Thursday, February 25, 2010

பப்பு டைம்ஸ்

(வீட்டுக்கருகில் இருந்த பஸ் ஸ்டாப் வரை சென்றபின் ஸ்கூட்டியில் திரும்பிக்கொண்டிருந்தோம்.)

ஆச்சி, என்னை இங்கேயே விட்டுடு, நானே நடந்து வீட்டுக்கு வந்துடுவேன், தனியா.

ரோட்-லாம் க்ராஸ் பண்ணனும். நீ பெரிய பொண்ணானதும் தனியா போலாம். இப்போ அம்மாக்கூடத்தான் போணும்.

நீ தூங்கும்போது நான் தனியா போலாமா?

சொல்லிட்டுதான் போணும். தூங்கிட்டு இருந்தாலும் எங்கே போறேன்னு சொல்லிட்டு போணும். செகண்ட் ஸ்டாண்டர்டு வந்தாதான் நீ தனியா போலாம். இப்போ அம்மாகூடதான் போணும்.

நீ தூங்கிட்டு இருக்கும்போது வடலூர் ஆயாக்கூட போலாமா?

ம்.வடலூர் ஆயாகூட போலாம். பெரியவங்க கூடல்லாம் போலாம்.

வடலூர் ஆயா மெதுவா நடப்பாங்களே. நீ தூங்கும்போது நானே கதவை திறந்துக்கிட்டு தனியா போலாமா?!

(வேணாம் பப்பு, வலிக்குது, அழுதுடுவேன்..அவ்வ்வ்வ்)

தனியா போனாலும் அம்மாக்கிட்டே சொல்லிட்டுதான் போணும். போய் கேட்டை தெறந்துவிடு. (நல்லவேளையா வீடு வந்துடுச்சு....)





பப்பு ஆயாவின் மருநது டப்பாவை தரமறுக்க நாலு திட்டு வாங்கிவிட்டு அழத் தொடங்கியிருந்தாள். “ஒரே அட்டகாசம், மருந்துலெல்லாம் விளையாடலாமா...#$#%#$ “ என்று நானும் பொறுப்பிஸ்ட் அவதாரம் எடுத்திருந்தேன். அழுகையை நிறுத்திவிட்டு சொன்னாள்,

அழற குழந்தைங்களை திட்டக் கூடாது! உனக்கு தெரியாது?



சில ?கள் :

ஏன் கல்யாணம் நடக்குது? ஏன் பாய்க்கும் கேர்லுக்கும் கல்யாணம் நடக்குது?

ஓல்ட் மெக்டோனால்டு ஃபார்ம்லே பாத்ரூம் இருக்குமா? (ரொம்ப முக்கியம்!!)

எனக்கு ஏன் றெக்கை இல்ல?

நம்ம உடம்புல எதை வெட்டினா வளரும்? (வீட்டுக்கருகில் இருந்த மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தார்கள். கிளைகள் திரும்ப வளரும் என்ற சொல்லப்போக, இந்த கேள்வி முளைத்தது!)

Tuesday, February 23, 2010

இது முனிரத்தினத்தின் கதை (முத்துலெட்சுமியின் கதையும் தான்)

ராத்திரி மணி பத்தாகபோகுது....கதவு நாதாங்கியை தடதடன்னு தட்டுற சத்தம் கேக்குதே. 'யாரு'ன்னு சிஸ்டர் கேக்கறாங்களே. ஆமா, தினமும் சிஸ்டர் கேப்பாங்க. 'நாந்தான் சிஸ்டர்' -ன்னு குரல் வந்ததும், 'நாந்தான்னா யாருடி'-ன்னு கேக்கறாங்க. தினமும் கேக்கறதுதான். ' நாந்தான் சிஸ்டர் முனிரத்தினம்'-ன்னு சொல்றாங்களே..அவங்கதான் முனி அக்கா.



இந்த ஹாஸ்டல்லேயே பத்துவருஷத்துக்கு மேலே இருக்கற ரொம்ப ரொம்ப சீனியர். நானும், லதாவும் இந்த ஹாஸ்டலுக்கு வந்து ஒரு மாசம் ஆகுது. இந்த ஹாஸ்டல் சின்னமலையில் இருக்கிற சிஸ்டர் கான்வெண்ட். ராத்திரி ஏழுமணிக்கு மேலே இரும்பு கேட்டை இழுத்து பூட்டிடுவாங்க. அதுக்கு அப்புறம் வர்றவங்க மேலே சொல்லியிருக்கற மாதிரி கதவை தட்டிக்கிட்டு சிஸ்டரைக் கூப்பிட்டுக்கிட்டு நிக்கணும். சிஸ்டர் பொறுமையா டிவி பார்க்கறதை நிறுத்திட்டு கொஞ்சநேரம் தட்டவிட்டுட்டு, சாவியை எடுத்துக்கிட்டு வந்து,இதோ இப்போ முனு அக்காவை கேட்ட மாதிரி, 'யாரு'ன்னு கேட்டப்புறம் நாலு திட்டு திட்டிட்டு திறப்பாங்க.


”என்னடி, தினமும் லேட்டு?”


“சாரி சிஸ்டர், ஆடிட்டிங்”


“என்னடி தினமும்...ஆடிட்டிங்..ஆடாதடிங்-ன்னுகிட்டு..உனக்கு என்னைக்குத்தான் ஆடிட்டிங் இல்லை?”




கையை பிசைஞ்சுக்கிட்டு முனி அக்கா பல்லைகாட்டிக்கிட்டு நிக்கறாங்க. மன்னித்த பாவத்துடன் சிஸ்டர், ‘ஓடு, சாப்பாடு எடுத்து வச்சிருக்காளா' என்றதும் ‘ம் சிஸ்டர்' ன்னு சொல்லிட்டு வேகமாக ரூமுக்கு போறாங்க.


முனி அக்கா எனக்கு எதிர் ரூம்லே இருக்காங்க. எனக்கும் லதாவுக்கும் ஒரே ரூம் கிடைக்கலை. பக்கத்து பக்கத்து ரூம். எதிர் ரூம்லே இருக்கற விஜி கூட அப்போதான் நாங்க ஃப்ரெண்ட் ஆகி இருந்தோம். அவங்க ரூம்லே பேசிக்கிட்டு இருந்தப்போ அங்கேருந்த கட்டில்லே உட்கார போனேன். உடனே விஜி, ‘ஐயோ அது முனி அக்கா பெட், அதுலே வேணாம், இதுதான் என் பெட், இதுலே உட்காருங்க'ன்னு சொன்னாங்க. ஏன், உக்காந்தா என்னன்னு கேட்டதும், 'அவங்களுக்கு எப்போ கோவம் வரும்னே சொல்ல முடியாது, டக்னு திட்டிடுவாங்க, அப்புறம் சண்டை போட்டு கத்திவுட்டுடுவாங்க' -ன்னு சொன்னாங்க. இந்த ஹாஸ்டலுக்கு வர்றவங்கல்லாம் பாஸிங் க்ளவுட்ஸ் மாதிரிதான். மிஞ்சி போனா ஒரு வருஷம்...அதுக்குள்ளே இன்னும் சில ப்ரெண்ட்ஸ் கூட சேந்து வீடு வாடகைக்கு பார்த்து போய்டுவாங்க..இல்லேன்னா கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்டுவாங்க. ரொம்ப நாளா இருக்கறவங்கன்னா ரெண்டு மூணு பேருதான்...லவ் பண்ணிட்டு வீட்டுலே சம்மதத்துக்காக அடம் பிடிச்சுக்கிட்டிருக்கவங்க இல்லேன்னா கல்யாணத்துக்காக காத்துக்கிட்டிருக்கவங்க. அதுலே ரெண்டாவது கேட்டகிரியாம் முனி அக்கா.



முனி அக்கா எனக்கு சீக்கிரம் ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க. ஒருநாள் மழை வந்தப்போ அவங்க புடவையை எடுத்து வச்சிருந்தேன், நனையாம. அப்புறம், ஒருநாள், அவங்களுக்கு ராத்திரி சாப்பாடு எடுத்து வைக்க அவங்க ரூம்லே யாருமில்லாதப்போ நானும் லதாவும் சாப்பாடு எடுத்து வைச்சிருந்தோம். அதுலேருந்து ஆபிஸுக்கு போகும்போது எங்களுக்கு ‘பை' சொல்லிட்டு போவாங்க. எனக்கு போன் வந்தா ஓடி வந்து கூப்பிடுவாங்க. ஆஃபிஸிலே வெள்ளிக்கிழமை பூஜையிருந்தா பழமும், தின்பண்டங்களும் கொண்டு வந்து தருவாங்க. எப்படின்னு தெரியலை, ஹெப்ஸியும், நானும் முனி அக்காவிற்கு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். ஆனா முனி அக்கா கொஞ்சம் சிடுசிடுதான். கோவம் எப்போ வரும்னு சொல்ல முடியாது. திடீர்னு யாரையாவது திட்டிடுவாங்க...சில்லி ரீசனாத்தான் இருக்கும். ஆனா யாரும் பதிலுக்கு முனி அக்காக்கிட்டே சண்டை போட மாட்டாங்க. ‘முனி அக்கா இப்படித்தான்' ன்னு எல்லோரும் ஏத்துக்கிட்ட மாதிரி அமைதியா போய்டுவாங்க. அதுவும் பாதிபேர் முனி அக்காக்கிட்டே இப்படி பயந்துக்கிட்டு பேசவே மாட்டாங்க.



முனி அக்கா, எத்திராஜ்-லேயோ ஸ்டெல்லாமேரிஸ்-லேயோ பிகாம் படிச்சாங்களாம். இருபத்தியொரு வயசுலே வேலைக்காக வந்தாங்களாம். இந்த ஹாஸ்டல்லே பனிரெண்டு வருஷமா இருக்காங்களாம். ஆரம்பத்துலே சில சிட் பண்டு கம்பெனிகளில் சேர்ந்து தம்பியை படிக்க வைச்சு, அம்மா-
அப்பாவுக்கு பணம் அனுப்பி குடும்பத்தை கவனிச்சிருக்காங்க. ஒன்பது வருஷமா ஒரே ஆஃபிசுலே வேலை செய்றாங்களாம். பத்தாயிரத்துக்கிட்ட்டே சம்பளம் வருதாம். கல்யாணத்திற்கு பார்த்து எதுவும் சரியா அமையலை. தம்பி லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டாராம். அம்மா அப்பாவும் ரொம்ப வயசானவாங்களாம். எதையும் முயற்சி எடுத்து செய்ய யாரும் இல்லை, ஊர்லே இருக்கற சொந்தக்காரங்களும் பெரிசா உதவலை.


கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பமாக வாழணும்னு அக்காவுக்கு ஆசைதான். ஆனா, கல்யாணத்துக்கு அவங்ககிட்டே இருந்த வசதிகள் மட்டும் பத்தலை. அக்கா கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைச்சிருந்த பதினைஞ்சு பவுன் நகைங்களும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு திருப்தியாயில்ல. சரி, இன்னும் கொஞ்சம் சம்பாரிச்சுட்டு பார்த்துக்கலாம்னு வந்த ஒன்னு ரெண்டு மாப்பிள்ளைங்களையும்
தட்டிக்கழிச்சுட்டாங்களாம். அப்புறமா தேடினப்போ வந்தவங்கள்ளாம் ரெண்டாம்தாரத்துக்குத்தான் கேட்டாங்களாம். அக்காவுக்கு இஷ்டமில்லாததால் 'வேண்டாம்'னதும் , சொந்தக்காரங்க எந்த முயற்சியும் எடுக்கலை.



முனி அக்காவும் அப்படியே ஹாஸ்டல்லேயே தங்கிட்டாங்க. இவங்களுக்கு அப்புறம் எத்தனையோ பேட்ச் பொண்ணுங்கல்லாம் வந்து, வேலை தேடி, பத்திரிக்கை கொடுத்து கல்யாணமாகி போயிருக்காங்க. ஹாஸ்டல்லே ஒரு வழக்கம். கல்யாணமானதும், ஜோடியா வந்து நட்புகளை கண்வருக்கு அறிமுகப்படுத்திட்டு சிஸ்டருக்கும், எல்லா ரூம்லே இருக்கறவங்களுக்கும் ஸ்வீட் கொடுத்துட்டு போறது. முனி அக்கா இதையெல்லாம் பார்க்க மட்டுமே செய்திருக்கிறார். முனி அக்காக்கிட்டே கல்யாணப் பத்திரிக்கை கொடுக்கறதுக்கு மட்டும் எல்லோருக்கும் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும். ஆனா முனி அக்கா அதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க. 'கண்டிப்பா வரேம்ப்பா' ன்னு சொல்லி வாங்கிக்குவாங்க. ஆனா போக மாட்டாங்க.

மாசம் ஒருதடவை ஊருக்கு போவாங்க. நார்த் மெட்ராஸ் தாண்டி ஏதோ ஒரு கிராமம். பஸ்ஸுலே இரண்டு மணிநேர பயணம். தம்பி குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் அல்லது துணிகள் வாங்கிச் செல்வார். வந்தபின், குழந்தைகள் இவரிடம் சொன்னதை விளையாடியதை சொல்லிக்கொண்டிருப்பார். முனி அக்காவிற்கு ரத்னா -ன்னு ஒரு ஃப்ரெண்ட். அந்த ஃப்ரெண்டோட அத்தை சைதாப்பேட்டையில் இருந்தாங்க. அவங்க ரிடையர்டு ஆன டீச்சர். அவங்க இப்போ தனியா இருந்ததால், முனி அக்காதான் அவங்களுக்கு துணை. அவங்களை டாக்டர்கிட்டே கூட்டிட்டு போறது, அவங்ககூட கடைக்குப் போறதுன்னு. முனி அக்காவிற்கு சென்னையில் இருந்த ஒரே உறவு அந்த டீச்சர் மட்டுமே. காலையிலே எட்டு மணிக்கு ஆபிஸ்...அதை விட்டால் ஹாஸ்டல்...சனிக்கிழமைதான் அக்காவுக்கு லீவு...லீவுவிட்டா அந்த டீச்சரின் வீடு. இதுதான் முனி அக்காவோட உலகம்.


எப்பவாவது, சுயஇரக்கமும், தனிமையும், எதிர்காலத்தைப் பத்தின பயஉணர்வும் மேலோங்கறப்ப ராத்திரி நேரங்கள்ல மட்டும் முனி அக்கா விரக்தியா தன்னோட மனநிலைய எங்ககிட்ட பகிர்ந்துப்பாங்க. அதுல 'நீங்களும் சீக்கிரம் கல்யாணமாகி போகப்போறவங்கதான்... நான் இதே ஹாஸ்டல்ல இப்ப மாதிரியே கிடந்து உழல போறேன்'னு ஒரு ஏமாற்றத் தொனி இருக்கும். நானும், ஹெப்ஸியும் சும்மா இருக்காம, 'பேப்பர்லே விளம்பரம் கொடுக்கலாம்க்கா,யாராவது உங்களுக்கேத்த மாதிரி இருப்பாங்க' -ன்னு முனி அக்காவை சம்மதிக்க வச்சு, 'தினமணி' - 'ஞாயிறுமணி'ல இலவச விளம்பர பகுதிக்கு எழுதி போட்டோம். அதைப் பார்த்துட்டு நாலு பதில்கள் வந்துச்சு.
அதுல ஒருத்தர் கோவைலேந்து - வயது 45 இருக்கும். வேலை எதுவும் இல்லை. கல்யாணத்துக்கு அப்புறமா வேலைக்கு முயற்சிப்பாறாம். ஆனா, அக்கா கண்டிப்பா வேலைக்கு போகணுமாம். ரெண்டாவது ஆளு - செங்கல்பட்டுலேந்து - அவருக்கு கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்க. மனைவி இல்ல. வயசு 50க்கு மேல. மூணாவது - நாமக்கல். வயசு 49. இவருக்கும் அக்கா ரெண்டாம் தாரமம வேணுமாம். வேலை ம்ஹும். கல்யாணத்துக்கு அப்புறமா சென்னைக்கு வந்துடறாராம். நாலாவதும் இந்த மாதிரியே ஒருத்தர். சரியா நினைவுல இல்ல...


முனி அக்காவுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சு. அவசரகதில ஓடிட்டு இருக்கற தன்னோட வாழ்க்கைல ஒரு மாற்றம் வேணும்னுதான் அக்கா கல்யாணத்துக்கே சம்மதிச்சாங்க.
' இதையெல்லாம் நம்பி எப்படி கல்யாணம் பண்ணிக்கறது' னு தூக்கிபோட்டுட்டாங்க. இப்பதான் ஒரு திருமணத்துக்கு திருமண ஏற்பாட்டாளர்கள் அப்படீங்கற தொழில் செய்யறவங்களோட அவசியம் புரிஞ்சுது. அது அதிர்ச்சியாவும் இருந்தது. அதைவிட பேரதிர்ச்சி, பதிலளிச்சவங்க எல்லாருமே முனி அக்காவோட வேலைய முன்வைசே காயை நகர்த்தியிருந்தது. இதுக்கு அப்புறம் கொஞ்ச நாள்ல ஹாஸ்டல் புதுப்பித்தல் காரணமா ஆளுக்கொரு பக்கம் பறந்துட்டோம். என்னைக்காவது முனி அக்கா தொலைபேசுவதோட சரி.



இப்பவும், முனி அக்கா அதே ஹாஸ்டல்ல அதே ரூம்லதான் வசிக்கிறாங்க. அந்த டீச்சருக்கு கேன்சர் வந்து ஆபரேஷன் நடந்திருக்கு. லீவு நாட்கள்ல அவங்களுக்கு துணையாக அக்கா இருக்காங்க.


அக்காவ பத்தி நினைக்கறப்ப எல்லாம், 78 வயசுல தன் வயசுல பாதி இருக்கறவங்களை கல்யாணம் செஞ்சுகிட்டு வாழ்ந்து, மறைஞ்சு போன ஜெமினி கணேசன் ஏனோ நினைவுக்கு வந்துகிட்டே இருக்காரு.


இடுகையின் கடைசியில் பேச்சு வழக்குக்கு மாற்றி தந்த பைத்தியக்காரன் அவர்களுக்கு நன்றிகள்!


Monday, February 22, 2010

Going Bananas

அருவியின் தளத்தை பராமரிக்கும் உமா மகேஸ்வரன் அவர்கள் அருவியின் குழந்தைகளுக்கான வீட்டுக்கல்வி புத்தகங்கள் இடுகையின் வாயிலாக தொடர்பு கொண்டார். அவரிடம் அருவியின் முதல் ("நாய் வால்") மற்றும் இரண்டாம் நிலை ("முயல்குட்டியும் போலீசுகாரரும்") மெல்லக் கற்போம் புத்தகங்களின் சில பிரதிகள் உள்ளன.

அருவி புத்தகங்களைப் பெற அவரது மின்னஞ்சல் முகவரி aruvibooks@gmail.com.
அவரது, பெங்களூர் முகவரியை அருவியின் இந்தப் பக்கத்திலும் காணலாம்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் மூன்றாம் ("சுண்டெலிக் கதைகள்") மற்றும் நான்காம் ("முதலைக் கதைகள்") நிலை புத்தகங்களும் அவரிடம் கிடைக்கப் பெறலாம்.




"கீழே பாரு"

பார்த்தேன்.

"மேலே பாரு"

பார்த்தேன்

"அந்த சைட் பாரு"

பார்த்தேன்.

"இந்த சைட் பாரு"

பாத்தேன்.

"தலையை சொறி."

சொறிந்தேன்.

"நீ மங்க்கி"!

பப்பு புதிதாக பள்ளியிலிருந்து கற்றுக்கொண்டு வந்திருக்கும் விளையாட்டு.
தலை சொறிவதைத் தொடர்ந்து, பனானா சாப்பிடு, மரத்துலே ஏறு என்று கட்டளைகள் பெற்று
'மங்க்கி'யாக மாறிக் கொண்டிருந்தேன்.


'இப்போ நீ என்னை சொல்லு' என்று சொன்னதைத் தொடர்ந்து நானும் 'பனானா சாப்பிடு' என்று சொன்னதும் 'நான் உன் ஃப்ரெண்டு இருக்க மாட்டேன்." என்று மிகவும் கோபித்துக்கொண்டாள். (எந்த ஜோதிட சிகாமணியாலும் அறிய முடியாத ரகசியம் - பப்பு எதற்கெல்லாம் எப்போதெல்லாம் என் ப்ரெண்டாக இருக்க மாட்டாள் என்பதும் 'நான் எப்போவும் உன் ப்ரெண்டே இருப்பேன், யார் ஃப்ரெண்டும் இருக்க மாட்டேன்' என்பதும்!

அவளை 'கேரட் சாப்பிடு' என்றும் 'தும்பிக்கையாலே தண்ணி குடி' என்றும் சொன்ன பிறகே சமாதானமானாள்.

G(r)oing Bananas!

Sunday, February 21, 2010

ஐ ஃபார் ...

...ஐடிகார்ட்!

ஸ்கூல்லே காலேஜ்லே கொடுப்பார்களே - லாமினேட் பண்ணின ஐடிகார்டு. அது இல்லீங்க...இது வேற! பட்டையா இல்லேன்னா உருண்டையாக பஞ்சு மாதிரி கயிறுலே கம்பெனி பேரு எழுதி கழுத்திலே போட்டிருப்பாங்களே..அந்த ஐடி கார்ட்!

கொஞ்சம் பட்டையான கயிறு, அதில் எழுத்துகள் அழிஞ்ச மாதிரி எழுதி இருந்தா - டிசிஎஸ். உருட்டிய கயிறாக இருந்தால் அது சிடிஎஸ். கொஞ்சம் பெரிய பட்டையாக இருந்தால் பொலாரிசிஸ். இப்படி எழுத்துகள் சரியா தெரியாவிட்டாலும், ஐடி கார்டு தொங்கும் கழுத்துகளை பார்த்தே கண்டு பிடித்துக்கொண்டிருப்போம் , நானும் லதாவும். எங்கே? பஸ் ஸ்டாப்பிலேதான்.

இந்த ஐடி கார்டு போட்டவர்கள் பஸ் ஸ்டாப்பை விட்டு தள்ளி நிப்பார்கள், அவர்கள் கம்பெனி பஸ்ஸுக்காக. கையிலே டப்பர்வேர். சிலர் கையில் ஃபைல் இல்லேன்னா டோராவோட பேக்பேக். 'காக்கா வாயிலே வடை ' கண்ட நரியாக நாங்களும் ஐடி கார்டையும் வால்வோ பஸ்ஸையும் பார்ப்போம். ஆனால், ரெசஷனில் கிடைத்ததோ சென்ட்ரல் கவர்ன்மெட் ப்ராஜக்ட் அசிசிஸ்டெண்ட் வேலை. அதில் கிடைத்த ஐடி கார்டை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு பர்ஸுக்குள் வைத்துக்கொண்டோம். அதுவோ, ஸ்கூல் பசங்க ஐடி கார்டே பரவாயில்லை என்பது போல இருந்தது! எங்கள் ஸ்டாம்ப் சைஸ் ஃபோட்டோவை ஒட்டி அதில் எந்த டிபார்ட்மெண்ட், சயிண்டிஸ்ட். இன்.சார்ஜ் கையெழுத்து/கைட் கையெழுத்து, அப்புறம் அட்மின் பொறுப்பாளரின் ஐடிகார்டு, பத்தாததற்கு எங்களின் கையெழுத்து! இதை யாருக்காவது கழுத்தில் மாட்டிக்கொள்ள ஆசை வருமா?! (அப்படிப்பட்ட ஐடி கார்ட் சுமந்து இண்ட்டெலிஜென்ட் சிஸ்டம் கோட் அடிச்சத்து தனிக் காவியம்! )

காலேஜுலே கான்வெகேஷனுக்கு வந்த சீனியர்ஸ் நிறைய கதை சொல்லி போயிருந்தார்கள். அடுத்த மாசம் நான் யூஎஸ் போறேன், எங்க ப்ராஜக்ட் அப்படி, இப்படி -ன்னு. மறக்காம சொல்றது, 'ப்ராஜக்ட்க்கு வரும்போது உன்னோட ரெஸ்யூம் அனுப்பு'ன்னு விசிட்டிங் கார்டு கொடுப்பாங்க. அப்படி கொடுக்கும்போது அவங்க பையிலே இருக்கற ஐடி கார்டும் எங்க கண்லே படும். அதையும் ஒரு பார்வை பார்த்துட்டு, எப்படியும் நாமளும் யூ எஸ் போகப்போறோம்னு இமெயில் ஐடி கூட நாங்க usa.net லே வைச்சிருந்தேன். எங்க பிசிஏ பேட்சே அப்புறம் usa.net க்கு மாறினது பொறுக்காம அந்த சர்வரே படுத்துடுச்சு, கொஞ்ச நாள்லே.

அதை விடுங்க, ஐடி கார்டு விஷயத்துக்கு வருவோம். எப்படியாவது, ஒரு ஐடி கார்டு பாக்கியம் கிடைக்கணும்னு சென்னையிலே இருக்கற ஒரு கம்பெனி விடாம நாங்க ரெஸ்யூம் கொடுத்து முடிச்சிருந்தோம். ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஒரு மெயில் பார்வர்டு இருந்தது - excel ஃபைல்லே சகட்டுமேனிக்கு எல்லா கம்பெனிகளின் HR மெயில் ஐடி, கன்சடல்ன்ஸி ஐடி எல்லாம் இருக்கும். அது வழிவ்ழியா சுத்தி எப்படியாவது ப்ரெஷர்ஸ் கையிலே கண்டிப்பா மாட்டிக்கும். அப்போ ஃப்ரெஷ்ர்ஸுக்கு உதவ சேத்தனாஸ் -ன்னு ஒரு க்ரூப்பே இருந்தது. சேத்தனா - அவங்க எத்தனை பேரு லைஃப்லே ட்யூப்லைட்
போட்டு பொட்டு வைச்சிருக்காங்கன்னு தெரியாது...ஆனா, தினமும் சேத்தனாக்கு நன்றி சொல்லி மெயில் வந்துக்கிட்டிருக்கும். தினமும், எங்கே வேலை காலி, ஃப்ரெஷ்ர்ஸ் எங்கே தேவைன்னு அருமையா கடமையா அனுப்புவாங்க. இப்படி சேத்தனா புண்ணியத்துலே எங்க ரெஸ்யூம் எல்லா கம்பெனி டேட்டாபேஸிலேயும் இருந்தது. ஆனா, யாரும் கூப்பிடத்தான் இல்லை.

ஒரு சில ஐடிக்கு CV அனுப்பினதும் உடனே ரிப்ளை வரும். அது தானியங்கி மறுமொழிதான். ஆனா அதுக்கே அன்னைக்கு ராத்திரி கலர் கலர் கனவா வரும். ஐடி கார்டை மாட்டிக்கிட்டு டப்பர்வேர் வச்சிக்கிட்டு பஸ்ஸுக்கு நிக்கற மாதிரி எல்லாம்! ஆனா , அந்த தானியங்கி மறுமொழிக்கு அப்புறம் எந்த மெயிலும் வராது. குறைஞ்சது - 2+ வருட முன் அனுபவம் இருக்கணுமாமே! ஆறு மாசம் எக்ஸ்பிரியன்ஸ் வைச்சிருக்க நாங்க எங்கே....

அப்போ வொர்க்கிங் உமன்ஸ் விடுதியிலே தங்கியிருந்தோம். ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை நானும் லதாவும் அழுக்குத் துணியை மூட்டை கட்டிக்கிட்டு ஆம்பூருக்கு போய்டுவோம். 'வரோம்'னு பெரிம்மாவுக்கு மெசேஜ் அனுப்பினா போதும் (மறக்க முடியுமா....Nokia 3210) . சப்பாத்தியும் சிக்கன் க்ரேவியும் செஞ்சு வைச்சுக்கிட்டு பெரிம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க. ம்ம்ம்ம்....ஓக்கே என்ன சொல்ல வந்தேன்...சென்னை டூ ஜோலார்பேட்டுக்கு லிங்க்-ன்னு ஒரு ட்ரெயின் இருக்கும். சென்னையிலேருந்து சாயங்காலம் 5.50 க்கு கிளம்பி 9.45 க்கு எங்க ஊரிலே நிக்கும். துரித கட்டை வண்டி.

அதுலே எங்க கண்லே படறவங்க எல்லாம் கழுத்துலே இந்த ஐடி கார்டோடவே வந்திருப்பாங்க. என்னவோ அதை கழட்டத்தான் நேரம் இல்லாத மாதிரி. ' ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிலே நாங்களும் சேருவோம். அப்போ ஐடியோடவே நாங்களும் வீட்டுக்கு போய் இது மாதிரி சீன் போடல... எங்க பேரை...யானைக்கு தும்பிக்கைன்னா மனுஷனுக்கு நம்பிக்கை' அப்படின்னு மனசுக்குள்ளே நினைச்சுப்போம். ட்ரெயின்லே ஏறி உட்கார்ந்தபின்னும் அதை கழட்ட மாட்டாங்க. ஆனா, அதுலேயும் ஒரு நல்லது இருந்தது. ஏன்னா, நாங்க போய் அவங்க வசிக்கற ப்லாட்பார்ம், ஏரியா (domain) வெல்லாம் விசாரிக்கறதுலே அவங்க விசிட்டிங் கார்டை (அதை பிசினஸ் கார்டுன்னு சொல்லனுமாம்) கொடுத்து சிவி அனுப்ப சொல்லுவாங்க. திங்கட்கிழமை அவங்க ஆபிஸ்லே போய் நிக்கறாங்களோ இல்லையோ..அதுக்கு முன்னாடி அவங்க மெயில் பாக்ஸை எங்க சிவி போய் தட்டிக்கிட்டிருக்கும். பலனென்னவோ பூஜ்யம்தான்.

கடைசிலே, நந்தனத்துலே இருந்த ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிலே நானும் அடையாரிலே லதாவும் செட்டில் ஆனோம். ஐடிகார்டும் கைக்கு வந்தாச்சு.நேவி ஃப்லூ கயிறு. அதுலே என்னோட ஃபோட்டோ போட்டு எம்ப்லாயி கோட் , ப்ளட் க்ரூப் எல்லாம் இருந்தது. தாலிக்கு தமிழ்சினிமாவிலே கொடுக்கற மரியாதைதான்..கண்ணுலே ஒத்திக்காத குறை. கூடவே வந்தது - விசிட்டிங் கார்டு..ச்சே..பிசின்ஸ் கார்டு. ஆனா, அதை எங்கே கொடுக்கறதுன்னு தெரியாம (கடைசிலே ஏதோ லோன் வாங்கதான் யூஸ் ஆச்சு!) முழிச்சுக்கிட்டு இருந்தப்போ பெரிம்மாவும், அம்மாவும் ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக்கிட்டாங்க. மீதி இருந்ததை ஸ்டெல்லா( ஜூனியர்) எடுத்துக்கிட்டா. அநேகமா எல்லா ஜூனியர்ஸ் கைக்கும் போயிருக்கும். ஒரு மாசத்துலே இன்னொரு பேட்ச் பிசினஸ் கார்டு அப்ளை பண்ணது நானாத்தான் இருப்பேன். HR -ஏ ஆடிப்போய்ட்டாங்க! பெரிம்மாஅதை எங்க ஸ்கூல்லே போய் என்னோட டீச்சர்ஸ்கிட்டே காட்டி என் அருமை பெருமையை ரெண்டு இன்ச் உயர்த்தினாங்க. அவங்க பையிலே எப்போவும் அவரசத்துக்கு உதவும் ரேஞ்சுலே ஒரு பதினைஞ்சு கார்டு இருக்கும்னா பார்த்துக்கோங்களேன்.

அந்த கம்பெனியை விட்டு வரும்போது ஆக்சஸ் கார்டை மட்டும் கொடுத்துட்டு, அந்த ஐடிகார்டை HR - கிட்டே கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன்.

'எந்த கம்பெனியிலேயும் ரெண்டு வருசத்துக்கு மேலே இருக்கக் கூடாது, தாவிக்கிட்டே இருக்கணும்' - ன்னு ஒரு உன்னத நோக்கத்தோடதான் வேலைக்கு போகவே ஆரம்பிச்சோம். ' ஏன்னா அப்போதான் ஸ்டேக்னண்ட் ஆக மாட்டோம்'னு ஒரு காரணம் வேற. அதன்படி - அடுத்த ரெண்டாவது வருசத்துலே பெங்களூர் தாவல். அங்கேயும் ஒரு ஐடி கார்டு - போன தடவை இருந்த பரவசம் இங்கே மிஸ்ஸிங். ஆனா ஏதோ கலெக்‌ஷன் மாதிரி அந்த விசிட்டிங் கார்ட் மட்டும் சேர்ந்துகிட்டு இருந்தது. அதுலே ஒரு செட்டை என் தம்பி சீட்டு கட்டாவும், பப்பு இப்போ ஏபிசிடி விளையாடவும் எடுத்துகிட்டாங்க.

பெங்களூர்லே ஆட்டோக்காரங்க கடமைன்னா காட்பாடியா இருப்பாங்க.சாயங்காலம் ஆறுமணிக்கு மேலே ஐந்து நிமிஷம் ஆகி இருந்தாலும் ஒன் அண்ட் அ ஹாஃப்-ன்னு சொல்லுவாங்க. அதாவது ஒன்றரை பங்கு சார்ஜ். அதனாலே நானும் கலைவாணியும் ஐடி கார்டை கழட்டி பைக்குள்ளே வச்சிக்கிட்டு ஆட்டோக்காரர்கிட்டே பேரம் பேசுவோம். அப்போதான் ஐடிகார்டு மேலே இருந்த மோகம் கொஞ்சம் கொஞ்சமா குறைந்திருக்கணும்னு நினைக்கறேன். சரி, பெங்களுரை நாம முன்னேத்தினது போதும், இனி சிங்காரச் சென்னைக்குத்தான் என் சேவைன்னு முடிவு செஞ்சு இங்கே வந்து சேர்ந்தப்புறம் - கொஞ்ச நாள் வரைக்கும் ஐடி கார்டை மேலே மோகம் இருந்துக்கிட்டு தான் இருந்தது. ஆனா, ஆட்டோவிலே போகணும்னா மட்டும் அதை மறைச்சு பைக்குள்ளே வச்சிக்கிறதுன்னு போய்ட்டு இருந்தப்போதான் ஒரு நாள் ஹெச் ஆர்கிட்டே இருந்து மெயில் ஒன்னு வந்தது - அதாகப்பட்டது, ஐடி கார்டு தொலைந்தால் ரூபாய் 250 கொடுத்தால் புதிது வாங்கிக்கணும்! அதுக்கு ரெண்டு நாள் முன்னேதான் கிளிப்லேருந்து என்னோட ஐடிகார்டு கழண்டு நல்ல வேளையா ஸ்கூட்டிலேயே விழுந்திருந்தது. 'எதுக்குடா வம்புன்னு' அப்போ கைப்பைக்குள்ளே போட்டதுதான்.

க்ளிப் டைப் ஐடி கார்டு வந்தப்பறம் பழைய ஐடி கார்டோட மகிமை இல்லை. ஆனாலும், ஐடி கார்டு மாட்டின கழுத்தை எங்கேயாவது பார்க்க நேர்ந்தா மட்டும் லேசான கொசுவத்தி மட்டும். ஏன்னா, ‘ஐடி கார்டைவிட ஏடிஎம் கார்டுதான் முக்கியம்'னு லைஃப் உணர்த்தினதாலே கூட இருக்கலாம். (நல்லாத்தானே போய்கிட்டிருந்தது எதுக்கு இந்த பஞ்ச் -ன்னு கேக்கறீங்களா...ஹிஹி..எல்லாம் நெஞ்சை பஞ்சாக்கி பஞ்சை பஞ்சராக்கும் கலைதான்!)

பைதிவே, நேத்து ஒரு கால். என்னோட பிசினஸ் கார்டை வாங்கின அதே ஸ்டெல்லா-கிட்டேருந்து.... 'ஹேய், முல்லை எனக்கு ஒரு வேலை வாங்கித்தாயேன்னு'! (இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது!!)

“பையனுக்கு ஐஞ்சு வயசாகிடுச்சு..வீட்டுலே இருந்து பார்த்துக்க வேணாம். எல்லோரும் வேலைக்கு போறத பார்த்தா எனக்கும் ஆசையா இருக்கு, ப்லீஸ், ஒரு வேலை வாங்கி கொடு முல்லை-ன்னு ஒரே அழுகை! அதுலே சுத்த ஆரம்பிச்ச கொசுவத்திதான்! என்ன பண்றது...நானும் ஐ ஃபார் ஐம்பது காசு, ஐ லவ் யூ, ஐஸ் ஐஸ்-ன்னு சிலபல க்ளிசரின் முயற்சியை வச்சிருந்தேன். என்னையும் மீறி இந்த பஞ்சராக்கும் இடுகை வந்துடுச்சு...நண்பர்களே மன்னிப்பீர்களாக! :-)

Friday, February 19, 2010

மணநாள் வாழ்த்துகள் மைஃபிரண்ட்!!


இன்று மணவிழா காணும் மணமக்கள் "மை ஃபிரண்ட் அனு & விஜயகுமார்" அவர்களுக்கு வாழ்த்துகள்!!


மை ஃபிரண்ட்-க்காக சிறப்பு கவிதை!


நீயோ மை ஃபிரண்ட்!
நாங்கள் உன் ஃப்ரண்ட்!!
நினைச்சு பார்த்தா
எல்லோரும் ஃபிரண்ட்!!!
வாழ்த்துகிறோம்
வாழ்க்கை எப்போதும்

உன்
பெஸ்ட் ஃபிரண்ட்!!!!

Thursday, February 18, 2010

ஜூரம் வந்த குட்டீசை கவனித்துக் கொள்ள 101 வழிகள்

மூக்கு ஒழுக ஆரம்பிக்கும்போது கண்டுக்கொள்ளக் கூடாது.

அடுத்தநாள், தூதுவளை கொடுத்துவிட்டு 'சரியா போய்டும்' என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.

சளியிலிருந்து க்ரோசின் கொடுக்க வேண்டிய அளவு உடல் சூடாகும். இரண்டு முறை க்ரோசின் கொடுக்க வேண்டும் - நான்கு மணிநேர இடைவெளிகளில்!

'தண்ணியிலே ஏன் விளையாட விடறே..." என்றும்
'மிட்டாய், க்ரீம் பிஸ்கெட் வாங்கி கொடுக்காம இருக்கறது' என்றும் சண்டையிட வேண்டும்.

'கை கழுவாம எதையும் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா' என்றும்
'ஸ்கூல்ல உன் பாட்டில்ல இருக்கற தண்ணியைதான் குடிக்கணும், சரியா' என்று மிரட்ட வேண்டும்.

'சாயங்காலமானா கதவை சாத்த வேண்டியதுதானே' என்று மாறி மாறி (கொசுவாக) கடித்துக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட சண்டை அனைத்தும் ஹாஸ்பிடலில் டாக்டருக்கு காத்திருக்கும்போது நிகழ்த்த வேண்டும்.

அரை-அரை நாளாக விடுப்பு எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேல் லீவு எடுக்க முடியாத நிலை வரும்போது - பொறுப்பான, சுயமரியாதை உள்ள, தன்னம்பிக்கையான, நார்மல் மனநிலை கொண்டவர் எப்படி நடந்துக் கொள்வாரோ அப்படி நடந்துக் கொள்ள வேண்டும்!

"பெரிம்மா, எப்போ வர்றீங்க? நாலு நாளா பப்புவுக்கு உடம்பு சரியில்லை,ஜூரம்"

"அம்மா, எப்போ வர்றீங்க?நாலு நாளா பப்புவுக்கு உடம்பு சரியில்லை,ஜூரம்"

- என்று போனுக்கு மறுமுனையில் இருப்பவர்களை கிறுகிறுக்க வைக்க வேண்டும்.

அப்புறம், அவர்கள் அடுத்த பஸ்ஸை பிடித்து வந்திறங்கியதும், அலுவலகம் வந்து ப்லாக் அடிக்க வேண்டும்.

Wednesday, February 17, 2010

Alternative Schools 'n' Mainstream Schools

பப்புவின் பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு சென்றிருந்தோம். அருகில் அமர்ந்தவர்களிடம் 'யாருடைய பெற்றோர்' என்ற அறிமுகத்திற்குப் பிறகு சகஜமாக பேசிக்கொண்டிருந்தோம். விழா ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்தன. எங்களுக்கு பின்னாலிருந்த வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் அதே அலைவரிசையை தொடர்ந்தார்கள். அப்போது சும்மா இருந்த என் காதை அங்கே விட்டு வைத்தேன். அதிலொருவர் சொன்னார்,

"நான் அடுத்த வருஷத்து அட்மிஷன் போட்டுட்டேன்,சார். வேளச்சேரியில் இருக்கே...XYZ. அந்த ரெயில்வே ஸ்டேஷன் இருக்கு இல்லீங்களா..அதே ரோடுலேதான் இருக்கு. இப்போ ரெண்டு வருஷமாதான் ஆரம்பிச்சிருக்காங்க...ஆனா என்ன, போகட்டும்னு போட்டுட்டேன் சார். ஆறு மாசமா என் பையன் (ஏதோ சொன்னார், புரியவில்லை) அதையே தான் படிச்சிட்டிருக்கான்” என்றார். அவர் சொன்ன பள்ளிக்கு நகரெங்கும் கிளைகள் இருக்கிறது. சொல்லப்போனால், நானும் கூட அடுத்த வருடம் அங்கு போட்டுவிடலாமென்று எண்ணித்தான் பப்புவை சென்ற வருடம் ப்ரீ-கேஜி சேர்த்தேன். ஆனால், பப்புவுக்கு இந்த பள்ளி பிடித்திருக்கிறதென்பதால் - நாங்களும் பள்ளியின் பாடங்கற்பிக்கும் முறையில் - செயல்பாடுகளில் திருப்தியடைந்திருப்பதால் - தற்போதைய பள்ளியிலேயே தொடர முடிவு செய்திருக்கிறோம். மேலும் மற்ற பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதமும் கலக்கமுற செய்தது.

ஆனால், எங்களுக்குள்ளும் கேள்விகள் வராமலில்லை.பப்புவின் படிப்பு குறித்து கேட்கும் யாவரும் என்னிடம் எழுப்பும் கேள்வி இது. "இப்போ ஓக்கே,மெயின்ஸ்ட்ரீம்லே வரும்போது ஓக்கேவா? அந்த சிலபஸ்லேர்ந்து மேல்படிப்புக்கு வரும்போது இது சரியா இருக்குமா, காம்பீட் பண்ண முடியுமா?


ஏனெனில், எந்த பாடப்பிரிவில் படித்தாலும், உயர்கல்விக்கு செல்லும்போது பெரும்பாலும் ஸ்டேட்போர்ட்க்கே மாற வேண்டி உள்ளது. நாம் அரசு பள்ளிகளிலும் மாநகராட்சி பள்ளிகளிலும் படித்து வந்திருந்தாலும் எத்தனை பேர் நமது பிள்ளைகளை அங்கு சேர்ப்போம். ( கண்டிப்பாக அங்கே சேர்ப்பதில்லை என்பதில் தனிகவனம் எடுத்துக் கொள்கிறோம். ) பெரும்பாலும், தனியார் பள்ளிகளில்தானே சேர்க்கிறோம். மெட்ரிக் பள்ளிகளை விரும்புமளவு அரசு பள்ளிகளை யாரும் விரும்புவதில்லை. (அரசு பள்ளிகளில் முதலில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதே ஒரு தனி டாபிக்!)

பக்கத்துவீட்டு மோனேஷ். ஐந்து வயதாகிறது. ஐந்து வயதுக்கு அவன் எவ்வளவு விளையாடவேண்டும். என்ன ஆட்டம் போட வேண்டும். கற்பனைகளும் கிண்டல்களும் கொப்பளிக்கும் அவனிடம். எந்த கேட் அல்லது சுவராக இருந்தாலும் நொடியில் ஏறி நிற்பான். பள்ளியிலிருந்து நான்கு மணிக்கு வந்தால் படுத்து தூங்கிவிட்டு ஆறு அல்லது ஏழு மணிக்கு எழுத ஆரம்பிப்பான். எழுதுவான்...எழுதிக்கொண்டே இருப்பான். பின்னர், கதைகளை மனப்பாடம் செய்வான். சனி-ஞாயிறுகளில் இந்தி ட்யூஷன். என்றைக்காவது ஞாயிறு மாலைவேளைகளில் கால்பந்துடன் அவனை காணலாம். ஐந்து வயது சிறுவன் - என்ன எழுதுகிறானென்றே தெரியாமல், டீச்சர் திட்டுவார் அல்லது முட்டியில் அடிப்பாரென்று பயத்தில் எழுதுவது என்ன கல்விமுறை? வகுப்பில் எழுந்து சொல்ல வேண்டுமென்று கதையை ‘ஸ்டோரி டெல்லிங்” என்ற பெயரில் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது - மனப்பாடம் செய்யும் ஆற்றலை வேண்டுமானால் வளர்க்கலாம். ஆனால், யோசிக்கும் திறனை...கற்பனையை...தனித்துவத்தை வளர்த்தெடுப்பதில்? மேலும் பள்ளிகள் உருவாக்கும் மன அழுத்தங்கள்!!

மெட்ரிக்கும் ஸ்டேட் போர்டும் படித்து நீ உயரவில்லையா என்றும் கேட்கலாம். ஆனால், நாங்கள் கற்ற அந்தக் கல்வி - புதிதாக எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்ததை உபயோகிக்கக் கூடிய அறிவை மட்டுமே தந்திருக்கிறது.மனப்பாடம் செய்தோ அல்லது ஆசிரியர் குறித்து தரும் பகுதிகளை மட்டுமே படித்தோ அல்லது இந்த கேள்விகளுக்கான விடைகளை மட்டுமே படித்தால் போதுமென்ற கல்விமுறையை விட யோசிக்க வைக்க்கும் அல்லது தேடலுக்கான உத்வேகத்தை தரும் கல்விமுறை எத்தனை பேருக்கு வாய்க்கிறது? ஐம்பது பேருக்கு ஒரு ஆசிரியர் என்பதே இப்போது நடைமுறையில் இருக்கிறது. . மாணவரை புரிந்துக்கொண்டு அவருக்கேற்ற கல்வியை தரும், மாணவரை நன்கு புரிந்துக்கொண்டு மதிப்பிடும் முறை, மாணவர்-ஆசிரியர் உறவு எத்தனை பள்ளிகளில் இருக்கிறது? கீதாவால் இத்தனை மதிப்பெண் எடுக்க முடிந்தால் உன்னாலும் அதே மதிப்பெண்ணும் எடுக்க முடிய வேண்டுமே என்றுதான் சொல்லப்படுகிறதேயொழிய ஏன் அதே போல் எனக்கும் எடுக்க முடியவில்லை என்பது பற்றி எவரும் கவலை கொள்வதில்லை. கீதாவுக்கு பிடித்திருக்கும் பாடம் எனக்கும் பிடித்திருக்க வேண்டுமென்றுதானே எதிர்பார்க்கிறது நமது கல்விமுறை. இதற்கு, முதலில் சொல்லியிருக்கும் அந்த பெற்றோரின் கண்ணோட்டத்தையே எடுத்துக்காட்டாக காணலாம். விரைவில் தனது பிள்ளை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறார்.

ஸ்டேட் போர்ட் சிலபஸ் - இது மிகவும் எளிது. எல்லா அரசு பள்ளிகளும் பின்பற்றுவது.

மெட்ரிக் - ஸ்டேட் போர்டை விட கொஞ்சம் கடினம், ஆனால் CBSE படித்துவிட்டு வருபவர்களுக்கு மிக எளிது

CBSE - செண்ட்ரல் போர்ட் சிலபஸ்.மெட்ரிக்கைவிட கடினம். மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவது. (இதுலே படிச்சா, 'ஐஐடி
எண்ட்ரன்ஸ் ஈசி' என்பது வரையே எனது புரிதல்)


ICSE - இண்டர்நேஷனல் சிலபஸ். (இவை NRI -களையே மனதில் வைத்து ஆரம்பிக்கப்படுகின்றன என்பது போல தோன்றும்.)

இவை தவிர, ஹோம் ஸ்கூலிங். ஆனால் எத்தனை பேர் அதில் படிக்கிறார்களென்று தெரியவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தாலும் நேரடியாக எட்டாம் வகுப்பு எழுதிவிட்டு, மேற்படிப்புக்கு திறந்தவெளி பல்கலையில் சேரலாம். எட்டாம் வகுப்பு படித்தவர்கள் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாக +2 எழுதிவிட்டு கல்லூரிகளில்
சேரவும் வாய்ப்புள்ளது.

இவை தவிர, மாண்ட்டிசோரி பள்ளியும் அல்லது மாற்றுக்கல்வி நிறுவனங்களும் உள்ளன.

இந்த மாற்றுகல்வி நிறுவனங்கள்/மாண்ட்டிசோரி பள்ளிகள் ICSE திட்டத்தை பின்பற்றுகின்றன. மாற்றுகல்வி நிறுவனமாக சென்னையின் கிருஷ்ணமூர்த்தியின் The School- சொல்லலாம். அப்புறம் புகழ்பெற்ற ரிஷிவேலி.
பின்னர் நினைவுக்கு வருவது பில்லபாங்க்,அபாகஸ். பாண்டிச்சேரியின் ஆரோவில்லே. வேறு கல்விநிறுவனங்கள் இருந்தால் சொல்லுங்கள்.
ஆனால்,இந்த மாற்றுக்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பதும் பெருங்கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் கட்டணம் - நடுத்தர மக்களின் வசதிக்கு எட்டுவதாக இல்லை.


மாண்ட்டிசோரி/மாற்றுக்கல்வியில் அதற்கே உரித்தான நன்மைகளும் தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெரும்பாலும், இந்த பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் 1:20 என்ற விகிதத்திலேயே இருக்கிறார்கள். வகுப்பறையில் பயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படித்த நண்பர் ஒருவர் எனக்குண்டு. அவர் சொல்லுவார், எந்த மனஅழுத்தங்களுமே இருக்காது, நமக்கு எது பிடித்தமோ அதை தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ளலாம். யோகா,நீச்சல், ஸ்கீயிங்,நுண்கலைகள் முதலியன் இதில் அடங்கும். வீட்டுப்பாட டென்ஷன்கள் எனபது அறவே இல்லை. இயற்கையோடு இணைந்த சுற்றுபுற சூழல்.எல்லாவற்றுக்கும் மேல் மற்றவர்களுடன் போட்டி என்பதே இல்லை.நேற்று நான் என்ன செய்தேனோ இன்று அதைவிட நன்றாக செய்ய வேண்டும்..என்னையே நான் வென்றெடுக்க வேண்டியிருந்ததே தவிர புற அழுத்தங்கள் எதுவும் இல்லை.

அதற்காக மாற்று பள்ளிகளில் படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகளாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தார்கள் என்று சொல்லிவிடமுடியாதுதான். ஆனால், தனித்தன்மையுடனும், நல்ல ஆளுமையுடனும் வளர்கிறார்கள். ஆனால், மற்ற பாடத்திட்டத்தில் முதன்மையாக வர வேண்டும் என்ற டென்ஷனே வாழ்க்கையை ஆள்கிறது. தனக்கு எது சரியான பாதை என்பதை தேர்ந்தெடுக்க தடுமாற வேண்டியிருக்கிறது.

இவை நடுவில், தேர்வுகளை மாற்றியமைப்பது மட்டுமே தீர்வாகிவிடாது.பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதென்பதோ அல்லது நுழைவுத் தேர்வுகளை
ரத்து செய்வதென்பதோ அல்லது எல்லா கல்விதிட்டத்தினருக்கும் ஒரே நுழைவு தேர்வென்பதோ நிச்சயம் பலனளிக்காது. தேர்வுகளும் மதிப்பீடுகளும் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், தேர்வைக் குறித்து பெற்றோரும் ஆசிரியரும் புறக்காரணிகளும் கொடுக்கும் அழுத்தங்கள் தடுக்கப்பட வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வி என்பதை அளிக்காமல் எல்லோருக்குமான தேர்வுகளை எப்படி சமமாக்க முடியும்?

Monday, February 15, 2010

திலகு டான்ஸ்!

பப்பு, நீ என்ன டான்ஸ் ஆடப்போறே?

”திலகு டான்ஸ்! ”


கடந்த ஐந்தாம் தேதியன்று பப்புவின் பள்ளியில் ஆனுவல் டே. ராணி சீதை ஹாலில் நடந்தது. அண்ணா பல்கலை மற்றும் ஐ.ஐ.டி யிலிருந்து இரு விரைவுரையாளர்கள் தலைமை தாங்கவும், சிறப்புரை ஆற்றவும் வந்திருந்தார்கள். பாடல்கள், இந்திய கலாச்சார நடனங்கள்(பரதநாட்டியம், மோகினியாட்டம், பஞ்சாபி, குஜராத்தி, தெலுகு, அருணாச்சல பிரதேச நடனம்) மற்றும் வன பாதுகாப்பு நாடகம்.


'திலகு' டான்ஸ் வீடியோ - (திருட்டுத்தனமா ) கொஞ்சம்தான் ரெக்கார்ட் பண்ண முடிஞ்சுது! - தலையில் ஜிட்டு போட்டிருக்கறதுதான் பப்பு.






ஆஷிர்வாத் விளம்பரத்துலே சினேகா சப்பாத்தி செஞ்சு கொடுப்பாங்க...அப்புறம் அந்த குட்டி பொண்ணு நல்லா டான்ஸ் ஆடுவாங்க.....அதேமாதிரி, பப்புவும் திலகு டான்ஸ் நல்லா ஆடட்டுமேன்னுதான் சினேகாவை சப்பாத்தி செஞ்சு கொடுக்க கூப்பிட்டேன்!

வாழ்த்திய, பின்னூட்டமிட்ட, மடலிட்ட அனைவருக்கும் நன்றிகள்!

Friday, February 12, 2010

பப்பு டைம்ஸ்

பொதுவாக இதுவரை வீட்டில் சாமி கும்பிடுவதோ படைத்ததோ இல்லை. அம்மா வந்தால் அது நல்லநாளாக (!) இருந்தால் இலை போட்டு படைப்பார். பப்பு பார்க்க இலை போட்டு படைத்தது கடந்த பொங்கலின் போதுதான். எல்லாவற்றையும் ஆவலாக பார்த்துக்கொண்டிருந்த பப்பு, இலையில் சாப்பாடு போட்டதும் சாமி நிஜமாகவே அலமாரியிலிருந்து வந்து சாப்பிடப் போகிறார் என்று நினைத்துக் கொண்டாள். படைத்து முடித்த பின்னும் நெடுநேரம் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தாள். பப்புவின் அத்தை சாப்பிட அழைத்துக்கொண்டேயிருந்தார்.
‘நாம் போய் சாப்பிட்டு வந்துடலாம், அதுக்குள்ளே சாமியும் சாப்பிட்டிருக்கும்' என்ற அத்தையிடம், 'ஏன் சாமி நாம போனப்புறம் சாப்பிடும்' என்று கேட்டுக்கொண்டிருந்தாள். அத்தை அவளது கையை பிடித்து அழைத்த போது, அலமாரியை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஒரு விரலை உயர்த்தியபடி சொல்லிச் சென்றாள்,

”சாமி, ஃபுல்லா சாப்பிட்டிருக்கணும் சாமி, இல்லேன்னா அடி விழும் சாமி”




புத்தகத்தை மிதித்து விட்ட பப்புவிடம் 'சாமி, தொட்டு கும்பிடு' என்றார் அம்மா.
'ஏன் ஏன்' என்று கேட்டுக்கொண்டிருந்த பப்புவிடம் அம்மா விளையாட்டுக்காக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார். பப்பு கேட்டாள்,

‘ஏன், சாமி பாவமா?'



படம் பார்த்து வித்தியாசங்கள் கண்டுபிடித்துக் கொண்டிருந்தோம். இரண்டு படங்களிலும் இருந்த ஹெலிகாப்டரைப் பார்த்து சொன்னாள்,

இதுலே ஸ்பீடா சுத்துது...இதுலே ஸ்பீடா சுத்தல!




இதோட தமிழ் ட்ரான்ஸ்லேஷனை சொல்றீங்களா, ப்ளீஸ்?!

i smallgirl that time come one doras no...this time y not come?