Wednesday, February 10, 2010

அருவியின் குழந்தைகளுக்கான வீட்டுக்கல்வி புத்தகங்கள்

அருவி பதிப்பகத்தின் வீட்டுக்கல்வி இயக்கத்தின் கீழ் வெளியிட்டிருக்கும் நூல்களை புத்தகச் சந்தையில் வாங்கியிருந்தோம். முதல் நிலை நூல், பப்புவின் வயதுக்குக் கீழ் இருந்தது. மிக எளிதான கதைகள். முன்பு, கோலின்ஸ் சீரிசில் வாங்கியது நினைவுக்கு வரவே இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை புத்தகங்களை வாங்கினோம்.


டப்டுப்..டப்டுப்..டப்டுப்..டப்டுப்..டப்டுப்
முயல்குட்டியும் போலீசுக்காரரும் - இது இரண்டாம் நிலை புத்தகம்.

விலங்குகள் கதைகள் ஓசைக்கு முக்கியத்துவம் கொடுத்து விவரிக்கப் பட்டுள்ளன. எளிய வாக்கியங்கள் - விதவிதமான ஓசைகள் - முயல் காரட்டை சாப்பிடும்போது ஏற்படுத்தும் சப்தம் - போலிசுக்காரர் பூட்ஸு காலால் நடக்கும்போது வரும் சப்தம் - ஆடுகள் பாலத்தின் மீது நடக்கும் சப்தம் - இவை குழந்தைகளின் கவனத்தையும், கதை கேட்டு தொடர் சம்பவங்களாக நினைவு
வைத்துக்கொள்வதையும் மேம்படுத்துகிறது.


இதில் முயல்குட்டியும் போலிசுக்காரரும் என்ற கதையை வாசித்தோம். ஒரு குட்டி முயல் தோட்டத்திற்கு சென்று காரட் சாப்பிடுகிறது. அப்போது டப்டுப் லப்டுப் என்ற சப்தத்தை கேட்கிறது.போலிசுக்காரர் என்று நினைத்து ஓடி ஒளிகிறது. அது ஒளியும் ஒவ்வொரு இடத்திலும் புதிய விலங்கொன்றை சந்திக்கிறது. கடைசியில் அந்த டப்டுப் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அறிந்து மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு ஓடுகிறது.


எளிய கதை, ஆனால் பப்புவை பால் குடிக்கவும் மருந்து குடிக்கவும் வைத்தது!

புத்தகத்திற்கு பின்னட்டையில் அம்மாஅப்பாக்களுக்கும்...பாட்டிதாத்தாக்களுக்கும்... அப்புத்தகத்தை குறித்து எழுதப்பட்டுள்ளது. அதனை அருவியின் இந்த பக்கத்தில் காணலாம்.


அடுத்தது,
சுண்டெலிக் கதைகள் - இது மூன்றாம் நிலை புத்தகம்.
எல்லாக் கதைகளிலும் சுண்டெலிதான் ஹீரோ. சுண்டெலி சூப் குடிக்கிறது...சிங்கத்தைக் காப்பாற்றுகிறது..பூனையோடு உரையாடுகிறது.
...பப்புவோடு பொழுது போக்குகிறது!

இக்கதைகள் பிள்ளைகளுக்கு சொல்வதற்கானவை...வாசிப்பதற்கானவை அல்ல” என்று அட்டையில் போட்டிருந்தாலும் பப்பு நான் வாசிப்பதையே விரும்புகிறாள்! (எனது கதை சொல்லும் திறமை அப்படி!)

முதல் கதையும் , மூன்றாம் கதையின் பாதியையும் இப்போது திரும்ப திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

புலி ஒன்று சூப் வைக்கும். தேங்காய், மாங்காய் எல்லாம் போட்டு சுவையாக வைத்திருக்கும். சூப் சுவையால் கவரப்பட்ட சுண்டெலி புலியை நைச்சியமாக பேசி குளிக்க அழைத்துச் செல்லும். புலி நீந்திக் கொண்டிருக்க எலி வந்து சூப்பை குடித்து விடும். போகுமுன், மரத்தின் மேலிக்கும் குரங்குகளிடம் ஒர் பாடலை கற்றுக் கொடுக்கும்.

தேங்கா மாங்கா சூப்பு
தெகட்டாத சூப்பு
புலி வச்ச சூப்பு
குடிச்சு பாரு டாப்பு

எங்கே பாடுங்கள் பார்ப்போம்? (சும்மா கிண்டலுக்கு... :-)) )

ஒரே ஒரு விமர்சனம் : சுண்டெலிக் கதைகளில், சுண்டெலியை யானை கிண்டல் செய்யும். ‘கடலில் குதித்து செத்து போகலாம் என்று நினைத்தது' என்று ஒரு வரி வரும். கிண்டல் செய்தால் பதில் கிண்டல் அல்லது வேறு மாதிரி கொடுத்திருக்கலாம். இதை கண்டிப்பாக பப்புவுக்கு நான் வாசிக்க மாட்டேன். நான் வாசிக்காததால் பப்புவுக்கு இது தெரியாமல் போகப் போவது இல்லை. ஆனால், இந்த வயதில் (3-7 வயதினருக்கான) புத்தகத்தில் இப்படி வருவதை தவிர்த்திருக்கலாம்.

இது ஒன்றைத் தவிர, மிகவும் ரசித்து வாசிக்கூடிய குழந்தைகள் விரும்பக்கூடிய புத்தகங்கள் - மெல்ல கற்போம் நூல்கள்!

Monday, February 08, 2010

கண்களுக்கு புலப்படாத புர்காக்கள்

மார்ச் - ஏப்ரல் மாதங்களில், ப்ளஸ் டூ பரீட்சைகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு பெரிம்மாவுக்கு அழைப்பு வந்துவிடும். வேலூர், திருப்பத்தூர் அல்லது சென்னைக்கு இல்லாவிட்டால் ஹோசூருக்கு போகவேண்டும். நானும் குட்டியும் அவுத்து விட்ட கழுதைகள்தான். குறைந்தது இருபது நாட்கள் - வீட்டின் அனைத்து சட்டங்களும் மீறப்படும். (டீச்சர் பசங்களுக்கு இதன் அர்த்தம் இன்னும் நன்றாக புரியும்.) டீச்சர் வீடுகளில் ஒரு சொல்லப்படாத ஒழுங்கு மறைந்திருக்கும். காலையில் டிவி பார்ப்பது என்பது பெரும்குற்றம். வீட்டுக்கு கெஸ்ட் வந்தா உடனே விளையாடக் கிளம்பக்கூடாது,ரூம்லே போய் நடிக்கணும்...சாரி படிக்கணும். ஆறு மணிக்கு மேலே தெருவிலே விளையாடக் கூடாது. (பப்ளிக் எக்சாம் வருதுன்னாதான் கரண்ட் கட் பண்ணுவாங்க) அப்படி கரண்ட் கட்டாச்சுன்னா, உடனே குதிச்சுக்கிட்டு தெருவுக்கு ஓடக்கூடாது.(அப்படியே போனாலும் திரும்ப கரண்ட் வந்ததும் ‘ஹே'ன்னு கத்தக்கூடாது) கரண்ட் வந்ததும் ஒழுங்கா வீட்டுக்கு வந்துடணும்...இன்னபிற. இவையெல்லாவற்றிற்கும் இந்த இருபது நாட்களில் விலக்கு அளிக்கப்படும். ஆயாவை, நானும் தம்பியும் கூட்டு சேர்ந்து ஏமாற்றுமளவிற்கு கொஞ்சம் வளர்ந்திருந்தோம். மேலும், 'ஒற்றுமையே பலமெ'ன்று அறிந்துமிருந்தோம்.

கைருன்னிசா ஆன்ட்டி - இதேபோன்ற ஏதோவொரு ஏப்ரல் மாத்தில்தான் எங்களுக்கு அறிமுகமானார். ப்ளஸ் டூ தேர்வுகள் நடக்கும் சமயம்,'இந்த வருஷம் எங்கே போடப்போறானோ' என்று பேசிக்கொள்வார்கள். பெரிம்மா, கைருன்னிசா ஆன்ட்டி,அன்னி - எல்லோருக்கும் விடைத்தாள் திருத்துவதற்கு ஒன்றாகவே அழைப்பு வரும். அருகிலிருக்கும் ஊர் என்றால் தினமும் அனைஅவ்ரும் ட்ரெயினிலோ அல்லது பஸ்ஸிலோ போய் வந்துவிடுவார்கள்.
கடைசி நாளில் எல்லோரும் சேர்ந்து பாட் லக் செய்வார்கள். அல்லது ஹோசூர்,சென்னை மாதிரியான ஊர்களில், பள்ளி வளாகத்திலோ அல்லது டீச்சர்ஸ் ஹோமிலோ தங்கி விடுவார்கள். ஒன்றாக ஷாப்பிங் செய்வது,, சினிமாவுக்கு போவதுமாகவும், ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிடுவதுமாக... அவர்களது கல்லூரி நாட்களை உயிர்ப்பித்துக்கொள்வார்கள். வீடெனும் கூடை மறக்கவும் முடியாமல் கழட்டவும் முடியாமல் சனி- ஞாயிறுகளில் வருவார்கள் அல்லது போன் செய்வார்கள். எனக்கும் தம்பிக்கும் உண்மையில் அப்போது ஜாலியாகத்தான் இருக்கும். ஆயாவுக்குத்தான் பெருங்கஷ்டம். ஆனால், பெரிம்மா வரும்போதும் ஜாலி. ஏனெனில், வரும்போது விளையாட்டுச் சாமான்கள்/துணிமணிகள் வாங்கி வருவார். கைருன்னிசா ஆன்ட்டியின் வீடு ஹவுசிங்போர்ட்க்கு வெளியே பி-கஸ்பா செல்லும் வழியில் இருந்தது. ஒரு பையன் மற்றும் ஒரு பெண். கைருன்னிசா ஆண்ட்டிக்கு சொந்த ஊர் ஊட்டி. எப்படியும் மாதமொரு முறை வீட்டுக்கு வந்துவிடுவார்கள், குடும்பமாக. அப்ரார் என் தம்பி வயதும், ரேஷ்மா அவனைவிட இரு வயது சிறியவளாகவும் இருந்தாள். அதனால் நாங்கள் ரூமுக்கு போய் படிக்கவேண்டிய அவசியம் இருக்க வில்லை. எங்கள் விளையாட்டு சப்தம் கேட்டதும் உமாவும் ஸ்ரீதரும் வந்துவிடுவார்கள். பின்பு மெதுவாக ஆஃப்ரினும் சேர்ந்துக்கொள்வாள். கீழே நாங்கள் விளையாடிக்கொண்டிருக்க பெரியவர்கள் பேசிக்கொண்டிருபபர்கள்.

ஆன்ட்டி வேலை செய்தது பெண்கள் மட்டும் படிக்கும் முஸ்லீம் பள்ளிக்கூடம். அங்கிளுக்கு ஆம்பூரிலேயே இருந்த ஆண்களுக்கு மட்டுமான முஸ்லீம் பள்ளியில் பணி. தலைமையாசிரியராதலால், ஊரில் அவருக்கு நல்ல மதிப்பிருந்தது.இருவருக்கும் சனிக்கிழமைகளில் பள்ளியிருந்தால் அப்ராரும், ரேஷ்மாவும் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். நாங்கள் ஒன்றாக விளையாடுவோம். சாயங்காலமானால் நானும் குட்டியும் அவர்களை கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு வருவோம். ரம்ஜானன்று ஆன்ட்டி பிரியாணி கொடுத்துவிடுவார்கள். பொங்கலன்று நாங்களும் பொங்கல், கரும்பு, வடை இத்யாதிகள். நான் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தபிறகு இதெல்லாம் குறைந்து போயிற்று. எப்போதும் மூன்று ட்யூஷன், ஸ்பெஷல் க்ளாஸ் - அப்புறம் தம்பி செஸ் காம்படிஷன் - அப்ரார் ஒன்பதாம் வகுப்பு என்று அவரவரும் தத்தமது வாழ்க்கையில் அவரவருக்கான ஏணிகளில் தொங்கிக்கொண்டிஒருந்தோம். பெரிம்மா, ‘பேப்பர் வேல்யூவேஷன் போகணும்' என்று சொல்லும்போது மட்டும் 'என்ன உங்க ப்ரெண்ஸ் கேங்க் கூட ஆரம்பிச்சுட்டீங்களா, இந்தவாட்டி என்ன சினிமா' என்று வம்பிழுப்பதோடு நின்றுவிட்டது கல்லூரி விடுதிக்குச் சென்றபின்.


ஒரு முறை லீவுக்கு வந்தபோது புத்தக அலமாரியில் புதிதாக ஏதோ துருத்திக்கொண்டிருந்தது. இழுத்துப்பார்த்தபோது ஒரு வாழ்த்தட்டை போன்று இருந்தது. “பெரிம்மா, என்னது இது? உருதுலே எழுதியிருக்கு....இது எங்கே கொடுத்தாங்க” என்ற போது பெரிம்மா, ”அங்கியே வை..கைருன்னிசா ஆன்ட்டிது ”என்றார். “அவங்களுது ஏன் இங்கே வந்திருக்கு? நல்லாசிரியர் விருதா என்ன? ஏன், அவங்ககிட்டேயிருந்து வாங்கி வச்சிருக்கீங்க..உங்களுக்கு குடுக்கமாட்டாங்கன்னு முடிவு பண்ணீட்டீங்களா” - என்று பெரிம்மாவை கேலி செய்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக, நான் வம்பிழுக்கும் சமயங்களில் சிரிக்கும் பெரிம்மா சிரிக்கவில்லை. ஆனால், சாப்பிடும்போது சொன்னார், 'அது அவங்க கல்யாணத்துக்கு யாரோ கொடுத்ததாம். அவங்க வீட்டுக்காரர் ஆண்ட்டியை டிச் பண்ணிட்டாரு..ப்ராப்ளம் நடந்து நடு ராத்திரிலே இங்கே வந்தாங்க. கேஸ் போடப்போறேன்னு என்னமோ சொன்னாங்க. மேரேஜ் ஆனதுக்கான ஆதாரம் ஒன்னுமில்லே. இது ஒண்ணுதான் மங்கை இருக்குன்னு, ஏதாவது கேஸ் போடணும்னா தேவைப்படும்னு இங்கே கொடுத்திருக்காங்க'. ஒரு வாரம் இங்கேதான் இருந்தாங்க. அப்புறம், ஊட்டிக்கு போயிட்டாங்க'. அப்போது அப்ரார் கர்நாடகாவில் டாக்டர்க்கு படித்துக்கொண்டிருந்தான்.


'ஆனா, ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க, அழறாங்க.'பாவம்,அவங்களாலே அந்த துரோகத்தைத்தான் தாங்க முடியல. எப்படி மங்கை,எனக்கு தெரியாம இந்த ஆளு..இவ்வளோ நாளா..எனக்குக் கொஞ்சம் கூட சந்தேகமே வரலையே'- ன்னு அழறாங்க. ரொம்ப கஷ்டமா இருந்தது. 'எப்படின்னே தெரியல...துத்திபேட்லே அந்த வீடு இருக்காம். அது ஒரு பெருக்கற லேடி..முஸ்லிம் லேடிதானாம். ஆனா அவங்களுக்குத்தான் அது சாதாரணம் இல்ல...அதனாலே யாராலேயும் ஒன்னும் சொல்ல முடியல...எங்க அக்கா வீட்டுக்காரங்கல்லாம் தானே இருக்காங்க...யாருமே இப்படி இல்லையே மங்கை...ன்னு அழுறாங்க. என்ன சொல்றது? அவரோட அண்ணாங்கள்ளாம் வேலூரிலேதான் இருக்காங்க. ஆனா, யாராலேயும் ஒண்ணும் கேக்க முடியலை. கேட்டாலும், குர்ரான்லேயே சொல்லியிருக்குன்னு சொல்றாங்களாம்' என்றார். ‘நான் உன்கூட வந்து இருக்கேன், மங்கைன்னு சொல்றாங்க. அப்ரார் இருக்கான், பொண்ணு ஸ்கூல் பைனல். அவங்களுக்காகவாவது நீ கூட இருக்கணும்னு சொல்லியிருக்கேன். அவனுக்கு ஒரு வருஷத்துக்கு ஆறு லட்சம் கட்டனும். இது தனியா வந்துட்டா பசங்க பாவம்', என்றார் மேலும்.

அந்த அங்கிளைக் கடைசியாக பார்த்தபோது நரைத்துபோயிருந்த அவரது தலைமுடிதான் நினைவுக்கு வந்தது. நல்ல உயரமான தோற்றம். தடிப்பான குரல்.அவரை அப்படி என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அதுவும் ஒருவரை பற்றி நாம் மரியாதையாக, ரொம்ப நல்லவிதமா மனதில் பதித்துவிட்டு அவரைப் பற்றி வேறுமாதிரி கேள்விபட்டால் நம்பமுடியாமல் ஜீரணிக்க முடியாமல் இருக்குமே...அதுபோல உறுத்திக்கொண்டிருந்தது. அதன்பிறகு வேற எதுவும் கேட்கவில்லை.ஆனால், இஸ்லாம் முறைப்படி 'தலாக்'என்று மூன்று முறை சொல்லிவிட்டால் விவாகரத்தாகிவிடுமென்று மட்டும் கேள்விப்பட்டிருக்கேன். விடுதிக்கு வந்து மசூதாவிடம் கேட்டபோது ‘அப்படி உடனே சொல்ல முடியாது, ஆனா சாட்சி வைச்சு சொல்லணும்' என்றாள்.

அதற்கு அடுத்த லீவுக்கு வந்தப்போது ஆன்ட்டியும் அங்கிளும் ஒன்றாக இருப்பதாகவும், மூன்று அடுக்கு மாடி வீட்டை விற்றுவிட்டு வேற ஒரு வாடகை வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும், மேலும் அங்கிள் விஆரெஸ் வாங்கி விட்டதாவும் தெரிய வந்தது. அதோடு ஆண்ட்டியின் நகை, வீஆரெஸ் காசு எல்லாம் அந்த பொம்பளைக்கே கொடுத்துட்டாதா ஆண்ட்டி புலம்பினாங்களாம். 'இவங்க சம்பாத்தியத்துலேதான் குடும்பம்.பசங்க படிப்பு செலவு மட்டும் அவர் கொடுப்பாராம். ஆனா பேருக்கு ஹஸ்பெண்ட்டா வீட்டுலே இருக்கார்ன்னும் சொன்னாங்க'என்றார் பெரிம்மா. 'ரேஷ்மாவுக்கும் அதே மெடிக்கல் காலேஜ்லே சீட் கிடைச்சுடுச்சு. அவதான் பெரிய சப்போர்ட்டா இருக்காளாம், அப்பாகிட்டே சண்டை போட்டு கண்டிஷன்ல்லாம் போடுதாம். அப்புறம், கைருன்னிசாகிட்டே, எனக்கு ஹாஸ்டல் போகும்போது பொட்டி தூக்கவாவது அந்தாள் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இரும்மான்னு சொல்லுது, மங்கை' என்று ஆன்ட்டி சொன்னதாகவும் சொன்னார் பெரிம்மா.


இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் புதுக்கல்லூரியின் தர்ஹாவில் அப்ராருக்கு நிக்காஹ் நடந்தது. நானும் பெரிம்மாவும் சென்றிருந்தோம். ஆண்ட்டியின் அக்காக்கள், அண்ணிகள் எல்லோரும் ஓடி வந்து பெரிம்மாவின் கையை பிடித்துக்கொண்டார்கள். ஆண்ட்டியின் அக்காக்கள் அனைவருக்கும் பெரிம்மாவை நன்றாகத் தெரிந்திருந்தது. போனில் முன்பு பேசியிருப்பதாக பெரிம்மாவும் சொல்லியிருக்கிறார். ஒரு அக்கா அடிக்கடி ஆண்ட்டியின் வீட்டிற்கு வந்து போவார். ஆண்ட்டியின் அக்காக்கள் அனைவருமே டீச்சர்கள் என்றார் பெரிம்மா.ஒரு பாட்டி எங்களை விசாரித்தபோது, 'இவங்க மங்கை டீச்சர். அக்கா ப்ராப்ளம்லே இருந்தப்போ பலம் கொடுத்தவங்க',என்று அந்த அக்காக்களிலொருவர் சொன்னது காதில் விழுந்தது.அப்புறம் எல்லாம் சாப்பிட போய்விட்டோம். ஆன்ட்டி மிகவும் பிசியாக இருந்தார். மணப்பெண் உமராபாத்தை சேர்ந்தவர். அபரார் வேலை செஞ்ச ஹாஸ்பிடல் ஓனரின் பெண்ணாம். அவரே வந்து விசாரித்துவிட்டு திருமண ஏற்பாடுகள் செய்தாராம்.

நிக்காஹ்-வின்போது பெண்கள் அனைவரும் ஒரு மண்டபத்தில் குழுமியிருப்பார்கள். மைக்கில் உருதுவில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். வருபவர்கள் அனைவரும் மணப்பெண்ணிடம் சென்று முக்காட்டை உயர்த்திவிட்டு நலம் விசாரிப்பார்கள். கழுத்தில் ஆபரணங்களை தூக்கிப் பார்ப்பார்கள். அனைவரின் உடைகளும் சூப்பராக கலர்புல்லாக இருக்கும்.சம்க்கி புடவைகள், எம்ப்ராய்ர்டரி புடவைகளென்றும், கை முழுக்க மெஹ்ந்தி வைத்தும் ஹம் ஆப்கே ஹைன் கோன் படத்தின் பாடல் காட்சி நினைவுக்கு வரும். அங்கே இருக்கும் ஒரே ஒரு ஆண், கேபிளை கையில் சுற்றியபடி சுற்றி வரும் வீடியோ கவரேஜ்காரர் மட்டும்தான். போட்டோவெல்லாம் ஒரு உறவுக்காரபெண் எடுத்துக்கொண்டிருந்தார். திருமணம் முடிந்துவிட்டதென்று மைக்கில் ஏதோ சொன்னதும் உணர்ந்துக்கொள்வார்கள். பிறகு, நேராக பிரியாணிதான்.


உணவுக்குப் பிறகு, மணமகன் உறவினர்களை சந்திக்க வருவார் போல. காத்திருந்த போது, 'எங்க உங்க மாப்பிள்ளையை காணோமெ'ன்று ஆன்ட்டியிடம் கேட்டார் ஒருவர். அங்கிளின் அண்ணாவாம். வேலூரில், கல்வித்துறையில் இருக்கிறாராம். 'நீங்கள்ளாம்தான் போய் தேடி கூப்பிட்டு வரணும், அவ்ரை எதுவும் கேக்க மாட்டேங்கறீங்க' என்று ஆதங்கத்தை கொட்டினார் ஆன்ட்டி. அப்ரார் வந்ததும் ஆண்ட்டி அவனை தழுவிக்கொண்டார்.ஆன்ட்டி, அப்ராரைக் குறித்து பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். கூடவே ரேஷ்மாவைக் குறித்தும். ரேஷ்மாதான் வயதுக்கு மீறிய பக்குவத்துடன் நடந்துக்கொள்வதாகவும், அப்பாவை உருட்டி மிரட்டி வேலை வாங்குவதாகவும், ' என்ன கேட்டாலும் அந்த ஆளுக்கு உறைக்க மாட்டேங்குதே' என்று அங்கிளைக் குறித்தும் சொல்லிவிட்டு பிசியானார். திரும்பி வரும்போது, ஆன்ட்டியின் முகத்தில் ஒரு வித வலியிருந்ததென்று பெரிம்மா சொன்னார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு ரேஷ்மாவின் நிக்காஹ்-வின் போது ஆன்ட்டியைப் பார்த்தேன். வெளியில் காரில் அங்கிள் அமர்ந்திருந்தார்,உள்ளே நடப்பதற்கும் தனக்கும் ஒன்றும் சம்பந்தமில்லை என்பது போல. பெரிம்மா பார்த்ததும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக்கொண்டார்கள். நாங்கள் செல்வதற்குள் நிக்காஹ் முடிந்திருந்தது. ரேஷ்மா கூட படித்தவனாம். ஒன்றாக ட்ரெயினில் வரப்போக காதலும் வந்திருக்கிறது. 'ஆன்ட்டி, ஆன்ட்டி' என்று கைருன்னிசா ஆன்ட்டியிடம் போனில் பேசுவானாம். பின்னர்
அவனது குடும்பத்தைச் சந்தித்து நிக்காஹ் வரை வந்திருக்கிறது. இந்தத் திருமணத்திலும் அங்கிளின் பங்களிப்பு ஒன்றும் இல்லை. அப்ரார், குழந்தை -குடும்பம் -ப்ராக்டிஸ்- ஷேர் மார்க்கெட் என்று பிசியாகி விட்டான். கல்யாணத்திற்கு பிறகு அவனது பேச்சுக் கூட மாறிவிட்டதாக சொன்னாராம் ஆன்ட்டி. 'ஒழுங்கா டாக்டர் வேலையை பார்க்காம ஏன் ஷேர் மார்க்கெட்லேலாம் போகணும் 'என்று பெரிம்மாவை வேறு பஞ்சாயத்துக்கு அழைத்திருக்கிறார்.

லிஃப்டிற்காக காத்திருந்த நேரத்தில், எதிரில் வந்த அப்ரார் தன் உடையைக் குறித்துக் ஆன்ட்டியிடம் கேட்க, ‘எவ்ளோ செஞ்சாலும் நன்றி இருக்கணும்..அது இருக்க மாட்டேங்குது' என்று முணுமுணுத்தார்.

ஆன்ட்டி வாங்கிக் கொடுத்த உடையாம் அது. வீட்டிற்கு திரும்பி வரும்போது பெரிம்மா சொன்னார், ‘அப்ரார் அவங்கப்பாக்கு சப்போர்ட் செஞ்சு பேசறானாம். அவர் செய்றது சரிதான், குர்ரான்லேயே சொல்லியிருக்கு, உனக்குத் தெரியாதா...நீதான் அக்செப்ட் பண்ணி போகணும்னு சொல்றானாம். படிக்கற வரைக்கும், 'அம்மி அம்மின்னு' சொல்லிக்கிட்டு இப்போ என்ன சொல்றான் பாரு, எனக்கே புத்தி சொல்றான்னு கைருன்னிசாக்கு ரொம்ப மனசு கஷ்டம்' .

இளந்தாடியும் குழந்தை முகம் மாறாத அப்ரார்..., என்னிடம் சைக்கிள் பழகிக்கொண்ட அப்ரார்...,
ரேஷ்மாவின் கைப்பிடித்து எங்கள் வீட்டுக்கு வரும் அப்ரார்....
துரோகமிழைக்கப்பட்டதை தாங்கிக்கொண்ட தருணத்தைவிட இதைத்தாங்கிக்கொள்ளவே ஆண்ட்டி அதிக சிரமப்பட்டிருப்பாரென்று எனக்குத் தோன்றியது. ஆனால் அப்படி இல்லை, துரோகங்களை தாங்கிக்கொள்ள அவர் பழக்கப்பட்டுவிட்டார் என்பதே உண்மை .

காந்தா அத்தைக்கும், கைருன்னிசா ஆன்ட்டிக்கும் அதிக வேறுபாடுகள் இல்லைதான்.
காந்தா அத்தையாவது தண்டனை கொடுப்பதாக எண்ணி விலக்கிவிட்டு விலகியும் இருந்தார்.
ஆனால், இருவரும் சமூக அழுத்தங்களுக்காக, அந்தஸ்துக்காக, குழந்தைகளுக்காக வாழ்ந்து தீர்த்தவர்கள்.


ஒரு நிமிடம் அவர்களிடத்தில் என்னை வைத்து யோசிக்கிறேன்.

சமூக அழுத்தங்களுக்காக...குடும்பத்துக்காக...குழந்தைக்காக...காம்ப்ரமைஸ்?


சில புர்காக்கள் கண்களுக்கு தெரிகின்றன...சில புர்காக்கள் கண்களுக்கு தெரிவதில்லை!


ஜமாலன் அவர்களின்
இந்த இடுகையை வாசித்தேன். அதனோடு நூல் பிடித்த நினைவுதான் இது! இன்னும் கதிரவன் ஆன்ட்டியும், தூக்கு மாட்டிக்கொண்ட தஸ்தகீரின் ம்னைவியும், ஜரினாவும், மசுதாவும், ஃபாத்திமாவும், தற்கொலை செய்துக்கொண்ட அர்ஷியா(வாக மாறிய வித்யா) அக்காவும் நினைவிலாடியபடி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் விரைவில் பகிர்கிறேன்.

Saturday, February 06, 2010

A page from my teenage diary

இன்னைக்கும் யாரோ என்னோட சைக்கிள்லே ஸ்டிக்கர் ஒட்டி வச்சிருந்தாங்க. ஆட்டின் ஸ்டிக்கரும் க்யூபிட் ஸ்டிக்கரும். அன்னைக்கு மாதிரியே லேடீஸ் பார்லேயும் ஹாண்டில் பார்லேயும் . போன வாரம் வெள்ளிக்கிழமை ஒரு பேப்பரை செருகி இருந்தது. அதுலேயும் இந்தே ஹாட்டின்தான்.நல்லவேளை,யாரும் பாக்கறதுக்கு முன்னாடி எடுத்து போட்டுட்டேன். வீட்டுலே சொல்லலமா வேணாமான்னு வேற தெரியல. ஏற்கெனவே ஆயா வேற என்னை சந்தேகப்படற மாதிரி தெரியுது. அன்னைக்கு ஜூனைத், பிரபு, ரேணு, சபீனா-லாம் வீட்டுக்கு வந்துட்டு போனப்போ வேற, ஒரு மாதிரி சொன்னாங்க. 'எதுக்கு உனக்கு படிக்கற வயசுலே இவ்ளோ ஃப்ரேண்ட்ஸ்'- ன்னு. எனக்கு ஸ்கூல் ஃபுல்லா ப்ரெண்ட்ஸ் இருக்காங்க..அப்புறம் ட்யூஷன். அதுவும் அன்னைக்கு பார்த்து மேத்ஸ் ட்யூஷன் சீக்கிரம் முடிஞ்சுடுச்சு. 'எங்க வீட்டுக்கு வாங்க'ன்னு நாந்தானே கூப்பிட்டேன். அதுவுமில்லாம,'உன் ப்ரெண்ட்ஸ் யாரை வேணா வீட்டுக்கு கூப்ட்டு வா'ன்னு தானே பெரிம்மா சொல்லியிருக்காங்க.

ஆனா, ஆயா கொஞ்சம் மாறிட்ட மாதிரி தெரியுது. நான் கிச்சன் பால்கனிலே உட்கார்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்டு இருந்தா, (சுண்டலா இருந்தா காக்கா-க்கு போடறதுக்கு)
இல்லன்னா தெரு பால்கனிலே தலை ஆத்திக்கிட்டிருந்தா பின்னாடியே வந்து நிக்கறாங்க. முதல்ல நான், அயர்ன்காரம்மாவைக் கூப்பிடறதுக்குதான் நிக்கறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன், அவங்க எட்டி எட்டி பாக்கறதைப் பார்த்து. ஆனா, அப்புறம்தான் புரிஞ்சது...அவங்களை தேடறதுக்கு இல்லன்னு. அன்னைக்கும் ஜன்னல்கிட்டே இருக்கற பெட்லே உட்கார்ந்து கதை படிச்சுக்கிட்டிருந்தப்போ ஆயா பக்கத்துலே வந்து ஏன் ஜன்னலை சார்த்திட்டு போனாங்க..இவங்க பண்றதெல்லாம் புதுசா இருக்கு...அன்னைக்கு நான் பாத்ரூம்லேருந்து ரூம்க்கு வந்தப்போ ஆயா என்னோட நோட்டெல்லாம் புரட்டி பார்த்துக்கிட்டு இருந்தாங்க. செக் பண்றாங்களா?! எனக்கு கோவம் கோவமா வந்துச்சி..ச்சே..இவங்க ஏந்தான் இப்படி இருக்காங்களோ!அப்புறம் இந்த சைக்கிள்லே லெட்டர் இருக்கறதை சொன்னா அவ்வளவுதான்! என்னை என்ன நினைச்சுப்பாங்க..பேசாம கண்டுக்காம விட்டுடலாம். சந்திரா கூட சொல்லியிருக்கா,அம்மால்லாம் ஃப்ரீயா விட்டாகூட ஆயாங்கதான் இப்படி டார்ச்சர் பண்ணுவாங்கனு. ஆனா, அனு,ரேணுகாக்குல்லாம் தெரிஞ்சா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்களே...ஏற்கெனவே எல்லோரும், யார் யாருக்கு ஆள் இருக்குன்னு வேற கிண்டல் அடிக்கறாங்க. ம்ம்..நான் தான் யாரைய்ம் லவ் பண்ணலையே..சே..அது எப்படி வரும்..நான் எங்க வீட்டைத்தான் லவ் பண்றேம்ப்பா...முதல்ல லவ் எப்படி வரும்...படிக்கற பசங்களுக்கெல்லாம் லவ் வராதுன்னு கெஜா அம்மா, சுஜா ஆன்ட்டி, ஆயால்லாம் பேசும்போது சொல்லிக்கிட்டாங்களே. கெஜா இந்த வருஷம் பப்ளிக்.

ஆனா, இந்த பேப்பர் எப்போ வைக்கறாங்கன்னுதான் தெரியலை..யாராயிருக்கும்?



ஜெயஸ்ரீ, அனு, 'பல்லு' கவிதா - நாங்கல்லாம் ப்ரேயர் முடிஞ்சு க்ளாசுக்கு போறப்போ பேசிப்போம்.அப்போ என்ன சொன்னா? ஜெயஸ்ரீயை சைக்கிள்லே யாரோ ஃபாலோ பண்றாஙக்ன்னு வீட்டுலே சொன்னதுக்கு அப்புறம் அவங்கம்மா அவளை ரொம்ப கண்காணிக்கறா மாதிரி ஃபீல் பண்றான்னுதானே. அதுவும் கதவை சாத்திக்கிட்டு படிச்சா அப்போப்போ வந்து திறந்து பார்க்கிறாங்களாம். அவ திட்டுனப்புறம் அவங்கம்மா கதவை திறக்கறது இல்லேயாம். ஜன்னலேர்ந்து மட்டும் எட்டி பாக்கறாங்களாம். அப்போ அவ சொன்னதுதான் - செம ஃபன்! 'அவங்க எபட்டி பாக்கறப்போ, நான் வேற ஏதாவது பண்ணிக்கிட்டிருந்தா...ஒரு வேளை ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டிருந்தா' அப்படின்னு! ஆனா, அவ சொல்றதும் சரிதானே...ஆயாவும் என்னை சந்தேகப்படற மாதிரி...கண்காணிக்கற மாதிரிதான் தெரியுது...ஆனா,பெரிம்மா இருக்கறதாலே தப்பிச்சேன். சங்கீதாவை அவங்கம்மா சந்தேகமே படமாட்டாங்களாம். ஏன்னா, அவ எல்லாத்தையும் போய் அவங்கம்மாக்கிட்டே சொல்லிடுவாளாம்,ஒன்னுவிடாம. அதனலே அவங்கம்மா அவளை கண்காணிக்கவே மாட்டாங்களாம்.

நானும் ஆயாக்கிட்டே அப்படி சொல்லத்தான் டிரை பண்ணேன். எக்சாம் நடந்தப்போ ஒரு பையன் டெய்லி என்னை ஃபாலோ பண்ணான். நித்யா சொன்னா, ஒருத்தன் உன்னை ஃபாலோ பண்றானான்னு தெரிஞ்சுக்கணும்னா, நீ போகும்போது அங்கங்கே நில்லு, நீ நிக்கறப்போல்லாம் அவனும் நின்னான்னா அவன் உன்னைதான் ஃபாலோ பண்றான்னு. நானும் அன்னைக்கு அப்படி பண்ணேன். அப்புறம் டெலிபோன் எக்ஸ்சேஞ் கிட்டே நின்னப்போதான் திடீர்னு ஐடியா வந்தது. அதுக்கு நேரா ஒரு போலிஸ் ஸ்டேஷன் இருந்துச்சு. என்னை ஃபாலோ பண்றியான்னு கேட்டேன், அவன்கிட்டே. ஸ்கூல்லே பார்த்து இருக்கேன், அந்த மூஞ்சியை. ஆமான்னு சொன்னான். போலீஸ் ஸ்டேஷ்ன்லே சொல்லிடுவேன்னு சொன்னதும் சைக்கிள்லே டெலிபோன் எக்ஸ்சேஞ் சந்துக்குள்ளே போய்ட்டான். இத்தனைக்கும் அது ரூரல் போலிஸ் ஸ்டேஷன். எங்க மேல் வீட்டுத் தாத்தா அங்கே தான் வேலை செய்றார். எனக்கு ரொம்ப சிரிப்பா வேற வந்துது...ஆனா, அப்படி கேக்க எப்படி தைரியம் வந்துதுன்னு தெரியலை! ஆனா, இதை நான் ஆயாகிட்டே சொன்னதும் அவங்க என்னை பாராட்டிதானே இருக்கணும். ஆனா, என்மேலே இன்னும் சந்தேகம் பட்ட மாதிரிதான் தெரிஞ்சது. அதனாலே, நான் ஏன் ஆயாகிட்டே சொல்லனும்? என் ப்ரெண்ட்ஸ் கிட்டே நான் என்ன வேணா பேசிப்பேன்.

அன்னைக்கு பெரிம்மா பேங்க்குக்கு போய் டிடி எடுத்துட்டு வரசொன்னப்போ கேஷியர் அண்ணா என்னை பார்த்து சிரிச்சாரே...அவர் எங்க தெருவிலேதான் இருக்கார். அவரை நான் நிறைய வாட்டி பார்த்துருக்கேன்,ஷட்டில் விளையாடும்போது. அவங்க கோர்ட்லே விழுந்துடுச்சுன்னா எடுத்து போடுவார். அவர் எஸ்பிஐலேதான் வேலை செய்றார்ன்னு அப்போதான் தெரிஞ்சது. போஸ்ட் ஆபிஸ் போயிருந்தப்போ ஒரு ஆன்ட்டி என்னை பார்த்து சிரிச்சாங்க. நீதானே சந்தனமுல்லைன்னு கேட்டாங்க. 'டிவிலே பார்த்தேன்'ன்னு சொன்னாங்க. எனக்குதான் யாருன்னு தெரியலை.. வீட்டுலே ஷ்யாமும் பவானியும் பேசிக்கிட்டிருப்பாங்கன்னு.சொன்னாங்க. அப்போதான் தெரிஞ்சது -ஷ்யாமோட அம்மான்னு. பவானி ஷ்யாமோட தங்கச்சி.ஸ்கூல் ஆனுவல் டேலே நான் பேசினதை பார்த்தாங்களாம். அதை கேபிள்லே போட்டாங்க போல. அவங்கம்மா டாக்டர். நல்லா பேசினாங்க. ஆனா நான் வீட்டுலே சொல்லல..ஆயா திட்டுவாங்க..தெரியாதவங்க கூட என்ன பேச்சுன்னு!


ஷ்வேதா சொல்றா..ஆயாவை எல்லாம் கூட சமாளிச்சுடலாம்ப்பா...ஆனா அண்ணாங்கதான் ரொம்ப பயமாம். ஷ்வேதாவும் கவிதாவும் ஒரே ஸ்கூல். என் ட்யூஷன் ப்ரெண்ட்ஸ். ஷ்வேதா, ஸ்பெஷல் கிளாஸ் முடிச்சுட்டு கவிதா வீட்டுக்கு வந்துட்டு போனாளாம். வீட்டுக்கு போய் தண்ணி குடிக்க தம்ளரை எடுக்கும்போது அவங்க அண்ணா வந்து கையை பிடிச்சுக்கிட்டு 'எங்கே போனேன்னு சொல்லுன்னு'. 'குடிச்சுட்டு சொல்றேன், விடுண்ணா''ன்னு சொன்னாக்கூட விடலையாம்.'சொல்லிட்டு குடி'ன்னு கையை விடவே இல்லையாம். 'தண்ணி தாகம் எடுக்குது..குடிச்சுட்டு சொல்றேன்'னு சண்டை போட்டுக்கிட்டுருந்தப்போ அவங்கம்மா வந்ததும்தான் விட்டாங்களாம். கவிதா வீட்டுக்கு தான் போய்ட்டு வரேன்னு சொன்னப்புறம்தான் விட்டாங்களாம். நல்லவேளை எனக்கு அண்ணாங்க யாரும் இல்ல.ஆனா ஆயாதான்! ச்சே..நான் வேற வீட்டுலே பொறந்து இருக்கலாம். ஐரின் ஆண்ட்டி அமெரிக்கா போய்ட்டு வந்தாங்க இல்லே. அவங்க வீட்டுக்கு வந்தப்போ சொன்னாங்களே...'அமெரிக்காலேல்லாம் அம்மா அப்பா பசங்களை கண்டுக்கவே மாட்டாங்களாம்'. அவங்க இஷ்டத்துக்கு இருப்பாங்களாம். அப்புறம் பதினாறு வயசானா தனியா வீடெடுத்து போய்டுவாங்களாம். எனக்குக்கூட ஆசையா இருக்கு....


நானும் நல்லா படிச்சு தனியா எங்கியாவது வேலைக்கு போவேன்...அப்போ எனக்கும் நிறைய ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. ஜாலியா இருக்கும். இவங்க யாருக்குமே அட்ரஸ் தரவே மாட்டேன். நான் மட்டும் போன் பண்ணி பேசுவேன், ஆனா என் அட்ரசை சொல்லவே மாட்டேன். அப்போ, இவங்க எல்லோரும் என்னை தேடி பீல் பண்ணனும்...

குறிப்பு 1 : உண்மையில், இது ஒரு பக்கமல்ல...(எனது 14-15 வயதிருக்கும்போது என் வசமிருந்த) டயரியின் ஒரு சில பக்கங்களின் தொகுப்பு. 90களில் டீனேஜராக இருந்தால் பொதுவாக இந்த அனுபவங்கள்/ஃப்லீங்ஸ் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இப்போல்லாம் அம்மாக்கள்/ஆயாக்கள்/அண்ணாக்கள் மாறியிருக்கிறார்களாவென தெரியவில்லை - டீனேஜர்களும்தான்!

குறிப்பு 2
:
முத்துலெட்சுமி, அம்பிகா அக்கா, ஷ்ரேயா, சின்ன அம்மிணி - இவர்களின் டீனேஜ் டயரியின் ஒரு சில பக்கங்களை (விருப்பமிருந்தால் ) பகிர அழைக்கிறேன்.

Thursday, February 04, 2010

சினேகாவை ...

அனுப்பி வைக்கறீங்களா.... எங்க வீட்டுக்கு ஆஷிர்வாத் ஆட்டாவோட, ப்ளீஸ்?!

Tuesday, February 02, 2010

இ...இந்தியா, இண்டிபெண்டன்ஸ்..

இது குடியரசு தினத்தன்று பப்பு வரைந்தது. மாடலுக்கு எதையும் கொடுக்கவில்லை. முதலில் வெர்டிக்கலாக ஆரஞ்சை தீட்டிவிட்டு இப்படிதானே இருக்கும் என்று கேட்டாள். விட்டால் இத்தாலி கொடியை வரைந்துவிடுவாளோ என்று படத்தைக் காட்டியதும் மீதியை தீட்டினாள். அப்புறம் சக்கரத்திற்கு இடமில்லாததால் தனியாக உருண்டுக் கொண்டிருக்கிறது. காந்தி தாத்தா....மன்னிச்சுடுங்க!



i எழுத்தில் இ இந்தியா, இண்டிபெண்டன்ஸ், இக்லூ, ஐஸ்க்ரீம், இன்செக்ட்ஸ் என்றாள்.
ஐஸ்க்ரீம் கோன் முதலில் ரஃபாக வரைய சொன்னேன். பின்னர் அதையே பெரிதாக இந்தத் தாளில் வரைந்து 'டிசைன்' செய்தாள். ஐஸ்க்ரீமிற்கு முதலில் பஞ்சு ஒட்டுவதாக நினைத்தோம். அவளுக்கு இந்த பொடி மேலே ஒரு கண். ஒட்டிவிட்டி தட்டுவதிலேயே விருப்பமாக இருந்தாள்.



இது இக்லூ. புத்தகத்தை பார்த்து வரைந்தது. அதன்மேலேயே பஞ்சை எடுத்து ஒட்டினாள்.

Monday, February 01, 2010

பொண்ணு வளர்க்கறதுக்கும் பையன் வளர்க்கறதுக்கும்....

மூன்று வயதில் எனக்கு விளையாடக்
கிடைத்தன சிக்-சா படப்புதிர்கள்.
தம்பிக்கு மூன்று வயதில் மூன்று சக்கர சைக்கிள்.
வாட்டர் கலர், பெயிண்டிங் புக், க்யூப் -களோடு பொழுது கழிந்தது
ஐந்து வயது வரை.
பேட்டரி கார், ரேஸ் கார்,பஸ், ட்ரக் -களோடு தூங்கினான்
தம்பி.
பிறந்தநாள்கள் ஒவ்வொன்றும் எனக்குத் தந்துவிட்டு போயின
ஃபேரி டேல் புத்தகங்கள்,
நீண்ட தலைமுடி கொண்ட பொம்மைகள்
மற்றும்
மட்பாண்டங்களோடு கேஸ் அடுப்பு.
தம்பியின் பிறந்தநாள்கள் கொண்டு வந்தன
ரிமோட் கார்கள், ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் மற்றும் பைக்குகள்.
எனக்கு ரிங்பால் வாங்கியபோது
அவனுக்குரியதாயிற்று மட்டைபந்தும் கால்பந்துகளும்.
கண்காட்சிகளில்
கலைடாஸ்கோப்பும், அலுமினிய சமையல்செட்டும்
என்னை வந்தடைய
இரட்டைகுழல் துப்பாக்கியும், காமிராவும்
அவனுக்குரியனவையாகின.

இவை தவிர,
ஒன்றாய் விளையாட செஸ்ஸும் கேரமும் இருந்தாலும்
'நான் சொல்றா மாதிரி அடிக்கணும்' என்ற கண்டிஷனோடே
அமைந்தது கூட்டணி.
டூத்பிரஷ்களோ பென்சில் பாக்ஸ்களோ
வாங்கி வந்தது எதுவாயினும்
இளஞ்சிவப்பு நிறமே என்னுடையதாயிற்று.
இளஞ்சிவப்பு நிறம் தவிர்த்தது அவனுக்குரியது.
ஆண்டு விழாக்களில்
பாரதியார் வேடமும் கண்ணன் வேடமும்

அவனுக்குக் கிட்ட
பாரதமாதாவும் ஔவையார் வேடமும்
நான் தாங்கினேன்.

‘ரெண்டு பசங்களை வச்சிக்கிட்டு தொல்ல தாங்கல டீச்சர்,
பொண்ணுங்கள பெத்திருந்தா நிம்மதியா இருந்திருக்கலாம், அதுங்க
பாட்டுக்கு வேலையை பார்த்துக்கிட்டு இருந்திருக்கும்'

அலுத்துக்கொண்ட கீழ்வீட்டு ஹரிஷ் அம்மாவிடம்
சொல்லிக்கொண்டிருந்தார் அம்மா
'ஆமாம்மா,பொண்ணு வளர்க்கறதுக்கும்
பையன் வளர்க்கறதுக்கும்
நல்லா டிஃபரன்ஸ் தெரியும்' !!

Friday, January 29, 2010

வம்சியின் புத்தக வெளியீடு : இடமாற்றம்

பைத்தியக்காரன் மற்றும் மாதவராஜ் அவர்களின் பதிவுகளில் தெரியப்படுத்தி இருந்த வம்சியின் புத்தக வெளியீடு கீழ்கண்ட இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சி நடக்கவிருந்த புக்பாயிண்ட்டில் தீப்பிடித்து பல லட்சம் புத்தகங்கள் அழிந்துவிட்டதாக மாதவராஜ் அவர்களின் இடுகை கூறுகிறது.

இடமாற்றம் குறித்து தேவையானவருக்கு செய்தி சென்றடையும் பொருட்டு :

சனிக்கிழமை (30.1.2010) மாலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

தீபிகா செண்டர்
22, டெய்லர்ஸ் சாலை
கீழ்ப்பாக்கம் கார்டன்
(ஈகா தியேட்டர் பக்கத்துச் சந்து)
சென்னை

ஞாயிறு (31.1.2010) காலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

இக்‌ஷா மையம்
பாந்தியன் சாலை
(மியூசியம் அருகில்)
எக்மோர்

இதனை வாசிக்கும் நண்பர்கள், தங்களுக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த இடமாற்ற விபரத்தைத் தெரியப்படுத்தி உதவுங்கள்.

பாப்பின்ஸ்

அவளது கன்னத்தையும் எனது கன்னத்தையும் வருடிவிட்டு "ஸ்மூத்தா இருக்கீங்கம்மா' என்பாள்.
பின், என்னையும், 'ரஃபா ஸ்மூத்தா பாரு' என்று பார்க்கச் சொல்லுவாள். நானும் வருடி விட்டு
'ஸ்மூத்தா இருக்கே' என்பேன்.

'நான் உங்களுக்கு மட்டும் தான் ஸ்மூத்தா இருப்பேன்மா, வர்ஷினிக்கு ஸ்மூத்தாவே இருக்க மாட்டேன்'

நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் பப்பு! :-)




பப்பு சொன்ன உடனே அவளுக்கு அதை செய்துவிட்டாலோ அல்லது கொடுத்துவிட்டாலோ
என் கால்களை கட்டிக்கொண்டு சொல்வாள்.

'அம்மா, நீங்க குட்'மா' (குண்டு'மா என்று மாற்றி படிப்பவர்களுக்கு கருடபுராணத்தின் படி எண்ணெய் சட்டிதான்!)

எனக்குள் இருந்த கசடுகள் அந்த நிமிடத்தில் உதிர்ந்து போயின!

அகஆழின் பதிவிலிருக்கும் முரண் பற்றிய கவிதையும் அந்த தருணத்திற்கு நெருக்கமானவையே!




'வெரிகுட் பப்பு, பெட்டை ஈரமா ஆக்கவே இல்ல, நீ ராத்திரி எழுப்பினே இல்ல பாத்ரூம் போறதுக்கு' - என்பேன் காலையில்.

வர்ஷினி?

இதுதான் மில்லியன் டாலர் கொஸ்டின்.

'குட்' என்று சொல்லிவிட்டால் பப்புவுக்குள் துளிர் விட்டிருக்கும் பொறாமை கை வழியே நீளும். கண்கள் வழியே நீரைக் கொட்டும். வர்ஷினி 'பேட்' என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான் - தொலைந்தீர்கள். பப்புவுக்குள் இருக்கும் வர்ஷினியின் தோழி வெகுண்டெழுவாள்.

'வர்ஷினியும் உன்னை மாதிரியேதானாம்' என்பது எனது பதிலாக இருந்தது.

'குட்'டா பேடா சொல்லு 'என்று ஆரம்பித்ததிலிருந்து எனது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது!

Thursday, January 28, 2010

ஏ ஃபார் ...

...ஏக்கம்!

சுதா கான்வெண்டில் ஆண்டுவிழா நடக்கும். (ஸ்கூல்னு இருந்தா ஆண்டு விழாவெல்லாம் நடக்கத்தானே செய்யும்..ஹூம்..மேலே!) அது எப்பொழுதும் ஜனவரி-பெப்ரவரி சமயங்களில்தான் நடக்கும். யூகேஜி படிக்கும் போது வெல்கம் டேன்ஸ் ஆடுவதுதான் ஃபேஷன். அட்டையில் எழுதின எழுத்துகளை கழுத்தில் மாட்டிக்கிட்டு, உள்ளேருந்து ஒவ்வொருத்தரா ஆடிகிட்டே வந்து
கடைசிலே W E L C O M E-ன்னு வரிசையா நிப்பாங்க. அப்புறம் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து ஒரு டான்ஸ். யூகேஜி படிக்கும்போதுதான் முதன்முதலா இந்த டான்சை பார்த்தேன். அதுக்கு முன்னாடி பெரிம்மா ஸ்கூல் ஆண்டுவிழாலே
பரதநாட்டியம் ட்ரெஸ் போட்ட அக்காதான் கை கட்டை விரலை தோள்பட்டையிலேருந்து சுத்தி வளைச்சு தரையிலே தொட்டு வணக்கம் வைச்சுட்டு ஆடுவாங்க. அப்புறம், 'அழகு மலராட', 'இந்தியா என்பது என்வீடு'
'வான் போலே வண்ணம்' பாட்டுக்கெல்லாம் அக்காங்க ஆடறதை பார்த்துட்டு வீட்டுக்கு வந்து 'ரா ரா ரஸ்புடினு'க்கும், 'லீவ் அ லைட்'டுக்கும் பரதநாட்டியமெல்லாம் ஆடியிருக்கேன். எங்கே விட்டேன்...வெல்கம் டேன்ஸ்..ஆமா, வெல்கம் டேன்ஸுக்கு பொதுவாக முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு பசங்களைத்தான் சேர்ப்பாங்க. ஏன்னா அப்போதானே குட்டீஸா இருப்பாங்க. சில சமயத்துலே யூகேஜிலேருந்து ஒரே ஒருத்தரை மட்டும் சேர்த்துப்பாங்க.

ஒண்ணாவதுலே, எங்க கிளாஸுலேருந்து கணிசமா கொஞ்சம் பேரை டான்ஸுக்கு சேர்த்துக்கிட்டாங்க. மிஸ் என்னை பார்த்து, டான்ஸ் மாதிரியான நளினமான விஷயங்கள் எல்லாம் எப்படி இந்த பொண்ணுக்கு வரபோகுதுனு தப்பா எடை போட்டுட்டாங்க போல. அப்படி தேர்ந்தெடுக்கப்படறதுக்கு சில தகுதிகள் தேவைப்படும். அதாவது, அவங்க சொல்ற கலர்லே பட்டு பாவாடையோ, பாவாடை சட்டையோ இருந்தா உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அப்புறம் முடி வளர்த்து இருக்கணும் இல்லைனா
டான்ஸுக்கேத்த மாதிரி அலங்காரம் பண்ணி விடறவங்க உங்க வீட்டுலே இருக்கணும். அதுலேயும் பரதநாட்டியம் கத்துக்கிற பசங்களுக்கு முன்னுரிமையிலும் முதலுரிமை.

ஆயாவுக்கு, என்னை தினமும் சாயங்காலம் தேடிப்பிடிக்கறதே பெரிய விஷயம்.விளையாடிட்டு, தொலைஞ்சு போகாம ஒழுங்கா வீட்டை கண்டுபிடிச்சு
வந்துட்டேன்னாலே அவங்களுக்கு உலக மகா சந்தோஷம்தான். ஆறுமணிக்கு வாசல்லே இல்லைன்னா, பெரிம்மாக்கிட்டே ட்யூஷனுக்கு வந்த அண்ணாங்க ரெண்டு பேரு, தெருவோட ரெண்டு முனையிலேயும் தேடிக்கிட்டு இருப்பாங்க. (ஒளிஞ்சு விளையாடும்போது அவங்க கூப்பிட்டா எப்படி வரமுடியும்?) இதுலே பரதநாட்டியம் கத்துக்கிறது எல்லாம் ஸ்கோப்லேயே இல்லே. ப்ரென்ச் கத்துக்குறது இல்லேன்னா இந்தி கத்துக்கிறதுன்னா ஒருவேளை என்னை அனுப்பியிருப்பாங்க.

அப்புறம், டான்ஸுக்கு செலக்ட் ஆகிட்டா அவ்வளவுதான். ராஜ மரியாதை. அவங்களுக்கு மட்டும் தனி ரூல்ஸ். மத்தியானம் சாப்பிட்டபுறம்தான் ப்ராக்டீஸ் இருக்கும். அதனாலே மத்தியான சாப்பாடு எடுத்துட்டு வந்துடணும்.
மாடிலே ஒரு ரூம் இருக்கும். சாதாரண நாட்களில் அங்கே அனுமதி இல்லை.(அந்த மாடி ரூம்க்குள்ளே போகணும்னா ஸ்பெஷல் பர்மிஷன் வேணும்) அது ஒரு பொக்கிஷ அறை மாதிரி. அங்கேதான் ப்ராக்டிஸ்.
அப்புறம் ஸ்கூலுக்கு லீவ் போடக்கூடாது. கண்டிப்பா ஊருக்கெல்லாம் போகக் கூடாது (அதாவது ஆண்டு விழாக்கு முன்னாடி) அப்புறம், முக்கியமா ட்ரெஸ் மற்றும் அலங்காரம்.இந்த ரூல்ஸை வச்சுக்கிட்டு இவங்களும் நம்மக்கிட்டே ஒரு அலட்டல் கொடுப்பாங்க.

ஸ்கூலுக்கு பக்கத்துலேயே எல்லோர் வீடும் இருந்ததாலே மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்ட்டுதான் வருவோம். எனக்கு மத்தியானம் ஸ்கூல்லே சாப்பிடணும்னு ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா ஆயா விட மாட்டாங்க. இந்த ப்ராக்டீஸ் இருக்கறப்போ மட்டும் செலக்ட் ஆனவங்க எல்லாம் சாப்பாடு எடுத்துட்டு வரணும், சீக்கிரம் சாப்பிட்டுட்டு மாடி ரூமுக்கு போய்ட்டணும்.
அப்போ மட்டும் கொஞ்ச பேரு சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க..அந்த பேக்கை பத்திரமா அவங்க பக்கத்துலே வச்சுப்பாங்க. மிஸ் பார்த்துட்டு ஹோம்வொர்க் வைக்கற செல்ஃப் கீழே வைக்கச் சொல்லுவாங்க. இரண்டாம் வருஷத்துலேயாவது நம்மை கண்டிப்பா செலக்ட் பண்ணுவாங்கன்னு நம்பிக்கிட்டு இருந்தேன்.இரண்டாம் வருஷத்துலே நாந்தானே சீனியர். உயரமா வேற இருந்தேனா..செலக்ட் ஆகிட்டேன். ஆனா வெல்கம் டான்ஸ் இல்லே..ஃபேஷன் மாறிடுச்சு. கலர் பேப்பர் சுத்தின ஒரு வளையத்தை பிடிச்சுக்கிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டே ஒலிம்பிக் வளையம் மாதிரி ஏதோ ஒரு ஷேப் ஃபார்ம் பண்ணனும்.அந்த வளையம் பார்க்க மல்லிப்பூ சுத்தின மாதிரியே இருக்கும். எனக்கு ஃப்ளூ கலர் வளையம். ஏன்னா என்கிட்டே ஃப்ளு கலர் ஃபிரில் வச்ச ப்ராக் இருந்தது.

ப்ராக்டீஸின் முதல் நாள். 'சாப்பாடு ரெடி ஆனதும் நான் கொண்டு வரேன்னு' ஆயா சொல்லிட்டாங்க. ஸ்கூல்லே சாப்பிடபோறேன்னு ரொம்ப ஆசையா இருந்தேன். ஏன்னா ரவுண்டா ப்ரெண்ட்ஸ் கூட உட்கார்ந்துக்கலாம். டிபன் பாக்ஸ்லேருந்து சாப்பிடலாம். அப்புறம் டேன்ஸூம் ஆடப்போறோம்னு ஜாலியாவும் இருந்துச்சு.ஒரு குதூகலமான மனநிலைக்கு தள்ளப்பட்டிருந்தேன்ன். இந்த சந்தோஷத்துலே மிஸ் எது சொன்னாலும் காதுலே விழவே இல்லை. பெல் அடிச்சது. கொஞ்ச பேருக்கு வீட்டுலேருந்து தாத்தா பாட்டிங்க அம்மா அத்தைங்க எல்லோரும் சாப்பாடு கொடுத்துட்டு போய்ட்டாங்க. வரவேண்டிய எல்லோருக்கும் சாப்பாடு வந்துடுச்சு.எல்லோரும் சாப்பிட உட்கார்ந்துட்டாங்க. எங்க ஆயாவை மட்டும் காணோம். எனக்கு பதைபதைப்பா இருக்கு..கிளாஸ் ரூமுக்கும் வாசலுக்கும் எட்டி எட்டி பார்க்கிறேன். அப்புறம் மிஸ் போய் சாப்பிட்டுட்டு வந்துடுன்னு சொல்லிட்டாங்க. ரெண்டு தெரு தள்ளிதானே...நானும் வேகமா போனா, ஆயா எங்க ஸ்கூல் தெருமுனையிலே வந்துக்கிட்டு இருக்காங்க... நான் வர்றதை பார்த்துட்டு என்னை வீட்டுக்கு கூப்டுக்கிட்டு போய்ட்டாங்க. வீட்டுலே போய் அந்த டிபன்பாக்ஸ்லே
சுடசுட இருந்த கடலைக்குழம்பு சாதம்,ரசம் சாதம் சாப்பிட்டேன்.ஆயா தட்டுலே போட்டு சாப்பிட சொன்னதை கேக்கவேயில்ல.

அப்புறம், ரெகுலரா போய் ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். தினமும் கனவிலெல்லாம் கூட டான்ஸ் ஆடறமாதிரியே வரும். அந்த நேரத்துலேதான் திடீர்னு ஒரு செய்தி. ஆண்டுவிழா பரிட்சைகள் முடிஞ்சப்புறம்தான்னு. எனக்கு ஒரே பயம். ஏன்னா பரிட்சை முடிஞ்சதும் அடுத்த நாளே நாங்க வடலூர் கிளம்பிடுவோம். ஒருநாள் கூட ஆயா இருக்கமாட்டாங்க. பால்காரருக்கு, கீரைக்கார ஆயாவுக்குன்னு எல்லோருக்கும் சொல்லிடுவாங்க. பத்துநாள் ஊருக்குப் போறோம்னு. ஆண்டுவிழா பரிட்சைக்கு அடுத்த நாள்னு சொன்னதுக்கு ஆயாவும் ஒண்ணும் சொல்லல. பரிட்சைல்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, கடைசியா ஒரு நாள் ரிகர்சல் இருந்தது, எல்லோரும் அவங்கவங்களுக்குச் சொன்ன கலர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு வந்து ஆடணும். நான் மேட்சிங்கா, ஆயா வாங்கிக்கொடுத்திருந்த ப்ளூ கலர் வளையலும் போட்டுக்கிட்டு போய் ஆடினேன்.
அப்புறம் அந்த வளையங்களை எல்லாம் அழகா அடுக்கி மாடி ரூம்லே வச்சிட்டோம். பரிட்சை முடிஞ்சு நாளைக்கு ஆண்டு விழா. அனைக்கு ராத்திரி ஆயா துணியை எடுத்து மடிச்சு பைக்குள்லே வைக்கிறாங்க. 'ஊருக்கு கண்டிப்பா போயே ஆகணும், டான்ஸ் எல்லாம் அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்'னு சொல்லிட்டாங்க. வயத்துக்குள்ளேருந்து ஏதோ உருண்டு வந்து தொண்டையை அடைக்குது. எதையோ இழந்த மாதிரி ரொம்ப ஏமாற்றமா இருக்கு. ஆனா அழலை. மிஸ் கிட்டே என்ன சொல்றது,நான் இல்லாம எப்படி பார்ம் பண்ணுவாங்கன்னெல்லாம் நினைச்சுக்கிட்டேன். ஆயாக்கிட்டே சொன்னா,'சீ கழுதை..நீ இல்லாம அங்கே டான்ஸே நடக்காதா'ன்னு சொல்லிட்டாங்க.
'நான் வரலைன்னு நாளைக்கு போய் மிஸ்கிட்டே சொல்லிட்டு வரேன்'னு ஆயாகிட்டே சொன்னேன். 'அதெல்லாம் வேணாம்,அப்புறம் பஸ் கிடைக்காது,
விடிகாலையிலேயே கிளம்பணும்'னு சொல்லிட்டாங்க.

ராத்திரில்லாம் நான் மட்டும் பஸ்லேர்ந்து தப்பிச்சு போய் டான்ஸ் ஆடற மாதிரி ஒரே கனவா வந்தது. அடுத்த நாள், மனசெல்லாம் அவங்க மட்டும் மேடையிலே ஆடறதையும், ஃபார்ம் பண்றதையும் கற்பனை பண்ணிக்கிட்டு பஸ்ஸுலே போய்க்கிட்டிருந்தேன் டான்ஸ் ஆட முடியாத ஏக்கத்தோடே!

Wednesday, January 27, 2010

Letter of the week - e

பப்புவுக்கு, முட்டை வடிவம் பெரிய அளவில் வரைந்தால் கீழிருப்பது போலத்தான் வருகிறது. (இரண்டு முட்டைகள் நான் வரைந்தேன்.) 'Little Egg' என்ற புத்தகத்தை வாசித்தோம். அடைகாக்கும் அம்மாவிடமிருந்து முட்டை உருண்டு ஓடி பின்னர் அம்மாவிடம் வந்து சேரும் கதை.


அவளாகவே கொண்டு வந்த இன்னொரு புத்தகம் கேட்டர்பில்லர். நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசித்தோம். குட்டி கேட்டர் பில்லரை பார்த்ததும், 'அம்மா கேட்டர்பில்லர் எங்கே' என்றாள். 'பட்டர்பிளைதான் அதோட அம்மா, பட்டர்பிளைதான் இலையிலே முட்டை போட்டுச்சு, அப்புறம் பறந்து போய்டுச்சு' என்றதும் 'இல்லே அம்மா-அப்பா கேட்டர்பில்லர் இருக்கணும்' என்றாள். 'கேட்டர்பில்லர் பெரிசாகி எப்படி மாறிடும்' என்றால் 'பட்டர்பிளையா மாறிடும்' என்றாள். பட்டர்பிளையா மாறி முட்டை போடும் என்றேன். ஆனாலும் குட்டி கேட்டர்பில்லர் அம்மா-அப்பா இல்லாமல் தனியாக இருப்பதை பப்பு விரும்பவில்லை.



யானையின் காது, கை, கால் மற்றும் வாலை இணையத்திலிருந்து பிரிண்ட் எடுத்துக்கொடுத்தேன். வண்ணங்கள் அவளது தேர்வு. செவ்வகத்தை வரைந்து காதுகளை மேலே ஒட்டச் சொன்னேன். கால்களை ஒட்டிவிட்டு கண்கள் மற்றும் தும்பிக்கையை வரைந்தாள். வாலை எங்கே ஒட்டுவது என்று தெரியாமல் கேப் கிடைத்த இடத்தில் ஒட்டினாள்.




அடுத்தது என்ஜின். பப்புவுக்கு அவளது பொம்மைகளை சேரில் உட்காரவைத்து டூர்ர்ர்ர்ர் என்று ஓட்டிக்கொண்டு போய் பள்ளியில் விளையாடும் விளையாட்டு பிடிக்கும். என்ஜின் இப்படித்தான் இருக்குமாம்.


தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்த இரு மொழி கதை புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தோம். தமிழில் இருந்ததை வாசித்தேன். ஆங்கிலத்தை டெஸ்ட் செய்யலாமென்று,

தோட்டத்துக்கு இங்கிலிஷிலே என்ன ?

கார்டன்

பூ?

ஃப்ளவர்

'அழகான'

சூப்பர்!!

!!

Monday, January 25, 2010

1000ல் 1வன்

”செகண்ட் ஹாஃப் பார்க்காதீங்க...உங்களாலே பார்க்கவே முடியாது”

”செகண்ட் ஹாஃப் பார்த்தாலும் சண்டை வந்தா கண்னை மூடிக்கோங்க..பார்க்காதீங்க”

”கண்டதெல்லாம் சாப்பிடுவாங்க..உங்களாலே பார்க்க முடியாது...”
(காவிரி டெல்டாவில் எலியை சுட்டு சாப்பிட்ட சோழ வம்சத்து விவசாயிகளின் நிலையை விடவா...கோரமாக இருந்துவிடப்போகிறது!)

-அலுவலக நண்பர்களின் அறிவுரைகளை எல்லாம் மீறி பார்த்து விட்டேன்.

'நம்ம தமிழ் சினிமாக்காரங்களுக்கு மரத்தை பார்த்தா சுத்திக்கிட்டு டூயட் ஆடத்தான் தெரியும்' என்று பெரிம்மா சொன்னது செல்வராகவன் காதில்
விழுந்துவிட்டது போல. மரத்தை சுற்றி டூயட் இல்லை. ஆங்கில படத்துக்கு நிகரான தமிழ் படம்!

வன்முறை அதிகம்தான். ஆனால், கார்கள் சீறிப்பாய்வதையும்,
கையில் துப்பாக்கியுடன், ரோட்டில் செல்லும் எவரையும் சுடத்தயங்காத அலையும் ஹீரோவையும் இஞ்ச் இஞ்சாக கதாநாயகியை உடலையும், படுக்கையறைக்காட்சிகளையும் மாய்ந்து மாய்ந்து காண்பிக்கும்
படங்கள் செய்யாத வன்முறையையா இந்தப்படம் செய்துவிடப்போகிறது?

அபோகலிப்டோ, ட்ராய், கிளாடியேட்டர், இண்டியானா ஜோன்ஸ், மம்மி ரிடன்ஸ் இன்னபிறவற்றை முகில் புண்ணியத்தில் சில-பல தடவைகள் பார்த்ததில் எந்த அதிர்ச்சியும் எனக்கு இல்லை. அல்லது மரத்துபோய் விட்டது.

குறைகள் உண்டுதான்...ஆனால், உடையார் நாவலை வாசித்து ஏற்றுக்கொள்ளும்போது இந்தக் படத்தையும் ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு? (என்னைப் பொறுத்தவரை உடையார் நாவல் ராஜாக்கள் காலத்து ‘அப்பம் வடை தயிர்சாதம்')

பார்த்திபனின் நடிப்பு அசத்தல். ராஜாக்கள் ஒருவேளை இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்றும் தோன்றவைத்தது. நமது ராஜாக்கள் ஓடிப்போனாலும், சில வருடங்களுக்குப் பிறகு பெரிய படையுடன் வந்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதாகவே வரலாற்று நாவல்களில்
வாசித்திருந்ததால் முடிசூடிக்கொள்ள அழைக்கும் தூதுக்காக ராஜா ஏன் காத்திருக்கிறார் என்றுத் தோன்றியது.

'சோழ வள நாடு சோறுடைத்து, சோழர்களுக்குப் பதில் பாண்டியர்களை அவ்வாறு காட்டியிருக்கலாம்' என்பது (பாண்டியர்களின் மேல் என்ன கோபமோ!) முகிலின் இரண்டு பைசா.

சோழ ராஜாவின் கோட்டையும், குகை சித்திரங்களும் நிழலின் மூலம் வழியறிதலும் , பார்த்திபன் மற்றும் கார்த்தியின் ஆட்டமும் ரசிக்க வைத்த காட்சிகள்.

குகைச் சித்திரங்கள் வடலூரின் சத்திய சன்மார்க்க சபையை நினைவூட்டியது. அங்கே ஒரு அறையில் அதில் வள்ளலாரின் பிறப்பு, கடவுள் அருள் அவர் மேலே இருந்தது, அவரது அண்ணன் செல்ல வேண்டிய கதாகலாட்சேபத்திற்கு
உடல்நலக்குறைவால் அவர் செல்ல இயலாதபோது ராமலிங்கம் சென்று உரையாற்றியது, ஆறுமுக நாவலர் தொடுத்த வழக்கிற்கு நீதிமன்றதிலும் மருதூரிலும் ஒரே நேரத்தில் காட்சி தருதல், சபையின் ரகசிய வழியில்
சிதம்பரத்திற்கு நடந்தே செல்லுதல் போன்ற காட்சிகளை சுவரிலே வரைந்தும் வைத்திருப்பதை இதே போல ஆச்சர்யத்துடன் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

எங்கேயோ போய்விட்டேன்....

‘1000ல் 1வன்' கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். செல்வராகவனுக்கு பாராட்டுகளுடன் நன்றிகள்!

Sunday, January 24, 2010

உப்பு, புளி, காரம்





உப்பு, புளி, காரம் என்ற மூன்று நண்பர்களைப் பற்றிய கதை.
'வெறும் குழம்பு சாப்பிட்டார்கள், சூப்பரா இருந்தது' என்பதெல்லாம் கதையில் இல்லை.

Saturday, January 23, 2010

இரண்டு புத்தகங்களும் குடியரசு தினமும்

பள்ளியில் சேர்ப்பதற்கு முன் பப்புவை பார்த்துக்கொள்ள ஒரு முழுநேர உதவியாளரை அமர்த்தியிருந்தோம். அவரிடம், ஈரமாக இருந்த பப்புவின் உள்ளாடையை அலசுமாறுக் கொடுத்தேன். “முதலியார் ஜாதியில் பொறந்துட்டு இதெல்லாம் செய்ய வேண்டிருக்குது” என்றார் வாங்கிக்கொண்டே. இன்னின்ன வேலைகள் அவர் செய்ய வேண்டியிருக்கும் என்று சொல்லித்தான் அவரைச் சேர்த்தோம்.

ஆம்பூரில் கடைத்தெருவிற்கு சென்றிருந்தோம். குறுகலான சந்து. யாரோ வண்டியை குறுக்காக திருப்ப முயல வாகன நெரிசல் ஏற்பட்டுவிட்டது. பின்னர் வண்டிகள் மெதுவாக நகர ஆரம்பித்தன, வ்ழியை அடைத்துக்கொண்டிருந்த வண்டிக்குப் பின்னால் பைக்கில் நின்றிருந்தவர் கத்தினார், ‘ எவன்யா அவன்....சரியான கொல்ட்டியாக இருப்பானா?!”

வாகன நெரிசலுக்கும் கொல்ட்டிக்கும் (ஆம்பூரில் தெலுங்கு பேசுபவர்கள் இருந்தாலும் அதில் ஒரு பிரிவினரை அவ்வாறு அழைப்பார்கள்)
என்ன சம்பந்தம்? என்ன அர்த்தம் அதற்கு? கொல்ட்டி அல்லாதவர்கள் ஒருபோதும் வாகன நெரிசல் ஏற்படுத்த மாட்டார்களா?

அன்றாட வாழ்க்கையிலேயே சாதி நம்மிடையே இந்தளவுக்கு பரவிக்கிடக்கும்போது, அதிகாரம் படைத்த அரசாங்க/தனியார் மயமாக்கப்பட்ட நிர்வாகங்களில் எந்தளவுக்கு புரையோடி போயிருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது, தலித் முரசு வெளியிட்டிருக்கும் அய்.இளங்கோவன் அவர்களின் “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, எங்களிடம் வராதீர்கள்” என்ற புத்தகம் . இது தலித் முரசுவில் தொடராகவும் வந்திருக்கிறது.

'தகவல் அறியும் சட்டம்' என்பது எத்தனை பயனுள்ளது என்பது இந்த ஒரு புத்தகத்தை வாசித்தாலே தெரியும். தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில், சிறுபான்மையினரின் கல்லூரிகளில் உள்ள பணியிடங்கள், அதில் தலித் மக்களின் இடஒதுக்கீடு, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு, அதில் எத்தனை நிரப்பப்பட்டுள்ளன என்ற தகவல்கள், புள்ளிவிவரங்களுடன்! ஆச்சரியமும் திகைப்பும் மேலிடும் ஒரு விஷயம் - அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் ஒரே ஒரு பழங்குடி விரிவுரையாளர் கூட இல்லை என்பது!! ஆசிரியர் அல்லாத பணியிடங்களிலோ ஒரே ஒரு பழங்குடியினர் மட்டுமே. அதுவும் பெருக்குவதற்கு!

பெரும்பாலான ஆதிதிராவிட மக்கள் சுய மரியாதைக்காகவும், சமூகத்தில் சம உரிமைக்காகவுமே இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவத்திற்கும் மதமாறுகின்றனர். ஆனால், அங்குமே அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பதே இந்த தகவல்களும், இந்த புத்தகமும் நமக்குக்கூறும் உண்மை. வேறு எங்கோ படித்த நினைவு, “ஆதிதிராவிடர்கள் மதமாறிய பிறகு பிற்படுத்தபட்டவர்களாக கருதப்படுவர்” என்று!


தலித் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக அரசு திட்டங்களை வைத்திருந்தாலும் அதை பயன்படுத்தும் கல்லூரிகள் இல்லையென்றே கூறிவிடலாம். அவர்களின் உரிமையை பெற்றுத்தருவதற்காகவோ பாதுகாக்கவோகூட ஒருவரும் இல்லை. எ.காக,
கல்லூரிகள் தலித் மாணவர்களின் எதிர்கால வழிகாட்டியாக ஒருவரை நியமிக்க வேண்டும். ஆங்கில வழியில் கல்வி கற்கும் திறனை வளர்த்துக்கொள்ள அரசு வழங்கும் மானியம் - இவை எதுவுமே ஒன்றிரண்டு கல்லூரிகளைத் தவிர எதிலும் கடைபிடிக்கப்படுவதில்லை. இன்னும் பெரும்பாலான நல்ல திட்டங்கள் இருந்தாலும் அவை எதுவுமே அவர்களைச் சென்றடையாமல் பார்த்துக்கொள்கின்றன இந்நிர்வாகங்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைவரும் சமம் என்று கூறும் நமது அரசும், அரசின் மக்களும் தலித்துகளிடமும் சரி ,பழங்குடியினரிடமும் சரி சம உரிமையை நிலைநாட்டுவது இல்லை என்பதே இந்த தகவல்களின் படி நமக்கு விளங்கும் உண்மை. 60 ஆண்டுகளான குடியரசு நாட்டில் ஆதிதிராவிடர்கள்/பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் எந்தளவில் இருக்கிறது? இந்நிலை தொடர்வதுதான் நமது பெருமையா? கட்சிகள் வெற்று அரசியலையும் வாய் சவடாலையும் தவிர்த்து என்ன செய்திருக்கின்றன ?

இதைத் தொடர்ந்து எனக்குள் பல கேள்விகளை, உணர்வுகளை ஏற்படுத்திய மற்றொரு புத்தகம் விடியல் பதிப்பகத்தின் “சோளகர் தொட்டி” - ச.பாலமுருகன் அவர்கள் எழுதியது. பழங்குடி மக்களின் பண்பாடு, தொன்மங்கள், வாழ்க்கையைப் பேசும் தமிழின் முதல் நாவல் என்று பதிவர் நாதாரி அவர்கள் அறிமுகப்படுத்தினார். நன்றிகள் அவருக்கு! வீரப்பனைப் பற்றிய பல புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அவையெல்லாம் வீரப்பனை பிரதானப்படுத்தி எழுதப்பட்டவை - ஒரு குழலின் ஒரு முனையிலிருந்து பார்ப்பது போல.

சோளகர் தொட்டி அதே குழலின் அடுத்த முனையிலிருந்து பார்ப்பது போல - வீரப்பனை சாராத மற்ற தொட்டி மனிதர்களைப் பற்றியது (தொட்டி என்பதற்கு ஊர் என்ற பொருள்). வீரப்பனை தேடி வரும் போலீசாரால், மக்களுக்கு நேரும் அவலங்களையும்(உண்மையில் அது மனித உரிமை மீறல்களே!) இந்நூல் பதிவு செய்துள்ளது. ('சந்தனக்காடு' தொலைக்காட்சி தொடரும் அப்பாவி பொது மக்கள் அவதிக்குள்ளாக்கப் பட்டதை பதிவு செய்திருந்தது. )
தொட்டியின் மூத்தவர் தலைவர், கொத்தல்லி. பெயர்தான் தலைவரே தவிர நமது ஊரின் தலைவருக்கான எந்த அடையாளங்களும் இல்லாதவர். கோல்காரன் சென்நெஞ்சா, ஜோகம்மாள், சிக்குமாதா, கெம்பம்மா, போலிசிடம் சிக்கி சீரழியும் மல்லி, மாதி, சிவண்ணா - என்று காட்டை உயிர்நாடியாகக் கொண்டு வாழும் அப்பாவி மக்களைக் கொண்ட நாவல். வீரப்பனைத் தேடி வரும் அமைதிப்படையும் அவர்களின் அக்கிரமங்களையும் அம்மக்கள் அனுபவித்த அடக்குமுறைகளைப் பற்றிச் சொல்லும் நூல். இது உண்மையில் நூலல்ல...அம்மக்களின் வாழ்க்கை!

அதிகாரமில்லாத சாதாரண மக்களாக இருந்தால் அவர்கள் மேல் சர்வ அதிகாரங்களையும் செலுத்த போலீசுக்கு உரிமை கொடுத்தது யார்?
கல்வியும் அதிகாரமும் இல்லாத காரணங்களுக்காக அவர்களின் உரிமைகளை ஏய்க்கும் தனிப்படை! போலீஸ் என்பவர் மக்களுக்கு பாதுகாவலரா அல்லது அவரை அணுகவே நாம் பயப்பட வேண்டுமா? விசாரிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று நரகவேதனை கொடுக்க காவலர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? பழங்குடியினர் என்றும் ஆதிவாசி என்றும் நாம் அழைக்கும் மக்கள் உண்மையில் எத்தனை பண்பாடு மிக்கவர்களாக இருக்கிறார்கள்! அவர்களை மனிதர்களாகவே பார்க்க மறுக்கும் நாம் எத்தகையவர்கள்?

அவ்வளவு ஏன்? நம்மில், எத்தனைபேர் நமது வீட்டில் வேலைசெய்பவர்களை சமமாக நடத்துகிறோம்? செய்யும் வேலையில் உயர்வு தாழ்வு பார்த்தல் பாவமென்று சொல்லிக்கொண்டாலும் நமது வரவேற்பறையின் நாற்காலியில் வீட்டுவேலையாளர்களை உட்கார வைக்கிறோமா? அவர்களாகவே நாற்காலியில் உட்கார்ந்துவிட்டால் நம்மில் எத்தனைபேரால் மனமுவந்து ஏற்றுக்கொள்ள முடிகிறது?

Thursday, January 21, 2010

பப்பு டைம்ஸ்

"ஒரு சிங்கம் வலையிலே மாட்டிக்கிட்டிருந்துச்சு. நாங்கதான் காப்பாத்துனோம்.”

”ஒரு ஹிப்போவை வேடன் வலையிலே மாட்டியிருந்தான். நானும் வர்ஷினியும் காப்பாத்தினோம்.”

”வரும்போது வேன் பள்ளத்துலே மாட்டிக்கிச்சு...நாங்க ப்ரேக் போட்டு (?) ஓட்டிக்கிட்டு வந்தோம்.”

“அப்புறம் , வேற என்ன பார்த்தே?”

”கொரங்கு, லவ் பேர்ட்ஸ், பேரட்ஸ்....”

ஸ்கூல் ட்ரிப்-காக வேடந்தாங்கல் சென்று வந்த பின்புதான் இத்தனை கதையும்.




பத்து -பத்தரை மணிக்கு தூங்க செல்வோம் - வழக்கமாக. படுத்தபின்னும் பேசிக்கொண்டிருந்தால் “ரைனோ வர்ற டைம், எல்லோரும் தூங்குங்க” என்று சொல்லிவிடுவோம். அன்று நானும் முகிலும் ஏதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தோம்....ஊருக்குப் போவதைப்பற்றிதான். கொஞ்ச நேரம் பொறுத்துப்பார்த்த பப்பு,

“கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டீங்க...ரைனோ வர்ற டைமாச்சு”



ஆச்சி, எனக்கு குறிஞ்சி பேரு புடிக்கல...பைரவி -னு வச்சிக்கலாமா...பைரவி பேரு குறிஞ்சி வச்சிடலாம். என்னை பைரவின்னு கூப்பிடு - பப்பு

பைரவி...பைரவி... - நான்

என்னங்கம்மா... - பப்பு

அவ்வ்வ்வ்!




அயிகிரி நந்தினி என்ற பாடலை புதிதாகக் கற்றுக்கொண்டிருக்கிறாள். பிரேயர் சாங்க். இப்போதெல்லாம் எப்போதும் அந்த பாட்டுதான்.

ஏன் பூஜாக்கா இல்ல? என்றாள் திடீரென்று.

பூஜாக்கா ஆம்பூரிலேதான் இருப்பாங்க.

இல்லே நந்தினி அக்கா, ரம்யாக்கா ல்லாம் வர்றாங்க இல்ல இந்த பாட்டுலே..என்று பாடி காண்பித்தாள்.

அயிகிரி நந்தினி....
நந்தனுதே..

ரம்யாக்கா அத்தினி.......

பூஜாக்கா பேரு ஏன் இல்ல?

Tuesday, January 19, 2010

சாலையோரம்.....

இது நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருக்கும். மடிப்பாக்கத்திலிருந்து கிண்டி செல்வதற்கு பிருந்தாவன் நகர் வழியாக வந்துக்கொண்டிருந்தேன். குறுக்குவழிதான். கொஸ்டின் பேங்க்-கை படித்து முன்னேறிய தலைமுறையாச்சே! மேலும் சிக்னல்கள் எதுவும் இருக்காது..வாகன நெரிசலும் குறைவுதான். ரோடிலேயே ஒரு கோயில் வரும். அங்கு மட்டும் கொஞ்சம் நெரிசலாக இருக்கும். உருட்டிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.

அன்றும் அப்படி உருட்டிக்கொண்டு சென்ற போது எனக்கு முன்பு பைக்கில் சென்று கொண்டிருந்தவர் சடாரென்று நிறுத்திவிட்டார். நானும் உடனடியாக பிரேக் போட்டதில் அவரது வண்டியின் இலக்கத்தகடின் மீது லேசாக இடித்துவிட்டேன். திரும்பிப் பார்த்தவரிடம் 'சாரி' சொல்லிவிட அவரும் தலையசைத்தார். அதற்குள் வாகனங்கள் நகரத்துவங்கியது. அந்த சாலைஆஷ்ரம் பள்ளி இருக்கும் மெயின் ரோடில் வந்து இணையும். அந்த பள்ளியருகே பைக்கில் வந்தவர் என்னை வழி மறித்தார்.

ஏதோ சொல்ல வருகிறாரென்று நானும் நிறுத்தினேன். பைக்கை நிறுத்திவிட்டு என்னிடம் வந்தவர் அவரது இண்டிகேட்டர் லைட்டை நான் உடைத்து விட்டதாக சொன்னார். பார்த்தால் அது ஒரு பக்கம் தலை சாய்த்துக்கொண்டிருந்தது. நான் இடித்தது அவரது இலக்கத்தகடைதானென்றும் இண்டிகேட்டரை நான் உடைக்கவில்லை என்றதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. காசு கொடுத்துவிடுமாறு கூறினார். நான் மறுத்து ஸ்கூட்டியின் உயரத்தையும் அவரது இண்டிகேட்டரின் உயரத்தையும் காட்டினேன். மேலும் நான் உண்மையில் உடைக்கவில்லை..அவர் சடாரென்று ப்ரேக் போட்டால் நானும் என்ன செய்ய முடியும்...எனக்கும் பின் வந்தவர்கள் என் வண்டியின் மேலும் தானே மோதினார்கள் என்று சொல்ல அவர் காசு கொடுக்குமாறு வலியுறுத்திக்கொண்டிருந்தார்.

அந்த சாலை ஒரு பக்கத்தில் பழக்கடைகள் இருந்தன. அதைத் தவிர வேறுக் கூட்டமில்லை. சரி, போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று கம்ப்ளெயின் கொடுப்போம் என்று சொன்னதும் அவர் எனது வண்டியின் சாவியை படக்கென்று எடுத்துக்கொண்டார். இது முற்றிலும் நான் எதிர்பாராத ஒன்று.
இப்படி ஒன்றுக்கு நான் தயாராகவே இல்லை. உண்மையைச் சொன்னால் அப்போதுதான் எனக்கு இக்கட்டில் மாட்டிக்கொண்டாற்போல இருந்தது. முகிலுக்கு போன் செய்யலாமென்றால் கைப்பை எல்லாம் வண்டிக்குள் இருந்தது.

கோபத்துடன் நான் குரலுயர்த்தி எனது சாவியைக் கொடுக்குமாறு சொன்னேன். அவன் நூற்றைம்பது ரூபாயாவது கொடுக்குமாறு சொன்னான். 'குடுத்துட்டு போயிடுங்க மேடம், உங்களுக்கு எதுக்கு பிரச்சினை' என்று அவனே அட்வைஸ். அதற்குள் ஒரு நாலைந்து பேர் வந்துவிட்டார்கள். அப்போதுதான் இது ஏதோ பிரச்சினை என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. விசாரித்தவர்களிடம் என் வண்டி சாவியை கொடுத்துட்டு எதுன்னாலும் பேசச் சொல்லுங்க என்றேன். கோபமாக வந்தது. அவன் சாவியை எடுத்தது எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஊட்டியது.

அதற்குள் வேறு எங்கிருந்தோ ட்ராபிக் போலீஸும் வந்து விட கும்பலும் சேர ஆரம்பித்தது. போலிஸிடம் அவனே எல்லாவற்றையும் சொன்னான். அதன்பின் போலிஸ் அவனது இண்டிகேட்டரையும் பார்வையிட்டார். அவரிடம் என் பங்குக்கு நானும் சொன்னேன். வண்டியின் இண்டிகேட்டரை உடைக்காததையும், இலக்கத்தகடை இடிக்க நேர்ந்ததையும், அதுவும் அவன் சடன் பிரேக் போட்டததால்தான் என்றும். பின்னர் போலீஸ் சாவியை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டு அவனது இண்டிகேட்டர் இப்போது உடைந்ததில்லை, ஏற்கெனவே உடைந்ததை அவன் டேப் போட்டு கட்டியிருந்தது இப்போது ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டிருக்கிறதென்றும் கூறினார்.

மேலும் கம்ப்ளெயின் செய்ய வேண்டுமானால் கிண்டிக்குச் செல்லுமாறு கூறினார். அவர்கள் மேற்கொண்டு விசாரிப்பார்களென்றும் சொன்னார். அதன் பின்னர் அவன் போன மாயம் தெரியவில்லை. எனக்கு இதை கம்ப்ளெயின் செய்ய வேண்டும் போல இருந்தது , ஆனால் வண்டி எண்ணை மட்டும் வைத்து என்ன செய்வது அல்லது வேறு எப்படி கையாள்வது என்றுத் தெரியவில்லை. அலுவலகம் வந்து சேர்ந்துவிட்டேன். நண்பர்களிடம் சொன்ன பிறகு கொஞ்சம் படபடப்பு அடங்கியது. நான் நிறுத்தியதுதான் தவறென்று கூறினார்கள். கையை ஆட்டி என்னெதிரில் மறித்துக்கொண்டு ஓரமாக வந்தால் எப்படி நிறுத்தாமல் இருப்பதென்று புரியவில்லை. ஆனாலும் நெடுநாளைக்கு அந்த வண்டியின் நம்பர் நினைவிலிருந்தது - அந்நிகழ்வின் பாதிப்பும்.

அந்த சாலையில் போகும்போதெல்லாம் எனக்கு முன்செல்லும் வண்டி அதுவாக இருக்குமோ என்று பார்த்துக்கொண்டிருந்தேன் கொஞ்ச நாள். பார்த்தால், நிறுத்தி நாலு திட்டு திட்டலாம் என்றுதான். யாருக்குத் தெரியும், ஒருவேளை அந்த நபர் இதை வாசித்துக்கொண்டு கூட இருக்கலாம். தினமும், செலவுக்கு இப்படி வழிமறித்து 'நூதன பிச்சை' கூட எடுப்பதை இன்னமும் தொடர்ந்துக்கொண்டிருக்கலாம். அல்லது, குற்றவுணர்ச்சியே இல்லாமல் தனது டெக்னிக்கை மாற்றியுமிருக்கலாம்.

ஆனால் எனக்கு அன்றைக்கு தேவையாக இருந்தது - இதுபோல் நிகழும்போது எப்படி கையாள்வது, யாரைத் தொடர்பு கொள்வது, வண்டியின் சாவியை தொடும் தைரியம்அவனுக்கு எப்படி வந்தது - இனி அவன் அப்படி நடந்துக்கொள்ளாமல்/ஏமாற்றாமல் இருப்பான் என்று என்ன நிச்சயம் என்பதுதான்.

அடுத்த சில தினங்களில் எனக்கு ஒரு ஃபார்வர்டு மெயில் வந்திருந்தது.ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன் சுற்றிக்கொண்டிருந்தது தான். அது இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. மெயிலாக இருந்தது இப்போது தளமாகவும் மாறி இருக்கிறது! ஆண்களில் bad drivers இருப்பதுபோலத்தான் பெண்களிலும். ஓட்டுகிற எல்லா பெண்களையும் குற்றம் சொல்லும்போது நாம் தவறு செய்யும் ஆண் வாகன ஓட்டிகளை மன்னித்து விடுகிறோம். ஆண்கள் தவறு செய்தால் ஒப்புக்கொள்கிற நாம் பெண்கள் தவறவே கூடாதென்று எதிர்பார்க்கின்றோம். லைசன்ஸ் வாங்காத பையனையும் கார் ஓட்ட அனுமதிக்கிற நாம் (லைசன்ஸ் வைத்திருக்கும்) பெண்கள் U டர்ன் எடுக்கும்போது மட்டும் ஹார்ன் அடித்து தவிக்க விடுகிறோம்! ஏன்?

ரொம்ப நாளைக்கு முன்னால் சின்ன அம்மிணி ஒரு தொடர் இடுகைக்கு அழைத்திருந்தார். சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு - பெட்டர் லேட் தேன் நெவர் -ன்னு இப்போ எழுதறேன்..சின்ன அம்மிணி மன்னிக்கணும். :-) சாலை பாதுகாப்பும் சாலையில் பாதுகாப்பு பத்தியும் எப்போ வேணா எழுதலாம். நான் அழைக்க விரும்பும் நால்வர்,

மயில் (எ) விஜிராம்
தீபா
முத்துலட்சுமி
ஹூசைனம்மா

முன் அனுமதி இல்லாமலே அழைத்திருக்கிறேன், உரிமையோடும் - தங்களின் பகிர்தலை வாசிக்கும் ஆவலோடும்!

Monday, January 18, 2010

சைன் Q/காஸ் Q = ?

"உங்களுக்கு இந்த உலகத்திலேயே பிடிச்ச அஞ்சு பேர் பேரை எழுதுங்க"

எழுதியபின் ஒவ்வொருவரையும் வாசிக்கச் சொன்னார் பாரி அங்கிள்.

எல்லோரும் காந்தி நேரு விவேகானந்தர் ரஜினி கமல் கவுண்டமணி செந்தில் அன்னை தெரசா எல்கேஜி டீச்சர் சச்சின் என்று எழுதியிருந்தார்கள். ஒவ்வொருவரும் எழுந்து வாசிக்கும்போது எனக்கு 'வட போச்சே' என்பது போல இருந்தது. :-) என் முறை வந்தபோது லிஸ்ட்டில் இருந்த பெயர்களை எழுந்து நானும் வாசித்தேன். வீரப்பனும், மோனிகா செலஸும் வனஜா டீச்சர் மற்றும் பெரிம்மா.

பெரிம்மாவை ஏன் பிடிக்கும்? என்று அங்கிள் கேட்டபோது ஏனென்று சரியாகக் காரணங்கள் சொல்லத் தெரியவில்லை.

எனது தம்பியும் எழுந்து வாசித்தான். அவன் முடித்தபோது எனக்கு மிகுந்த சந்தோஷமாக, பிரமிப்பாக, பெருமையாக இருந்தது. ஏனெனில், அவனுக்கு என்னை பிடிக்குமென்று நான் நினைத்திருக்கவில்லை. அப்படியே பிடித்தாலும் இப்படி முதல் ஐந்திற்குள் நான் இருப்பேனென்று கண்டிப்பாக நம்பியிருக்கவில்லை. எப்போதும் சண்டைதான். போட்டிதான். அவன் சைக்கிள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது எனது சைக்கிளை பூட்டி சாவியை ஒளித்து வைத்திருந்தேன். வாடகை சைக்கிளில்தான் அவனுக்குக் கற்றுக்கொடுத்தேன். இப்படி எத்தனையோ!!

(பாரி அங்கிள் அவனிடமும் ஏன் பிடிக்குமென்று சொல்ல சொல்வாரென்று பார்த்தேன், ஆனால் கேட்கவில்லை!..ஹிஹி..)

தம்பியை நான் நேசிக்கக் கற்றுக்கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று.

அந்த கோடை முகாமில் ஏற்பட்ட அதே பிரமிப்பு, மகிழ்ச்சி எல்லாமும் நேற்றும் ஏற்பட்டது - தீபா அழைத்துச் சொன்னபோது.

முதல் கட்ட வாக்கெடுப்பின்போதும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின்போதும் வாக்களித்த எனதன்பு பதிவர்கள், வாசகர்கள் அத்தனை பேருக்கும் மிகுந்த நன்றிகள்.



இந்த பதக்கத்தை பதிவுலகத்திற்கும் வாசகர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.

தமிழ்மணத்திற்கும், என்னை எனக்குக் காட்டும் பப்புவுக்கும் நன்றிகள்! தொலைபேசியிலும், மடலிலும் பின்னூட்டங்களிலும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்!

Wednesday, January 13, 2010

பிரித்தலும் கோர்த்தலும்

தழைய தழைய தொங்க வேண்டுமாம் தாலி
சொல்கிறாள் அம்மா.
வயிறு வரை நீண்டிருந்தது
கழுத்துக்குப் பின்னிருந்த முடிச்சுகள் உறுத்தியபடி.
மூணு மாசம்தான் அப்புறம் பிரிச்சுக் கோர்த்துக்கலாம்
இம்முறையும் அம்மாதான்.
வாசலில் யாரிடமோ கையாட்டியபடி
பேசி சிரித்துக்கொண்டிருக்கும்
அவனை பார்க்கிறேன்
மணிக்கட்டில் பளபளத்தது புதுச்சங்கிலி.
இனிமே புடவைதானே, அண்ணி
திசைதிருப்பியது மூத்த நாத்தனாரின் குரல்.
கட்டுக்கழுத்தி வளையல் போடாம இருக்கக்கூடாது
மாமியாரின் கவலை கையொடித்தது.
தாலி கட்டியவனை அலுவலகம் அனுப்பி
எனை விடுப்பெடுக்க வைத்த
நல்லதொருநாளில்
பிரித்துக் கோர்க்கப்பட்டது மஞ்சள்கயிறு
தங்கச்சங்கிலியுடன்.
வைபவத்திற்கு வந்தவர்களை
வழியனுப்பித் திரும்புகையில்
அவனது
கண்களின் திசை அறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
அவனது பார்வையை பிரித்துக் கோர்ப்பது
யார்??

குறிப்பு :
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக.

பப்பு டைம்ஸ்

ஆ!! ஏன் பப்பு என்னை அடிக்கறே?!

ஏன் சிரிக்கறே..நான்தான் கீழே விழுந்துட்டேன் இல்ல...

சாரி..சாரி..இனிமே சிரிக்கலை...

(முன்பெல்லாம் அவள் தெரியாமல் கீழே விழுந்தாலோ அல்லது எங்காவது இடித்துக்கொண்டாலோ் பார்க்க நேர்ந்தால் லேசாக சிரித்து வைப்பேன் கண்டுக்கொள்ளாததுபோல....அவளும் அழாமல் அந்த அதிர்ச்சியை சிரிப்பாக மாற்றி விடுவாள். இனிமேல் அது உதவாது போல.)





”நாம் ரெண்டு பேரும் சேர்ந்து வர்ஷினியை அழுக்குன்னு சொல்லலாமா ”

”ஏன் பப்பு, வர்ஷினி க்ளீன் தானே”

”ஏய் இல்ல, அழுக்கு அழுக்கு சொல்லு...”

அழுக்கு!
அழுக்கு!!
அழுக்கு!!!


(இப்படித்தான் பேர் வைக்க ஆரம்பிப்பாங்க போல இருக்கு, இந்தம்மாக்கு என்ன பேருன்னு தெரியலையே!!! சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்.)



”ஆச்சி, என் கனவுலே ஆல்ஃபபெட்ஸ் வருதா பாரு?”

”ஆச்சி, இங்கே பாரு இப்போ ஆரஞ்சுக்கலர் தெரிஞ்சுதா”

”ரெய்ன்போ இப்போ தெரிஞ்சுதா”

அவள் கண்களை மூடிக்கொள்வாள். கண்களுக்குள் அவளுக்குத் தெரிவதெல்லாம் அவளது கண்களை நான் பார்த்தால் தெரியும் என நம்புகிறாள்.



”ஆச்சி, மூச்சு விடலன்னா என்னாகும்? நான் இப்போ மூச்சு விடாம் இருக்கேன் ”.

அவளது சோதனையில் எனக்குத்தான் இதயம் நின்று நின்று துடிக்கிறது.




”இரு, வர்ஷினிக்கிட்டே சொல்றேன்...” - பப்பு

சொல்லிக்கோ

ஒன்னை நல்லா கீறுவா...வர்ஷினி நல்லா கீறுவா..

அய்யே...

ஆமா, வர்ஷினி நல்லா கீறுவா, நான் கிள்ளுவேன். வெண்மதி நல்லா அடிப்பா!

சார்லீஸ் ஏஞ்சல்ஸ் பார்ட் -2 வா?! அவ்வ்வ்வ்




அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! :-)

Tuesday, January 12, 2010

சமச்சீர் கல்விக்கு ஒரு சவால்!!

ஒன்பதாம் வகுப்பு மாணவரின் விடைத்தாள் இது. என்ன எழுதியிருக்கிறாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!

Monday, January 11, 2010

இழுபடும் கேள்விகள்!

நடக்கப்பழகுகையில் எங்கிருந்தாவது ஏதாவதொன்றை இழுத்துக்கொண்டு வருவாய்
துப்பட்டாவை அல்லது ஆளுயரப்பொம்மையை அல்லது சமையலறையிலிருந்து சல்லிக்கரண்டியை!
இப்போதும் ஏதாவதொன்றை இழுத்துக்கொண்டு வருகிறாய்..
அது எப்போதுமே ஒரு கேள்வியாக இருக்கிறது!
பாய்ஸ் ஏன் முடி வச்சிக்க மாட்டறாங்க?
யோசித்து சொல்வதற்குமுன்
பாய்ஸ் ஏன் கம்மல் போடமாட்டாங்க?
சொல்வதற்கு நிறைய இருந்தாலும்
எதை முதலில் சொல்வது...
ஹேய், ஆச்சி, அந்த அங்கிள் பாரு, கேர்ல் மாதிரி முடி வச்சிருக்கார்!!
நேற்றுக்காலையில் உன்னிடம் இழுப்பட்ட கேள்வி இப்படியாக இருந்தது,
"ஆச்சி, உனக்கு பாய் பிடிக்குமா கேர்ல் பிடிக்குமா?"