Friday, June 21, 2013

'சின்னக் கல்லு பெத்த லாபம்'

பப்பு ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள். மது லிமயி, கோவாவில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது  தனது இரண்டு மகனுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு அது.

"அந்த நாட்டுல  Aai யினா அம்மா,  Bhai யிநா அப்பா, இல்ல ஆச்சி? "

"ஆமா, மராட்டில அப்படி கூப்பிடுவாங்க, அது வேற நாடா?"

"இல்ல,ம்ம்ம்... ஸ்டேட்..."

"ம்ம்ம்...நாம அங்க போனாலும் நான் அப்படிதான் கூப்பிடனுமா?"

"ம்ம்ம்ம்" (க்ர்ர்ர்ர்)

"அங்க போய்ட்டா நீ என்னை எப்படி கூப்பிடுவ?"

"Popat ந்னு கூப்பிடுவேன்."

"அப்டின்னா?

" அதுல போட்டிருக்கு இல்ல, parrot ந்னு... அதான்., அந்த குட்டி பையனை அப்படிதான அவங்க அப்பா கூப்பிடறார்"

"ஆமா, ஆச்சி, எனக்கு கூட shanthi ந்னா  பொட்டு தான்  ஞாபகம் வரும்"

சாந்திக்கும் பொட்டுக்கும் இருக்கும் கனெக்சனை புரிந்துக்கொள்ள முடியவில்லை.  அவளோ , நானோ பொட்டு வைப்பதேயில்லை. எப்படி, சாந்திக்கும் பொட்டுக்கும் கனெக்சன் என்று ரூட்டை பிடித்துபோகும் ஆசை வந்தது.ஒருவேளை, வீட்டுக்கு வந்தவர்கள் பையில் ஒட்டும் பொட்டின் பிராண்ட் சாந்தியா என்று தெரியவில்லை. அது போகட்டும்.

பொதுவாக, கடிதங்கள் பற்றிய குழந்தைகளுக்கான புத்தகம் என்றால் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்களைத்தான் சொல்லுவார்கள்.அந்த புத்தகத்தை நானும் படித்ததில்லை. சிறுவயதில்,அதனை படிக்கச் சொல்லி யிருக்கிறார்கள்.  அதன் கனத்தை பார்த்து எடுக்கத் தோன்றியதில்லை. அந்த அளவுக்கு இல்லையென்றாலும், இந்த கடிதத்தொகுப்பு ஏன் பிரபலமாக வில்லை என்று தெரியவில்லை. (ஒருவேளை அவர் சோசஷலிஸ்ட் என்பதாலா?)  ஏழு டூ பத்து வயதினருக்கு ஏற்ற எளிமையான புத்தகம்.

அதே போல், பப்புவின் சம்மர் கிளாசிலிருந்து ஒரு ரிசோர்ஸ் லிங்க் கொடுத்திருந்தார்கள். அதிலும் சுவையான வடகன்னட நாட்டுப்புற கதைகள் இருந்தன. 'மேல்நாடுகளில் இருக்கும் அளவுக்கு நம்மிடம் குழந்தை இலக்கியம் இல்லை இல்லை'  என்று அரற்றுவதைவிட, அவற்றை நாம் சரியாகத் தேடி கண்டுபிடிக்கவில்லையோ என்று தோன்றியது.

 "டியர் பொபெட்" புத்தகம், வெகு எளிமையான ஆங்கிலத்தில், அட்டகாசமான கடிதங்களை கொண்ட சின்னஞ்சிறு புத்தகம். இப்போதெல்லாம், பப்பு புத்தகத்தை அதன் தடிமனை வைத்துதான் படிப்பதை தீர்மானிக்கிறாள். அந்த வகையில், ஏழு வயதினருக்கு புதிய நிலப்பரப்பை, புதிய மக்களை, அனுபவங்களை  தானாக படிக்க அறிமுகப்படுத்தலாம்.

இதை படித்ததும், அஞ்சலை அம்மாள் ஜெயிலில் இருக்கும் போது, தனது குழந்தைகளுக்கு ஏன் கடிதம் எழுதவில்லை என்பது பப்புவின் கேள்வி. ஆயா, தனது அம்மா ஜெயிலுக்கு போகும்போது, அவரையும், அவரது தம்பியையும் மற்றொரு காங்கிரஸ்காரர் வீட்டில் விட்டுவிட்டு போன கதையை, ஆயாவை சிறுவயதில் ஹாஸ்டலில் சேர்த்துவிட்ட கதையை எல்லாம் அவளிடம் சொல்லியிருக்கிறார். அப்படி எதுவும் கடிதங்கள் இருக்கிறதா என ரூட் பிடித்து இனிதான் போகவேண்டும்! :)

Sunday, June 16, 2013

கூல்..கூல்..ஸ்கூல்!

நேற்று பப்புவின் பள்ளியில், நோட்டு புத்தகங்கள்,யூனிஃபார்ம் மற்றும் இதர பொருட்கள் வாங்கும் டே!

வரிசையில் அமர்ந்ததும் திரும்பிப் பார்த்தால் இரண்டு சீட்கள் தள்ளி மாலா.

மாலா! 

பப்புவுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கம். நாங்கள் பழக்கியதுதான். அவளாக  குளியறைக்குச் சென்றால், கதவை உள்பக்கத்து நாதாங்கியை தனியாக இழுத்துவிட வேண்டும். சாத்தினாலும் உட்பக்கமாக பூட்ட முடியாது. மேலும், கதவு சாத்திக்கொண்டால், குழந்தை உள்ளே வைத்து தானாக பூட்டிக் கொள்வதை தவிர்க்கலாம். யாருமில்லாத நேரங்களில் என்றில்லை, குழந்தைகள் அறைக்குள் சென்று பூட்டிக்கொள்வதை தடுக்க பொதுவாக ஆயா இப்படி செய்தும், பப்புவுக்கு சொல்லியும் தந்திருந்தார். (பப்புவை பார்த்துக்கொள்பவர் வராத வேளைகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதே என்று, பப்புவுக்கு விபரம் புரியும்வரை,  அறைக்கதவுகளையும் அவ்வாறே உள்பக்கமாக இழுத்து விட்டிருப்போம்.)

பள்ளியில் என்றில்லை, நண்பர்கள் வீட்டுக்கோ, சினிமா தியேட்டருக்கோ  செல்லும்போதும், பப்புவுக்கு இந்த சொல்லியே அழைத்துச் செல்வது வழக்கம். சீனியருக்கு வந்ததிலிருந்து, பாத்ரூம் போக, உடன் பெரியவர்கள் யாரும் வருவதை, பாத்ரூமுக்கு வெளியில் நிற்பதை பப்பு விரும்புவதேயில்லை. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'உள்ளே லாக் பண்ணிக்கக் கூடாது, தாப்பா போட்டுட்டு கதவை சாத்திக்கோ' என்று சொல்லிவிடுவது.

மாலாவும், பப்புவும் ஒருநாள் ஒன்றாக பாத்ரூமுக்குச் சென்றிருக்கிறார்கள். பப்பு சென்றதும், அவள் சாத்துவதற்கு முன்பாக மாலா வெளியிலிருந்து கதவை  பூட்டிவிட்டிருக்கிறாள். வராந்தாவிலேயே ஒரு ஆயாம்மா எப்போதும் இருப்பார். அப்போது பார்த்து அவர் இல்லை. திகைத்துப் போய், கதவை தட்டி க‌த்திய பப்புவை சில நிமிடங்களிலேயே ஆயாம்மா வந்து கதவை திறந்துவிட்டிருக்கிறார்.

அதிலிருந்து மாலா என்றாலே பப்புவுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்! 'மாலா, பாதியிலதான் சீனியருக்கு வந்தா....யாரும் அவளுக்கு ஃப்ரெண்ட் இருக்கலன்னு நான் ஃப்ரெண்டா இருந்தா, அவ என்ன பண்ணா? பாத்ரூமில வைச்சு லாக் பண்ணலாமா?" என்று ஒரே பொருமல்.

மாலாவும் பப்புவின் பள்ளிதான். ஸ்பெஷல் சைல்ட். பப்புவின் பள்ளியில், ஸ்பெஷல் சில்ரனை சேர்த்துக்கொள்வார்கள். அவளது வகுப்பிலேயே ஏற்கெனவே இரு குழந்தைகளை பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில், அவர்களுக்கு தனியாக ஒரு அறையிலும், குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் அவர்களிடம் மாற்றம் தெரிந்ததும் ஏற்ற வகுப்புகளில்  சேர்த்துக் கொள்வார்கள். அதன்படி, மாலா, இடையில் சீனியருக்கு மாற்றப்பட்டிருந்த குழந்தை. பப்புவுக்கு என்றில்லை, அந்த வகுப்பில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. குழந்தைகளைப் பொறுத்தவரை,  அவர்கள்  இடையில் வந்து சேர்ந்தவர்கள். 

ஆனால், பாத்ரூமில் லாக் செய்வதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அது எந்த குழந்தையாகவும் இருக்கலாம். ஆனால், பப்புவுக்கு இதெல்லாம் புரிந்திருக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை, 'எல்லாரும் மாலாவை லஞ்சுக்கு சேர்த்துக்கல, நானும் விலாசினியும், புவனும் எங்க பக்கத்துல அவளுக்கு மேட் குடுத்தோம். என்னை ஏன் லாக் பண்ணனும்?" என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். 'தெரியாம பண்ணியிருப்பா, அதுக்காக அதையே நினைச்சுட்டிருப்பாங்களா, அதெல்லாம் உடனே மறந்துடணும்.' என்றாலும் ம்ஹூம்.

நல்லவேளையாக, பள்ளியில் இதனை நன்றாக ஹேண்டில் செய்திருந்தார்கள். இப்படி நடந்ததை எனக்கு அன்று மதியம் போன் செய்து சொன்னார்கள். அவளை அழைத்துப் போக வந்திருந்த மாலா அம்மாவிடமும் சொல்லியிருக்கிறார்கள்.  அவர், அங்கேயே அழுதுவிட்டதாக அடுத்த நாள் ஆயாம்மா சொன்னதைக்கேட்டு கஷ்டமாக இருந்தது. மாலாவின் அம்மாவை சந்திக்க நினைத்தேன். ஆனால், காலையில் நான் செல்லும் நேரமும், அவர் வரும் நேரமும்  சந்திக்க ஒத்துவரவில்லை. மாலையிலோ, அவரும் அதே பள்ளியில் மான்டிசோரி பயிற்சிக்காக சேர்ந்திருந்தார்.

அதற்குப்பிறகு, மாலாவும் பப்புவும்  சகஜமாகவே இருந்திருக்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் ஆபீசில் இருக்கும்போது பப்புவின் பள்ளியிலிருந்து போன்.
அவளது பள்ளியிலிருந்து போன் என்று பார்த்தாலே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். 'என்ன ஆச்சோ' என்றுதான். மாலா சௌக்கியை எடுத்துகொண்டு வந்து நேராக பப்புவை தலையில் இடித்திருக்கிறாள். 'ரத்தம் எதுவும் வரவில்லை. நெற்றியில்தான் வீக்கம். ஐஸ் வைத்தபிறகு ஒன்றுமில்லை. கவலைப்படவேண்டாம்' என்றார்கள். எப்படி கவலைப்படாமலிருப்பது?!! சௌக்கி என்பது டெஸ்க் போல இருக்கும். அன்று சீக்கிரம் கிளம்பி வீட்டுக்குச் சென்றுவிட்டேன். நல்லவேளையாக  பயப்படும்படி ஒன்றுமில்லை. அதிலிருந்து பப்புவையும் மாலாவையும் வகுப்பில் தூர தூரமாக உட்கார வைப்பதாகவும்  சொன்னார்கள்.  அதன்பிறகு, லஞ்சில் மட்டும் மாலாவோடு சேர்ந்துக்கொள்வதாகவும், சாரி சொல்லி ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டதாகவும் பப்பு சொல்லியிருந்தாள்.

ஆனால், மனதில், பாத்ரூமில் லாக் செய்த தாக்கம் மட்டும் பதிந்துவிட்டிருக்கிறது.  அந்த மாலாதான், நோட்டுப்புத்தகங்களை கைகளில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

'ஹாய் மாலா' என்றதும், அவளும் 'ஹாய்' என்றாள்.

லீவுக்குப் ஊருக்குப் போனது பற்றி எல்லாம் பேசி முடித்தோம். அதற்குள், அவரது அம்மா யூனிஃபார்ம் வாங்கிகொண்டு வந்திருந்தார். எனது முறையும் வந்திருக்கவில்லை.

'அம்மா, அவதான் குறிஞ்சி, பாத்ரூம்ல லாக் ' என்று அம்மாவிடம் சொன்னதும், அவர், "சாரி சொன்னியா? சாரி சொல்லு" என்று என்றார்.

"இட்ஸ் ஓகே, மாலா, அதெல்லாம் போன வருசம்தானே....குறிஞ்சி வீட்டுக்கு வரியா ஒருநாள்?" என்றேன்.

மாலாவின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எனது முறை வந்தது. விடைப்பெற்றுகொள்ளும்போது, மாலாவும், 'நீங்க எங்க வீட்டுக்கு வாங்க' என்று அழைத்தாள்.


அவளிடம் 'பை' சொல்லிவிட்டு யூனிஃபார்ம் வாங்கினோம். நோட்புக்குகள் வாங்க காத்திருக்கும்போது, பிரம்மி ,தந்தையுடன் கடந்து சென்றாள். சென்ற வருடம், அவளது டான்ஸ் ஸ்கூலிலிருந்து ஒரு ஃப்ளையரை கொண்டு வந்து கொடுத்து 'குறிஞ்சியை சேர்த்துவிடுங்க ஆன்ட்டி' என்று சொல்லியிருந்தாள்.

திரும்பி வரும்போது, பப்புவிடம்,

"ஹேய், பிரம்மி என்னப்பா, நல்லா ஒயரமாயிட்டா!!" என்றேன்.

"இல்ல ஆச்சி, அவ என்னோட குள்ளம்" பப்பு

" அப்படியா? ஆனா, லீவ்ல ரொம்ப ஒல்லியாகிட்டா, குண்டா இருப்பாளே!"

"ஆச்சி, இப்ப நீ சப்பாத்தி மாவு உருட்டறேன்னு வச்சிக்கோ, ஃபர்ஸ்ட் உருண்டையா  குண்டா இருக்கும்.... அப்புறமா, உருட்டனா நீட்டா ஒல்லியாதானே ஆகும்...அதுமாதிரிதான், குட்டி வயசுல, குண்டா, குள்ளமா இருந்தா. இப்ப, ஒல்லியா நீட்டா ஆகிட்டா."

அவ்வ்வ்வ்வ்வ்!! என்னவொரு interpretation!!

Thursday, June 13, 2013

பப்பு டைம்ஸ்

"ஆச்சி, வளைஞ்சி வளைஞ்சி போகாதே!" ‍-  பப்பு

டூ வீலர்ல பப்புவை ஸ்கூலுக்கு கூப்பிட்டுட்டு போகும்போது, கொஞ்சம் வளைஞ்சு பை பாஸ் பண்ணி சிக்னல்ல முன்னாடி போய் நின்னுட்டேன்.

"ஏன்? காலை இடிச்சுக்கிட்டியா?" - மீ

"இல்ல...வளைஞ்சு வளைஞ்சு போகாதே!" - பப்பு

"வளைஞ்சு போனா என்ன?" -  மீ

"வளைஞ்சு போனா குட் மேனர்ஸ் கிடையாது." - பப்பு


"..?!!.."

" நீ இப்ப க்யூல இருக்க. யாராவது வந்து உனக்கு முன்னாடி போய் நின்னா எப்படி இருக்கும்? குட் மேனர்ஸா அது? அது மாதிரிதான், பைக் பின்னாடி நாம இருந்தா, அது போனதுக்கு அப்புறமாதான் நீ போகணும். நீ வளைஞ்சு போனா அவங்களுக்கு எப்படி இருக்கும்?!" - பப்பு

"........" (அவங்களுக்கு எப்படி இருக்குமா?....நமக்கு லேட் ஆகிடும்.. மகளே!!அவ்வ்வ்  - மைன்ட் வாய்ஸ்!)

"உனக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க...சொல்லு...உனக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க....!" - - பப்பு

நான் ஏன் வாயை திறக்கறேன்?!!

போன வருசமெல்லாம், திடீர் திடீர்னு சில பைக் நம்பர்களை கொடுத்து போலீஸ்கிட்ட சொல்லு, சொல்லுன்னு ஒரே அட்டகாசம்.என்னன்னா, அவங்க எல்லாம், பைக்லே ஹெல்மெட் போடாம போனவங்களாம்.  காலையில பார்த்ததை மனப்பாடம் பண்ணி சாயங்காலம் நான் ஆஃபீஸ்லேருந்து வந்ததும் இந்த பஞ்சாயத்து நடக்கும்! இந்த வருசம் இப்படி ஆரம்பிச்சிருக்கு!!

ஆம், பப்புவுக்கு பள்ளிக்கூடம் திறந்துவிட்டது!

மாலையில், வீட்டுக்குச் சென்றதும் பப்புவிடம் 'எப்படி இருந்துச்சு ஃப்ர்ஸ்ட் டே?" என்றேன். வழக்கமாக சில சோகங்கள் இருக்கும். பழைய நண்பர்கள் பள்ளி மாறிச் சென்றிருப்பார்கள். ஆன்ட்டியும் மாறி இருப்பார்.  ஆயாம்மாவும் வராமல் போயிருப்பார். இப்படி, ஏதாவது ஒன்று இருக்கும். இந்த முறையும் அப்படி சில நண்பர்கள் பள்ளிக்கூடம் மாறிச் சென்றிருக்கிறார்கள். இப்போ எனக்கு, '16 ப்ஃரெண்ட்ஸ்தான்' என்றாள், சிரித்தபடி. ஹப்பாடா!!

"அப்புறம், ஆன்ட்டி என்ன சொன்னாங்க உங்களுக்கு? , பிரேயர்லே" என்றேன்.

"நான் ஒரு நியூஸ் சொன்னேன் இல்ல...அதைதான் இவங்களுக்கு  ஆன்ட்டி இன்னைக்கு சொல்லியிருக்காங்க. அதாம்மா, ஒரு பொண்ணு, +2 படிக்கிற பொண்ணு, டீவி பார்த்துக்கிட்டே  இருந்திருக்கு. அவங்க அம்மா அப்போதான் மளிகை சாமான் வாங்கிட்டு வந்து ஹால்ல வைச்சிருக்காங்க. அது டீவி பார்த்துக்கிட்டே பெப்சிபாட்டிலை திறந்து குடிச்சிடுச்சுன்னு சொன்னேன் இல்ல"  என்றார் பெரிம்மா.

அது  பாட்டிலில் பெப்சி இல்லை. அதில் இருந்தது ஆசிட். அந்த பெண்ணை இறுதியில் காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டாள். :- ( பெரிம்மா சொல்லி இந்த செய்தியை கேட்டிருந்தேன். அதைதான் ஆன்ட்டியும், அவர்களுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லி அறிவுரை கூறியிருக்கிறார். என்ன அறிவுரை கூறியிருப்பார்? "டீவி பார்த்துக்கிட்டே சாப்பிடாதீங்க, அப்புறம் நீங்க என்ன சாப்பிடறீங்கன்னே தெரியாது." என்றுதானே சொல்லியிருப்பார்!

ஆன்ட்டி சொன்னதாக பப்பு சொன்னதை கேட்டு பெரிம்மா கொஞ்சம் கலங்கிதான் போய்விட்டார். இருக்காதா பின்னே?!

"அந்த அக்கா மாதிரி கம்ப்யூட்டர்(!) பார்த்துகிட்டு நீங்களே சாப்பிடாதீங்க. நீங்க கம்ப்யூட்டர் பார்க்கும் போது, வீட்டுல யார் இருக்காங்களோ அவங்களை ஊட்டி விட சொல்லுங்க.  நீங்களே சாப்பிடக்கூடாது. அப்பதான்,  தப்பு நடக்காது!!" ‍ அப்படின்னு ஆன்ட்டி சொன்னாராம்.

அவ்வ்வ்வ்வ்!!

ஆமா, குழந்தைகளைத்தான் சாட்சி சொல்ல கோர்ட்டில் கூப்பிடுவார்களாமே, அந்த வழக்கம் இன்னும் இருக்கிறதா என்ன? :-)


Monday, June 10, 2013

My Little trip to the Fort Museum - By Pappu

First, we got ready in our house. Because, we are going for a little trip. To the Fort museum. We took an auto and went to the Guindy Railway station. There was a queue. I and my mother got the tickets.I asked my mother if it is the AC train. And, went on the train.

The train started moving. The train was filled with people. Last but second is our station.
On the way, we saw my mother's office. Do you know what color is her office? Great!! Pink color!
It went off by the window. And, the next stop was our station. We got off the train and walked on the road.

And I was so happy to walk. but, my mom said, 'let us take an auto'. I said, 'yes. we will'.
My mother did a dangerous thing. There was a man hole and she jumped on that. We took an auto.The auto man asked us Rs.40.

We went to Museum. I was in joy. My mother turned that side. What did I do, do you know?
I danced in joy.  To get inside, we gave the money. We went into the first room. We saw little mortars,canons,bombs.

It was not ours. It was British people's.

I can not believe my eyes. I saw chain bombs. I wish to touch them.
But there was glass in between. We can not touch it. Then my mother said. " We should only see the things thru eyes".

We went inside further. There we saw knifes. I was so scared. There I saw swords. I was thinking, How can those people  lift such heaviest swords? It was too heavy. I thought, I can see it  again, when I become big girl. I loved the musuem. 

I wish to stay there for a long time. But, I should go to my home.

We saw two statues of British soldiers. I was angry. Why can not they display Indian people?
We saw some British people's  dresses. I asked my mother I asked my mother, if it was ours or British men's?My mother said,  "It is British Men's Uniforms". And,we saw more Medals. In the Medals we saw Queen Victoria's face. It was made of gold.

We went upstairs. And I walked very joyously. We saw more things. What?I will prove it to you.
We saw coins, tiny tiny coins with more designs. You can not see them anywhere.You can not remember the designs.  There were more designs. We saw, Indo-french,Indo-Portuguese,Indo-dutch and coins of Tipu. We went to the next room.  It was also filled with coins with more designs. Happily, I walked.

Next Room, had photos. (Portraits!). I liked 3 queens. I want their make ups, I wish. What? I will prove it. It is queen Victoria, Queen Alexandra and Queen Mary. I remembered of a story in that name.   We sat on the king's chair.

Next we went upstairs. There we saw our freedom fighters. And I thought I should love that period. I wish to fight with British with no blood from my body. But it can not . Still, am happy now too.
Because, the scientists have found more things for us now.


We went to next room. There, we saw first Indian flag. I did a mistake. Can not proove it to you. My mother hit me.  She hit me, because I saluted the flag with left hand.I slapped her. But, nobody see us. And, I pinched her. I am still happy. I was sad inside, not outside.And, the flag is from  1947th year. And I was in joy and bit bored.


There was freedom fighters name list and we read that. I found out my great great granny's name. She was my great grandma's Mother. I thought ,she was little beautiful. My great grand ma has told me many stories about her mother. I was happy, My great grandma's Mother was there in the list. Her name was Anjalai ammal. If you go, you can also see.

When I become  a big girl, With my Mother I will find more things.

And, there was my favorite people. Rani of Kittur, Rani of Jhansi!!  My mother asked me to read more names. I read. Then we came down. We actually forgot to see one room there. There was plates, tea cups, jugs and more and more things I love. We saw them and walked.

There was a little map.We saw the king had named it. It had been like Island, filled with water. Now there is no water.  Because , so sunny in May and June. We loved that day. We came out and we walked. My mother said, " I will take photos". I acted like Running.There was a big Mandapam. We came out of the Museum and gone back to Home..

 குறிப்பு:பப்பு சொல்ல சொல்ல நான் எழுதியது. பப்புவுக்கு மியூசியங்கள் சென்று பார்ப்பது, அவற்றை அறிந்துக்கொள்ள முற்படுவது பிடித்தமான, மகிழ்ச்சியான‌ ஒன்று.வழக்கமாக,மியூசியத்துக்கோ, புது இடத்துக்கோ சென்று வந்தால், அவளை எழுதச் சொல்வேன். இந்த முறை, டைப்படிக்கும் அளவுக்கு இருந்ததால் பதிவில். இங்கு அவள் மேப் என்று குறிப்பிடுவது, ஜார்ஜ் கோட்டையின் முழு மாதிரி வடிவம். கோட்டை மியூசியம் நிச்சயம் காண வேண்டிய ஒன்று. ஆறு வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு ஓகே!

Friday, June 07, 2013

பப்புவும் டர்க்கிஷ் பூனையும்

"அக்கா, பேசாம பப்புவை தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக்கிடு" என்றான்  தம்பி.

அன்று காலையில்தான் ஊரிலிருந்து  வந்தவனை, 'டர்க்கிஷ் கேட்' வாங்கி யிருக்கிறோம் என்று  நம்ப வைத்திருக்கிறாள்.  பப்புவை, அவளது குறும்புத் தனத்தை, பார்த்தவர்கள் சிலர் அடிக்கடி அப்படி சொல்லக் கேட்டிருக்கிறேன். பயங்கரமாக கதை விடுவாள். அப்படியே,அவள் சொல்வதுதான் உண்மை என்பது போல் நடிப்பாள். அவளைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் நாங்கள் ஒன்றும் பெரிதாகக் கண்டுக்கொள்வதில்லை. (அவள் சொல்வதை நம்புவதாக அவளையே நம்ப வைத்துவிடுவோம்!) ;‍-) எல்லாக் குழந்தைகளும் அப்படித்தானே இருக்கின்றன, இப்போதெல்லாம்!!

 ஆனால், மற்ற சில உறவினர்களோ, 'நல்லா பொய் சொல்லுது' என்றோ 'இப்பவே பொய் சொல்ல நல்லா கத்து வைச்சிருக்கு' என்றோ சொல்வதுண்டு. இன்னும் சிலர், கொஞ்சம் மேலே போய், 'எல்லாம் அவங்க அம்மா சொல்லி கொடுத்திருக்கு' என்பார்கள்! இதில், உண்மை என்னவென்றால், அவள் சொல்வது பொய் என்றே அவளுக்குத் தெரியாது.

அவள் எதை நம்புகிறாளோ, கண்ட கேட்டவற்றிலிருந்து மனதில் பதிந்த தைத்தான் சொல்கிறாள். நாங்கள் அதை தடுப்பதில்லையே தவிர‌, அவளது கற்பனைத்திறன் என்றே  புரிந்துக்கொள்கிறோம்.. தவிர 'அவள் பொய் சொல்கிறாள்' என்று மற்றவர்கள் சொல்வதையெல்லாம், (இப்போது வரை) பப்புவை அண்டாதவாறுதான்  பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இப்போது சொல்ல வந்தது, அதைப்பற்றியல்ல.

தம்பி அப்படி சொன்னபோது பப்புவும் அருகிலிலிருந்ததால், "முதல்ல ஸ்கூல்ல நல்லா படிக்கணும், அப்புறம் காலேஜ் போகணும், இதெல்லாம் ஹாபியா வைச்சுக்கலாம்" என்று 'ஆயா எனக்கு ஓதியது' மாதிரி நானும் ஓதி வைத்தேன்.

தம்பியும், "ஆமா, அப்புறம் வேலைக்கு போகணும், சம்பாரிக்கணும், கல்யாணம் பண்ணிக்கணும், அப்புறம் குழந்தையை வளர்க்கணும், வீக் என்ட் எப்போ வருது பாக்கணும்," என்றான்.

அவன் சொன்னதைக்கேட்டு நான் சிரித்துக்கொண்டிருந்தேன். பப்புவோ, 'கல்யாணம் வேணாம் மாமா' என்றாள். 

"ஹேய், உனக்கு யாரு இப்ப கல்யாணம் பண்றேன்னு சொன்னது?" என்றதும் "இல்ல, மாமாவுக்கு கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன்" என்றாள் பப்பு.

"மாமாவுக்கு  கல்யாணம் வேணாம்னா மாமாதான் சொல்லணும்;நீ ஏன் சொல்றே " என்றேன்.

"மாமா, கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா' கல்யாணம் பண்ணிக்காதீங்க மாம" என்று  விடாமல் சொல்லியபடி அவனது கையை பிடித்துத்தொங்கி ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டிருந்தாள். எங்களுக்கோ ஒரே சிரிப்பு தாங்கமுடியவில்லை!! நடுவில், தம்பி வேறு, 'எல்லாம் உன் வேலைதானா' என்பது மாதிரி என்னைப்பார்த்தான்.

"ஹேய், பப்பு, மாமாவுக்கு கல்யாணம் வந்தா நாம புது புது ட்ரெஸ் வாங்கிக்கலாம்!  உன் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம்  மாமா கல்யாணத்துக்கு கூப்பிடலாம்,அப்புறம், பிரியாஆஆஆஅணி!! எப்பூடி...ஜாலியா இருக்கும் இல்ல?" என்றேன்.

"அதெல்லாம் ஒரு நாளைக்குத்தான்! அப்புறம் போர்!" ‍ பப்பு!!

அவ்வ்வ்வ்வ்!! போரா?!! இந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

"போரா?? யாருக்கு போர்? எவ்ளோ ஜாலியா இருக்கும், பப்பு? மருதாணி எல்லாம் வைச்சுக்கலாம்" என்றேன்.

"ஆமா, போர்தான்! மாமாவுக்கும் அவங்க வைஃப்புக்கும்தான்!!" ‍ என்று சொல்லிவிட்டு, மாமாவின் கையை பிடித்து தொங்கி தொங்கி ஆடிக்கொண்டிருந்தாள்.....

கூடவே,  "மாமா, கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா, கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா" என்று சிரித்து சிரித்து  சொல்லிக்கொண்டு!!

"க்கா, இதெல்லாம் உன் ட்ரெயினிங்கா"  என்றான் தம்பி என்னைப்பார்த்து.

"டேய், நான் எதுவும் சொல்லிக்கொடுக்கைலைடா,என்னை சந்தேகப்படாத‌" என்றாலும் அவன் நம்பவேயில்லை!

எதிர்காலத்தை நினைத்தால் பயமாயிருக்கிறது!! அவ்வ்வ்வ்வ்வ்!!

Sunday, June 02, 2013

"ஆமந்தொரக்கி போயிரிக்கியளா?"


'இப்பத்தாம் ஆமந்தொரயிலேந்து வாறம்...கட எரச்ச இன்னம் காதுல வுழுந்துக்கிட்டிரிக்கி' ;-)

ஆமந்துறை எங்கே இருக்கிறது என்று தமிழ்நாடு வரைபடத்தில் தேட வேண்டாம். அது ஜோ டி குருஸின் 'ஆழி சூழ் உலகில்' இருக்கிறது. ஒரு தென் தமிழக கடற்கரையோர மீனவ கிராமத்தை யாரும் அறியாத, பொதுவாக பலருக்கும் தெரியாத எல்லா வண்ணங்களோடும் இந்த நாவல் காட்டுகிறது.. ஆமந்துறையின் எண்ணற்ற மனித முகங்களை, அவர்களது வாழ்க்கைப் பாடுகளை, கடலை, அதன் அலைவாய்கரையை, கடலின் மணலை முப்பரிமாணத்தில் அறிமுகப்படுத்துகிறது'ஆழி சூழ் உலகு'.

ஆரம்பத்தில் நாவலில், வரும் வார்த்தைகள் தமிழாக இருந்தாலும் ஒன்றுமே புரியாதது போல இருந்தது. 'அணியம், சோழ வெலங்க, ஆழி, பருமல், மாசா, கத்து,ஓங்கல்கள்,பணிய, சம்பை,மேற்றிராசனம்' அவர்கள் பேசும் மொழியே அந்நியமாக  இருந்தது. ஒரு சில பக்கங்களுக்குப் பிறகு ரொம்ப பரிச்சயப் பட்டதாக மாறிவிட்டது. நாவலின் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்ட அருஞ்சொற் பொருள் விளக்கம்  இல்லையென்றால் கொஞ்சம் கடினம்தான்! கிட்டதட்ட நான்கு தலைமுறைகள் வழியாக காலப்போக்குகள், நிகழ்வுகள் சொல்லப் பட்டிருக்கின்றன. ஆனால்,  ஆங்காங்கே பொதியப்பட்டிருக்கும் நுணுக்கமான‌ தகவல்கள் பரதவர்களின் நூற்றாண்டுகால வரலாற்றையே பதிவு செய்ததாக இருக்கிறது.





கன்னியாகுமரியின் பெயர் காரணம் நாம் எல்லாருமே அறிந்ததுதான். சமீபத்தில், எங்கோ வாசித்திருந்தேன், கன்னியாகுமரியைத் தாண்டி இருந்த நிலப்பரப்பு கடலால் அழிந்தபோது குமரியின் முனையில் அலைவாய் க்கரையில்  தன் காதலனுக்காக‌ காத்திருந்த பெண்ணே  பிற்காலத்தில் கன்னியாக்குமரி அம்மனாக மாறினாள் என்று. அதை வாசித்ததிலிருந்து, ஒரு இளம்பெண் கடலை நோக்கி காத்திருப்பது போன்ற சித்திரமே என் மனதில் பதிந்திருந்தது.  கடலோடு கலந்த அந்த குமரிப் பெண்தான் முதல் பரத்தி என்கிறது இந்த நாவல். பரதவர், அவளைத்தான் தம் குலமகளாக் எண்ணுகின்றனர். கடலை அந்த அம்மனாகவே காண்கின்றனர். கடலின் பெரிய மீன்களும் அந்த சக்தியின் சத்தியத்துக்கு கட்டுபடுவதாகவே நம்புகின்றனர். எளிய நாட்டுப்படகுகளிலும், கட்டுமரத்திலும் சென்றாலும்  எந்த பெரிய மீன்களும், மீனவர்களை அந்த சத்தியத்துக்கு கட்டுபட்டு, எதுவும் செய்வதில்லை.

அதிலும், ஓங்கல்கள் பரதவர்களின்/மனிதர்களின் நண்பன் என்றே நம்புகிறார்கள். கடலில் தவறி விழுந்துவிட்டாலும் சுறா மீன்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவது இந்த ஓங்கல்கள்தான். அதனாலேயே, இந்த ஓங்கல்களை பிடிப்பதோ,உண்பதோ இல்லை.ஓங்கல்கள் என்றால் டால்பின்கள். பரதவர்களின் மகத்தான பெண் தெய்வ நம்பிக்கையை, கண்டுகொண்ட பாதிரிகள் கடலை அன்னை மேரியாக உருவகப்படுத்தி கிறிஸ்தவ மத நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள்.






இந்த நாவல் நிகழும் களம் ஆமந்துறை. இந்த ஊர் கற்பனையே என்று நினைக்கிறேன். நாவல்படி, இந்த ஊர் கூத்தந்துறைக்கும் கூடங்குளத்துக்கும், மணப்பாட்டுக்கும் இடையில் கடல் உள் வாங்கியபடி அமைந்திருக்கிறது. இங்கு ஆமைகள் கோடையில் முட்டையிட வரும். மேலும், கடலிலிருந்து திரும்பும் பரதவர்களுக்காக கடற்கரையில் ஆமையின் ஓடுகளில் விளக்கேற்றுவதாலும் இந்த பெயர் வந்திருக்கலாம். இந்த ஆமந்துறையில், தொம்மந்திரையின் சிறாப்பாறு பயணத்திலிருந்து ஆரம்பிக்கும் கதை, சிலுவையின் திசை மாறிய பயணம் வரை திகில்களோடு, சுவாரசியம் குன்றாமல் பயணிக்கிறது!


இந்த நாவலை வாசித்தபோது, பப்புவோடு நானும் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தேன். 4.3 அடி ஆழ தண்ணீரே எனக்கு மூச்சு மூட்டவும், நீரின் அழுத்தத்தை உணரவும் போதுமானதாக இருந்தது.  கழுத்தளவு தண்ணீரே உடலை அழுத்துவது போலவும், தலையெல்லாம் கிறுகிறுத்தது போலவும் இருந்தது. ஓரளவு நீந்த கற்றுக்கொண்டு ஒரு முழு லாப் செய்யும்போதோ தலையெல்லாம் வலித்து என்னென்னவோ செய்து வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. இத்தனைக்கும்  நினைத்தால் எட்டிபிடித்து நடந்துவிடும் தூரத்தில்தான்  தரை. ஒரு செயற்கையான தண்ணீர்தொட்டிக்கே இப்படியென்றால், பிரமாண்டமான கடலின் மீது, சுழித்துக்கொண்டு ஓடும் வாநீவாட்டுக்கும் சோவாநீவாட்டுக்கும் இடையில் , வாழ்க்கைக்கு போராடும் இந்த சின்னஞ்சிறு மனிதர்களை நினைத்தால் வியப்பும்,நெகிழ்ச்சியுமாக இருக்கிறது.  ஒவ்வொருநாளும் கடல் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. மணலும் மாறுகிறது. கிடைக்கும் மீன்கள் வித்தியாசப்படுகின்றன. அதோடு, அவர்களின் வாழ்க்கையும்!

பக்கத்து மீன்பரவ கிராமத்தினர் விரோதம், கிராமத்தில் நடக்கும் உட்பூசல்கள், கமுட்டிகளின் நியாய அநியாயங்கள், போதாததற்கு சுரண்டி பிழைக்கும் பாதிரிமார்கள், வெட்டு குத்து என்று முரட்டுத்தனங்களோடு ஆதரிக்க யாருமற்று எவர் வந்தாலும் அன்பாக அணைத்துக்கொள்ளும் போக்கு என்று ரத்தமும் சதையுமாக ஆமந்துறை மக்களின் வாழ்க்கை விரிகிறது. வாசிக்க வாசிக்க எவ்வளவு பெரிய உழைப்பை கோரியிருக்கிறது, இந்த நாவல் என்ற‌
வியப்பே மேலிடுகிறது. பிரமாண்டமான கடலைப் போலவே  பிரமாண்டமான நாவல்!



பரதவர்கள், மீன்பிடித்து வரும்போது, கிராமத்தவர்கள் ஒமலிலிருந்து தங்கள் தேவைக்கு எடுத்துக்கொண்ட பிறகே விற்பனைக்கு வருகிறது. இதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. இதற்கு, கப்பலில் வேலை செய்து வசதியாக வாழ்பவர்களும் விதிவிலக்கல்ல. இந்த வழக்கத்தை நினைத்து ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.உயிரை பணயம் வைத்து பிடித்து வந்த  பொருளை சும்மா கொடுக்கும் வழக்கம் சமவெளி சமூகத்தினரிடையே இருக்கிறதா வென்று தெரியவில்லை. அதோடு, முடி எடுப்பவர்களுக்கும் அப்படி உரிமை உண்டு. அதோடு, அவர்களுக்கு பட்டும் நகையும் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
 
பரதவர்களுக்கும் நாடார்களுக்கும் இருக்கும் வியாபார ரீதியான உறவு, கொழும்பிலிருக்கும் உறவினர்களை சந்திக்க வசதியாக வரும் கச்சத்தீவு  திருவிழா,அரசாங்கத்தின் சலுகைகள் எதையும் பெற இயலாமல் செய்கின்ற
அதிகாரிகள், காகு சாமியாரின் தொலைநோக்குப் பார்வையால் சூடுபிடிக்கும் றால் ஏற்றுமதி, திராவிட கட்சிகளின் மாநாடுகள், அவற்றின் போராட்டங்கள், அரசியல்வாதிகளின் சுயநலம், தனுஷ்கோடியை சீரழித்த புயல்,காலரா ஊசி,கொழும்பில் சிங்களவர்களுடனான கலவரம் என்று அந்தந்த‌ காலஓட்டத்தின் பின்னணியில் சமூகத்தின் அத்தனை நிகழ்வுகளையும் அழகாக விவரிக்கிறார் ஜோ டி குருஸ்.

அமலோற்பவத்தில் ஆரம்பித்து, மேரி, சூசானா,எஸ்கலின், வசந்தா, சுந்தரி டீச்சர், தோக்களத்தா,அன்னம்மா,சாரா, செலின்,லூர்து,எலிசபெத், மணிமேகலை வரை ஆமந்துறையின் பெண்கள் வலம் வருகிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொருவரும் வஞ்சிக்கப்படுகிறார்கள். மற்றவர்களை வஞ்சிக்கிறார்கள். ஏமாறுகிறார்கள். அடிபட்டும், உதைபட்டும் வலியோடு ஜீவனம் நடத்துகிறார்கள். சில சமயங்களில், ஒருவருக்காக ஒருவர் பரிந்து பேசுகிறார்கள்.தாய் தந்தை இழந்த குழந்தைகளை அரவணைக்கிறார்கள். தியாகம் புரிகிறார்கள். கடலுக்குச் சென்றவர்களுக்காக பதைபதைப்புடன் காத்திருக்கிறார்கள். திரும்பாவிடில் விதவைக்கோலம் பூண்கிறார்கள். ஒரு சுனாமிக்குப் பிறகே கடலை,இயற்கையைப் பற்றி நமக்கு பயம் வருகிறது. கடலையே நம்பிய வாழ்க்கை எனில்? 

மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன், கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி, குழந்தை மீதான‌ பாலியல் துஷ்பிரயோகங்கள், ஆசிரியர்களின் கடும்தண்டனை முறைகள், அதனாலேயே கல்வியை வெறுத்து கடலுக்கு ஓடும் பரதவ இளம்தலைமுறை,கடலில் ஏற்படும் சண்டைகள், கலவரங்கள், இயற்கைச் சீற்றங்களின்போது கிராமத்தை, வீட்டை,ஏத்தனங்களை விட்டு வெளியேறும் அவலம்,சிலுவை கல்யாணம்.....விதம் விதமான மனித உணர்வுகள்!! 


நாவல் முழுவதும் நாம் உணரும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் 'கட'. எதுவும் பேசவில்லையே தவிர கடலின் பேரிரைச்சல் நம் காதுகளில் எப்பொழுதும் விழுந்தவண்ணம் இருக்கிறது. ஜஸ்டினை ஜெயிக்க வைக்கிறது. ஊமையனை மாசாவில் தடுமாறி விழ வைக்கிறது. அவனது உடலை கரையில் ஒதுக்கும் அடுத்தநாளே, ஒன்றுமறியாதது போல சாதுவாக கிடைக்கிறது. சிறுவர்கள் கொல்லம் பழங்களைப் போட்டு, சில்லி எடுத்து விளையாடும் கடலில்தான், வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையில் இந்த சிறுமனிதர்கள் போராடுகிறார்கள். கதாமாந்தார்கள் ஒவ்வொருவருடனும் கடல் பின்னி பிணைந்து இருக்கிறது. ஒரு மௌன‌சாட்சியாக எல்லா நிகழ்வுகளையும் பார்த்த வண்ணம் அவர்கள் வீட்டு வாசலில் கிடக்கிறது.

நாவலின் சுவாரசியமான இன்னொரு விஷயம் உணவு பற்றிய செய்திகள்!  குதிப்பு மீன் குழம்பு, வாளை,சாளை,மீன் முட்டை பணியாரம் என்று ஆமந்துறையின் உணவு நம்மை சப்புகொட்ட வைக்கிறது. சுறா, மஞ்சப்பொடி கருவாடு எல்லாம் வாசிக்கும்போதே சாப்பிட ஆசையாக இருக்கிறது. கடல் ஆமையின்  ரத்தத்தையும், ஆமை இறைச்சியையும் உணவாக பயன்படுவதை அறிந்தது புதிது!




கோத்ரா,சூசை, சிலுவை இந்த மூவரும் கடல் கொந்தளிப்பில் மரம் உடைந்து நடுக்கடலில் மாட்டிக்கொள்கிறார்கள்.நாட்கணக்கில் தத்தளிக்கின்றனர்.    இவர்களின் ஜீவ மரணப்போராட்டத்தில் வழியே நாவல் விரிகிறது. 'நண்பருக்காக தியாகம் செய்வதே சிறந்தது' என்று காகு சாமியார் சொன்னதை நினைவில் கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் நண்பருக்காக உயிரை தியாகம் செய்கின்றனர். நாவலும் தியாகத்தையே விதந்து போற்றுகிறது. இறுதியில் சிலுவை மட்டும் கொச்சின் துறைமுகத்தருகே உயிர் பிழைக்கிறான். இந்த மூவரை கிராமத்தவர்களும், மற்ற மீனவ கிராமத்தவர்களும் தேடும் இடம் மிகவும் அருமையானது. மீனவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பது நமக்கு ஒருவரிச் செய்தி மட்டுமே. மொத்த கடலோர கிராமங்களுக்குமே அந்த பதைபதைப்பை பகிர்ந்துக்கொள்கிறார்கள்.யாருடைய உதவிக்கும் காத்திராமல் படகுகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொருநாளும் கடலில் தேடி அலைகின்றனர்.சில சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் எதிரியாக பார்த்தாலும் ஆபத்தில் பரதவர்களுக்கு பரதவர்களேதான் உதவி செய்துகொள்ள வேண்டும்.

நாவலைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். திருச்செந்தூரிலிருந்து, திருவைகுண்டம்,வீரபாண்டியன் பட்டினம்,தூத்துக்குடி,மணப்பாடு, திசையவிளை,சோதிக்காவிளை,நாரோயில்(நாகர்கோவில்!)குலசேகரன்பட்டினம்,இடையன்குடி,கச்சத்தீவு,தீவுக்கடல், ஆழியிலிருந்து தீவுக்கடல் வரை அவர்கள் தாண்டும் கடற்பரப்புகள், கொழும்பு வரை  நாமும் நாவலுடன் பயணிக்கிறோம்.  நாவலில் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு பக்கத்தில் மரணத்தைத் தழுவுகின்றனர்.

சாவுக்குப் போய்விட்டு வந்தபின் கடலில் கால்நனைத்து வீடு திரும்புவது, பிடிமண் போடுவது,கடலில் ஓங்கல்கள் அழும் சத்தம் கேட்டு சகுனம் பார்ப்பது.....இப்படி, பரதவர்களின் தொன்மையான நம்பிக்கைகளை நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 'ஆழி சூழ் உலகை' வாசிக்கும் முன்பாக 'சிப்பியின் வயிற்றில் முத்து' நாவலை வாசித்து திகைத்து போயிருந்தேன்.

கடலை, அதன் மனிதர்களுடன் சமூக நோக்கில் விவரிக்கும் நாவல் அது. ஒரு வங்காள எழுத்தாளர் நமது தமிழக கடற்கரையோர கிராமங்களைப் பற்றி இப்படி நுணுக்கமாக பதிவு செய்திருப்பது வியப்பாக இருந்தது. அதிலும், மீன்பரவர்களைப் பற்றி நுணுக்கமாக வரலாற்று தகவல்களோடு செறிவாக எழுதப்பட்டிருந்தது. நாவலை வாசித்து முடித்ததும் தூத்துக்குடியின் தெருக்களிலும், முயல்தீவுக்கும், கடற்கரையோரங்களிலும், மணப்பாடு முதல் மன்னார் வளைகுடா வரையிலும் அலைந்து திரிய ஆசையாக இருந்தது.

'ஆழி சூழ் உலகை' வாசித்தபின்போ ஆழிக்கும், சிறாப்பாறுக்கும் கச்சத்தீவுக்கும், ஆமந்துறைக்கும் சென்று வர ஆசையாக இருக்கிறது. ஆழி சூழ் உலகின்' விலையை பார்த்து சிலசமயம் வாங்குவதா வேண்டாமாவென்று யோசனையிலேயே தவிர்த்திருக்கிறேன். இப்போதோ, 'சிப்பியின் வயிற்றில் முத்து' நாவலையும் 'ஆழி சூழ் நாவலையும் வாசித்ததற்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆசிரியரின் அடுத்த நாவல் 'கொற்கை' என்று அறிகிறேன். அடுத்து, கொற்கையை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.


விபரங்கள்:

நாவல்: ஆழி சூழ் உலகு,  தமிழினி வெளியீடு
ஆசிரியர்: ஜோ டி குருஸ்
பக்கங்கள்: 558
விலை: ரூ 430

நாவல்: சிப்பியின் வயிற்றில் முத்து, நேஷனல் புக் டிரஸ்ட்
ஆசிரியர்: போதிசத்வ மைத்ராய

Friday, May 31, 2013

குழந்தைகளுக்கு சாதியைப் பற்றி.....

"ஆச்சி, பிராமின்ன்னா என்னப்பா?" என்று பப்பு கேட்டபோது என்ன சொல்வதென்று ஒரு கணம் புரியவில்லை. பப்பு புதிதாக‌ ஒன்றை கற்றுக் கொண்டால் எனக்கு ஒரு க்யூரியாசிட்டி வந்துவிடும்(அவள் புதிது புதிதாக வார்த்தைகள்  கற்றுக்கொண்ட காலத்திலிருந்து தொடரும் பழக்கம்!). எங்கிருந்து கற்றுக்கொண்டாள் என்று root cause analysis  செய்ய‌ கிளம்பிவிடுவேன். இந்த விஷயத்தில் root cause - சமீபத்தில் ஒரு சம்மர் கிளாசுக்கு சென்றாள். அங்கு அவளுக்கு ஒரு ஃப்ரெண்ட் கிடைத்திருக்கிறாள். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த  குட்டிப்பெண் (இலவச இணைப்பாக!)   'ஐ அம் பிராமின்' என்று சொன்னாளாம்.

'பிராமின்னா, கோயில்லல்லாம் பூஜை செய்வாங்க இல்ல, அவங்கதான்' என்றேன்,அவள் கேட்டதுக்கு பதிலளிக்கும் விதமாக. உடனே, "ஓ...காசு கேப்பாங்களே, எப்படி ஆச்சி, அந்த கோயில்ல பெரிய உண்டி வைச்சு இருந்தாங்க இல்ல, மக்கள்கிட்டேருந்து காசு வாங்கிறதுக்கு'", என்றாள். அவ்வ்வ்வ்...நாங்கள் சென்ற கோயில்களிலேயே, பப்புவின் உயரத்துக்கு ஒரு (வெண்கலம்/எவர்சில்வர்?) உண்டியலை சுசீந்திரம் கோயிலில் பார்த்திருந்தோம். சென்றுவந்தபிறகு ரொம்பநாளைக்கு அந்த உண்டியலை பப்பு மறக்கவில்லை. "ஆச்சி,அவங்க அப்பா கோயில்ல பூஜை செய்றவரா?" என்றும் கேள்வி. அவ்வ்வ்வ்வ்! 'எனக்கு எப்படி தெரியும்' என்று வசூல் ராஜா ஸ்டைலில் சமாளித்துவிட்டாலும், எப்படி புரிய வைப்பது என்று சவாலாகவே இருந்தது.

ஃபார்மர்,கார்ப்பெண்டர், கோல்ட் ஸ்மித்,டீச்சர் என்றெல்லாம் சொல்லி ஓரளவுக்கு சமாளித்துவிட்டேன். இறுதியாக‌,'நாம யார்க்கிட்டேயாவது நீ இந்துவா முஸ்லீமான்னு கேக்கலாமா? நீயே சொல்லு' என்றதும்,  "அதுல்லாம் பர்சனல். கேக்கல்லாம் கூடாது.நான் கிறிஸ்டீன், விலாசினிக்கிட்டே சொல்லியிருக்கேனா" என்றாள்.(அவ்வ்வ்..அதை நீ என்கிட்டேயே இதுவரைக்கும் சொன்னது  இல்லையேம்மா!!‍ -மைன்ட்வாய்ஸ்) 'அதுமாதிரிதான் இதுவும்' என்று சொல்லிவைத்தேன்.

இதுவரை அவளிடம்  எந்த இடத்திலும் சாதிபற்றி பேசியதில்லை. சாதியை அதன் கொடுமைகள் இல்லாமல் நிச்சயம் பேசிவிட முடியாது.சாதி என்றால் என்ன என்பதிலிருந்து அவளுக்கு சொல்லவேண்டும். எப்படியும் தெரிந்துக் கொள்ளாமல் அவள் வளர்ந்துவிடப்போவதில்லை. என்றாலும், இந்த விஷயத்தில் அது அவ்வளவு எளிமையானது அல்ல.

பப்புவும், அந்த குட்டிப்பெண்ணும் நண்பர்கள் என்றுதான் பப்பு நம்பிக் கொண்டிருக்கிறாள். தனிப்பட்ட ரீதியில், எதிரியாக பார்க்காமல் எப்படி  புரிய வைப்பது? அதோடு, இப்படி மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வது இழிவானது, தவிர்க்கப்பட வேண்டியது என்றும் புரிய வைக்கவேண்டும்.  இந்த மாதிரி சமயங்களில் எனக்கு பெரிதும் உதவியிருப்பவை கதைகள் முக்கியமாக புத்தகங்கள். முன்பு ஒரு முறை பப்பு 'கறுப்பர்கள்' பற்றி கேட்டபோது going' someplace special'  என்ற கதைப்புத்தகம், வேலையை சுலபமாக்கியது. மிகவும் அருமையான புத்தகம்! அதோடு, 'உனக்கு படிக்கத் தெரியாது(கமலாலயன் ‍ வாசல் வெளியீடு)' என்ற புத்தகத்தை, கொஞ்சம் வாசித்துக் காட்டியிருக்கிறேன். (அதிலும், மேரி பெத்யூன்  நிறைய விஷயங்களுக்கு உதவுவார்! ) இதெல்லாம் எந்த அளவுக்கு இந்த வயதில் அவளுக்கு புரியுமென்று தெரியாவிட்டாலும், 'ஓதி வைத்தால் என்றைக்காவது உதவும்' என்ற கோட்பாட்டை நம்பி அவ்வப்போது செய்வதுதான்!

இது போன்ற குழந்தைகளுக்கான (கதை)புத்தகங்கள், நமது நாட்டு 'சமூக‌/ பண்பாட்டுச் சூழ்நிலைகளு'க்கேற்றவாறு வந்திருக்கின்றனவா? சாதி பற்றியும், அதன் பாதிப்புகள் பற்றியும் 6 முதல் 10 வயதினருக்கு ஏற்ற வகையில் சொல்வதற்கு புத்தகங்கள் இருந்தால் நலம். அமர்சித்திர கதாவின் 'அம்பேத்கர்' சித்திர புத்தகம், அம்பேத்கரின் வாழ்க்கைச் சரிதமாக  சொல்லப்பட்டிருக்கிறது.' அழகிய பெரியவனின் கதையான‌ 'செருப்பு' என்ற ஒரு குறும்படத்தையும் பப்புவுடன் அமர்ந்து பார்த்திருக்கிறோம். இவையெல்லாம் ஓரளவுக்கு உதவும் என்றாலும், படங்களுடன், 'If you lived...' சீரிஸ் மாதிரியான புத்தகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி இருந்தால் பகிர்ந்துக் கொள்ளவும்.  இல்லையென்றால், குழந்தை எழுத்தாளர்கள்/பதிப்பகங்கள் இந்த ஏரியாவை கவனித்தால் தேவலை.

Thursday, May 16, 2013

"குரங்குலேருந்து வந்த பெண் எங்கே?"

பப்பு, நேற்று ஒரு கதைப்புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள். அதிலிருந்த‌ படத்தில், ராணிக்கு ஒருவர் சாமரம் வீசிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்ததும், பப்புவுக்கு புரியவில்லை. அதுதான் சாமரம், காத்து வரனும்னு வீசுவாங்க என்றதும், ' அது பாக்கறது நம்ம வீட்டுல இருக்கிற ஒட்டடை குச்சி மாதிரியே இருக்கு(அவ்வ்வ்வ்வ்!!),அவங்களுக்கு கை வலிக்குமா வலிக்காதா? வலிச்சா?' என்றாள்.

 'ஆமா,வலிக்கும், வலிச்சா வேற ஒருத்தங்க வந்து வீசுவாங்க.  அவங்க வரைஞ்சிருக்கிறது பார்க்க அப்ப‌டி  தெரியுது. ' என்றதோடு நிறுத்தியிருக்கலாம். கூட  'அது மயிலோட இறகுல செஞ்சிருப்பாங்க, அந்த காலத்துல ஃபேன்,ஏசில்லாம் கண்டுபிடிக்கலைல்ல' என்று சொல்லிவிட்டேன். அதிலிருந்து ஆரம்பித்தது.


"அந்த காலத்துல எல்லாம் நேச்சுரலா இருந்தது, இப்போதான் எல்லாம் டூப்ளிகேட்" என்றாள் மேலே சுத்தும் ஃபேனைக்காட்டியபடி.

"ஏன் அப்படி சொல்றே,அந்த காலத்துல பவர் இல்ல, இருட்டுலதான் இருக்கணும். எப்படி இருக்கும்? இப்போ ஜாலியா இருக்கு இல்ல,   ஏசி இல்லாம தூங்க முடியுதா? கம்ப்யூட்டர், பஸ், ட்ரெயின் அதெல்லாம் வேணும்தானே, அப்போதானே ஈசியா இருக்கு?" என்றேன். ஆயாவுக்காக அவரது அறையில் ஏசி மாட்டியிருந்தோம். வெயிலின் கொடுமை தாளாமல், அவரது அறையில்தான் கொஞ்ச நாட்களாக எங்கள் தூக்கம்.

"அந்த காலத்துல நேச்சுரலா காத்து வந்துது, மரம்,காடுலேருந்து. ஊஞ்சல் கூட நேச்சுரலா இருந்தது.இப்போ, செயின் போட்டு கட்டி..இது அதுன்னு" என்றாள், ஒரு பெரிய கிழவி மாதிரி!

"நேச்சுரலா ஊஞ்சல் எங்க இருந்துது? " என்றதும், சமீபத்தில் காட்டுக்கு சவாரி போனதை நினைவூட்டினாள். அது ஒரு டீப் ஜங்கிள் சஃபாரி. காட்டு மரங்களிடையே, ஊஞ்சல்கயிறு போல, பெரிய பெரிய கிளைகள் அங்குமிங்கும் தாழ்ந்து தொங்கின.அதுதான் நேச்சுரல் ஊஞ்சலாம். சில நேச்சுரல் ஊஞ்சல்களில் குரங்குகளும் தாவி ஓடி விளையாடின. அதிலிருந்து ஆரம்பித்து, பேச்சு, குரங்கிலிருந்து வந்த மனிதன் பற்றிய டாபிக்குக்கு வந்தது. ஆரம்பத்தில், குரங்கு மனிதன் ,கொஞ்சம் கொஞ்சமாக எப்படி இன்றைய மனிதனாக மாறினான் என்பதை பற்றி கொஞ்சம் வகுப்பெடுத்தாள். (ஸ்ஸ்...ப்பா!!)



ஒவ்வொரு ஸ்டேஜிலும் எப்படி மாற்றங்கள் வந்தது (வெளித் தோற்றத்தில்தான்) என்று நடித்து வேறு காட்டினாள். அதுதான் ஒரு படம் இருக்குமே, நான்கைந்து ஸ்டேஜுகளில், மனிதன் எப்படி நிமிர்ந்து நடக்கத் துவங்கினான் என்பது போல! நடுவில் எனக்கு டெஸ்ட் வேறு, குரங்கு மரத்தின் மேல் குட்டி போடுமா, மரத்தின் கீழே குட்டி போடுமா என்று! (என்னடா, குரங்குக்கு வந்த சோதனை...ச்சே...என்னோட பொது அறிவுக்கு வந்த சோதனை!!) மரத்தின் கீழேதான் குட்டி போடும், மேலே குட்டி போட்டால் குட்டி விழுந்துடுமே!! ஹிஹி.... அப்புறம், குரங்கிலிருந்து படிப்படியாக, வந்த அந்த மனிதன், எப்படி குகைகளில் வாழ்ந்தான், ஆடிப்பாடினான்,நெருப்பைக் கண்டு பிடித்தான்,குடும்பத்தோடு வாழ்ந்தான் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

குடும்பம் என்றதும், பப்புவுக்கு திடீரென்று, ஒரு சந்தேகம் வந்துவிட்டது. (குடும்பம் என்றாலே குழப்பம்தான் போல!!) "ஆச்சி, பாய் மட்டும் இருந்தா குழந்தை வருமாப்பா, கேர்ல்லருந்துதானே குழந்தைங்க பொறக்கும்? அப்போ, குரங்குலேருந்து மனுசந்தானே வந்தான், குழந்தைங்க எப்படி பொறந்துது, காரணம் சொல்லு"  (காரணமா? அவ்வ்வ்வ்...ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டா, பப்பு இப்படிதான், சம்பந்தமேயில்லாத வார்த்தையை சொல்லிவிடுவாள்!)

'என்ன காரணம் சொல்லணும்...புரியலையே' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.நடுவில், 'புரியலை' என்று சொல்லிவிட்டால், 'உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்" என்று அலுத்துக்கொண்டு போய்விடுவாள். அதனால், சமாளிப்பதற்காக, 'ம்ம்ம்ம்' என்று மொபைலை நோண்டிக்கொண்டிருந்தேன். 'புரியலை, இன்னொரு தட‌வை சொல்லு' என்றெல்லாம் தொணதொணக்காமல்,கொஞ்சம் அமைதியாக இருந்தால், சிலசமயம் அவளே விளக்குவாள்.  "குரங்குலேருந்து பாய்தான் வந்தான் இல்ல, பாய்க்கு குழந்தை பொறக்குமா? இல்லதானே"

அவ்வ்வ்வ்!! புரிந்துவிட்டது!

யப்பா புண்ணியவான்களா, கொஞ்சம் அந்த குரங்குலேருந்து மனிதன் வந்த படத்தில், ஒரு பெண்ணையும் சேர்த்துதான் வரைந்து வையுங்களேன்!! என்னமாதிரியெல்லாம் நாங்க கன்ஃபியூஸ் ஆக வேண்டியிருக்கிறது!!

Sunday, May 12, 2013

பப்பு டைம்ஸ்

என்முன் வந்து நாக்கை சப்புக்கொட்டி காட்டிக்கொண்டிருந்தாள் பப்பு. என்னன்னு கேட்டதுக்கு, கையிலிருந்து எடுத்து சாப்பிடுவது போல ஆக்சன்! "ஆ!! பாயாசமா?" என்றதும் மேலும் கீழும் தலையை ஆட்டினாள். "எனக்கு? எனக்கும் போய் எடுத்துட்டு வாப்பா?" என்றதும்,

"பாயாசம்? ஆர் பாய்சன்?" என்று கேள்வி வருகிறது....அவ்வ்வ்வ்வ்..(இத்தனைக்கும் குரலை ரொம்ப சாஃப்டாக வைத்துக்கொண்டுதான் கேட்டேன்...ஹிஹி)

"ஆயா, ஆச்சிக்கு ஒரு கப்-ல பாய்சன் வேணுமாம்" என்று கத்தியபடி சமையலறைக்கு ஓடிவிட்டாள்!

"நீயெல்லாம் ஒரு அம்மாவா, நீ ஒரு டப்பி" என்று பல்பு வாங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் 'பிரகாசமான டப்பி தின வாழ்த்துகள்'!!

 ************************************

ஒரு பெண், த‌ன் கைகளில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை ஏந்தியிருப்பதைப் போன்ற படத்தை வழியில் பார்த்தோம்.ரியல் எஸ்டேட் விளம்பரமாக இருக்கலாம்.

"ஆச்சி, அவங்க பில்டிங்கை கையில வைச்சிருக்காங்க பாரு. பில்டிங்கையே கையில தூக்கிட்டாங்களா?! அவங்க ஜையன்ட்டா ஆச்சி? அப்போ, நாம அவங்களுக்கு எலி மாதிரி இருப்போமா?  நமக்கு எலி எலி.அவங்களுக்கு நாம எலி!எப்படி ஆச்சி?!! எலிக்கு நாம ஜையன்ட். அவங்க நமக்கு ஜையன்ட். எலிக்கு அவங்க எப்படி இருப்பாங்க?!!   " #interpretations  #ஒருசின்னவிளம்பரம் Vs ஒருசின்னஞ்சிறுமூளை

Saturday, April 27, 2013

ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்குமா??

பப்புவின் பள்ளியில், விடுமுறையில் செய்வதற்கு வீட்டுப்பாடம் கொடுத்துவிடுவார்கள். ஒவ்வொரு பாடத்திலும், தேதிவாரியாக ஒருநாளுக்கு ஒரு பக்கம் வீதம், குறைந்தது இரண்டுவாரங்களுக்கு. இதற்கு சில பெற்றோர்கள் வந்து சண்டை போடுவார்கள். 'விடுமுறை என்பது குழந்தைகள் விளையாடுவதற்கும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதற்குமே. அப்போது கூட ஹோம்ஒர்க் செய்யவேண்டுமா' என்பது மாதிரி. அவர்கள் கேட்பது நியாயம்தான் என்றாலும்,  ஹோம் ஒர்க் கொடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.குறைந்தபட்சம் மறக்காமல் இருக்கவாவது உதவுமே!

அதோடு, தினமும் காலையில் எழுதுவது ஒரு பழக்கமாகவாவது இருக்கட்டுமே என்று நினைத்துக்கொள்வேன். காலையில் படிக்கும் வழக்கம் இப்போதைய  குழந்தைகளுக்கு இல்லவே இல்லைபோல தோன்றுகிறது. காலைபொழுது முழுதும், எழுந்து  கிளம்பவும், ஏழரை/எட்டுமணிக்கே பள்ளிக்குச் செல்லவுமே சரியாக இருக்கிறது. இதில், காலையில், ஃப்ரெஷ்ஷான மனதுடன் படிப்பது என்பதே கேள்விக்குறிதான். இரவில் ஹோமொர்க் செய்வது பெரும்பாலும் அரைத்தூக்கத்தில்! அதிலும், பப்புவுக்கு பேசவே நேரம் சரியாக இருக்கும்!! அதனால், விடுமுறையில் ஹோம் ஒர்க் கொடுப்பது தவறாக படவில்லை.

அப்படி கொடுக்கப்பட்டதில், கணித பாடத்தை செய்துக்கொண்டிருந்தோம். subtraction chart II. அதில் வரும் patterns பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.even number  யிலிருந்து பாதியாக கழித்தால் வரும் எண்கள் அமைக்கும் pattern பாரு, என்று 18 ‍- 9=9, 16-8=8, 14-7 =7.....4-2 = 2 -1 =1 சொல்லிக்கொண்டிருந்தாள்.

சொல்லிவிட்டு, "எனக்கு ஈவன் நம்பர்ஸ்தான் பிடிக்கும் ஆச்சி." என்றாள்.சில தினங்கள் முன்பு அவள் என்னிடம் கேட்டது கிளிக்காகி இருக்க  வேண்டும். என் ஃபேவரிட் நம்பர் என்னவென்று கேட்டபோது, ஏழு என்று சொன்னதும் என்னோட பேவரிட் நம்பரும் ஏழுதான் ஆச்சி என்று சொல்லியிருந்தாள். அது உடனே நினைவுக்கு வந்திருக்க  வேண்டும்.

"பட், எனக்கு ஏழு கூட பிடிக்கும். எப்படி,ஆச்சி? உனக்கும் எனக்கும் ஏழு பிடிக்குது? டி என் ஏ!! இல்ல??"

அவ்வ்வ்வ்வ்வ்.....'ஹிஹி' என்று ஒரு சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தேன்.

"ஆமா,ஆச்சி, ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்கும்,இல்ல?!!"- பப்பு

(அவ்வ்வ்வ்...எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!! ம்ம்..டூ மச் ஆஃப் ஃபோர்ட்ஸ்/மியூசியம்ஸ் அன்ட் பேலஸ்சஸ்! 'ஒரு காலத்துல இங்க கப்பல் வந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க ராஜாவும் மந்திரிங்களும் உட்கார்ந்திருப்பாங்க'...'ஒரு காலத்துல இங்க வார் நடந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க பீரங்கி குண்டு விழுந்துருக்கும்' ...ஒரு காலத்துல இங்க முத்துல்லாம் எடுத்திருப்பாங்க!...) அது மாதிரி ஒரு காலத்துல ஏழு கூட ஈவன் நம்பரா இருந்திருக்கும்தானே! :‍-))

Tuesday, April 23, 2013

பப்புவும் கண்ணகியும்

பப்புவுக்கு கண்ணகி கதையை சொல்லியிருந்தோம். கேரளாவுக்குச் சென்றபோது, அருகில் கண்ணகி கோயில் இருப்பதாகவும், அங்கு செல்ல வருடத்தில் ஒருமுறை மட்டுமே அனுமதிப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். சமீபத்தில், அண்ணா சாலை வழியே வரும்போது கண்ணகி சிலையையும் காட்டியிருந்தேன். எல்லாம் நிகழ்ந்தது ஓரிரு வார காலத்துக்குள்ளேயே! ஆனாலும், கண்ணகி பப்புவை ரொம்பவே டிஸ்டர்ப் செய்து விட்டாள்.

கண்ணகியை பிடிக்கவில்லை என்று ஒரே பொருமல்! தாங்க முடியவில்லை.முக்கியமாக கண்ணகி மதுரையை எரித்ததுதான் அவளால் தாங்க இயலாமல் இருக்கிறது. "அப்புறம், இப்போ எப்படி மதுரை இருக்கு" என்று கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு பொருமி தள்ளிவிட்டாள்.

"அவளை யாரு எரிக்க சொன்னாங்க? அவளோட ஹஸ்பெண்ட கொன்னுட்டாங்கன்னா, வேற ஹஸ்பென்ட் வைச்சுக்க வேண்டியதுதானே!!" ‍

அவ்வ்வ்வ் என்று ஜெர்க்காகி, "அவ இவன்னு சொல்லக்கூடாது பப்பு, அவங்கன்னுதான் சொல்லணும்" என்றதும்,

"அவங்க எதுக்கு மதுரையை எரிக்கணும்? அந்த ஊர்லே எத்தனை குழந்தைங்க இருப்பாங்க?அவங்கல்லாம் பாவம் இல்ல? அவங்களும்தானே எரிஞ்சிருப்பாங்க. கண்ணகி, அவங்க அம்மா ஊரை போய் எரிக்க வேண்டியதுதானே?" -  பச்சைமொளகா ரொம்ப கோபத்துடன் படபடத்தது.

சுனாமியில்,போரில்,நில நடுக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்படுவது பப்புவால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!!

"அவங்க அம்மா ஊரை மட்டும் எரிக்கலாமா?"  என்றேன், லாஜிக்காக கேட்டுவிட்ட  பெருமையுடன்! அப்புறம்தான் புரிந்தது,  பப்புவின் எண்ணத்தில், யாரும் தன் அம்மா இருக்கும் ஊரை எதுவும் செய்துவிட மாட்டார்கள் என்பது!!

"அதான், அவங்க அம்மா இருக்க ஊரை எரிக்கலைல்ல? ஆமா, ராஜாகிட்டேருந்து அவங்க நேரா எங்க போனாங்க? வத்திக்குச்சி வாங்க கடைக்கு போனாங்களா? ஏன் வத்திக்குச்சி கொடுத்தாங்க அவங்களுக்கு? குடுத்தே இருக்கக்கூடாது!!" - பப்பு

அவ்வ்வ்வ்வ்வ்!

"எரிச்சுட்டு எங்க போனாங்க?அவங்களை யாரும் திட்டலையா?" - பப்பு

"அதான் எல்லாரும் எரிஞ்சிபோயிட்டாங்களே!எரிச்சுட்டு கேரளா போயிட்டாங்க‌"

"அங்க யாரும் எதுவும் சொல்லலையா?" - பப்பு

"அவங்க, அப்புறம் 'புஷ்பக விமானத்துல' வானத்துக்கு போயிட்டாங்களாம்!"

"ஓ! அதான் இப்போ ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்ல்லாம்  அவங்களை தேடிக்கிட்டு இருக்காங்களா?!! - பப்பு

எப்படியும், நைட் சாப்பாடு கண்ணகி புண்ணியத்தில் ஓடிவிடும்! :-)

ஐயம் வெரி சாரி இளங்கோவடிகள்! நீதி இப்படி backfire ஆகும்னு எதிர்பார்க்கவேயில்லை!!  ;-) ;-)

Saturday, April 20, 2013

குழந்தைகளைத் துரத்தும் கேள்விகள்

மதியம், பப்புவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சாப்பிட அமர்ந்தேன்.

"ஆச்சி, புவன் வந்து ஹர்ட் பண்றான்னு அவனுக்கே தெரியாம என்னை ஹர்ட் பண்ணிட்டான்! "


தொண்டை அடைத்துக்கொண்டது. 'ஹையய்யோ!! நேரடியா சொல்லாம இப்படி சொல்கிறாளே?! ஏதாவது அடிதடியா ?!!' (ஒரு சில முன் அனுபவங்கள் தான்....) அதிலும், ஃப்ரெண்ட்சை மாட்டிவிடுவது/கோள் சொல்வது பப்புவுக்கு பிடிக்கவே பிடிக்காது.  அதே சமயம், அப்படி நடந்ததையும் என்னிடம் சொல்லிவிட‌ வேண்டும்,அவளுக்கு. வேன் நண்பர்களுக்கிடையே வரும் சண்டையை வீட்டில் வந்து சொல்லும் போது, "நான் ஆன்ட்டிக்கிட்டே கேக்கிறேன்/சொல்றேன்" என்று நான் சொல்வது அவளுக்குப் அறவே பிடிக்காது.அப்போது, கதையையே மாற்றிவிடுவாள். :‍-))

"என்ன ஹர்ட் பண்ணான்?"

"he is asking me 'you are rich or poor?'"

ஏற்கெனவே, பப்பு இந்த கேள்வியை எதிர்கொண்டிருக்கிறாள். எல்லாம் அவள் சொல்லித்தான் தெரியும். ஃப்ரெண்ட்ஸ் கேட்டபோது,"நாங்க நார்மல்" என்று சொன்னாளாம். அவர்களும், "நாங்களும் நார்மல்தான்" என்று சொன்னார்களாம்.  இந்த குட்டிப்பசங்களும், அவர்களது கேள்விகளும் /பதில்களும் என்று நினைத்து அப்போது சிரித்ததோடு சரி. இப்போதோ, "இது ஹர்ட் பண்ணிட்டான்"னென்று புதிய வடிவம்!!


it will hurt me right? he do not know that word hurts me.

.....(அவ்வ்வ்வ்)


"அப்படி கேக்கலாமாப்பா?அவனுக்கு தெரியல, அது எனக்கு ஹர்ட் பண்ணும்னு."ஹேய் புவன், why are you asking this?"  ந்னு கேட்டா, "ஹேய் குறிஞ்சி, கேட்டா என்ன?"னு சொல்றான்.he does not know that word will hurt others."

அவ்வ்வ்வ்வ்வ்வ்!! இன்னும் தொண்டையிலிருந்து இறங்கவேயில்லை. அப்படியே விக்கிக்கொண்டது.


"அன்னைக்கு, you are muslim or christian?  ந்னு கேக்கறான். that also will hurt me rite?"


'கொஞ்சம் சாப்பிட விடு, பப்பு! நீ எதுலேருந்து இதை கத்துக்கிட்டேன்னு நான் கொஞ்சம் யோசிச்சுக்கிறேன்!! :‍)' #மைன்ட்வாய்ஸ்

பப்பு, திடீரென்று தன்னை கிறிஸ்டியன் என்று சொல்லிக்கொள்வாள்.
"ஆச்சி, நான் கிறிஸ்டியன். நீ என்ன?" என்பாள்.  'எதுவுமில்லை' என்றால்,  'நீ சீக்' என்று மதம் மாற்றிவிடுவாள்."நான் முஸ்லீமாவே இருந்துடறேன்ப்பா" என்பாள் ஒருநாள். இந்தியாவின் மக்களைப்ப் பற்றியும், திருவிழாக்கள் பற்றியும் படிப்பதாலோ அல்லது 'நாம ஏன் எந்த பெஸ்டிவலும் கொண்டாட மாட்றோம்?" என்ற சந்தேகம் வந்ததாலோ தெரியவில்லை.


மேலும், அவளுக்கு இந்தி படிக்க ரொம்ப ஆசை. பள்ளியில் தமிழ் கிளாசில் இவளையும், புவனையும்,பிரம்மியையும் சேர்த்து மொத்தம் மூன்றுபேர்தான். மீதி அனைவரும் இந்தி. "நான் கிறிஸ்டியன், என்னை இந்தியிலே சேர்த்துவிடு" என்பாள் தமிழ்  வீட்டுப்பாடம் செய்யும் தினங்களில். மொத்தத்தில் நாங்களும், ஒன்றும் சொல்வதில்லை ‍ அவள் கிறிஸ்டியனாகவோ முஸ்லீமாகவோ இருக்கும்போது!   ஆனால், இப்போது புவன், அவளை அப்படி கேட்பது ஹர்ட்டிங்காக இருக்கிறதாம்!! அவ்வ்வ்வ்

"you should not ask this right?that hurted me . ஏன் ஆச்சி, அப்படி கேக்கலாமா மத்தவங்களை?"


"ஆமா, நாம மத்தவங்களை இந்த மாதிரி பர்சனல் கொஸ்டின்ஸ்ல்லாம் கேக்கறது சரியில்லை" என்ற பிறகே, சாப்பிட அனுமதித்தாள்! !திடீர் திடீரென்று பப்புவுக்கு இருக்கும் நல்லவள் விழித்துக்கொண்டுவிடுவாள். இன்று அப்படியான ஒரு தினம் போல‌!!

Tuesday, April 16, 2013

ஆஸ்ட்ரேலியா வண்டி in தமிழ்நாடு

"ஆச்சி, ஆஸ்ட்ரேலியா பஸ் பாரு...."

என்ன?? என்பது போல பார்த்தேன்.

"ஆமா, அந்த பஸ் ஆஸ்ட்ரேலியாலேருந்து வந்துருக்கு. au   ந்னு போட்டிருக்கு பாரு!!"


ஸ்ஸ்ஸ்....எங்கள் வண்டியிலிருந்து பார்க்கும்போது அதற்கு முன்னாலிருந்த‌  TN   என்ற எழுத்துகள் மறைந்திருந்தன. அதனால், அது ஆஸ்ட்ரேலியா வண்டியாகிவிட்டது.


"நேஷனல் பர்மிட்" என்று லாரிகளில் எழுதியிருப்பதைப் பார்த்து "ஏன் வேர்ல்ட் பர்மிட் இல்ல?" என்று சிறுவயதில் யாரைவது கேட்டு தொல்லை பண்ணியிருந்தா இப்படி திருப்பி கிடைக்குமாம்!!

Tuesday, April 09, 2013

இது ரெத்த பூமி ‍ - மூன்று முறை கட்டப்பட்ட கோட்டையின் கதை


காலைச்சூரியன் மிகவும் சுறுசுறுப்பாக தன் வேலையைத் தொடங்கியிருந்தது.சென்ற இரண்டு நாட்கள்போலில்லாமல் பளிச்சென்று இருந்தது வானம்.  நாங்களும் எங்கள் பயணத்தை  ஆரம்பித்தோம். மனம் ஒருவித மரியாதை/பயபக்தி/பெருமிதம் என்று கலவையான உணர்ச்சிப்பெருக்கால் நிரம்பியிருந்தது.செல்லுமிடம் அப்படியானது.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முதன்மையானதும் முக்கியமானதும், வீரத்துக்கு அடையாளமாகவும் விளங்கும் இடம்,அது.  இந்தியாவின் வரைபடத்திலிருந்தே அகற்றிவிட வேண்டுமென்று ஆங்கிலேயர்கள்  துடித்த இடம். இன்று கால ஓட்டத்தால்  ஒதுக்கப்பட்டு, ஓரமாக மௌனசாட்சியாக இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி. வீர பாண்டிய கட்டபொம்மனின் கோட்டை. 'வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி,வட்டி' என்று அந்த வீரமகனின்   குரல் கிண்ணென்று முழங்கிய கோட்டை.

தூத்துக்குடிக்கு அருகில் எங்கு செல்லலாம் என்று பார்த்தபோது, பாஞ்சாலங்குறிச்சியும்,ஒட்டபிடாரமும் செல்ல வேண்டிய பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தன. ஒன்று, ஏகாதிபத்தியத்தைப் பற்றியும் , காலனியாக்கத்தைப் பற்றியும் ஏன் எந்த தத்துவங்களையும் பற்றி அறியாமல், ஒரு வீரன், அந்நியரை எதிர்த்து நின்ற வீரமண். இன்னொன்று, சுதந்திரம் நம் பிறப்புரிமை என்ற முழங்கிய கப்பலோட்டிய தமிழன் பிறந்த ஊர்.

பப்புவுக்கு 'ஜான்சிராணி' வரலாறு தெரியும். ஜான்சிராணியைப் பார்த்து சிலநாட்கள் கத்தியை வைத்துக்கொண்டு திரிந்தாள். அவ்வப்போது, அவள் தன்னையே ஜான்சிராணியாக பாவித்துக்கொண்டு காற்றில் கத்திச்சண்டை போடுவாள். அவளது மாமாவிடமிருந்து பெற்ற ஜான்சிராணி புத்தகத்தை பொன்போல வைத்துக்கொள்வாள். அட்டையில் இருப்பது,ஜான்சிராணியின் படமல்லவா! வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அந்த அளவுக்கு தெரியாது.  ஆனால், ஜான்சிராணிக்கு எடுத்துக்காட்டாக/முன்னோடியாக‌ இருந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று  இந்த பயணத்தில் தெரிந்துக்கொண்டாள்.  இதற்கு முன்பும் பல கோட்டைகளுக்கு அவள் சென்றிருக்கிறாளென்றாலும், ஆங்கிலேயரை எதிர்த்த தன்மானமிக்க மன்னனின்(பாளையக்காரர்) கோட்டைக்கு வருவது இதுவே முதன்முறை. இதுவே எங்கள் மனதில், ஒரு மரியாதையை/பயபக்தியை தோற்றுவித்திருந்தது.

புழுதி படிந்த மண் சாலைகளில், ஏழு வளைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நம்மை வரவேற்கின்றன. ஒவ்வொரு வளைவும், கட்டபொம்மனின் அரசில் முக்கியமான பதவி வகித்தவர்களின் பெயர் தாங்கியிருக்கிறது. கூட‌, கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கம்மாவின் பெயரிலும் ஒரு வளைவு. இந்த வளைவுகளின் வழியே சென்றால் சாலை நம்மை நேராக கோட்டை வாசலில் கொண்டு போய் சேர்க்கிறது.




காலத்தை வென்ற கோட்டை

செம்மண் வண்ணத்தில் கோட்டைச்சுவர்.  இப்போது இருப்பது, மூன்றாவது முறையாக கட்டப்பட்ட கோட்டை. நுழைவுக்கட்டணம் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். ஒரு மரத்தின் கீழே பிள்ளையார், இன்னும் சில சிற்பங்கள்.பார்க்க சற்றுப் பழமையானதாக இருக்கிறது.

பாதைக்கு இருபுறமும் மரங்களும், செடிகளுமாக சிறு தோட்டம். அதன் வழியே சென்றால், கோட்டையின் மரக்கதவுகள். கட்டபொம்மனின் குதிரை,யானை மற்றும் காலாட் படையைக் குறிக்கும் விதமாக கோட்டையின் ஒவ்வொரு பக்கத்தில் வரிசையாக உருவங்கள் வரையப் பட்டிருக்கின்றன.தோட்டத்தின் மரத்திலிருந்து கரைகிறது ஒரு காகத்தின் குரல்.



அன்றைக்கு அநேகமாக நாங்கள்தான் முதல் விருந்தினர். 'இந்த பக்கம் வாங்க' என்று வலப்புறம் வரச் சொல்கிறார் ஒருவர். சுற்றும் முற்றும் பார்க்கிறோம். கோட்டைச் சுவரின் முழுமையைக் காண முடிகிறது. செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைகிறோம். ஒன்றும் பேசத்தோன்றவில்லை. அவரவர் எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறோம்.


'இந்தக்கோட்டையிலா கட்டபொம்மன் வாழ்ந்தார் 'என்ற எண்ணம்  தோன்றுவதற்குள், கைகளில் ஒரு சுட்டுக்கோலை கொண்டு பேச ஆரம்பிக்கிறார், அவர். உட்சுவர் முழுக்க  கட்டபொம்மனின் வரலாறு, படங்களாக வரையப்பட்டிருக்கிறது.தெள்ளத் தெளிவான தடங்களில்லாத தமிழில், 46 தலைமுறைகளுக்கு முந்தைய வரலாறு ஆரம்பிக்கிறது.




முதலாம் கெட்டிபொம்மு ராஜாவான வரலாற்றைத தொடர்ந்து, பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு நீள்கிறது. சாலிக்குளத்தில்,முயல் ஒன்று வேட்டைநாயை துரத்துவது குடகின் கதையை நமக்கு நினைவுபடுத்துகிறது. வேட்டைநாயை முயல் துரத்திய குறிப்பிட்ட இடத்தில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்பி, கிபி 1101 ஆம் ஆண்டு அவ்விடத்தில் கோட்டை கட்டி சிம்மாசனம் ஏறுகிறார் பொம்மு.


வரலாற்றின் சில பக்கங்கள்

கிபி 17 ஆம் நூற்றாண்டில், பாளையக்காரர்களாக தன்னாட்சி பெற்றாலும், 72 பாளையங்களை உள்ளடக்கிய பாஞ்சாலங்குறிச்சியே சிறந்து விளங்குகிறது. 47ஆவது தலைமுறையாக, தனது 30ஆவது வயதில் அரியணை ஏறுகிறார், வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது தம்பிகள், ஊமைத்துரை என்ற தளவாய் குமாரசாமி மற்றும் துரைசிங்கம். வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி  ஜக்கம்மாள்.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி உள்நுழைகிறது. அளவுக்கதிகமாக கடன் வாங்கிய நவாபுகள் நேரிடையாக வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு வழங்குகின்றனர். இதில் மற்ற பாளையக்காரர்கள் சரணாகதி ஆகிவிட, வரிதர மறுத்து எதிர்ப்பவர் கட்டபொம்மனும் பூலித்தேவரும்தான். பாஞ்சாலங் குறிச்சியைத் தேடி, மன்னனை சந்திக்க‌ நெல்லையிலிருந்து வருகிறார், ஆலன். ஆலனை எதிர்த்து தன்மானத்துடன் முழங்குகிறார், வீரபாண்டிய கட்டபொம்மன்.  பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைச்சுவர்களில் இன்னமும் எதிரொலிக்கிறது,அந்தக்குரல்!

சாமாதான பேச்சுவார்த்தைக்காக, ஆங்கிலேயர்கள் அழைக்க, ராமநாதபுரம், சேதுபதி அரண்மனையில்  ஜாக்சனை காணச் செல்கிறார், கட்டபொம்மன். அங்கும் வரி,வட்டியைப் பற்றிய பேச்சுவர ஜாக்சனை எதிர்க்கிறார் கட்டபொம்மன்.மன்னரை சிறைபிடிக்க உத்தரவிடுகிறான் ஜாக்சன்.

வீரபாண்டிய கட்டபொம்மன், வாளால் பகைவரை வீழ்த்தி பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். வந்தபின்னரே, தானாபதியை காணாமல் திகைக்கிறார், மன்னர். தானாபதி, சேதுபதி அரண்மனையிலே ஆங்கிலேயர்களிடம் மாட்டிக்கொண்டுவிடுகிறார். சிலநாட்களில், தானாபதி விடுதலை செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். ஆங்கிலேயர்கள், வரியாக சேர்த்து வைத்திருந்த நெல்களஞ்சியத்தைக் கொள்ளையிடுகிறார். இது, ஆங்கிலேயர்களை இன்னமும் கோபமூட்டியது. ஆங்கிலேயரை பழி வாங்க தானாபதி வகுத்த இந்த வஞ்சகம், கட்டபொம்மனை தலைகுனிய வைத்தது.



பானர்மேன் தலைமையில், பீரங்கிப்படையுடன் ஆங்கிலேயரின் ஐவகைப்படைகள் பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி வளைக்கின்றன. இது எதிர்பாராத போர் என்றாலும், பாஞ்சாலங்குறிச்சியின் வீரர்கள், எதிரிகளின் பலத்தைக் கண்டும் அஞ்சாமல் கோட்டையின் மீது நின்று போர் புரிகின்றனர். கவண்கற்களாலும்,வேல்களாலும் போரில் வெற்றிபெறுகின்றனர். இந்தகோட்டையை, தகர்ப்பது பற்றிய பானர்மேனின் ப்ளூபிரிண்ட் இன்றும் லண்டன் ஆவண காப்பகத்தில் இருப்பதாக கூறினார்,அவர்.

வீரன் வெள்ளையத்தேவன், இந்த போரில்தான் இறந்துபோகின்றான். ஆங்கிலேயர் பக்கத்திலும்  நாசமே விளைகிறது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் பாதிப்படைகிறது. போரில் இறந்த வெள்ளைத்தளபதிகளுக்கு, ஒட்டப்பிடாரத்தில் கல்லறையும், நினைவுச்சின்னமும்  எழுப்பியுள்ளனர்.எதிரிகளுக்கு நினைவுச்சின்னம் எழுப்பிய  கட்டபொம்மனின் பண்பு! இதன்பிறகே, கட்டபொம்மனின் தலைக்கு விலை வைக்கப்படுகிறது.

கோட்டையிலிருந்து தப்பித்து விஜயரகுநாத தொண்டைமானின் அரண்மனையை அடைகிறார், கட்டபொம்மன். கோட்டையை கைப்பற்றுகின்றனர், ஆங்கிலேயர்கள். கோட்டையில் நாட்டப்பட்ட ஆங்கிலேயரின் கொடியை உடைத்து வீரச்சாவடைகிறார், சுந்தரலிங்கம் என்ற வீரர். தொண்டைமானின் அரண்மனையிலோ, கட்டபொம்மன் எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கப்படுகிறார். ஒப்புக்கு ஒரு விசாரணை வைத்து,   கயத்தாறில் நெடுஞ்சாலை பகுதியின் புளியமரத்தின் தூக்குக்கயிறை சுருக்கி, வாழ்வை முடித்துக்கொண்டார். மற்ற பாளையக்காரர்கள் எல்லாரும் வெறுமே பார்த்திருக்க, வணங்காமுடியாக உயிர்துறந்தார் கட்டபொம்மன். 

ஊமைத்துரை சூளுரைத்து இரண்டாம் முறையாக கோட்டையை கட்டுகிறார். இதைப்பற்றி, வரலாற்றில் படித்திருப்போம். முட்டையையும், வெல்லத்தையும், சுண்ணாம்பையும் கொண்டு ஆறே நாட்களில் ஏழாயிரம் எழுப்பிய கோட்டையென்று! மெக்காலே போர் தொடுத்து, கட்டபொம்மனின் சகோதர்களை,ஏராளமான பாஞ்சாலங்குறிச்சி வீரர்களையும் அழித்தொழிக்கின்றர். ஊமைத்துரை, மருது சகோதர்களுடன் சேர்ந்து விடுகின்றார்.


கயத்தாறில், கட்டபொம்மன் உயிர்நீத்த இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது. அவரை, தூக்கு மாட்டிய புளியமரம் பட்டுபோயிற்று என்று முடிக்கிறார், பராமரிப்பாளர்.



கதைசொல்லியைப்போலவும், அதே சமயம் வரலாற்று நிகழ்வுகளையும் ஒருசேர சுவாரசியமாக‌, படங்களை காட்டி விவரிக்கிறார், பராமரிப்பாளர். மற்றபடங்களில், வீரதீரமாக தெரியும் கட்டபொம்மன், இறுதிகட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனாக உருமாற்றம் அடைந்து இருக்கிறார். தூக்கிலிடும்போது கூட சிவாஜியாகவே இருக்கிறார்.உட்புறச்சுவரின் படங்கள் ஒரு சுற்று முடிந்ததும் இரண்டாம் சுற்று ஆரம்பிக்கிறது. நாமும் கோட்டையை உள்ளுக்குள்ளாகவே ஒரு முறை சுற்றியிருக்கிறோம். மனம் வேறு எதைப்பற்றியும் எண்ணாமல், கட்டபொம்மனையும்,போரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறது.

இரண்டாம் முறையும், கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர் வன்மத்துடன் கோட்டையை உருத்தெரியாமல் அழிக்கின்றனர். கோட்டை இருந்த இடம் முழுவதும் ஆமணக்கையும், முட்செடிகளையும் விதைக்கின்றனர். பார்க்கும் நமக்கு நெஞ்சமே எரிகின்றது. இப்போது இருக்கும் கோட்டை, ஒரிஜினல் கோட்டையின் மாதிரி மட்டுமே. அதில், ஒரு சிறு பங்குதான் இது என்று கூறி இரண்டாம் சுற்றுக்குப் பிறகு உள்ளே நுழைகிறார்.

பின் தொடரும் நம்மை, எதிர்கொள்வது, வீரபாண்டிய கட்டபொம்மன். கோட்டையின் மையப்பகுதியில், வாளோடு மிடுக்காக வீற்றிருக்கிறார். ஊமைத்துரை,தானாபதி,சுந்தரலிங்கம் சகிதம் அவ்விடம் ஒரு சிறு அரசவையாக காட்சியளிக்கிறது. நாம் விரும்பினால், அரசரோடு சேர்த்து நம்மை புகைப்படமெடுத்துத் தருவதாக பராமரிப்பாளரே முன்வருகிறார்.

எஞ்சியிருக்கும்  சில ஞாபகங்கள்

இன்று நாம் பார்க்கும் கோட்டை, 1974ஆம் ஆண்டில் நமது அரசால், கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக எழுந்து நிற்கிறது.
 நமது வரலாற்று ஆர்வத்தை பார்த்த பராமரிப்பாளர், கோட்டைக்குள் அகழ்வாய்வில் கிடைத்த கவண்கற்களையும், பீரங்கிகுண்டுகளையும் காட்டுகிறார்.  விம்மி நெகிழ்ந்த மனத்துடன், வெளியே வந்தால் எதிரில் ஜக்கம்மாவின் கோவில். இதுவும் புதிதாக கட்டியதுதான்.

 அதை அடுத்து, தொல்லியல் துறையின் தகவல் பலகை நம்மை வரவேற்கிறது. உள்ளே செல்ல இயலாதபடி வலைபோடப்பட்டிருக்கிறது. உள்ளே, கோட்டையின் அஸ்திவாரத்தை நன்கு காணமுடியும். அரசவையும், அந்தப்புரமும், மணமண்டபமும் நமது பார்வைக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இதன் அருகில்தான், ரகசிய பாதைகள் இருக்கின்றன.இன்று அவை தூர்ந்துபோய்  இருக்கின்றன‌.



பார்த்து முடிக்கும்போது, இன்னும் ஒன்றிரண்டு விருந்தினர்கள் கோட்டை வாயிலில் நுழைகின்றனர். ஒருகாலத்தில் பரபரப்பாகவும், வேல் ஈட்டிகளின் சப்தங்களாலும் நிறைந்த கோட்டை,இன்று, எப்போதாவது கேட்கும் பறவையின் குரலைத் தவிர, கோட்டை மிகுந்த அமைதி கொண்டிருக்கிறது. 


வரலாற்று பாடபுத்தகங்களைத் தவிர, பொதுவாக‌ மறக்கப்பட்ட இடமாக காட்சியளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் மறைக்கப்பட்ட புதையல்கள். நமது பிள்ளைகளை தவறாமல் அழைத்துச் சென்று காட்டப்பட‌ வேண்டிய இடங்கள். இப்படி எண்ணியபடி,கோட்டையின் கிரில்கதவுகளை திறந்துகொண்டு வெளியே வருகிறோம். கட்டபொம்மனின் கடைசி வாரிசு என்று அறிமுகத்துடன் ஒருவரை மரத்தடியில் கண்டோம்.


இன்று

கட்டபொம்மனின் உறவினர்கள் ஒரு 200 பேர் இப்பகுதியில் வசிக்கின்றனர். பெரும்பாலும், அன்றாடக்கூலிகளாக வாழ்க்கை நடத்துகின்றனர். அதில் ஒருவர்  பீமராவ் கட்டபொம்மு. கட்டபொம்முவின் கடைசி வாரிசு. தலையில் ஒரு தலைப்பாகைபோல கட்டிக்கொண்டிருந்தார்.  எங்களைக் கண்டதும், கையில் இருந்த பையைத் திறந்தார். போட்டோக்களையும், அச்சடிக்கப்பட்ட காகிதங்களையும் தந்துவிட்டு. "இதுல டேரக்ட்ன்னு போட்டிருக்கு" என்றார்.  அவர்தான் நேரடி வாரிசு என்பதற்கன அத்தாட்சிகளாம், அந்த அரசாணைகள்.  கலெக்டரிடமிருந்தும், சில அதிகாரிகளிடமிருந்தும் கையெழுத்துடனான அரசாணைகள்.ஊமைத்துரையின் மனைவி கர்ப்பிணியாக இருந்ததால் அவரை ஆங்கிலேயப்படை விட்டுவிட்டது. அதில் கடைசி வாரிசு.  'நீங்க எதுவும் படிக்கலையா?" என்றதற்கு, "வாய்ப்பு இல்லையில்ல" என்றார். கிட்டதட்ட 70 ஆண்டுகள் இவர்கள் புதுக்கோட்டைக்கு வரக்கூடாது என்று ஆணையிருந்ததாம். அதானால், நிலையில்லாத வாழ்க்கையை  வாழ்ந்தார்களாம். இப்போது, ஊரில் எந்த விழாவாக இருந்தாலும், இவருக்குத்தான் முதல்மரியாதை. அதில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை காட்டினார்.
நாங்கள், இவரிடம் பேசுவதைக் கண்டதும் எங்கிருந்தோ வந்தார் இன்னொருவர். பார்க்க ஏதோ பூசாரி போலவே இருந்தார். கூப்பிட்டு, தன்னை போட்டோ எடுக்கச் சொன்னார். எடுத்ததும், தன்னை அறிமுகப் படுத்திகொண்டார். மெய்காப்பாளர் சுந்தரலிங்கத்தின் கடைசி வாரிசாம் இவர். கோட்டையின் மீதிருந்து உயிர் துறந்த வீரன் சுந்தரலிங்கம்.

ஆனாலும், எங்கள் கவனம் கட்டபொம்மனின் கடைசி வாரிசின் மீதிருந்ததை கண்டதும், பப்புவை அழைத்தார். பப்பு சற்று அருகில் சென்றதும், பெயர் மற்றும் விபரங்களைக் கேட்டார். இதன் நடுவில் கட்டபொம்முவின் வாரிசு தொடர்ந்து,விடாமல் தன்னைப் பற்றிய விபரங்களை கூறியபடியிருந்தார். நான் பப்பு இருந்த இடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். பப்புவின் பெயரைச் சொல்லி, கோயில் இருந்த திசை நோக்கி ஒரு பாடலைப் பாடினார். தெலுங்கா தமிழா என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது, அது. பின்னர், 'நீ கண்டிப்பா டாக்டர்தான் ஆகப்போறே' என்றார் பப்புவிடம்.

கட்டபொம்முவின் வாரிசு ,இங்கு, விடாமல் பேசிக்கொண்டிருந்தார். அரசாங்கத்திடமிருந்து, மாதந்தோரும் ரூ 1000 மட்டுமே கிடைப்பதாக கூறி விட்டு, முத்தாய்ப்பாக‌ 'எங்கே, கையை காட்டுங்க' என்றார். 'அதிலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையில்லை' என்று மறுத்தோம். இதற்குள், டாக்சி டிரைவர், 'வாங்க வாங்க' என்று சைகை செய்தார். ஏறும்சமயம், சுந்தரலிங்கத்தின் வாரிசு, என் வயதையும் பெயரையும் கேட்டார். சொன்னதும், இதற்குப்பின் என்ன படிக்கப்போகிறேனென்று நினைத்தாரோ என்னவோ, கோயிலை நோக்கி பாடலைப்பாடி '35வயதில் சட்டசபைக்கு செல்வாய்' என்று  ஆசீர்வதித்தார்.

திரும்பவும் ஒவ்வொரு வாயிலாக கடந்து வந்தோம். கரிசல் பூமியிலிருந்து வீசியது காற்றின் வெம்மை. உள்ளே ஒரு மகத்தான வரலாற்றை கேட்டு வந்தால், யதார்த்தம் வெளியில் முகத்தில் அறைகிறது. 2000 பொன்கள், 100/150 கோட்டை நெல் என்று தனது ஆட்சியாளர்களுக்கு வாரி வழங்கிய கட்டபொம்மன், 'எடைக்கு எடை தங்கம் அளிக்கிறேன், நம்பி வந்தவர்களை காட்டிகொடுத்து பழக்கமில்லை' என்ற கட்டபொம்மனையும், வருபவர்களிடம் எதிர்பார்க்கும் அவனது  வாரிசு! அரசாங்கத்தின் சிக்கனத்தை, எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை.

இதற்கு நடுவில்,பப்பு வேறு அவள் பங்குக்கு!
'ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்' ஆக வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்த பப்பு, அவர் சொன்ன 'நீ டாக்டரா ஆயிடுவே' என்ற தீர்க்கதரிசனத்தைக் கேட்டு கலவரமடைந்திருந்தாள். 'அதெல்லாம் பொய்ப்பா, உனக்கே தெரியும் இல்ல, நீ என்ன ஆகணுமோ அதை நீதான் டிசைட் பண்ணனும்,அவருக்கு ஸ்பேஸ்ன்னா என்னன்னே தெரியாது, ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்ன்னு ஒன்னை கேள்வியேபட்டிருக்க மாட்டாரு,அதான்' என்று அவளுக்கு தெளிய வைக்க வேண்டியிருந்தது. அவளை திசைதிருப்ப, நுழைவாயிலில் வாங்கிய கட்டபொம்மனைப் பற்றி புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தோம்.


இடம்:

தூத்துக்குடியிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி 18 கிமீ
ஒட்டப்பிடாரம் அங்கிருந்து 2/3 கிமீ

நுழைவுக்கட்டணம் : ஒருவருக்கு 2 ரூ

புத்தகம்:

வீரம் விளைந்த மண்ணில் வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆசிரியர்: மு. முருகையா
விலை : ரூ 30

Saturday, April 06, 2013

ஒரு விளம்பரமும் சில நினைவுகளும்

ஒன்பதாம் வகுப்பில்தான், எங்கள் பள்ளியில் செக்ஷன் பிரித்து மாற்றுவார்கள். இரண்டு செக்சன்களே அப்போது இருந்தது. அப்படி எங்கள் 'ஏ' செக்சனில் வந்து சேர்ந்தாள் ரேணுகா. அவள் நன்றாக படிப்பாள் என்றும் எங்களுக்கெல்லாம் நல்ல போட்டி இருக்கும் என்றும் ஏதோ ஒரு ஆசிரியர் சொல்லியிருந்தார். அதிலும் அவள், இரண்டாவது ரோ‍வில்தான் அமர்ந்தாள்.சரி, இன்னொரு ஞானசௌந்தரி போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, எங்கள் அரட்டை கும்பலோடு அவளும் சேர்ந்து எல்லோரும் நல்ல நண்பர்களாகிவிட்டோம்.

ரேணுகாவின் மீது  வகுப்பிலிருந்த எல்லாருக்கும் லைட்டாக பொறாமை இருந்தது என்று நினைக்கிறேன். அவள் அணிந்திருக்கும் வளையல், தலையில் மாட்டியிருக்கும் விதவிதமான ஹேர்கிளிப்புகள் மற்றும் உடனுக்குடன் ஃபேஷனுக்கு வரும் அத்தனை விதமான மிடிகள்/பாவாடை சட்டை என்று கலர்புல்லாக வருவாள். சுடிதார் அணிய மட்டும் அவளது வீட்டில் தடை. உடைகளைவிட, அவளது வளையல், ஹேர் க்ளிப்புகளே எல்லாரையும் ஈர்த்தன.'எங்கே வாங்கினே' என்ற கேள்விக்கு 'பெரிய‌அக்கா வாங்கி தந்தாங்க' என்றோ 'நடுஅக்கா  கொடுத்தாங்க' என்றோ 'சின்ன அக்கா ஆரணிலேருந்து வாங்கிட்டு வந்தாங்க' என்றோ சொல்லுவாள். காந்திமதி ஒரு பெருமூச்சோடு, 'இருந்தா ரேணுகாவோட‌ அக்காங்க மாதிரி இருக்கணும்' என்பாள்.

கால் பரீட்சை/அரை பரீட்சை லீவு வந்தால் நண்பர்களின் வீடு வீடாக போவது வழக்கமாகியிருந்தது. ஒரு நாள் சபீனா வீடு, ஒரு நாள் எங்கள் வீடு என்று.
அப்படி, ஒரு நாள் ரேணுகா வீட்டுக்கு போனபோது அவளது அப்பா மதிய உணவுக்கு வந்திருந்தார். ரேணுகா, எங்களை சத்தம் போட்டு பேச வேண்டாமென்றும், சத்தமில்லாமல் சிரிக்கவும் கேட்டுக்கொண்டாள். ஒன்றுமில்லாமலே நாங்கள் 'கெக்கே பிக்கே' என்று சிரிப்பதாக அப்போது எல்லாரிடமும் பேர் வாங்கியிருந்தோம். சிரிக்காமலிருப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது, அப்போது. 


அவ்வப்போது, ரேணுகா, அவளது அப்பா ஸ்ட்ரிக்ட் என்று சொல்லியிருக்கிறாள்.  அது தெரிஞ்ச விசயம்தானே என்று நினைத்திருந்தேன். மேலும், எல்லார்  வீட்டிலுமே அந்த ஸ்ட்ரிக்டைதான் அனுபவித்  திருக்கிறோமே!   'இனிமே தெருவிலே விளையாடாதே!', 'நீ கடைக்கு போக வேணாம், தம்பி போகட்டும்', 'மாடிக்கு எதுக்கு அடிக்கடி போறே' என்று எல்லாருமே அனுபவிப்பதுதானே என்று!!  ரேணுகா அப்பாவின், அந்த ஸ்ட்ரிக்டின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது, அவளது பதட்டத்தையும் பயத்தையும் அப்போதுதான் நேரில் கண்டபிறகு. நாங்கள் மாடி அறையில் குசுகுசுவென்று  பேசி சிரித்துக்கொண்டிருந்தோம். ரேணுகாவோ, மாடிக்கும் கீழுக்கும் அலைந்து நாங்கள் பேசுவது கீழே கேட்கிறதா என்று டென்சனிலேயே இருந்தாள். ஒருவழியாக, அவளது அப்பா சென்றவுடன் சகஜமானாள். 'பெண்கள் சத்தமாக பேசுவதோ,சிரிப்பதோ கூடாதாம்,அவருக்கு'.

அதோடு, அவள் சொன்னதுதான் அதிர்ச்சி. அதாவது, பத்தாவதுக்குப் பிறகு அவள் படிப்பது சந்தேகம்தானாம். அவளது அக்காக்கள் எல்லோரும் ஏழாவது அல்லது எட்டாவதுதான் நின்று விடுவார்கள் என்றும், சில வருடங்கள் வீட்டிலிருந்தபின் கல்யாணம் செய்துகொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினாள். அப்புறம், வருடா வருடம் அக்காக்கள் யாரேனும் பிள்ளைபேறுக்காக வீட்டுக்கு வந்து தங்கிச் செல்வார்கள். ரேணுகா அடம்பிடித்து சாப்பிடாமல் எல்லாம் இருந்து  சண்டைபோட்டு ஒன்பதாவது வகுப்புக்கு வந்திருக்கிறாள்.  அதாவது, அவர் சர்வீசிலிருக்கும்போதே எல்லாருக்கும் கல்யாணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்பதுதான் அவர் பாலிசி.இதையெல்லாம் அவள் இவ்வளவுநாட்களாக எங்களிடம் சொன்னதேயில்லை. இதைக்கேட்டதிலிருந்து நாங்கள் ரொம்ப சோகமாகிவிட்டோம்.


 அவரோடு இருக்கும் நண்பர்கள்தான் அவரை கெடுப்பது என்று ரேணுகா அவ்வப்போது பொருமுவாள். 'வேலையிலிருக்கும்போதே கல்யாணம் செய்து கடமையை முடித்தால்தான் நமக்கு கௌரவம்' என்று அவர்கள் அவரிடம் சொல்லுவார்களாம். 'பொண்ணுங்க படிச்சு கையில ஒரு வேலையை வைச்சுக்கணும்' என்று ஆயா என்னை சொல்லி சொல்லி வளர்த்திருந்ததால் 'ஏன் இன்னும் பழங்காலத்து மாதிரி இருக்காங்க' என்று மட்டும் தோன்றியது. ஆனால், ரொம்பவெல்லாம் ஆராயவில்லை, அப்போது.

பத்தாவது முடித்ததும், எப்படியோ ரேணுகா கெஞ்சிக் கூத்தாடி அப்பாவிடம் அனுமதி பெற்று ப்ளஸ் ஒன் சேர்ந்துவிட்டாள்.அதுவே எங்களுக்கு சந்தோஷம் மற்றும் ஆச்சர்யம். ப்ளஸ் டூ முடியும்போதோ, எல்லாருக்கும் எந்த காலேஜில் சேருவோம்? என்ன படிக்கலாம்? என்ற பேச்சுவரும்போது மட்டும் நிச்சயமாக சொல்லிவிடுவாள், 'ஏதோ இது படிக்கிறதே பெரிய விஷயம்!! இதுக்கு மேலல்லாம் வீட்டுல கேக்க முடியாது!" என்று. ரிசல்ட் வந்து எல்லாரும் காலேஜில் செட்டிலானபிறகு, அந்த வருட பூஜா ஹாலிடேஜில் எல்லோரும் சந்தித்தோம். காலேஜ் கதைகளை பேசிப்பேசி, பள்ளிக்கூடம்தான் பெஸ்ட் என்றெல்லாம் பீலா விட்டுக்கொண்டிருந்தோம். ரேணுகாவுக்கு கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தோம். அவள் மகிழ்ச்சியாகவே இருந்தாள். 'இதுதான் லைஃப்' என்று தனது நிலைமையை ஏற்றுக்கொண்டதாகவே பட்டது. மாப்பிள்ளை வீட்டுக்கு அவளது  ஃபோட்டோ போயிருக்கிறதாம்.  விரைவில் அவர்கள் பார்க்க வருவார்களாம். அவளும் மாப்பிள்ளையின் போட்டோவை காட்டினாள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை மலர்ச்சியுடன் அவள் எதிர்கொள்வதாக நினைத்துக்கொண்டேன்.


சில மாதங்களில் ரேணுகாவும் திருமணமாகி வேறு ஊருக்கு போனாள். கல்லூரி விடுமுறைகளில் கல்லூரி நண்பர்கள் ஊர்களுக்குச் செல்வதும், ஊருக்கு வரும் நேரம் ரேணுகா சந்திக்க இயலாமலும் கிட்டதட்ட தொடர்பறுந்த நிலை. வெகுசமீபத்தில், பெரிம்மா கேட்டார், 'ரேணுகா உன்க்கிட்டே பேசுச்சா? ஃபோன் நம்பர் வாங்கிச்சு' என்று! ரேணுகாவின் கணவர் இறந்துவிட்டதாகவும், இரு பையன்களுடன் ஆம்பூருக்கே வந்துவிட்டதாகவும் சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். பெற்றோர்கள் இல்லாத நிலையில், தனியாக இருந்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுவதாக கூறினார். குடும்பத்துக்கான உலைக்காக அவள்தான் ஏதோ வேலைக்கு போவதாகவும், ஆனால் படிப்புக்கே பற்றவில்லையென்றும் சொன்னதை கேட்டபோது எனக்குள் இதயத்தை திருகுவதை போன்ற வலி!!

ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்திருந்தாள் ரேணுகா. ரொம்ப தூரம் அனுப்ப மனமில்லாவிட்டாலும், அரை மணித்தொலைவில் அமைந்திருந்த ஜெயின் கல்லூரிக்காவது அனுப்பியிருக்கலாம்.குறைந்தபட்சம், ஒரு டிகிரி படித்திதிருந்தாலாவது, ஏரியாவொக்கொன்றாக முளைத்திருக்கும் ஏதாவது பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக சேர்ந்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன்.  


ச்சே, நல்லா படிக்கிற பொண்ணை அவங்க அப்பா இப்படி பாழாக்கிட்டாரே என்று கோபமாகவும் வந்தது. இப்படி அவர்கள் பாதுகாத்து பாதுகாத்து என்ன பெரிதாக சாதித்துவிட்டார்கள்? உங்கள் பாதுகாப்பினால் உங்கள் மகளின் வாழ்க்கையை அல்லவா வீணாக்குகிறீர்கள்? இப்பொழுது நிலைமை கொஞ்சமாக மாறியிருக்கலாம், அதாவது பெண்ணை படிக்க வைப்பதற்கு மட்டும். ஆனால், வேலைக்கு போக வேண்டுமென்றோ,அவள் தனது காலில் நிற்க வேண்டுமென்றோ எத்தனை அப்பாக்கள் நினைக்கிறார்கள்? 

கற்பகத்தின் அப்பா, ஊருக்கு போகும்போதும் வரும்போதும் கல்லூரிக்கு வந்து அழைத்துச் செல்வார். அல்லது, துணைக்கு யாரையாவது அனுப்புவார். கணவன் தன்னை வெளிநாட்டில் அடித்து கொடுமைபடுத்துகிறான் எனும்போதுகூட அவளது பயமெல்லாம்,  டிக்கெட் புக் செய்தால் எப்படி தனியாக வருவது, பயமாக இருக்கிறது, கூட யாராவது வந்தால் பரவால்லை' என்பதுதான். 'கூடவே வந்து, கூடவே அழைத்துப் போய், கூடவே இருந்து எல்லாம் செய்து நீங்கள் வாரிக்கொண்டதுதான் என்ன? திருமணத்தை, வேறு ஒரு ஆடவனை நம்பும் நீங்கள் ஏன் உங்கள் பெண்ணை நம்ப மறுக்கிறீர்கள்?'
என்றெல்லாம் அவளது அப்பாவிடம் நறுக்கென்று கேட்க வேண்டும்போல இருந்தது. அவரிருந்தால் கேட்டிருக்கலாம்,ஒருவேளை! இப்பொழுது அவளுக்கு ஆறுதலைத்தவிர வேறு எதுவும் செய்ய இயலாதிருக்கிறது.

சிலநாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் பார்த்தேன். பேஸ்புக்கில் யாரோ பகிர்ந்திருந்தார்கள். ஆகோ ஓகோவென்று எல்லாரும் ஒரே புகழாரம். ஐசிஐசிஐ ப்ரூடென்சியலின் விளம்பரம் அது. உடையாமல் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்ப்பதில் தொடங்கி, தலையை இடித்துக்கொள்ளாமல் தான் கீழே போட்ட துண்டை எடுக்க மனைவை பாதுகாக்கும் கணவன் முதல்,  அப்பாவுக்கு அடுத்து பாதுகாக்க நான் இருக்கிறேன் என்று சொல்வதுவரை!! (இதில், ரொம்ப முரணானது, கீழே போட்ட துண்டை எடுக்கும் காட்சிதான்... அவ்வளவு அக்கறை இருந்தால் துண்டை அதற்குரிய இடத்தில் போட வேண்டியதுதானே! ;‍)) அதை பார்த்ததிலிருந்து இன்னும் உரக்க கத்த வேண்டும் போலிருக்கிறது, 'இப்படி பொத்தி பொத்தி வளர்க்கிறதை எப்பதாண்டா விடப்போறீங்க?'!!
 





இந்த விளம்பரம், மறுபக்கத்தில் எங்களை/பெண்களை கேலி செய்வது போலிருக்கிறது.பாதுகாக்க கூட ஒரு ஆண் இருந்தே ஆக வேண்டும் என்பதுபோல! ஆண் இல்லாமல் உங்களால் இந்த உலகில் தனித்து பாதுகாப்பாக வாழ இயலாது என்ற எண்ணத்தை கட்டமைக்கிறது. ஆண் துணையில்லாமல் குழந்தைகளை வளர்க்கும் பெண்களையும் சேர்த்தே இது தாக்குகிறது.அவர்களது உழைப்பை, தன்னம்பிக்கையை,வெற்றியை கணக்கில்கொள்ளாமல் ஆண் == பாதுகாப்பு என்று எல்லார் மனதிலும் விதைக்கிறது!இந்த விளம்பரத்தை, ரேணுகாவின் சார்பாக‌,கற்பகத்தின் சார்பாக‌, ஆண் துணையில்லாமல் ஆணும் பெண்ணுமாக ஐந்து பிள்ளைகளை படிக்க வைத்த ஆயாவின் சார்பாக கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

Thursday, April 04, 2013

ஆதிச்சநல்லூரில் தாழிகளைத் தேடி ஒரு பயணம்


இந்த வருட புத்தக கண்காட்சியில் ஒரு புத்தகம் வாங்கினோம். என்பிடியின் 'எலும்பு கல்லான கதை'. 

"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்தான் இது;" 

"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்பின் எலும்புதான் இது;"

 "ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்பின் எலும்பின் மீது மூடிய மண்தான் இது; "

என்று எலும்பின் மீது மூடிய மண், மண் மீது படிந்த ஆற்று மணல், மணலின் மீது ஓடும் ஆறு , அந்த ஆற்றின் நீரில் விளையாடும் சிறுமி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அடுக்கடுக்காக ,புதைந்து போன  டிரைசெரடாப்பின் படிமத்தை கண்டுபிடிப்பதாக அந்த கதை செல்லும். 

பப்புவுக்கும் அது போல தானும் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசை. அதோடு, சில அருங்காட்சியங்களில் கண்ட  தங்க,வெள்ளி நாணயங்கள், அரிக்க மேடு மணிகள்/நாணயங்கள், சாலர் ஜங்கின் விதவிதமான வாட்கள் என்று எல்லாமும் சேர்ந்து  பண்டைய காலத்தின் மீது ஒருவித ஈர்ப்பை உண்டாக்கியிருந்தன.

கடந்த வாரம் தூத்துக்குடி செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஆதிச்சநல்லூர்,சமீபத்தில் ஹெரிடேஜ் சைட்டாக அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. நிச்சயம் அங்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டோம். 

தூத்துக்குடியிலிருந்து திருவைகுண்டம் சென்றோம். அங்கிருந்து ஆதிச்ச நல்லூர் ஐந்து கி மீ தூரம்.  அந்த வழி முழுவதும் ஒரே  திருத்தலங்கள். நவதிருப்பதியாம். அங்கிருந்து ஆதிச்சநல்லூர் வந்தடைந்தோம்.  பாளையங்கோட்டை செல்லும் வழியில் ஒரு இடத்தில் இடதுபுறம் சாலை திரும்பியது. அந்த வழியில் பயணித்தால், ஒரே  தெரு.  இருபுறமும் வீடுகள். அதோடு சாலை முடிவுற்றது. இதற்குபின் எங்கு செல்வது, அல்லது அந்த அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்ட இடம் எங்கு இருக்கிறது என்ற எந்த விபரங்கும் தெரியவில்லை. ஊரிலோ ஈ காக்கை கிடையாது. 

வழியில் தென்பட்ட ஒருவர் ஓட்டுநருக்கு  வழி சொன்னார்.
நாங்கள் வந்த வழியிலேயே திரும்பி, இன்னும் சற்று முன்னால் போனால், வலது புறம் கோயில் வரும். அதற்கு எதிரில் திரும்பினால் ரயில்வே டிராக் வரும். அதுதான் இடம்.   கோயிலை பார்த்துவிட்டோம். அதற்கு எதிரில் இருந்த சாலையில் சென்றோம்.  வலதுபுறம் ஒரே மண்மேடு - முட்செடிகள். இடதுபுறம் ஏதோ பயிரிட்டிருந்தார்கள்.அருகில் ரயில்வே டிராக். ரயில்வே டிராக் தாண்டி இருபுறம் புளிய மரங்கள். 

இதற்கு மேல் எங்கு செல்வது என்று தெரியவில்லை. தாழிகள் இல்லாவிட்டாலும் ஹெரிடேஜ் சைட் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் ஒரு சிறு அறை/தகவல் பலகையையாவது எதிர்பார்த்திருந்தோம். எதுவுமில்லாமல், எந்த பக்கம் செல்வது என்றும் புரியாமல் அந்த மண்மேட்டில் நடக்கத் துவங்கினோம்.  மண்மேடு பரந்துவிரிந்தது. ஆங்காங்கே சிறு சிறு செடிகள். தொலைதூரத்தில் ஆடுகள் கூட்டமாக மேய்ந்துக் கொண்டிருந்தன. அருகில் மேய்ப்பர் முக்காடிட்டு நின்றுக்கொண்டிருந்தார்.  



வெயில் ஏறிக்கொண்டிருந்தது. கண்கள் ஏதேனும் ஏ எஸ் ஐ போர்ட் தென்படுகிறதா என்று தேடின. சற்று தூரம் நடந்தோம். ஒரு சில இடங்கள் பாறைகள் புதைந்திருந்தன. தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதையும் நாங்கள் காணவில்லை. ஆதிச்சநல்லூர் கிட்டதட்ட  கி மு பத்தாயிரத்துக்கும் முன்பாக காலகட்டத்தை சொல்கிறார்கள். கற்காலத்துக்கும் நியோலித்திக் காலகட்டத்துக்கும் இடைபட்டது. தாமிரபரணியின் ஆற்றங்கரையில் வளர்ந்த நாகரீகம். 

இத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இடத்தில் மக்கள் என்ன செய்திருப்பார்கள், எப்படி  வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணியபோது  அந்த எளிமையான   மண்மேடு வெறுமையாகக் காட்சியளிக்கவில்லை.  மனித குலத்தின் வரலாறாகவே தோன்றியது.இது இறந்தவர்களை புதைக்கும் இடம் எனில், அவர்கள் எங்கு வாழ்ந்திருப்பார்கள், அவர்கள் வீடு எப்படி இருந்திருக்கும் என்று அந்த கரடு முரடான நிலத்தில் யோசித்தபடி நடந்தோம். 

அங்கு கண்டெடுக்கப்பட்ட தாழிகளில், மனித எலும்புகளும், சமையல் பாத்திரங்களும்,  உலோகங்களும் இருந்ததாக சொல்கிறார்கள். தாழிகள் இரண்டு அடுக்குகளாக , ஒன்றை மூடி வைக்க இன்னொரு தாழியாக இருந்திருக்கிறது. அந்த தாழிகளின் மீது பல டிசைன்கள் வரையப்பட்டிருப்பதாக தொல்லியல் துறையின் தளத்தில் பார்த்திருந்தேன்.  இருந்தாலும், இவற்றுள்,  கூர்மையான சிறு சிறு ஆயுதங்கள்தான் ஹைலைட். அவை மிசோலித்திக் காலத்தை சேர்ந்தவை. சென்னைக்கருகில் இருக்கும் குடியம் குகைகள் நியோலித்திக் காலத்தை சேர்ந்தவை. இவை அதற்கும் முன்பாக, எனும்போது காலத்தை தாண்டிச் செல்லும் உணர்வு ஏற்பட்டது.

எதிர்பார்த்து வந்ததை, பப்புவுக்கு  காண்பிக்க முடியவில்லை . ஏமாற்றத்துடன்  கார் நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கு வந்தோம்.  எதிரில் இருந்த வயலில் ஒரு பைப்பிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடித்தது. அருகில் இருந்த இளைஞனிடம், விசாரித்தார் ஓட்டுநர். அதற்குள், எங்கிருந்தோ ஒருவர் வந்து சேர்ந்தார்.  தாழிகளை  தான் காட்டுவதாக அழைத்துச் சென்றார். நாங்கள் நடந்த இடத்துக்கு சற்று தொலைவிலேதான்.



கீழே பார்த்தால், புதையுண்ட தாழிகள். அவற்றுக்கு அருகிலேயே இன்னும் சில. அவற்றை தொல்லியல் துறையினர் இன்னும் தோண்டவில்லையாம்.



 ஆடுகள் மேய்ந்துக்கொண்டிருந்த பகுதியில்தான் அகழ்வாராய்ச்சி நடைபெற்றதாகவும் அனைத்தையும் சென்னைக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறினார். எங்களைப்போல் தேடி வருபவர்களுக்கு இந்த தாழிகளையும் தான் காட்டுவதாகவும் கூறினார். 


"அந்த காலத்தில் இறந்து போக மாட்டாங்கல்ல, குறுகிதான் போய்டுவாங்க, அவங்களை உள்ளே வைச்சு அவங்களுக்கு புடிச்சதை வைச்சு மூடிடுவாங்க"

அதற்குள் மேலும் சிலர் வந்து  விட்டனர். இவ்வளவு நேரம் எங்கிருந்தார்களோ தெரியவில்லை.

 
இந்த படங்களில் ஒரு கோடு போல புதையுண்ட பானைகளின் விளிம்பைக் காணலாம். உள்ளே எந்த பாட்டி அல்லது தாத்தா உறங்கிக்கொண்டிருக்கிறாரோ, தெரியவில்லை.



"இங்கனதான் போர்டு வைச்சிருந்தாங்க, மழையில விழுந்துடுச்சு" என்றார். அவர் காட்டிய இடத்தில் மற்றுமொரு தாழியின் உடைந்த பாகம் வெளித்தெரிந்தது. கம்பி மட்டும் கீழே கிடந்தது. 

 அதே மழைதான், இந்த தாழிகளையும் வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும், ரோம் மக்களோடு வாணிபம் செய்த அரிக்கமேட்டின்  மணிகளைm மண்ணிலிருந்து வெளியே கொண்டு வருவதுபோல! மழைதான் புதைந்துபோனவற்றை எப்படி மீட்டுக் கொண்டுவருகிறது, மண்ணிலிப்பவற்றையும் , மனதிலிருப்பவற்றையும்!!  

""உள்ளேருந்து நெறைய எடுத்தாங்க. நகையெல்லாம் இருந்துச்சு. தங்கக்காசு கூட இருந்துச்சு. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க" என்றார். (மிசோலித்திக்கில் நாணங்கள் இருந்தனவா அல்லது அவை பிற்காலகட்டத்தில் சேர்ந்தவையா?)

"இங்கதான் ஒரு வாட்ச்மேன் இருப்பார். இப்ப எங்கியோ போயிருப்பார் போலுக்கு,கவர்மென்டுலேருந்து ஆள் போட்டிருக்காங்க" என்றார், மேலும். 


நாங்கள், சற்று நேரம் அங்குமிங்கும் நடந்தோம். சில பாறைக் கற்களுக்கிடையில் உடைந்த பானைத்துண்டுகள் கிடந்தன. பப்புவுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும். உடைந்த பானைத்துண்டை நெடுநேரம் கையில் வைத்துக்கொண்டிருந்தாள். வந்தவர்கள் வந்ததுபோலவே, சட்டென்று வயல்களுக்குள் மறைந்து போனார்கள். மனித வரலாற்றின் கரையிலிருந்து, பிரமிப்பு அகலாமல் திரும்பினோம்.


Wednesday, April 03, 2013

டன் டிக்கிட்டு போய்ட்டா?

மெர்மெய்ட் என்றால் பப்புவுக்கு மிகவும் இஷ்டம். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசை கரைத்து தந்தேன். அதி உற்சாகமாகிவிட்டாள். அவற்றை மோல்டில் ஊற்றினாள். ஊற்றியவுடனே அசைத்து அசைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். "இதை தொட்டு பார்த்துக்கிட்டிருந்தா சரியா வராது, நைட் ஃபுல்லா இங்கியே இருக்கட்டும், அப்பதான் நல்லா காயும்" என்றேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா என்று பப்புவுக்கு பயம்/சந்தேகம் வந்துவிட்டது.

"பால்கனியில் விட்டுவைத்தால் திருடன் வந்து எடுத்துக்கிட்டு போய்ட்டா என்ன பண்றது?"

 அவள் செய்வது முக்கியமானது என்ற அவளது எண்ணத்தை கலைக்கவிரும்பாமல், 'நமக்கு முக்கியமானது எல்லாருக்கும் முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்க முடியாது' என்பதை அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று எண்ணியபடி லைட்டாக ஆரம்பித்தேன்.

"திருடங்க எல்லாம் ஏன் திருடறாங்க? அவங்ககிட்ட என்ன இல்லையோ  அதைத்தானே திருடறாங்க?"

உடனே இடைமறித்துக் கேட்டாள்,

"அப்போ, அவங்க இந்த மெர்மெய்டை திருடிட்டா நாம தப்பா எடுத்துக்கக்கூடாதுன்னு சொல்றியா?!!


அவ்வ்வ்வ்!!!

தலைப்பு: பப்புவுக்கு இந்த கதை ரொம்ப ஃபேவரிட். அதான்!

Thursday, March 21, 2013

பட்டர்பிளையில் சூரியனை பார்க்க ஒரு பயணம்

" ஒரு தேவதை வந்தது.அந்த தேவதைக்கு வயசாயிடுச்சுன்னு எனக்கு எல்லா மேஜிக்கும் கத்துக்குடுக்கறேன்னு கூப்பிட்டு போச்சு.ஒரு பெரிய ஜய்ஜாண்டிக் பட்டர்பிளை. அதுமேல நானும் தேவதையும் உட்கார்ந்துக்கிட்டோம்.  சூரியனுக்கு போலாம்னு சொன்னேன். பறந்து போய்க்கிட்டே இருக்கோம். தேவதைக்கு பசி வந்துடுச்சு. என்கிட்டேயும் எதுவும் இல்ல. அந்த தேவதை ஐஸ் மட்டும்தான் சாப்பிடும். அதுதான் அதோட ஃபுட். எங்க போறது ஐஸ்க்கு? பார்த்தா பட்டர்பிளை, ஒரு ஃபிரிட்ஜ் எடுத்துக்கிட்டு வந்திருக்கு. அதுல பார்த்தா ஐஸ் ட்ரேதான் இருக்கு. ஐஸ் க்யூப்ஸ் இல்ல. ஒரு பாட்டில்ல, ஐஸ் வாட்டர் இருக்கு. அதை தேவதை கையில ஊத்தினா அது ஐசா மாறிடுச்சு. தேவதை சாப்பிட்டுட்டு தூங்கிடுச்சு. நானும் பட்டர்பிளை மேல படுத்துக்கிட்டேன். அப்புறம் பார்த்தா சூரியன்னுக்குள்ள போயிட்டோம். அங்க ஒரே குளிர். ரொம்ப ஐஸா இருக்கு. பார்த்தா அது நெப்ட்யூன்!! நெப்ட்யூன்லதானே ஒரே ஐஸா இருக்கும்?! நெப்ட்யுனை சுத்தி பத்து நிலா....ஒன்னு க்ரீன், ஒன்னு பர்ப்பிள். ரெண்டு நிலாதான் நான் பார்த்தேன். 'வேணாம், நீ எர்த்துக்கு போ'னு பட்டர்பிளைக்கிட்டே சொன்னா அது பக்கத்துல இருக்க ஜூபிடருக்கு போயிடுச்சு."

அதுக்குள்ள ஸ்கூல் வந்துடுச்சி...ஈவினிங் சொல்றேன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போய்ட்டா பப்பு.


காலை எழுந்ததிலிருந்து 'கனவை சொல்கிறேன் கனவை சொல்கிறேன்' என்று ஒரே டயலாக். அதோடு 'நீ கேட்டா, உனக்கே ஆசையா இருக்கும்' என்று வேறு மார்க்கெட்டிங். 'ஸ்கூல் போறப்போ வழியில சொல்லு, இப்ப கிளம்பு" என்று அவளை கிளப்பியதில், இவ்வளவுதான் கேட்க முடிந்தது. மாலையில், மறந்திருப்பாள்.

சூரியனுக்கு உள்ளே போய் பார்க்க வேண்டும் என்றும், அதற்கேற்றாற்போல எரிந்துபோகாத உடையை சயிண்டிஸ்ட் ஆகி கண்டுபிடிக்கப்போவதாகவும் அவ்வப்போது சொல்லுவாள்.

அதோடு, சமீபமாக அவளது கனவில் அடிக்கடி ஒரு தேவதை வந்து உனக்கு 3 வரங்கள் தருகிறேன் என்று சொல்லும். அந்த தேவதை நேரில் வந்தால் கேட்பதற்கு, 3 விஷஸ் வைத்திருக்கிறாள்.

1. ஒரு மேஜிக் ஸ்டிக்
2.  எங்க பெரிய ஆயா திரும்ப உயிரோட வந்துவிட வேண்டும்.
3.எங்க ஃபேமிலில யாரும் இறந்தே போகக்கூடாது..எல்லோரும் அன்கவுண்டபிள் இயர்ஸ் வாழணும்!! 


அடிக்கடி இந்த விஷசை என்னிடம் சொல்லுவாள்.
இவை எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய கனவாக மலர்ந்துவிட்டதோ என்னவோ?!

Tuesday, March 19, 2013

ஆத்தா நான் பாசாயிட்டேன்!

மார்ச் ஏப்ரல் வந்துவிட்டால் போதும். சின்ன வயதில்தான் அந்த கேள்விக்கு பதில் சொன்னேன் என்றால், இப்போதும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக நான் எதிர்கொள்ளும் "எக்ஸாம் எப்போ" அல்லது "எக்சாம் முடிஞ்சுடுச்சா" என்ற கேள்விதான். பப்புவின் பள்ளியில் தேர்வுகளே கிடையாது. பெரும்பாலான  பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்றுதான் சொல்கிறார்கள், ஆனால் அப்படி தெரியவில்லை. (போன‌ ஜெனரேஷனுக்குஎக்சாம் இல்லையென்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லையோ?!)

முதல்முறை, பப்பு "எக்சாம்னா என்ன ஆச்சி" என்றாள்.(ஆம்பூரில், ஒருமுறை  "மார்க்ன்னா என்ன" என்று கேள்விகேட்டவரை அதிர்ச்சிக்குள்ளா க்கியதெல்லாம் வரலாறு.)கேள்வி கேட்பவருக்கு பதில் சொல்வதா, பப்புவுக்கு பதில் சொல்வதா என்று முழித்து ஒருவழியாக சமாளித்தேன். எக்சாம் இல்லையென்றால் ஒரு சிறு அதிர்ச்சி/புருவ உயர்த்தல். இப்போதாவது பரவாயில்லை, பப்புவுக்கு தமிழ் டிக்டேஷன் கொடுத்து பழகுவதால் அவளுக்கு 'எக்சாம்' என்பது பற்றி ஒரு ஐடியா கிடைத்திருக்கிறது எழுதிக் கொண்டேயிருப்பது என்பது போல.  சென்ற வருடம் ரொம்ப கஷ்டம்.(அவ்வ்வ்வ்வ்)எக்சாமுக்கு மார்க்,அதற்கு ரேங்க், அதிலும் அதிக மார்க்....எனக்கும் அதையெல்லாம் சொல்லி ஆப்போசிட் ரியாக்சன் ஆகிவிடபோகிறது என்று பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 'இந்த பள்ளிக்கூடம் முடித்து வேறு பெரிய பள்ளிக்கூடம் போகவேண்டும் என்றால் ஒரு பரிட்சை வைப்பார்கள். அதில் கேள்விகள் இருக்கும். அதை படித்து ஒரு பேப்பரில் எழுத வேண்டும்' என்று மட்டும் அவ்வப்போது சொல்லி வைப்பேன்..  உடனே, "ஆச்சி, அது  டேபிள்/சேர் போட்ட ஸ்கூலா ஆச்சி, அது வேணாம்" என்றாள். (அவ்வ்வ்வ்)

இந்த வருடமும், வீட்டுக்கு வந்தவர்கள்,நாங்கள் சந்தித்தவர்களிடமிருந்து அதே கேள்வியை எதிர்கொண்டோம். சென்ற வருடம் போலில்லை, பழகிவிட்டது.(ஹிஹி!) நேற்று ஏதோ கேள்வி கேட்டு விளையாடிக் கொண்டிருந்தாள் பப்பு. அவள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்பாள்.சத்தியமாக,பெரும்பாலும் அதற்கான பதில்கள் தெரியாது. 'புக்ல பார்த்து படிச்சுட்டு சொல்றேன்,பப்பு' என்பேன். "இப்போ, நீ என்னை கேளு" என்பாள். அதே கேள்வியை அவளை கேட்பேன்.
அவள் பதில் சொல்லுவாள்.(ஜூபிடர் சுத்தி இருக்க ரிங்ஸ் ஐஸும், தூசியும்தானாமே!!)

அதில், திடீரென்று, 'எங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்ல?" என்றாள்.

'சரி, அவளுக்கு புரியற மாதிரி சொல்லணும்' என்று எண்ணியபடி ஆயத்தமானேன். 'ப்ளான் பண்ண்ண்ணி சொல்ல‌ ஆரம்பிக்கணும்' என்று தயார்ப்படுத்திக்கொள்ள.....


"நீ என்னை கேளு"


"உங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்ல?"


"இப்போ எக்சாம்ல மார்க் வரும் இல்ல, அப்போ என்னாகும்? நெறைய மார்க் வேணும்ம்னு க்ரீடியாகிடுவோம் இல்ல. அதுக்குதான். அதுக்குதான் எங்களுக்கு எக்சாம்ஸ் இல்ல!"


......


"பவன் ஆன்ட்டியை கேட்டான், எங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்லன்னு. ஆன்ட்டி சொன்னாங்க, இப்போ நீங்க எல்லாரும் இருக்கீங்க. ஒருத்தர் நெறைய மார்க் வாங்கறீங்க.அப்போ மத்தவங்களுக்கு எப்படி இருக்கும்? எல்லாரும் ஆக்ட்விட்டி நல்லாதானே பண்றீங்க. அப்போ, ஒருத்தவங்களுக்கு மட்டும் கைதட்டினா ஹவ் வில் யூ ஃபீல்? க்ரீடி ரைட்? அதுக்குதான் எக்சாம்ஸ் இல்ல. புரிஞ்சுதா?"