Thursday, August 20, 2009

Goodbye Jayshree!

”மனைவி கொலை, கணவன் கைது”

”இளம்பெண் கொலை, கணவன் மேல் சந்தேகம்” - இவையெல்லாம் எனக்கு மற்றுமொரு செய்தியாகவே இருந்தது, இரண்டுத் தெருக்களுக்கு அப்பால் நடக்கும் வரை!

ஜெயஸ்ரீ. சமீபத்தில், மிகச் சமீபத்தில், ”மடிப்பாக்கத்தில் இளம்பெண் கொலை”யென்று கடந்த திங்கட்கிழமை முதன்மைச் செய்தியானார். “தனிக்குடித்தனம் போக வற்புறுத்தினார்” என்பதே காரணமென்று கணவரின் வாக்குமூலம் சொல்கிறது. இந்நிகழ்வு, எனக்குச் சினத்தையும், ஆற்றாமையையும், குழப்பங்களையும் ஒருசேர உண்டாக்குகிறது!!

ஜெயஸ்ரீயின் கொலை திட்டமிட்டது அல்ல. அந்த நிமிடத்தின் கோபம் அல்லது வெறி..ஈகோவின் வெளிப்பாடாக சொல்லப்பட்டாலும், காதலித்து மணந்தவளை கொலை செய்யுமளவிற்குக் கொண்டுச் சென்றது எது? பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாமல் போய் விட்டதா?

ஒரு பெண் ஏன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறாளென்பதற்கு ஆயிரம் காரணங்களுண்டு. ஒரு மருமகளாக நீங்கள் இல்லாத வரையில், அதைப் புரி்ந்துக்கொள்ள இயலுமா என்பது சந்தேகமே! ஆனால், பிரச்சினைகளில்லாத குடும்பங்கள் இருக்கிறதா என்ன? அதற்கெல்லாம் இதுதான் தீர்வா? தனிக்குடித்தனம் போக ஒரு பெண் வற்புறுத்தினால் இதுதான் முடிவா? என்னவொரு குடும்ப அமைப்பு இது?

பெற்றோரை/முதியவர்களை பராமரிப்பது என்றால் ஏன் நாம் பையனின் பெற்றோர் என்றே அனுமானித்துக்கொள்கிறோம்?! ஒரு பையன்/ஆண் பெற்றோரோடு கடைசிவரை வாழ அனுமதிக்கிற நமது குடும்ப அமைப்பு, பெண்ணின் பெற்றோர் பெண்ணோடு வாழ்ந்தால் ஏன் நக்கலாய் சிரிக்கிறது? பையனின் பெற்றோரை, மருமகள் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிற சமூகம், பெண்ணின் பெற்றோரை(பெண்களை மட்டுமே பெற்றவர்களின் நிலைக்) குறித்து சிந்திக்க மறுப்பது ஏன்?

அப்படியே, பெண்கள், தங்கள் பெற்றோரை பராமரிக்க வேண்டுமானால் (அதுவும் பெண்ணின் சம்பளத்திலேயேதான்) திருமணத்திற்கு முன் ஒப்புதல் பெற வேண்டியிருப்பது ஏன்? பையனின் கடமை என்பது தன் பெற்றோரைப் பராமரி்ப்பதாக இருக்க, பெண்ணின் கடமை என்பது புகுந்த வீட்டினரைப் பராமரிப்பதாக மட்டுமே மாறிப்போவதேன்?! பெண்ணின் பெற்றோர், பெண்ணோடு இருந்தாலும் அது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும் இதர இத்யாதிக் கடமைகளுக்காகவும்தான்! (இதற்கு அயல்நாடுகளில் செட்டிலாகி இருக்கும் என் தோழிகள்தான் உதாரணம். பிள்ளைப்பேறின்போது அல்லது ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனே விமானமேறுபவர்கள் பெண்ணின் பெற்றோர்களாகத்தான் இருக்கிறார்கள்!! அல்லது, உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனே அணுகக்கூடியவர்களாக பெண்ணின் பெற்றோர்களே இருக்கிறார்கள்!)

இந்த அமைப்பு பையன்களுக்கு எவ்வித இழப்புகளையும் கொடுப்பது இல்லை...வீட்டைவிட்டு இன்னொரு வீட்டிற்குச் சென்று வாழ வேண்டியதில்லை..அப்படியே இருந்தாலும் அது ”சொல்ல மறந்த கதை”யாகி விடுகிறது!! புது மனிதர்களுடன் ஒரே வீட்டில் வாழ வேண்டிய கட்டாயமில்லை..அவர்களை நேசித்துதான் ஆக வேண்டுமென்ற அவசியமேற்படுவதில்லை...அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை!சொந்தப் பெற்றோரைப் பார்க்க வேண்டுமெனில் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை!!

இப்படி ஒரு அமைப்பை யார் உருவாக்கினார்கள்?
இந்த அமைப்பு இன்னமும் ஏன் மாறாமலிருக்கிறது அல்லது மாற்றாமலிருக்கிறோம்?

இந்த அமைப்பு நன்மைப் பயக்கிறது எனில் ஜெயஸ்ரீகளின் உயிரை ஏன் காவு வாங்குகிறது?

56 comments:

கோவி.கண்ணன் said...

//இப்படி ஒரு அமைப்பை யார் உருவாக்கினார்கள்?
இந்த அமைப்பு இன்னமும் ஏன் மாறாமலிருக்கிறது அல்லது மாற்றாமலிருக்கிறோம்? //

நீங்கள் சொல்வது சரி !

பெற்றோர்கள் என்று பொதுவாகச் சொல்லிவிட்டீர்கள். பெண்கள் மருமகளாக இருந்து தான் மாமியார் ஆகிறார்கள், பெண்ணின் கஷ்டம் அனைத்தும் தெரிந்திருக்கும், ஆனால் அதை மற்றொரு பெண்ணுக்கும் நடத்திவிடுகிறார்கள்.

குடும்ப செண்டிமெண்ட் என்பதைவிட தாய் செண்டிமெண்ட், தாயின் பிடிவாதம் திருமண ஆண்களை மிகவும் பாடாகப் படுத்துகிறது, பையனின் தந்தைக் கூட திருமணம் ஆன மகனின் மீது அவ்வளவு ஆளுமை காட்டமாட்டார்.

அந்தப் பெண்ணுக்காக வருத்தம் அடைகிறேன்.

பூங்குழலி said...

ஒரு மருமகளாக நீங்கள் இல்லாத வரையில், அதைப் புரி்ந்துக்கொள்ள இயலுமா என்பது சந்தேகமே!

ரொம்ப சரியா சொன்னீங்க ..மருமகளா வாழ்ந்தா தான் சரியான தலைமை இல்லாத கூட்டுக் குடித்தனம் எத்தனை சிரமம் ன்னு தெரியும்
உணர்ந்து எழுதியிருக்கீங்க .பெண்ணை புகுந்த வீட்டுக்காரர்களின் உடமையாக்குகிறது இந்த முறை .அதனாலேயே இது போல் ஜெயஸ்ரீ க்கள் பலியாகிறார்கள் .பெற்றோரைப் பார்க்க கூட கணவன் ,அவன் சார்ந்தவர்களின் ஒப்புதல் தேவைப்படும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன் ..இதில் தனிக் குடித்தனத்தில் இந்த கஷ்டமாவது இல்லை .

சினேகிதி said...

யாரும் உருவாக்கவில்லை. நாங்களே உருவாக்கிக் கொண்டதுதான்.

\\வீட்டைவிட்டு இன்னொரு வீட்டிற்குச் சென்று வாழ வேண்டியதில்லை..அப்படியே இருந்தாலும் அது ”சொல்ல மறந்த கதை”யாகி விடுகிறது!! புது மனிதர்களுடன் ஒரே வீட்டில் வாழ வேண்டிய கட்டாயமில்லை..அவர்களை நேசித்துதான் ஆக வேண்டுமென்ற அவசியமேற்படுவதில்லை...அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை!சொந்தப் பெற்றோரைப் பார்க்க வேண்டுமெனில் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை!!\\

சொல்லமறந்த கதையாகிவிடுகின்றதா :) ம் ம். சேரன் பாவம் நொந்து போயிருக்கிறார்.

நட்புடன் ஜமால் said...

மிக வருத்தமாக இருக்கின்றது இவற்றை படிக்கையில்.

------------------


இந்த நிலை எப்போ மாறுமுன்னு தெரியலை.

------------------

பெற்றவரை பெண் பார்த்து கொள்ள வேண்டுமென்றால் கனவன் வீட்டோடு மாப்பிள்ளையாக இருத்தல் வேண்டும் - அப்படி இருந்தால் அவரை கேளி செய்வதும் இந்த சமுதாயமே ...

Robin said...

//புது மனிதர்களுடன் ஒரே வீட்டில் வாழ வேண்டிய கட்டாயமில்லை..அவர்களை நேசித்துதான் ஆக வேண்டுமென்ற அவசியமேற்படுவதில்லை...அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை!// பெரும்பாலான பெண்களுக்கு திருமணமான புதிதில் கணவன்கூட புது மனிதன்தான். அதற்காக அவனை நேசிப்பதில்லையா? கணவனின் பெற்றோரை, உடன்பிறப்புகளை நேசிக்க வேண்டுமென்றால் மட்டும் ஏன் கசக்கிறது? அதே சமயம் ஆண்கள் தங்கள் மனைவிகளின் உறவுகளை வெறுப்பதில்லையே.

நாணல் said...

நிச்சயம் யோசிக்கப்பட வேண்டிய விஷயம்.. பெண் தான் கணவர் குடும்பத்தை பார்த்துக் கொள்வதை குற்றம் சொல்லவில்லை... பெண்ணின் பெற்றோரைப் பற்றியும் ஆண்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும்... அதுவும் ஒரே பெண் பிள்ளையைப் பெற்ற பெற்றோர்களின் நிலைமை என்ன??? பெரிய கேள்விக் குறி தான்...

செல்வநாயகி said...

இந்தச் செய்தி உங்கள் மனநிலையைப் பாதித்த விதம் எழுத்துக்களில் தெரிகிறது. குடும்ப அமைப்பு, மத அமைப்புகள், கலாச்சாரக் காவலர்கள் அமைப்பு, இன்னும்பல அதிகார அமைப்புகளை எதிர்த்து இக்கேள்விகள் ஆண்டாண்டு காலமும் தொடரும்:((

முகமூடி said...

// அயல்நாடுகளில் செட்டிலாகி இருக்கும் என் தோழிகள்தான் உதாரணம். பிள்ளைப்பேறின்போது அல்லது ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனே விமானமேறுபவர்கள் பெண்ணின் பெற்றோர்களாகத்தான் இருக்கிறார்கள் //

பிரசவத்தின் போது அம்மா அல்லது மாமியார் - யார் தங்கள் அருகில் இருக்க பிரியப்படுவார்கள் என்று உங்கள் உதாரண தோழிகளிடம் விசாரித்தீர்களா? அயல்நாட்டில் செட்டிலான நிறைய நண்பர்கள் எனக்குண்டு (ஒருவேளை நான் அயல்நாட்டில் இருப்பதாலும் இருக்கலாம்). பெரும்பாலானாவர்கள் தங்கள் மாமியாரை அந்நியமாக பார்க்காதவர்கள், ஏன் மாமியாரை அம்மா என்றுதான் அழைப்பவர்கள் என்றாலும் அம்மா என்று அழைக்கப்படும் மாமியாரை விட சுமந்து பெற்ற அம்மாவிடமே அதிக உரிமையுடனும் சுதந்திரமாகவும் இருப்பார்கள், பிரசவம் மாதிரி ஒரு அதிமுக்கிய காலகட்டத்தில் அவர்கள் அருகாமையையே விரும்புவார்கள் என்பதும் அவர்களது விருப்பங்களுக்கு மதிப்பளிக்கும் கணவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கான உபரி தகவல்.. இவர்களே இப்படியென்றால் சாதா காலங்களில் தனிக்குடித்தனம் போக விரும்பும் பெண்களா பிரசவ காலத்தில் மாமியாருடன் இருக்க பிரியப்படப்போகிறார்கள்?

// பையனின் பெற்றோரை, மருமகள் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிற சமூகம், பெண்ணின் பெற்றோரை(பெண்களை மட்டுமே பெற்றவர்களின் நிலைக்) குறித்து சிந்திக்க மறுப்பது ஏன்? //

என்னதான் மகளும் மருமகனும் வலிந்து கூப்பிட்டாலும் மகள் வீட்டில் போய் - நிரந்தரமாக விடுங்கள், தற்காலிகமாக சில மாதங்கள் கூட - தங்க பெரும்பாலான பெண்ணின் பெற்றோரின் "கௌரவம்" இடம் கொடுப்பதில்லையே, அது ஏன்?

உங்கள் வீட்டிற்கு அருகில் நடந்த சம்பவத்தின் பாதிப்பில் மொத்த உலகத்தையும் பொதுப்படுத்திவிடாதீர்கள். உலகம் அனைத்து வகை மக்களாலும் ஆனது.

Anonymous said...

ம்ம். இதில் ஒன்றரை வயதுக்குழந்தை வேறு. தாயைக்கொன்றது தந்தை என்று பின்னால் அந்தக்குழந்தைக்கு தெரிய வராமலா போகும்.

முகமூடி said...

// பெரும்பாலான பெண்களுக்கு திருமணமான புதிதில் கணவன்கூட புது மனிதன்தான். அதற்காக அவனை நேசிப்பதில்லையா? கணவனின் பெற்றோரை, உடன்பிறப்புகளை நேசிக்க வேண்டுமென்றால் மட்டும் ஏன் கசக்கிறது? அதே சமயம் (பெரும்பாலான) ஆண்கள் தங்கள் மனைவிகளின் உறவுகளை வெறுப்பதில்லையே. //

வழிமொழிகிறேன்!

Robin said...

//பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாமல் போய் விட்டதா?// பொறுமையும், சகிப்புத்தன்மையும் பெண்களிடம் குறைந்து கொண்டே வருகிறது என்பதுதான் நிஜம். ஆண்களின் வன்முறையை பற்றி பேசும் எவரும் பெண்கள் ஆண்களுக்கு கொடுக்கும் மனரீதியான டார்ச்சர்களை பற்றி வாய் திறப்பது இல்லை. பெரும்பாலான ஆண்கள் வன்முறையை கையில் எடுப்பதற்கு காரணம் பெண்களின் அளவுக்கு அதிகமான பேச்சுகளும் வசவுக்களும்தான். ஆனால் இதை சாமார்த்தியமாக மறைத்துவிடும் பெண்கள் தாங்கள் மட்டும் பாதிக்கப்பட்டதுபோல காட்டிக்கொள்வார்கள்.

Anonymous said...

//said...

//புது மனிதர்களுடன் ஒரே வீட்டில் வாழ வேண்டிய கட்டாயமில்லை..அவர்களை நேசித்துதான் ஆக வேண்டுமென்ற அவசியமேற்படுவதில்லை...அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை!// பெரும்பாலான பெண்களுக்கு திருமணமான புதிதில் கணவன்கூட புது மனிதன்தான். அதற்காக அவனை நேசிப்பதில்லையா? கணவனின் பெற்றோரை, உடன்பிறப்புகளை நேசிக்க வேண்டுமென்றால் மட்டும் ஏன் கசக்கிறது? அதே சமயம் ஆண்கள் தங்கள் மனைவிகளின் உறவுகளை வெறுப்பதில்லையே.
9:47 AM //

முல்லை சொல்லியிருப்பது போல ஆண்கள் திருமணமாகி புது வீடு செல்வதில்லை.அவர்களுக்கு புது மனிதர்களை நேசித்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. விருந்தாளிகளாய் விசிட் அடிக்கும்போது இருக்கும் உறவுகள் வேறு. ஒரே வீட்டில் கட்டாயப்படுத்தலினால் இருப்பது வேறு. முல்லை சொல்லியிருப்பது அமைப்பை..

இருபது இருபத்தைந்து வருடங்களாக எங்க வீடு என்று சொல்லி விட்டு திடீரென்று இன்னொரு குடும்பத்தினரை எங்க வீடு என்று சொல்லிக்கொள்ளும் நிலைமை ஆண்களுக்கு இன்றும் இல்லை.

வரதராஜலு .பூ said...

எனக்கு தெரிந்து இது ஒரு ஈகோ பிரச்சனையாக தொடங்கி, பல சிறு சிறு தவறுகள் அனைத்து தரப்பும் பிரச்சனையை பூதகரமாக
மாற்றும்.


//கோவி.கண்ணன் said..
பையனின் தந்தைக் கூட திருமணம் ஆன மகனின் மீது அவ்வளவு ஆளுமை காட்டமாட்டார்.//

இல்லை கோ.க. அவர்களே. இப்பிரச்சனையில் தாய் மட்டுமல்ல, தந்தை, சகோதர, சகோதரிகளும் அவ்வாறே செய்வர். இது என் அனுபவம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த விஷயத்தை பேப்பரில் படித்தபோது மிகவும் மனம் வருந்தினேன். பாவம் அந்தக் குழந்தை.

:(

ஆகாய நதி said...

//
ஆனால், பிரச்சினைகளில்லாத குடும்பங்கள் இருக்கிறதா என்ன? அதற்கெல்லாம் இதுதான் தீர்வா? தனிக்குடித்தனம் போக ஒரு பெண் வற்புறுத்தினால் இதுதான் முடிவா? என்னவொரு குடும்ப அமைப்பு இது?
//

இது ஆணாதிக்கத்தின் அராஜகம் :(

//
பெற்றோரை/முதியவர்களை பராமரிப்பது என்றால் ஏன் நாம் பையனின் பெற்றோர் என்றே அனுமானித்துக்கொள்கிறோம்?! ஒரு பையன்/ஆண் பெற்றோரோடு கடைசிவரை வாழ அனுமதிக்கிற நமது குடும்ப அமைப்பு, பெண்ணின் பெற்றோர் பெண்ணோடு வாழ்ந்தால் ஏன் நக்கலாய் சிரிக்கிறது? பையனின் பெற்றோரை, மருமகள் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிற சமூகம், பெண்ணின் பெற்றோரை(பெண்களை மட்டுமே பெற்றவர்களின் நிலைக்) குறித்து சிந்திக்க மறுப்பது ஏன்?
//

சரியான கேள்வி....

//
பையனின் கடமை என்பது தன் பெற்றோரைப் பராமரி்ப்பதாக இருக்க, பெண்ணின் கடமை என்பது புகுந்த வீட்டினரைப் பராமரிப்பதாக மட்டுமே மாறிப்போவதேன்?!
//

சரியான கேள்வி...

//
இந்த அமைப்பு பையன்களுக்கு எவ்வித இழப்புகளையும் கொடுப்பது இல்லை...வீட்டைவிட்டு இன்னொரு வீட்டிற்குச் சென்று வாழ வேண்டியதில்லை..அப்படியே இருந்தாலும் அது ”சொல்ல மறந்த கதை”யாகி விடுகிறது!! புது மனிதர்களுடன் ஒரே வீட்டில் வாழ வேண்டிய கட்டாயமில்லை..அவர்களை நேசித்துதான் ஆக வேண்டுமென்ற அவசியமேற்படுவதில்லை...அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை!சொந்தப் பெற்றோரைப் பார்க்க வேண்டுமெனில் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை!!

இப்படி ஒரு அமைப்பை யார் உருவாக்கினார்கள்?
இந்த அமைப்பு இன்னமும் ஏன் மாறாமலிருக்கிறது அல்லது மாற்றாமலிருக்கிறோம்?
//


நாம் தான் இந்த நிலைக்குக் காரணம்...

பெண்ணைப் பெற்றவர்களிடமும் தவறு இருக்கிறது நம்மை வளர்க்கும் போதே அடுத்த வீட்டிற்கு செல்லும் பெண் என்றே சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள்...

நானும் ஒரு பையனைப் பெற்றிருக்கிறேன்... என் பையன் மூலம் என்னால் ஆன மாற்றங்களைக் கொண்டு வர முயல்வது நான் சமுதாயத்திற்கு, பெண்களுக்கு ஆற்றும் கடமை...

இப்படியாக நாம் அனைவரும் கைகோர்த்து நம் பிள்ளைகள் மூலம் மாற்றம் கொண்டு வரலாம் என்பது என் கருத்து...

பித்தனின் வாக்கு said...

இது எல்லாம் பழைய கதை, இப்போது எல்லாம் பொண்கள் வேலைக்கு போவதால் வீட்டின் அவர்கள் வைப்பதுதான் சட்டம் ஆகின்றது. நடுத்தர குடும்பங்களில் பொண்கள் அவர்கள் திருமணம் முடிந்த உடண் புதுக்குடித்தனம் போவார்கள். அங்கு அவர்கள் அப்பா அம்மா தம்பி இராஜ்ஜியம்தான். புகுந்த வீட்டு சொந்தங்களை அந்த பொண்கள் மதிப்பதும் இல்லை, அண்ட விடுவதும் இல்லை. ஒரு மகன் இருந்தால் கூட பொற்றவர்கள் அந்த பொண்ணின் வீட்டில் தான் தங்குகிறார்கள். இதுதான் இப்ப சென்னையின் இருவரும் வேலைக்கும் போகும் குடும்பங்களின் நிலை. 100 க்கு 20 குடும்பங்களின் மட்டும் ஆண்கள் பொற்றவர்களை பார்த்துகொள்ளுகிறார்கள்.
இதுபோன்ற் செய்திகள் வரும்போது நாம் ஒரு நிலைப்பாடக கருத்து கூறுவது தவறு.
இதை மாற்றி யோசித்துப்பாருங்கள், அந்த பையன் அவர்களின் ஒரே மகனாக இருந்து தன் பொற்றொரின் கடைசி கட்டத்தில் அவர்களை விட்டு இந்த பொண் தனிக்குடித்தனம் கூப்பிட்டு தகராறு செய்ய நிறைய பொறுத்து பர்த்து பின் ஆத்திரம் தாங்காமல் கொலை செய்து இருந்தால்???
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் கட்டிய மனைவீ அன்பு காட்டுவதற்க்கு பதில் ஒருவன் கொலை செய்கிறான் என்றால் அந்த பொண் எந்த அளவுக்கு தொல்லை செய்து இருக்கலாம் அல்லவா.
பொண் என்றாலே கஸ்ட்டப்படுவள் ஆண் என்றாலே கொடுமைப்படுத்துவன் என்கிற கோனத்தில் கருத்து சொல்வது தவறு. இப்போது எல்லாம் பொண்ணியம் மற்றும் பொண் கொடுமை போசினால்தான் மரியாதை.
அம்மா, மனைவீ அல்லது மனைவீ அவளது ஒட்டு மொத்த குடும்பத்தில் மாட்டி எந்த பக்கமும் போசமுடியாத தன் இயலாமையை வெளீயிட முடியாத ஆண் வேறு என்னாதான் செய்வான்.

அமுதா said...

:-((
/*இப்படி ஒரு அமைப்பை யார் உருவாக்கினார்கள்?
இந்த அமைப்பு இன்னமும் ஏன் மாறாமலிருக்கிறது அல்லது மாற்றாமலிருக்கிறோம்?
*/
நாம் தான் உருவாக்கியிருக்கிறோம். முன்பிற்கு சற்றே மாற்றங்கள் தெரிந்தாலும் பெரும்பான்மை நேரங்களில் பெண்ணே மிகவும் பாதிக்கப்படுகிறாள். உடை விஷயம், பெண் இலக்கணம் என்று அவளைத் தவிர அனைவரும் விமர்சிக்கிறார்கள். மெல்ல மெல்ல மாற்றம் கொண்டுவர அடுத்த தலைமுறையினர் ஆண்/பெண் பார்வைகள் சமனோடு இருக்கும்படி செய்ய வேண்டிய கடமை இன்றைய பெற்றோருக்கு உண்டு. அது முழுமையாக நிறைவேறாத வரை... இது போன்ற விஷயங்களும் இருந்து கொண்டு தான் இருக்கும்

:-((

ஜானி வாக்கர் said...
This comment has been removed by the author.
ஈரோடு கதிர் said...

பொறுமை களவு போன தலைமுறை...

கோபத்தை மறுபரிசீலனை செய்ய பொறுமையே இல்லை

எங்கே போய் முடியப்போகிறதோ

ஜானி வாக்கர் said...

//நடுத்தர குடும்பங்களில் பொண்கள் அவர்கள் திருமணம் முடிந்த உடண் புதுக்குடித்தனம் போவார்கள். அங்கு அவர்கள் அப்பா அம்மா தம்பி இராஜ்ஜியம்தான். புகுந்த வீட்டு சொந்தங்களை அந்த பொண்கள் மதிப்பதும் இல்லை, அண்ட விடுவதும் இல்லை. //

திரு பித்தன் சொல்லுவது பெரும்பாலும் உண்மையே, அப்படி தனி குடித்தனம் இருக்கும் மகனிடம் மாதம் ஒரு முறை விருந்தினர் போல் வந்து செல்லும் பையனின் பெற்றோர்கள் உண்டு, அதுவும் மனைவி இல்லாத நேரம் பார்த்து போவோரும் உண்டு, இருக்கும் சமயம் போனால் முடிந்தது அவர்கள் கதை . அது எப்படித்தான் முடியுமோ சாமி கடவுளுக்கெ வெளிச்சம், நமக்கு என்ன சொன்னால் கோவம் வருமோ அதே மாதிரி உங்க அம்மா அப்படி சொன்னாங்க, அப்பா அப்படி சொன்னாங்க, தம்பி அப்படி சொன்னாருனு தனியாக புராணம் பாட ஆரம்பிச்சுருவாங்க. இரண்டுபெற்றோர்களையும் இருவரும் சரியாக மதித்தாலே போதும் எந்த பிரச்சனையும் வராதது.

கபிலன் said...

இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது மிகவும் வருத்தப்படவேண்டிய ஒன்று. இப்படி ஒரு கொடூரச் செயலைச் செய்தவர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

அதுக்காக நீங்க சொல்லி இருக்குறது எல்லாம் ரொம்ப ஓவர்ங்க.

இப்ப எல்லா புது மாப்பிள்ளைகளும் ரத்தக் கண்ணீர் வடிக்குற விஷயத்தை நீங்க அவ்ளோ சாதாரணமா சொல்லி இருக்கீங்க..

முதியோர் இல்லங்கள் தோன்ற முழு முதற் காரணமே படித்த,கலாச்சாரம் மறந்த பெண்களே.
வாழ்க்கை முறையையும், பெண்ணடிமையையும் ஒன்று சேர்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம்.

இன்றைய மருமகளாக வருகிறவர்கள், அவர்கள் தாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் 5 சதவிகிதமாவது மாமியாருக்குத் தருகிறார்களா?

பெரியவங்க சொன்னா கேட்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்குறது தான் பெண்ணுரிமையா?

தன் புருஷனோட அம்மாவையே அனுசரிச்சு போக முடியாத அளவிற்கு இன்றைய பெண்களிடம் ஈகோ அதிகரித்து விட்டதா? சகிப்புத் தன்மை செத்து விட்டதா?

ஒரு பெண், மோசமான மனைவியாக இருக்கலாம், மோசமான நண்பியாக இருக்கலாம், மோசமான காதலியாக இருக்கலாம், மோசமான சகோதரியாகக் கூட இருக்கலாம்...ஆனா மோசமான தாயாராக இருக்க முடியாதுங்க...

ஆண்களைப் பொறுத்தவரை இந்த விஷயம் தான் ரொம்ப முக்கியம், மற்ற எல்லாவற்றையும் விட. இதுல பிரச்சினை வந்தா மனுஷன் நிம்மதியா தூங்க முடியாது...

இல்லை, இப்படித் தான் இருப்போம்னு சொல்றவங்க...கல்யாணத்துக்கு முன்பே உங்களை மணப்பவரிடம் சொல்லிடுங்க.....வருகிறவராவது உஷாரா ஆகிடுவார்..!

சந்தனமுல்லை said...

நன்றி கோவி.கண்ணன், நான் இங்கு மாமியார் மருமகள் பிரச்சினைகளைச் சொல்லவில்லை! இந்த கூட்டுக்குடும்ப அமைப்பு மற்றும் தனிக்குடும்பம் பற்றியே எனது கேள்விகளை/சந்தேகங்களைச் சொல்லியிருக்கிறேன்!

நன்றி பூங்குழலி! நீங்கள் சொல்வது 100% சரி்! என் தோழிகளில் நிறைய பேருக்கு இந்த 'உடமை'யாக்கப்பட்ட அனுபவம் இருக்கிறது! வீட்டுக்கு வந்த மருமகள் என்ன விதமாக உடுத்துகிறார், என்ன சாப்பிடுகிறார், எத்தனை மணிக்கு எழுகிறார், யாரிடம் போனில் பேசுகிறார் என்று கண்காணித்து க்கொண்டிருக்கும் கண்கள்...அவ்வளவு ஏன்..அவள் என்னக் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தீர்மானிப்பது கூட in-laws தான். இல்லையென்று யாரும் சொல்லமுடியாது...தெரியாமல் வேண்டுமால் வேண்டுமானால் இருக்கலாம்!!

சந்தனமுல்லை said...

நன்றி சிநேகிதி...அப்போ நாமே மாற்றி அமைக்கலாம் தானே...:-)

நன்றி ஜமால்...

நன்றி Robin, சின்ன அம்மிணி சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்!

நன்றி நாணல், உண்மைதான்...எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் பெற்றவர்கள் பெண்ணைக் காணவரும்போது ஹோட்டலில் தங்கியிருந்து, பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள்...பெண்ணின் வீட்டுக்கு வந்து தங்க மாட்டார்கள்!

துபாய் ராஜா said...

நியாயமான கேள்விகள்.

நமது சமூகத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருவதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம்.

காமராஜ் said...

கேள்விகள் தான் கண்டுபிடிப்புகளின் தாய்.
கேளுங்கள் - எடுத்துக்கொள்ளுங்கள்.
இது ஆண்டான் அடிமை அமைப்பு
இதற்கு வேறு வேறு
செண்டிமெண்ட் பெயர்கள் உண்டு.
அப்போது கவனமாக அனுகவேண்டும்.
உரக்க கேளுங்கள்.
மதம் ஜாதி பெண்ணடிமை மூன்றும்
பிண்ணிப்பிணைந்தவை.
எங்காவது சமரசம் ஏற்பட்டால்.
மூன்றும் ஜெயிக்கும்.
இன்னும் உரக்க கேளுங்கள்.

வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

நன்றி செல்வநாயகி...

நன்றி முகமூடி, பிரசவ நேரத்திலும் 'மாமியார் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று எண்ணும்படி உறவுகள் வளர்த்துக் கொள்ளாதது யார் தவறு? பை தி வே, எதனால் பெண்கள் அம்மாவின் அருகாமையை அந்தநேரத்தில் விரும்புகிறார்கள்? உங்கள் அம்மாவிடம் நடந்துக்கொள்வதைப் போன்று மாமியாரிடம் நடந்துக்கொள்ள முடியாது!


நீங்கள் சொல்லும் அந்த "கௌரவ" பிரச்சினை சரிதான். மகனிடம் உரிமையாக தன்னைப் பார்த்துக்கொள்ளும்படி கேட்கும் பல பெற்றோர்கள் மகளிடம் கேட்க ஏன் தயங்குகிறார்கள்?! மகள்கள் முன்வந்தாலும் தடுத்துவிடுகிறார்களே...!!

சந்தனமுல்லை said...

நன்றி சின்ன அம்மிணி! இப்போது அந்த குழந்தையின் எதிர்காலம்தான் கேள்விக்குறியாகி உள்ளது. கொலை செய்ததற்காகக் கணவனும், உடந்தையாயிருந்ததற்காக மாமனாரும் இப்போது உள்ளே! மாமியாருக்கு நரம்புப் பிரச்சினையாம்! ஹ்ம்ம்...

நன்றி Varadaradjalou .P, உண்மைதான்...இது பிரச்சினைகளின் அழுத்தம் கூடி வெடித்திருக்கிறது!!

நன்றி அமித்து அம்மா....உண்மைதான்...வந்தனாவின் நிலை பரிதாபமாக இருக்கிறது!!

செல்வநாயகி said...

முல்லை,

இங்கு இடப்பட்டிருக்கும் சில பின்னூட்டங்களுக்கான பதிலையும், நம் பிரச்சினைகளின் வேர்களையும் சரியான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் காமராஜ்.

Radhakrishnan said...

மிகவும் வருத்தம் தரக்கூடிய செய்தியும், வருத்தமும் கோபமும் ஏற்பட வைக்கும் நமது சமுதாய கட்டமைப்பும்.

Vetirmagal said...

இது பொதுவாக எடுத்துக் கொள்ள முடியாத சங்கதி. சில இடங்களில் பெண்களும் தவறு செய்கிறார்கள்.

பல வகைகளான உதாரணங்கள் நிஜ வாழ்க்கையில் பார்த்தது உண்டு.

ஒரு வகையில் , திருமணத்திற்கு முன்பு , 'கௌன்சிலிங்' செய்து கொள்வது நன்று.

கனவே வாழ்க்கை என்று நினையாமல் யதார்த்தமாக யோசிக்கவும் கற்று கொள்வது அவசியம் அல்லவா?

சந்தனமுல்லை said...

நன்றி ஆகாயநதி!
நன்றி பித்தன், நீங்கள் சொல்லியிருப்பது போல ஒன்றிரண்டு நடந்திருக்கலாம். பெரும்பான்மைக் குடும்பங்களில் நடப்பதை, சமூகம் காலங்காலமாக பின்பற்றுவதைதான் நான் சொல்லியிருக்கிறேன்! http://nandhu-yazh.blogspot.com/2009/07/blog-post_20.html இந்த சுட்டியையும் படித்துவிடுங்கள்..நான் சொல்ல வருவது விளங்கலாம்!

Deepa said...

//இப்படி ஒரு அமைப்பை யார் உருவாக்கினார்கள்?
இந்த அமைப்பு இன்னமும் ஏன் மாறாமலிருக்கிறது அல்லது மாற்றாமலிருக்கிறோம்?

இந்த அமைப்பு நன்மைப் பயக்கிறது எனில் ஜெயஸ்ரீகளின் உயிரை ஏன் காவு வாங்குகிறது?//


மிகுந்த வலி ஏற்படுத்தும் கேள்விகள் முல்லை...

பதில் சொல்ல யாருக்கும் தெளிவில்லை என்பது தான் வெட்கக்கேடான நிலை.

:-((

சந்தனமுல்லை said...

நன்றி அமுதா!

நன்றி கதிர்!

நன்றி ஜானி வாக்கர்!

நன்றி கபிலன்!

அன்புடன் அருணா said...

இதுபோல நிறைய பதிலில்லாத கேள்விகள் உண்டு.......

வல்லிசிம்ஹன் said...

முல்லை, இதைத்தான் ஆவதும் பெண்ணாலே... என்று சொன்னார்களோ.
ஒரு ஜெய்ஷ்ரீ கதை மட்டும் வெளியே தெரிகிறது. மிச்சம் எத்தனையோ. ஆனால்

குடுகுடுப்பை said...

இந்த மாதிரி சிக்கல்கள் கல்யாணம் அப்படிங்கிற ஒன்னு இருக்கிற வரைக்கும் இருக்கும்.

நாகரீகக் கோமாளித்தனம்.

ஸ்ரீனி said...

இந்த ஒரு சம்பவத்தை வைத்து ஆண்கள் எல்லாம் கொடூரமான, தெளிவில்லாதவர்கள் போலவும், எதோ பெண்கள் எல்லோரும் பாவப்பட்டவர்கள் போலவும் பொதுவாக சித்தரிப்பது தவறு. உங்கள் இடுகையில் அந்த அர்த்தம் தான் தொனிக்கிறது. நான் என் கண்ணெதிரே என் நண்பர்களுக்கு நடந்த 3 சம்பவங்களை இங்கே சொல்கிறேன்.

1. அவசர அவசரமாக onsite ல் இருந்து இந்தியாவுக்குப் போய் திருமணம் செய்து கொண்டான் என் நண்பன். அந்த பெண்ணும் IT ல் , சென்னையில் வேலை செய்யும் பெண். முதலில் என் பெற்றோரை விட்டு அமெரிக்கா வரமாட்டேன் என்று சொன்ன பெண், அவன் இந்தியாவுக்கு மாற்றலாகிப் போன பின்பு பெங்களூர் வரமாட்டேன் என்று அடம் பிடித்தது. "நீ வேலையை விடத்தேவையில்லை, உன் அலுவலகத்திலேயே மாற்றல் வாங்க முயற்சிக்கலாமே என்றதற்கும் உடன் படவில்லை". இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் சம்பளம் அவளின் தந்தைக்கு தான் போகிறது. அதற்கு என் நண்பனும் மறுப்பு சொல்லவேயில்லை. இப்போது வாழ்க்கையே வெறுத்துப்போய் onsite assignment வாங்கிக் கொண்டு, இங்கு வந்து தனியாக இருக்கிறான்.

2. அவன் என்னுடன் இங்கு onsite ல் வேலை பார்த்தான். அவன் மனைவி அப்போது பெங்களூரில் IT ல் வேலை. ஒரு குழந்தை. அந்த குழந்தை அந்தப் பெண்ணின் தாய் வீட்டில் மைசூரில். இந்தப் பெண்ணுக்கு பெங்களூரில் தோழிகளுடன் வாசம். வார இறுதியில் மட்டும் மைசூர் போய் குழந்தையைக் கொஞ்சிவிட்டு வந்துவிடுவார். 4 மாதங்கள் நண்பர் இங்கு தனியாக இருந்தார். அதுவரை அந்தப்பெண்ணும் இங்கு வந்தால் dependant (L2)விசா வில் வேலை செய்ய முடியும் என்பதால் அவருடைய அலுவலகத்தில் onsite assignment க்கு முயற்சித்துப் பார்த்தார்கள். முடியவில்லை. ஒருவழியாக கன்வின்ஸ் செய்து, அந்தப் பெண் வேலையை விட்டு விட்டு இங்கு வந்தது. நாங்கள் இருந்தது ஒரு நகரமல்ல. எனவே அந்தப்பெண்ணுக்கு வந்த இரண்டாவது வாரமே அலுப்புத்தட்டிவிட, வீட்டில் ஒரே அர்ச்சனை. குழந்தையை விளையாடக்கூட வெளியே கூட்டிப்போவதில்லை. "வாரத்துல 2 முறையாவது bowling போகமுடியுதா இங்க வந்த பிறகு?...பேசாம பெங்களூர்லய இருந்திருப்பேன்"- இது அந்தப் பெண்ணின் வ(வி)சனம். நண்பனே தான் அந்தக் குழந்தையை கவனித்துக் கொண்டு, சமையல் செய்து கொண்டு, வேலைக்கும் போய்க்கொண்டு....ம்ம்ம்

3. என்னுடைய உறவினர் அந்த அக்கா. அவருக்கு ஒரு பெண், ஒரு பையன். பெண்ணுக்கு திருமணம் முடிந்தவுடன், BE படித்துக்கொண்டிருந்த அவர் பையனை MS சேர்க்க ஆசைப் பட்டார்கள். அதுவும் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில். ஏற்கனவே வீடு கட்டி, மகளுக்குத் திருமணம் செய்து நிறையக் கடன்கள். அந்த அக்காவின் கணவர் தனது அரசாங்க வேலைக்கு விருப்ப ஓய்வு கொடுத்து, அவனைப் படிக்க வைத்தார்கள். படிப்பு முடிந்து அவன் நல்ல வேலைக்குப் போனதும், திருமணம் செய்தார்கள். அதன் பிறகு அந்த அக்காவுக்கு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. அந்த நேரத்தில், அவர் தன் மகனால் புறக்கணிக்கப் பட்டிருந்தார். அவர் மகனோ 100 சதவீதம் அவனுடைய மனைவி மற்றும் அவளது பெற்றோர்களின் கட்டுக்குள். சென்னைக்கு சிகிச்சைக்கு வந்த அந்த அக்காவை, வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்தது, அவருடைய மருமகன். அதே சென்னையில் மகன் இருந்தும் அவன் வீட்டில் போய் தன்னால் இருக்க முடியவில்லையே என்று அவர் தன் வாழ்க்கையின் கடைசி நாட்களில் என்னிடம் சொல்லி அழுதபோது, நானும் அழுதுவிட்டேன்.

இப்படி நான் என் கண்முன் பார்த்த சம்பவங்கள் நிறைய. இவை எதுவுமே செய்தித் தாள்களில் படித்தது அல்ல. ஊடகங்கள் பல நேரம் உண்மையைச் சொல்வதில்லை தோழி! எனவே அந்த ஊடகச்செய்தியின் பாதிப்பில், உலகின் அனைத்து ஆண்களும், சமுதாயக் கோட்பாடுகளும் தவறு என நாம் சொல்லிவிடக் கூடாது.

மங்களூர் சிவா said...

:((
புதுசா சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம்.. :( செல்வநாயகி சொன்னதுமாதிரி காமராஜ் பதில் தான்.. ஆனா அதை விட்டு வெளியே வர முடியாத மாதிரி சிக்கலாகிக் கிடக்கே..

அமுதா கிருஷ்ணா said...

யாருக்குமே விட்டு கொடுக்கும் மனப்பான்மை, பெருந்தன்மை, எல்லோரும் சமம் என்ற உணர்வு என்று எந்த நல்ல குணமுமே இல்லை. ஒரே ஈகோ தான் எங்குமே. மாமியார், மாமனார் என்றால் வேலைக்காரர்கள் போல நடத்தும் எத்தனையோ பெண்களை நான் அறிவேன். அவர்களுக்கு வயசாச்சே..பாவமே என்று நினைப்பது இல்லை. பெண்கள் என்றால் அடங்கி இருக்க வேண்டாம். ஆனால், ஒத்து இருக்கலாமே. அம்மா என்றால் ஒருமாதிரி, மாமியார் என்றால் ஒருமாதிரி என்று பெரும்பாலும் பெண்கள் தான் பேதம் செய்கிறார்கள்.
ஆண்கள் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்.

பின்னோக்கி said...

ஆண்களைப் பற்றி குறை சொல்லி எழுதுவது fashion ஆகி விட்டது.

செய்திதாள் செய்திகளை படித்து இப்படி ஒரு பதிவு. அந்த பெண், எந்த அளவுக்கு, அவனை மன உலைச்சளுக்கு தள்ளினாலோ தெரியவில்லை.

அம்மா, பெற்ற மகனை துண்டு துண்டாக வெட்டி கொன்றதயும் பதிவு இடுங்கள்.

மகளிர் காவல் நிலையத்தில், பெண்கள், ஆண்கள் மேல் பொய் புகார் கொடுப்பது அதிகம் ஆகியிருப்பதாக செய்தி வந்த்ததே அதைப் பற்றி பதிவு இடுங்கள்.

ஒரு பெண், தணக்கு திருமணம் ஆனதை மறைத்து, மறு மணம் செய்தாளே, அதைப் பற்றி பதிவு இடுங்கள்.

தேனிலவுக்கு சென்ற இடத்தில், தன் கணவனை, காதலன் உதவியுடன் கொன்றாளே ?,அதைப் பற்றி பதிவு இடுங்கள்.

ஓரு சம்பவத்தை, அதுவும், செய்திதாள் செய்தியை வைத்து, ஐயோ !! பெண் கொடுமை நடக்கிறது என்று மேம்போக்காக எழுதியிருப்பது, வருந்ததக்கது :-(.

சொல்ல மறந்த கதை - படம் ஒடவில்லை. ஆனால், புதுமைப்பெண், பூ ஒன்று புயல் ஆனது, etc பெண் கொடுமை படங்கள் சூப்பர் hit.

பெண்ணுக்கு பெண்ணால் தான் கொடுமை நடக்கிறது என்பதை, எப்பொழுது தான் பெண்கள் புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை.

அடுத்தது, உடை விஷயத்தில், கட்டுபாடு என்ற கூக்குரல். பெண்கள்,உடை விஷயத்தில் தான், பெண் உரிமை அடங்கியிருப்பதாக நினைப்பது, மடமை.

மகள் உடுத்தும் உடையை, கட்டுப்படுத்துவது, அம்மாவா ? அப்பாவா ?.

இந்த ஒரு பதிவு, உங்களை, மற்றும் ஒரு சாதாரண பெண்ணாக தான் காட்டுகிறது. வருத்தமாக இருக்கிறது.

பின்னோக்கி said...

உங்கள் பதிவின் முடிவில், இந்த பதிவு பற்றி சொல்லியிருக்கலாம்.

http://nandhu-yazh.blogspot.com/2009/02/blog-post_10.html

இப்படி ஒரு பதிவு, அமுதா அவர்கள், எழுதி இருப்பது, எப்படி ஒரு மருமகள் தன் கணவர் குடும்பத்தினரை நடத்த வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

பின்னோக்கி said...

http://sandanamullai.blogspot.com/2009/06/blog-post_09.html

இது நீங்கள் இட்ட பதிவு.

இந்த பதிவில், உங்கள் அப்பா பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.

உங்களுக்கு இடப்பட்ட அனைத்து கட்டுபாடுகளும், உங்கள் அம்மா and பாட்டியிட்டது.

பெண்களுக்கு கட்டுப்பாடு, பெண்களிடம் இருந்த்து தான் இல்லையா ?

சந்தனமுல்லை said...

நன்றி ராஜா!
நன்றி காமராஜ்!

நன்றி வெ.இராதாகிருஷ்ணன் !

நன்றி Vetrimagal, கவுன்சிலிங் இன் - லாஸூக்கும் சேர்த்துதானே!

நன்றி தீபா!

நன்றி அருணா!

நன்றி வல்லியம்மா!

நன்றி குடுகுடுப்பையார், நான் இந்த கூட்டுக்குடும்ப அமைப்பைச் சொல்லியிருக்கிறேன்!

சந்தனமுல்லை said...

நன்றி ஸ்ரீனி, நானும் பதிலுக்கு நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். நான் சொல்ல வந்தது இந்த சமூக கட்டமைப்பை - கூட்டுக்குடும்ப அமைப்பை!


நன்றி சிவா!

நன்றி முத்துலெட்சுமி!

நன்றி அமுதாகிருஷ்ணா!இதை நான் ஆண் பெண் பிரச்சினையாக பார்க்கவில்லை. நமது சமூகத்தின் குடும்ப அமைப்பையும்,மனிதர்களின் பிரச்சினையாகவுமே பார்க்கிறேன்!

சந்தனமுல்லை said...

நன்றி பின்னோக்கி, நீங்கள் சொல்லியிருப்பதுபோல எண்ணற்ற எ.காகளை என்னாலும் சொல்லமுடியாது. என் வீட்டுப் பக்கத்தில் நடந்திருப்பதால் எனக்கு அதிர்ச்சி, உங்களுக்கு மற்றுமொரு செய்தி யென்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது!! மற்றபடி, நான் இங்கு சொல்ல வந்தது நமது குடும்ப அமைப்பை! இங்கு வந்த யாருமே, எ.காகளை அள்ளி வீசிய எவருமே, பெண்ணின் பெற்றோருக்கு இந்த அமைப்பு கொடுக்கும் treatment பற்றி பேசாதது மிகுந்த ஆச்சர்யமளிக்கிறது! அதைப்பற்றியும்தானே இந்த இடுகை பேசுகிறது!


மேலும், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இடுகையும், பாசாங்குகள் - அதுவும் இந்த சமூகம் கட்டமைத்ததைத்தான் பேசுகிறது - மேலும் அந்த இடுகையென்றில்லை...எனது எந்த இடுகையிலுமே என் அப்பாவைப்பற்றியோ அல்லது தாத்தாவைப் (both sides) பற்றியோ நீங்கள் காணமுடியாது! :-)

ஆகாய நதி said...

//
நடுத்தர குடும்பங்களில் பொண்கள் அவர்கள் திருமணம் முடிந்த உடண் புதுக்குடித்தனம் போவார்கள். அங்கு அவர்கள் அப்பா அம்மா தம்பி இராஜ்ஜியம்தான். புகுந்த வீட்டு சொந்தங்களை அந்த பொண்கள் மதிப்பதும் இல்லை, அண்ட விடுவதும் இல்லை.
//

yes ipadiyum sila idangalil nadakirathu... :( naan nerilelye parthirukiren

but

//
இதுதான் இப்ப சென்னையின் இருவரும் வேலைக்கும் போகும் குடும்பங்களின் நிலை
//

ipdilam sollakoodathu... oru sila idangalil matume apdi nadakirathu summa ellarayum sollatheenga sir..

//
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் கட்டிய மனைவீ அன்பு காட்டுவதற்க்கு பதில் ஒருவன் கொலை செய்கிறான் என்றால் அந்த பொண் எந்த அளவுக்கு தொல்லை செய்து இருக்கலாம் அல்லவா.
பொண் என்றாலே கஸ்ட்டப்படுவள் ஆண் என்றாலே கொடுமைப்படுத்துவன் என்கிற கோனத்தில் கருத்து சொல்வது தவறு.
//

ithuvum yosika vendiya vishyam than but murder is not a solution... only a stupid could take this decision which can not be a solution...

who will be there for his parents and his daughter now? just think about it... wife'a murder panita ivan avanga appa amma va pathuka mudiyuma? athayum konjam yosinga sir...

ஆகாய நதி said...

//
இன்றைய மருமகளாக வருகிறவர்கள், அவர்கள் தாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் 5 சதவிகிதமாவது மாமியாருக்குத் தருகிறார்களா?
//

ellarume apdi irupathillai... mamiyarayum amma nu than nenaichu palagurim pala peru atha pathi yarume solla matendreenga?

கோமதி அரசு said...

வாழும் வகையை, முறையைத் தெரிந்து,கொள்ள வில்லையானால் இந்தமாதிரி சிக்கல் ஏற்படும்.


வாழும் வகை- விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, ஒத்தும் உதவியும் வாழ்தல்.

தனக்கோ-பிறர்க்கோ,தற்காலத்திலோ- எதிர்கால்த்திலோ துன்பம் விளைவிக்காத
முறையில் வாழ முயற்சிக்க வேண்டும்.

கபிலன் said...

"ஆகாய நதி said...
//
இன்றைய மருமகளாக வருகிறவர்கள், அவர்கள் தாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் 5 சதவிகிதமாவது மாமியாருக்குத் தருகிறார்களா?
//

ellarume apdi irupathillai... mamiyarayum amma nu than nenaichu palagurim pala peru atha pathi yarume solla matendreenga?"

கொஞ்சம் விசாரிச்சு பாருங்க ஆகாய நதி. எத்தனை சதவிகிதம் பேரு இருக்காங்கன்னு. புதுசா திருமணமான நண்பர்கள் கிட்ட கொஞ்சம் விசாரிச்சு பாருங்க. முதல் புலம்பலே இது தான். என் மனைவி சுத்தமா பெரியவங்கள மதிக்கவே மாட்றா ங்கறது தான் சொல்லுவாங்க.

அம்மா மாதிரி அவ்வளவு பாசமா பாத்துக்க கூட வேணாம். பெரியவங்க அப்படின்னு மனசுல நினைச்சாலே போதும். பாரதி கண்ட புதுமைப் பெண் நிச்சயமாக இவளல்ல. இது ஒரு வில்லியின் தோற்றமாகவே ஆண்களுக்குத் தெரிகிறது.

Dhiyana said...

செய்தியைக் கேள்விப்பட்டவுடன் வருத்தமாக இருந்தது முல்லை. உங்கள் கேள்விகள் அனைத்தும் சரியே. குடும்ப அமைப்பு நாம் உருவாக்கிக் கொண்டது. சமுகம் பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணின் திருமணத்திற்கு அவளுடன் தங்குவதைக் கேலி செய்கிறது. ஒத்துக் கொள்கிறேன்.

//இந்த அமைப்பு பையன்களுக்கு எவ்வித இழப்புகளையும் கொடுப்பது இல்லை//

குடும்ப அமைப்பினால் இழப்பு இல்லையென்றாலும், சில பெண்களால் இழப்புக்கள் உண்டாகுகின்றன். என் தோழிகள் பலர் அயல்நாட்டில் உள்ளனர். அவர்களுக்கு இந்தியா வர பிடிக்காததற்கு முக்கிய காரணம் - மாமியார் அடிக்கடி வீட்டிக்கு வந்திடுவாங்க. தனி குடித்தனம் வந்தப்பின் வீட்டிற்கு மாமியார் வந்தததற்காக தன் வீட்டிற்குப் போகாமல் தாய் வீட்டிலேயே இருந்த பெண்ணையும் தெரியும். எல்லாப் பக்கத்திலும் தப்பு இருக்கு முல்லை. மாமியாரும் மருமகளை மகனைப் பிரித்துக்கொண்டுப் போய்விடுவாளோ என்ற பயத்திலேயே பார்க்கின்றார். மருமகளுக்கும் மாமியாரிடம் தாயைப் போல் உரிமை எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

கண்டிப்பாக இந்த அமைப்பை மாற்ற வேண்டும். பெற்றவர்களைப் பேணுதல் என்பது இருவரின் பெற்றோராகவும் இருக்க வேண்டும். எப்பொழுது இந்த மாற்றம் வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் வர வேண்டும்.

Thamiz Priyan said...

///ஆகாய நதி said...

//
ஆனால், பிரச்சினைகளில்லாத குடும்பங்கள் இருக்கிறதா என்ன? அதற்கெல்லாம் இதுதான் தீர்வா? தனிக்குடித்தனம் போக ஒரு பெண் வற்புறுத்தினால் இதுதான் முடிவா? என்னவொரு குடும்ப அமைப்பு இது?
//

இது ஆணாதிக்கத்தின் அராஜகம் :( ///

ஆகாயநதி! நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு... நாங்களெல்லாம் எலிப் பொறியில் மாட்டிய அப்பாவி எலிகள் போல் தான் இருக்கின்றோம். பெற்றோர்கள் தவறு செய்தால் அதை சுட்டிக் காட்டினால். எங்கே மனைவியை வறுத்தெடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் வாழ்க்கையை நடத்துகின்றோம்.. போங்கம்மா... :(

Thamiz Priyan said...

கூட்டுக் குடும்பம் என்பதெல்லாம் இனி பழைய கதை. திருமணம் முடிந்ததும் அவரவர் இஷ்டப்படி விட்டு விடுவது தான் இனி வரும் சமூகத்திற்கு நல்லது. பிரிந்து இருக்கும் போது தான் நிறைய பாசம் இருக்கின்றது. வெளிப்படுகின்றது. எப்படியும் மூன்று அல்லது ஐந்து வருடங்களில் கடும் பிரச்சினைகளுடன் வேறு வீட்டிற்கு செல்வது இன்றைக்கு சகஜமாகி விட்டது. இந்த முடிவை முதலிலேயே பெருந்தன்மையுடன் எடுத்து இருந்தால் குடும்பங்களில் நிம்மதியாவது மிஞ்சும்.

சொந்த அனுபவம். நரக வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறோம். என்னத்த சொல்லி... என்னத்த செய்ய.. :((

காலம் said...

முல்லை

விசயங்களை அலசும் கோணத்தில் நல்ல முன்னேற்றம்
இன்னும் அமைப்பையும் ஒரு சின்ன அலசலுக்கு விட்டிருந்தால் கூடுதல் கணம் வந்திருக்கும்

கட்டமைக்கப்பட்ட இந்த அமைப்பு உலர்ந்து உதிர்ந்துகொண்டிருப்பதையே இவை காட்டுகிறது

பெண் கல்யாணம் ஆனபின்பு ஆண் வீட்டிதான் வாழவேண்டும் என்று எழுதப்படாத சடங்குகளில்தான் எல்லாமும் புதைந்திருக்கிறது

கணவன், பெண்வீட்டில்தான் வாழவேண்டும் என்று ஒரு முறையை சும்மா ஒரு கனவாய் கண்டு பாருங்கள் தனிக்குடித்தனக் கோரிக்கையை 90 சதவீதபெண்கள் முன்வைக்கமாட்டார்கள்

சிக்கல் அங்கிருந்துதான் தொடங்குகிறது

அப்புறம் இதையெல்லாம் தாண்டி இந்த அமைப்புமுறை தீவிரமான சிக்கல்களை விதைத்துக்கொண்டே இருக்கிறது

100 கிலோ மீட்டர் போய் நிற்க்கும் அதன் கோரங்களை நாம் 10 வது கிலோமீட்டரிலிருந்து விவாதித்துக்கொண்டிருக்கிறோம்

ஆகாய நதி said...

//
பெற்றோர்கள் தவறு செய்தால் அதை சுட்டிக் காட்டினால். எங்கே மனைவியை வறுத்தெடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் வாழ்க்கையை நடத்துகின்றோம்.. போங்கம்மா... :(
//

yeah i understood ur feelings... but this stupid guy's matter is different from ur point of u... am i correct? If he thinks like u then he should not take the knife to stop the problem..

அபி அப்பா said...

உங்க பதிவை படித்து முடித்தேன். அப்படியே இப்போ கன்லஞர் டி வியில் சொல்கிறார்கள்!!!! என்ன சொல்வது????