Friday, May 31, 2013

குழந்தைகளுக்கு சாதியைப் பற்றி.....

"ஆச்சி, பிராமின்ன்னா என்னப்பா?" என்று பப்பு கேட்டபோது என்ன சொல்வதென்று ஒரு கணம் புரியவில்லை. பப்பு புதிதாக‌ ஒன்றை கற்றுக் கொண்டால் எனக்கு ஒரு க்யூரியாசிட்டி வந்துவிடும்(அவள் புதிது புதிதாக வார்த்தைகள்  கற்றுக்கொண்ட காலத்திலிருந்து தொடரும் பழக்கம்!). எங்கிருந்து கற்றுக்கொண்டாள் என்று root cause analysis  செய்ய‌ கிளம்பிவிடுவேன். இந்த விஷயத்தில் root cause - சமீபத்தில் ஒரு சம்மர் கிளாசுக்கு சென்றாள். அங்கு அவளுக்கு ஒரு ஃப்ரெண்ட் கிடைத்திருக்கிறாள். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த  குட்டிப்பெண் (இலவச இணைப்பாக!)   'ஐ அம் பிராமின்' என்று சொன்னாளாம்.

'பிராமின்னா, கோயில்லல்லாம் பூஜை செய்வாங்க இல்ல, அவங்கதான்' என்றேன்,அவள் கேட்டதுக்கு பதிலளிக்கும் விதமாக. உடனே, "ஓ...காசு கேப்பாங்களே, எப்படி ஆச்சி, அந்த கோயில்ல பெரிய உண்டி வைச்சு இருந்தாங்க இல்ல, மக்கள்கிட்டேருந்து காசு வாங்கிறதுக்கு'", என்றாள். அவ்வ்வ்வ்...நாங்கள் சென்ற கோயில்களிலேயே, பப்புவின் உயரத்துக்கு ஒரு (வெண்கலம்/எவர்சில்வர்?) உண்டியலை சுசீந்திரம் கோயிலில் பார்த்திருந்தோம். சென்றுவந்தபிறகு ரொம்பநாளைக்கு அந்த உண்டியலை பப்பு மறக்கவில்லை. "ஆச்சி,அவங்க அப்பா கோயில்ல பூஜை செய்றவரா?" என்றும் கேள்வி. அவ்வ்வ்வ்வ்! 'எனக்கு எப்படி தெரியும்' என்று வசூல் ராஜா ஸ்டைலில் சமாளித்துவிட்டாலும், எப்படி புரிய வைப்பது என்று சவாலாகவே இருந்தது.

ஃபார்மர்,கார்ப்பெண்டர், கோல்ட் ஸ்மித்,டீச்சர் என்றெல்லாம் சொல்லி ஓரளவுக்கு சமாளித்துவிட்டேன். இறுதியாக‌,'நாம யார்க்கிட்டேயாவது நீ இந்துவா முஸ்லீமான்னு கேக்கலாமா? நீயே சொல்லு' என்றதும்,  "அதுல்லாம் பர்சனல். கேக்கல்லாம் கூடாது.நான் கிறிஸ்டீன், விலாசினிக்கிட்டே சொல்லியிருக்கேனா" என்றாள்.(அவ்வ்வ்..அதை நீ என்கிட்டேயே இதுவரைக்கும் சொன்னது  இல்லையேம்மா!!‍ -மைன்ட்வாய்ஸ்) 'அதுமாதிரிதான் இதுவும்' என்று சொல்லிவைத்தேன்.

இதுவரை அவளிடம்  எந்த இடத்திலும் சாதிபற்றி பேசியதில்லை. சாதியை அதன் கொடுமைகள் இல்லாமல் நிச்சயம் பேசிவிட முடியாது.சாதி என்றால் என்ன என்பதிலிருந்து அவளுக்கு சொல்லவேண்டும். எப்படியும் தெரிந்துக் கொள்ளாமல் அவள் வளர்ந்துவிடப்போவதில்லை. என்றாலும், இந்த விஷயத்தில் அது அவ்வளவு எளிமையானது அல்ல.

பப்புவும், அந்த குட்டிப்பெண்ணும் நண்பர்கள் என்றுதான் பப்பு நம்பிக் கொண்டிருக்கிறாள். தனிப்பட்ட ரீதியில், எதிரியாக பார்க்காமல் எப்படி  புரிய வைப்பது? அதோடு, இப்படி மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வது இழிவானது, தவிர்க்கப்பட வேண்டியது என்றும் புரிய வைக்கவேண்டும்.  இந்த மாதிரி சமயங்களில் எனக்கு பெரிதும் உதவியிருப்பவை கதைகள் முக்கியமாக புத்தகங்கள். முன்பு ஒரு முறை பப்பு 'கறுப்பர்கள்' பற்றி கேட்டபோது going' someplace special'  என்ற கதைப்புத்தகம், வேலையை சுலபமாக்கியது. மிகவும் அருமையான புத்தகம்! அதோடு, 'உனக்கு படிக்கத் தெரியாது(கமலாலயன் ‍ வாசல் வெளியீடு)' என்ற புத்தகத்தை, கொஞ்சம் வாசித்துக் காட்டியிருக்கிறேன். (அதிலும், மேரி பெத்யூன்  நிறைய விஷயங்களுக்கு உதவுவார்! ) இதெல்லாம் எந்த அளவுக்கு இந்த வயதில் அவளுக்கு புரியுமென்று தெரியாவிட்டாலும், 'ஓதி வைத்தால் என்றைக்காவது உதவும்' என்ற கோட்பாட்டை நம்பி அவ்வப்போது செய்வதுதான்!

இது போன்ற குழந்தைகளுக்கான (கதை)புத்தகங்கள், நமது நாட்டு 'சமூக‌/ பண்பாட்டுச் சூழ்நிலைகளு'க்கேற்றவாறு வந்திருக்கின்றனவா? சாதி பற்றியும், அதன் பாதிப்புகள் பற்றியும் 6 முதல் 10 வயதினருக்கு ஏற்ற வகையில் சொல்வதற்கு புத்தகங்கள் இருந்தால் நலம். அமர்சித்திர கதாவின் 'அம்பேத்கர்' சித்திர புத்தகம், அம்பேத்கரின் வாழ்க்கைச் சரிதமாக  சொல்லப்பட்டிருக்கிறது.' அழகிய பெரியவனின் கதையான‌ 'செருப்பு' என்ற ஒரு குறும்படத்தையும் பப்புவுடன் அமர்ந்து பார்த்திருக்கிறோம். இவையெல்லாம் ஓரளவுக்கு உதவும் என்றாலும், படங்களுடன், 'If you lived...' சீரிஸ் மாதிரியான புத்தகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி இருந்தால் பகிர்ந்துக் கொள்ளவும்.  இல்லையென்றால், குழந்தை எழுத்தாளர்கள்/பதிப்பகங்கள் இந்த ஏரியாவை கவனித்தால் தேவலை.

Thursday, May 16, 2013

"குரங்குலேருந்து வந்த பெண் எங்கே?"

பப்பு, நேற்று ஒரு கதைப்புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள். அதிலிருந்த‌ படத்தில், ராணிக்கு ஒருவர் சாமரம் வீசிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்ததும், பப்புவுக்கு புரியவில்லை. அதுதான் சாமரம், காத்து வரனும்னு வீசுவாங்க என்றதும், ' அது பாக்கறது நம்ம வீட்டுல இருக்கிற ஒட்டடை குச்சி மாதிரியே இருக்கு(அவ்வ்வ்வ்வ்!!),அவங்களுக்கு கை வலிக்குமா வலிக்காதா? வலிச்சா?' என்றாள்.

 'ஆமா,வலிக்கும், வலிச்சா வேற ஒருத்தங்க வந்து வீசுவாங்க.  அவங்க வரைஞ்சிருக்கிறது பார்க்க அப்ப‌டி  தெரியுது. ' என்றதோடு நிறுத்தியிருக்கலாம். கூட  'அது மயிலோட இறகுல செஞ்சிருப்பாங்க, அந்த காலத்துல ஃபேன்,ஏசில்லாம் கண்டுபிடிக்கலைல்ல' என்று சொல்லிவிட்டேன். அதிலிருந்து ஆரம்பித்தது.


"அந்த காலத்துல எல்லாம் நேச்சுரலா இருந்தது, இப்போதான் எல்லாம் டூப்ளிகேட்" என்றாள் மேலே சுத்தும் ஃபேனைக்காட்டியபடி.

"ஏன் அப்படி சொல்றே,அந்த காலத்துல பவர் இல்ல, இருட்டுலதான் இருக்கணும். எப்படி இருக்கும்? இப்போ ஜாலியா இருக்கு இல்ல,   ஏசி இல்லாம தூங்க முடியுதா? கம்ப்யூட்டர், பஸ், ட்ரெயின் அதெல்லாம் வேணும்தானே, அப்போதானே ஈசியா இருக்கு?" என்றேன். ஆயாவுக்காக அவரது அறையில் ஏசி மாட்டியிருந்தோம். வெயிலின் கொடுமை தாளாமல், அவரது அறையில்தான் கொஞ்ச நாட்களாக எங்கள் தூக்கம்.

"அந்த காலத்துல நேச்சுரலா காத்து வந்துது, மரம்,காடுலேருந்து. ஊஞ்சல் கூட நேச்சுரலா இருந்தது.இப்போ, செயின் போட்டு கட்டி..இது அதுன்னு" என்றாள், ஒரு பெரிய கிழவி மாதிரி!

"நேச்சுரலா ஊஞ்சல் எங்க இருந்துது? " என்றதும், சமீபத்தில் காட்டுக்கு சவாரி போனதை நினைவூட்டினாள். அது ஒரு டீப் ஜங்கிள் சஃபாரி. காட்டு மரங்களிடையே, ஊஞ்சல்கயிறு போல, பெரிய பெரிய கிளைகள் அங்குமிங்கும் தாழ்ந்து தொங்கின.அதுதான் நேச்சுரல் ஊஞ்சலாம். சில நேச்சுரல் ஊஞ்சல்களில் குரங்குகளும் தாவி ஓடி விளையாடின. அதிலிருந்து ஆரம்பித்து, பேச்சு, குரங்கிலிருந்து வந்த மனிதன் பற்றிய டாபிக்குக்கு வந்தது. ஆரம்பத்தில், குரங்கு மனிதன் ,கொஞ்சம் கொஞ்சமாக எப்படி இன்றைய மனிதனாக மாறினான் என்பதை பற்றி கொஞ்சம் வகுப்பெடுத்தாள். (ஸ்ஸ்...ப்பா!!)



ஒவ்வொரு ஸ்டேஜிலும் எப்படி மாற்றங்கள் வந்தது (வெளித் தோற்றத்தில்தான்) என்று நடித்து வேறு காட்டினாள். அதுதான் ஒரு படம் இருக்குமே, நான்கைந்து ஸ்டேஜுகளில், மனிதன் எப்படி நிமிர்ந்து நடக்கத் துவங்கினான் என்பது போல! நடுவில் எனக்கு டெஸ்ட் வேறு, குரங்கு மரத்தின் மேல் குட்டி போடுமா, மரத்தின் கீழே குட்டி போடுமா என்று! (என்னடா, குரங்குக்கு வந்த சோதனை...ச்சே...என்னோட பொது அறிவுக்கு வந்த சோதனை!!) மரத்தின் கீழேதான் குட்டி போடும், மேலே குட்டி போட்டால் குட்டி விழுந்துடுமே!! ஹிஹி.... அப்புறம், குரங்கிலிருந்து படிப்படியாக, வந்த அந்த மனிதன், எப்படி குகைகளில் வாழ்ந்தான், ஆடிப்பாடினான்,நெருப்பைக் கண்டு பிடித்தான்,குடும்பத்தோடு வாழ்ந்தான் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

குடும்பம் என்றதும், பப்புவுக்கு திடீரென்று, ஒரு சந்தேகம் வந்துவிட்டது. (குடும்பம் என்றாலே குழப்பம்தான் போல!!) "ஆச்சி, பாய் மட்டும் இருந்தா குழந்தை வருமாப்பா, கேர்ல்லருந்துதானே குழந்தைங்க பொறக்கும்? அப்போ, குரங்குலேருந்து மனுசந்தானே வந்தான், குழந்தைங்க எப்படி பொறந்துது, காரணம் சொல்லு"  (காரணமா? அவ்வ்வ்வ்...ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டா, பப்பு இப்படிதான், சம்பந்தமேயில்லாத வார்த்தையை சொல்லிவிடுவாள்!)

'என்ன காரணம் சொல்லணும்...புரியலையே' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.நடுவில், 'புரியலை' என்று சொல்லிவிட்டால், 'உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்" என்று அலுத்துக்கொண்டு போய்விடுவாள். அதனால், சமாளிப்பதற்காக, 'ம்ம்ம்ம்' என்று மொபைலை நோண்டிக்கொண்டிருந்தேன். 'புரியலை, இன்னொரு தட‌வை சொல்லு' என்றெல்லாம் தொணதொணக்காமல்,கொஞ்சம் அமைதியாக இருந்தால், சிலசமயம் அவளே விளக்குவாள்.  "குரங்குலேருந்து பாய்தான் வந்தான் இல்ல, பாய்க்கு குழந்தை பொறக்குமா? இல்லதானே"

அவ்வ்வ்வ்!! புரிந்துவிட்டது!

யப்பா புண்ணியவான்களா, கொஞ்சம் அந்த குரங்குலேருந்து மனிதன் வந்த படத்தில், ஒரு பெண்ணையும் சேர்த்துதான் வரைந்து வையுங்களேன்!! என்னமாதிரியெல்லாம் நாங்க கன்ஃபியூஸ் ஆக வேண்டியிருக்கிறது!!

Sunday, May 12, 2013

பப்பு டைம்ஸ்

என்முன் வந்து நாக்கை சப்புக்கொட்டி காட்டிக்கொண்டிருந்தாள் பப்பு. என்னன்னு கேட்டதுக்கு, கையிலிருந்து எடுத்து சாப்பிடுவது போல ஆக்சன்! "ஆ!! பாயாசமா?" என்றதும் மேலும் கீழும் தலையை ஆட்டினாள். "எனக்கு? எனக்கும் போய் எடுத்துட்டு வாப்பா?" என்றதும்,

"பாயாசம்? ஆர் பாய்சன்?" என்று கேள்வி வருகிறது....அவ்வ்வ்வ்வ்..(இத்தனைக்கும் குரலை ரொம்ப சாஃப்டாக வைத்துக்கொண்டுதான் கேட்டேன்...ஹிஹி)

"ஆயா, ஆச்சிக்கு ஒரு கப்-ல பாய்சன் வேணுமாம்" என்று கத்தியபடி சமையலறைக்கு ஓடிவிட்டாள்!

"நீயெல்லாம் ஒரு அம்மாவா, நீ ஒரு டப்பி" என்று பல்பு வாங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் 'பிரகாசமான டப்பி தின வாழ்த்துகள்'!!

 ************************************

ஒரு பெண், த‌ன் கைகளில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை ஏந்தியிருப்பதைப் போன்ற படத்தை வழியில் பார்த்தோம்.ரியல் எஸ்டேட் விளம்பரமாக இருக்கலாம்.

"ஆச்சி, அவங்க பில்டிங்கை கையில வைச்சிருக்காங்க பாரு. பில்டிங்கையே கையில தூக்கிட்டாங்களா?! அவங்க ஜையன்ட்டா ஆச்சி? அப்போ, நாம அவங்களுக்கு எலி மாதிரி இருப்போமா?  நமக்கு எலி எலி.அவங்களுக்கு நாம எலி!எப்படி ஆச்சி?!! எலிக்கு நாம ஜையன்ட். அவங்க நமக்கு ஜையன்ட். எலிக்கு அவங்க எப்படி இருப்பாங்க?!!   " #interpretations  #ஒருசின்னவிளம்பரம் Vs ஒருசின்னஞ்சிறுமூளை

Saturday, April 27, 2013

ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்குமா??

பப்புவின் பள்ளியில், விடுமுறையில் செய்வதற்கு வீட்டுப்பாடம் கொடுத்துவிடுவார்கள். ஒவ்வொரு பாடத்திலும், தேதிவாரியாக ஒருநாளுக்கு ஒரு பக்கம் வீதம், குறைந்தது இரண்டுவாரங்களுக்கு. இதற்கு சில பெற்றோர்கள் வந்து சண்டை போடுவார்கள். 'விடுமுறை என்பது குழந்தைகள் விளையாடுவதற்கும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதற்குமே. அப்போது கூட ஹோம்ஒர்க் செய்யவேண்டுமா' என்பது மாதிரி. அவர்கள் கேட்பது நியாயம்தான் என்றாலும்,  ஹோம் ஒர்க் கொடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.குறைந்தபட்சம் மறக்காமல் இருக்கவாவது உதவுமே!

அதோடு, தினமும் காலையில் எழுதுவது ஒரு பழக்கமாகவாவது இருக்கட்டுமே என்று நினைத்துக்கொள்வேன். காலையில் படிக்கும் வழக்கம் இப்போதைய  குழந்தைகளுக்கு இல்லவே இல்லைபோல தோன்றுகிறது. காலைபொழுது முழுதும், எழுந்து  கிளம்பவும், ஏழரை/எட்டுமணிக்கே பள்ளிக்குச் செல்லவுமே சரியாக இருக்கிறது. இதில், காலையில், ஃப்ரெஷ்ஷான மனதுடன் படிப்பது என்பதே கேள்விக்குறிதான். இரவில் ஹோமொர்க் செய்வது பெரும்பாலும் அரைத்தூக்கத்தில்! அதிலும், பப்புவுக்கு பேசவே நேரம் சரியாக இருக்கும்!! அதனால், விடுமுறையில் ஹோம் ஒர்க் கொடுப்பது தவறாக படவில்லை.

அப்படி கொடுக்கப்பட்டதில், கணித பாடத்தை செய்துக்கொண்டிருந்தோம். subtraction chart II. அதில் வரும் patterns பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.even number  யிலிருந்து பாதியாக கழித்தால் வரும் எண்கள் அமைக்கும் pattern பாரு, என்று 18 ‍- 9=9, 16-8=8, 14-7 =7.....4-2 = 2 -1 =1 சொல்லிக்கொண்டிருந்தாள்.

சொல்லிவிட்டு, "எனக்கு ஈவன் நம்பர்ஸ்தான் பிடிக்கும் ஆச்சி." என்றாள்.சில தினங்கள் முன்பு அவள் என்னிடம் கேட்டது கிளிக்காகி இருக்க  வேண்டும். என் ஃபேவரிட் நம்பர் என்னவென்று கேட்டபோது, ஏழு என்று சொன்னதும் என்னோட பேவரிட் நம்பரும் ஏழுதான் ஆச்சி என்று சொல்லியிருந்தாள். அது உடனே நினைவுக்கு வந்திருக்க  வேண்டும்.

"பட், எனக்கு ஏழு கூட பிடிக்கும். எப்படி,ஆச்சி? உனக்கும் எனக்கும் ஏழு பிடிக்குது? டி என் ஏ!! இல்ல??"

அவ்வ்வ்வ்வ்வ்.....'ஹிஹி' என்று ஒரு சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தேன்.

"ஆமா,ஆச்சி, ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்கும்,இல்ல?!!"- பப்பு

(அவ்வ்வ்வ்...எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!! ம்ம்..டூ மச் ஆஃப் ஃபோர்ட்ஸ்/மியூசியம்ஸ் அன்ட் பேலஸ்சஸ்! 'ஒரு காலத்துல இங்க கப்பல் வந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க ராஜாவும் மந்திரிங்களும் உட்கார்ந்திருப்பாங்க'...'ஒரு காலத்துல இங்க வார் நடந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க பீரங்கி குண்டு விழுந்துருக்கும்' ...ஒரு காலத்துல இங்க முத்துல்லாம் எடுத்திருப்பாங்க!...) அது மாதிரி ஒரு காலத்துல ஏழு கூட ஈவன் நம்பரா இருந்திருக்கும்தானே! :‍-))

Tuesday, April 23, 2013

பப்புவும் கண்ணகியும்

பப்புவுக்கு கண்ணகி கதையை சொல்லியிருந்தோம். கேரளாவுக்குச் சென்றபோது, அருகில் கண்ணகி கோயில் இருப்பதாகவும், அங்கு செல்ல வருடத்தில் ஒருமுறை மட்டுமே அனுமதிப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். சமீபத்தில், அண்ணா சாலை வழியே வரும்போது கண்ணகி சிலையையும் காட்டியிருந்தேன். எல்லாம் நிகழ்ந்தது ஓரிரு வார காலத்துக்குள்ளேயே! ஆனாலும், கண்ணகி பப்புவை ரொம்பவே டிஸ்டர்ப் செய்து விட்டாள்.

கண்ணகியை பிடிக்கவில்லை என்று ஒரே பொருமல்! தாங்க முடியவில்லை.முக்கியமாக கண்ணகி மதுரையை எரித்ததுதான் அவளால் தாங்க இயலாமல் இருக்கிறது. "அப்புறம், இப்போ எப்படி மதுரை இருக்கு" என்று கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு பொருமி தள்ளிவிட்டாள்.

"அவளை யாரு எரிக்க சொன்னாங்க? அவளோட ஹஸ்பெண்ட கொன்னுட்டாங்கன்னா, வேற ஹஸ்பென்ட் வைச்சுக்க வேண்டியதுதானே!!" ‍

அவ்வ்வ்வ் என்று ஜெர்க்காகி, "அவ இவன்னு சொல்லக்கூடாது பப்பு, அவங்கன்னுதான் சொல்லணும்" என்றதும்,

"அவங்க எதுக்கு மதுரையை எரிக்கணும்? அந்த ஊர்லே எத்தனை குழந்தைங்க இருப்பாங்க?அவங்கல்லாம் பாவம் இல்ல? அவங்களும்தானே எரிஞ்சிருப்பாங்க. கண்ணகி, அவங்க அம்மா ஊரை போய் எரிக்க வேண்டியதுதானே?" -  பச்சைமொளகா ரொம்ப கோபத்துடன் படபடத்தது.

சுனாமியில்,போரில்,நில நடுக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்படுவது பப்புவால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!!

"அவங்க அம்மா ஊரை மட்டும் எரிக்கலாமா?"  என்றேன், லாஜிக்காக கேட்டுவிட்ட  பெருமையுடன்! அப்புறம்தான் புரிந்தது,  பப்புவின் எண்ணத்தில், யாரும் தன் அம்மா இருக்கும் ஊரை எதுவும் செய்துவிட மாட்டார்கள் என்பது!!

"அதான், அவங்க அம்மா இருக்க ஊரை எரிக்கலைல்ல? ஆமா, ராஜாகிட்டேருந்து அவங்க நேரா எங்க போனாங்க? வத்திக்குச்சி வாங்க கடைக்கு போனாங்களா? ஏன் வத்திக்குச்சி கொடுத்தாங்க அவங்களுக்கு? குடுத்தே இருக்கக்கூடாது!!" - பப்பு

அவ்வ்வ்வ்வ்வ்!

"எரிச்சுட்டு எங்க போனாங்க?அவங்களை யாரும் திட்டலையா?" - பப்பு

"அதான் எல்லாரும் எரிஞ்சிபோயிட்டாங்களே!எரிச்சுட்டு கேரளா போயிட்டாங்க‌"

"அங்க யாரும் எதுவும் சொல்லலையா?" - பப்பு

"அவங்க, அப்புறம் 'புஷ்பக விமானத்துல' வானத்துக்கு போயிட்டாங்களாம்!"

"ஓ! அதான் இப்போ ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்ல்லாம்  அவங்களை தேடிக்கிட்டு இருக்காங்களா?!! - பப்பு

எப்படியும், நைட் சாப்பாடு கண்ணகி புண்ணியத்தில் ஓடிவிடும்! :-)

ஐயம் வெரி சாரி இளங்கோவடிகள்! நீதி இப்படி backfire ஆகும்னு எதிர்பார்க்கவேயில்லை!!  ;-) ;-)

Saturday, April 20, 2013

குழந்தைகளைத் துரத்தும் கேள்விகள்

மதியம், பப்புவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சாப்பிட அமர்ந்தேன்.

"ஆச்சி, புவன் வந்து ஹர்ட் பண்றான்னு அவனுக்கே தெரியாம என்னை ஹர்ட் பண்ணிட்டான்! "


தொண்டை அடைத்துக்கொண்டது. 'ஹையய்யோ!! நேரடியா சொல்லாம இப்படி சொல்கிறாளே?! ஏதாவது அடிதடியா ?!!' (ஒரு சில முன் அனுபவங்கள் தான்....) அதிலும், ஃப்ரெண்ட்சை மாட்டிவிடுவது/கோள் சொல்வது பப்புவுக்கு பிடிக்கவே பிடிக்காது.  அதே சமயம், அப்படி நடந்ததையும் என்னிடம் சொல்லிவிட‌ வேண்டும்,அவளுக்கு. வேன் நண்பர்களுக்கிடையே வரும் சண்டையை வீட்டில் வந்து சொல்லும் போது, "நான் ஆன்ட்டிக்கிட்டே கேக்கிறேன்/சொல்றேன்" என்று நான் சொல்வது அவளுக்குப் அறவே பிடிக்காது.அப்போது, கதையையே மாற்றிவிடுவாள். :‍-))

"என்ன ஹர்ட் பண்ணான்?"

"he is asking me 'you are rich or poor?'"

ஏற்கெனவே, பப்பு இந்த கேள்வியை எதிர்கொண்டிருக்கிறாள். எல்லாம் அவள் சொல்லித்தான் தெரியும். ஃப்ரெண்ட்ஸ் கேட்டபோது,"நாங்க நார்மல்" என்று சொன்னாளாம். அவர்களும், "நாங்களும் நார்மல்தான்" என்று சொன்னார்களாம்.  இந்த குட்டிப்பசங்களும், அவர்களது கேள்விகளும் /பதில்களும் என்று நினைத்து அப்போது சிரித்ததோடு சரி. இப்போதோ, "இது ஹர்ட் பண்ணிட்டான்"னென்று புதிய வடிவம்!!


it will hurt me right? he do not know that word hurts me.

.....(அவ்வ்வ்வ்)


"அப்படி கேக்கலாமாப்பா?அவனுக்கு தெரியல, அது எனக்கு ஹர்ட் பண்ணும்னு."ஹேய் புவன், why are you asking this?"  ந்னு கேட்டா, "ஹேய் குறிஞ்சி, கேட்டா என்ன?"னு சொல்றான்.he does not know that word will hurt others."

அவ்வ்வ்வ்வ்வ்வ்!! இன்னும் தொண்டையிலிருந்து இறங்கவேயில்லை. அப்படியே விக்கிக்கொண்டது.


"அன்னைக்கு, you are muslim or christian?  ந்னு கேக்கறான். that also will hurt me rite?"


'கொஞ்சம் சாப்பிட விடு, பப்பு! நீ எதுலேருந்து இதை கத்துக்கிட்டேன்னு நான் கொஞ்சம் யோசிச்சுக்கிறேன்!! :‍)' #மைன்ட்வாய்ஸ்

பப்பு, திடீரென்று தன்னை கிறிஸ்டியன் என்று சொல்லிக்கொள்வாள்.
"ஆச்சி, நான் கிறிஸ்டியன். நீ என்ன?" என்பாள்.  'எதுவுமில்லை' என்றால்,  'நீ சீக்' என்று மதம் மாற்றிவிடுவாள்."நான் முஸ்லீமாவே இருந்துடறேன்ப்பா" என்பாள் ஒருநாள். இந்தியாவின் மக்களைப்ப் பற்றியும், திருவிழாக்கள் பற்றியும் படிப்பதாலோ அல்லது 'நாம ஏன் எந்த பெஸ்டிவலும் கொண்டாட மாட்றோம்?" என்ற சந்தேகம் வந்ததாலோ தெரியவில்லை.


மேலும், அவளுக்கு இந்தி படிக்க ரொம்ப ஆசை. பள்ளியில் தமிழ் கிளாசில் இவளையும், புவனையும்,பிரம்மியையும் சேர்த்து மொத்தம் மூன்றுபேர்தான். மீதி அனைவரும் இந்தி. "நான் கிறிஸ்டியன், என்னை இந்தியிலே சேர்த்துவிடு" என்பாள் தமிழ்  வீட்டுப்பாடம் செய்யும் தினங்களில். மொத்தத்தில் நாங்களும், ஒன்றும் சொல்வதில்லை ‍ அவள் கிறிஸ்டியனாகவோ முஸ்லீமாகவோ இருக்கும்போது!   ஆனால், இப்போது புவன், அவளை அப்படி கேட்பது ஹர்ட்டிங்காக இருக்கிறதாம்!! அவ்வ்வ்வ்

"you should not ask this right?that hurted me . ஏன் ஆச்சி, அப்படி கேக்கலாமா மத்தவங்களை?"


"ஆமா, நாம மத்தவங்களை இந்த மாதிரி பர்சனல் கொஸ்டின்ஸ்ல்லாம் கேக்கறது சரியில்லை" என்ற பிறகே, சாப்பிட அனுமதித்தாள்! !திடீர் திடீரென்று பப்புவுக்கு இருக்கும் நல்லவள் விழித்துக்கொண்டுவிடுவாள். இன்று அப்படியான ஒரு தினம் போல‌!!

Tuesday, April 16, 2013

ஆஸ்ட்ரேலியா வண்டி in தமிழ்நாடு

"ஆச்சி, ஆஸ்ட்ரேலியா பஸ் பாரு...."

என்ன?? என்பது போல பார்த்தேன்.

"ஆமா, அந்த பஸ் ஆஸ்ட்ரேலியாலேருந்து வந்துருக்கு. au   ந்னு போட்டிருக்கு பாரு!!"


ஸ்ஸ்ஸ்....எங்கள் வண்டியிலிருந்து பார்க்கும்போது அதற்கு முன்னாலிருந்த‌  TN   என்ற எழுத்துகள் மறைந்திருந்தன. அதனால், அது ஆஸ்ட்ரேலியா வண்டியாகிவிட்டது.


"நேஷனல் பர்மிட்" என்று லாரிகளில் எழுதியிருப்பதைப் பார்த்து "ஏன் வேர்ல்ட் பர்மிட் இல்ல?" என்று சிறுவயதில் யாரைவது கேட்டு தொல்லை பண்ணியிருந்தா இப்படி திருப்பி கிடைக்குமாம்!!

Tuesday, April 09, 2013

இது ரெத்த பூமி ‍ - மூன்று முறை கட்டப்பட்ட கோட்டையின் கதை


காலைச்சூரியன் மிகவும் சுறுசுறுப்பாக தன் வேலையைத் தொடங்கியிருந்தது.சென்ற இரண்டு நாட்கள்போலில்லாமல் பளிச்சென்று இருந்தது வானம்.  நாங்களும் எங்கள் பயணத்தை  ஆரம்பித்தோம். மனம் ஒருவித மரியாதை/பயபக்தி/பெருமிதம் என்று கலவையான உணர்ச்சிப்பெருக்கால் நிரம்பியிருந்தது.செல்லுமிடம் அப்படியானது.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முதன்மையானதும் முக்கியமானதும், வீரத்துக்கு அடையாளமாகவும் விளங்கும் இடம்,அது.  இந்தியாவின் வரைபடத்திலிருந்தே அகற்றிவிட வேண்டுமென்று ஆங்கிலேயர்கள்  துடித்த இடம். இன்று கால ஓட்டத்தால்  ஒதுக்கப்பட்டு, ஓரமாக மௌனசாட்சியாக இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி. வீர பாண்டிய கட்டபொம்மனின் கோட்டை. 'வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி,வட்டி' என்று அந்த வீரமகனின்   குரல் கிண்ணென்று முழங்கிய கோட்டை.

தூத்துக்குடிக்கு அருகில் எங்கு செல்லலாம் என்று பார்த்தபோது, பாஞ்சாலங்குறிச்சியும்,ஒட்டபிடாரமும் செல்ல வேண்டிய பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தன. ஒன்று, ஏகாதிபத்தியத்தைப் பற்றியும் , காலனியாக்கத்தைப் பற்றியும் ஏன் எந்த தத்துவங்களையும் பற்றி அறியாமல், ஒரு வீரன், அந்நியரை எதிர்த்து நின்ற வீரமண். இன்னொன்று, சுதந்திரம் நம் பிறப்புரிமை என்ற முழங்கிய கப்பலோட்டிய தமிழன் பிறந்த ஊர்.

பப்புவுக்கு 'ஜான்சிராணி' வரலாறு தெரியும். ஜான்சிராணியைப் பார்த்து சிலநாட்கள் கத்தியை வைத்துக்கொண்டு திரிந்தாள். அவ்வப்போது, அவள் தன்னையே ஜான்சிராணியாக பாவித்துக்கொண்டு காற்றில் கத்திச்சண்டை போடுவாள். அவளது மாமாவிடமிருந்து பெற்ற ஜான்சிராணி புத்தகத்தை பொன்போல வைத்துக்கொள்வாள். அட்டையில் இருப்பது,ஜான்சிராணியின் படமல்லவா! வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அந்த அளவுக்கு தெரியாது.  ஆனால், ஜான்சிராணிக்கு எடுத்துக்காட்டாக/முன்னோடியாக‌ இருந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று  இந்த பயணத்தில் தெரிந்துக்கொண்டாள்.  இதற்கு முன்பும் பல கோட்டைகளுக்கு அவள் சென்றிருக்கிறாளென்றாலும், ஆங்கிலேயரை எதிர்த்த தன்மானமிக்க மன்னனின்(பாளையக்காரர்) கோட்டைக்கு வருவது இதுவே முதன்முறை. இதுவே எங்கள் மனதில், ஒரு மரியாதையை/பயபக்தியை தோற்றுவித்திருந்தது.

புழுதி படிந்த மண் சாலைகளில், ஏழு வளைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நம்மை வரவேற்கின்றன. ஒவ்வொரு வளைவும், கட்டபொம்மனின் அரசில் முக்கியமான பதவி வகித்தவர்களின் பெயர் தாங்கியிருக்கிறது. கூட‌, கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கம்மாவின் பெயரிலும் ஒரு வளைவு. இந்த வளைவுகளின் வழியே சென்றால் சாலை நம்மை நேராக கோட்டை வாசலில் கொண்டு போய் சேர்க்கிறது.




காலத்தை வென்ற கோட்டை

செம்மண் வண்ணத்தில் கோட்டைச்சுவர்.  இப்போது இருப்பது, மூன்றாவது முறையாக கட்டப்பட்ட கோட்டை. நுழைவுக்கட்டணம் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். ஒரு மரத்தின் கீழே பிள்ளையார், இன்னும் சில சிற்பங்கள்.பார்க்க சற்றுப் பழமையானதாக இருக்கிறது.

பாதைக்கு இருபுறமும் மரங்களும், செடிகளுமாக சிறு தோட்டம். அதன் வழியே சென்றால், கோட்டையின் மரக்கதவுகள். கட்டபொம்மனின் குதிரை,யானை மற்றும் காலாட் படையைக் குறிக்கும் விதமாக கோட்டையின் ஒவ்வொரு பக்கத்தில் வரிசையாக உருவங்கள் வரையப் பட்டிருக்கின்றன.தோட்டத்தின் மரத்திலிருந்து கரைகிறது ஒரு காகத்தின் குரல்.



அன்றைக்கு அநேகமாக நாங்கள்தான் முதல் விருந்தினர். 'இந்த பக்கம் வாங்க' என்று வலப்புறம் வரச் சொல்கிறார் ஒருவர். சுற்றும் முற்றும் பார்க்கிறோம். கோட்டைச் சுவரின் முழுமையைக் காண முடிகிறது. செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைகிறோம். ஒன்றும் பேசத்தோன்றவில்லை. அவரவர் எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறோம்.


'இந்தக்கோட்டையிலா கட்டபொம்மன் வாழ்ந்தார் 'என்ற எண்ணம்  தோன்றுவதற்குள், கைகளில் ஒரு சுட்டுக்கோலை கொண்டு பேச ஆரம்பிக்கிறார், அவர். உட்சுவர் முழுக்க  கட்டபொம்மனின் வரலாறு, படங்களாக வரையப்பட்டிருக்கிறது.தெள்ளத் தெளிவான தடங்களில்லாத தமிழில், 46 தலைமுறைகளுக்கு முந்தைய வரலாறு ஆரம்பிக்கிறது.




முதலாம் கெட்டிபொம்மு ராஜாவான வரலாற்றைத தொடர்ந்து, பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு நீள்கிறது. சாலிக்குளத்தில்,முயல் ஒன்று வேட்டைநாயை துரத்துவது குடகின் கதையை நமக்கு நினைவுபடுத்துகிறது. வேட்டைநாயை முயல் துரத்திய குறிப்பிட்ட இடத்தில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்பி, கிபி 1101 ஆம் ஆண்டு அவ்விடத்தில் கோட்டை கட்டி சிம்மாசனம் ஏறுகிறார் பொம்மு.


வரலாற்றின் சில பக்கங்கள்

கிபி 17 ஆம் நூற்றாண்டில், பாளையக்காரர்களாக தன்னாட்சி பெற்றாலும், 72 பாளையங்களை உள்ளடக்கிய பாஞ்சாலங்குறிச்சியே சிறந்து விளங்குகிறது. 47ஆவது தலைமுறையாக, தனது 30ஆவது வயதில் அரியணை ஏறுகிறார், வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது தம்பிகள், ஊமைத்துரை என்ற தளவாய் குமாரசாமி மற்றும் துரைசிங்கம். வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி  ஜக்கம்மாள்.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி உள்நுழைகிறது. அளவுக்கதிகமாக கடன் வாங்கிய நவாபுகள் நேரிடையாக வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு வழங்குகின்றனர். இதில் மற்ற பாளையக்காரர்கள் சரணாகதி ஆகிவிட, வரிதர மறுத்து எதிர்ப்பவர் கட்டபொம்மனும் பூலித்தேவரும்தான். பாஞ்சாலங் குறிச்சியைத் தேடி, மன்னனை சந்திக்க‌ நெல்லையிலிருந்து வருகிறார், ஆலன். ஆலனை எதிர்த்து தன்மானத்துடன் முழங்குகிறார், வீரபாண்டிய கட்டபொம்மன்.  பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைச்சுவர்களில் இன்னமும் எதிரொலிக்கிறது,அந்தக்குரல்!

சாமாதான பேச்சுவார்த்தைக்காக, ஆங்கிலேயர்கள் அழைக்க, ராமநாதபுரம், சேதுபதி அரண்மனையில்  ஜாக்சனை காணச் செல்கிறார், கட்டபொம்மன். அங்கும் வரி,வட்டியைப் பற்றிய பேச்சுவர ஜாக்சனை எதிர்க்கிறார் கட்டபொம்மன்.மன்னரை சிறைபிடிக்க உத்தரவிடுகிறான் ஜாக்சன்.

வீரபாண்டிய கட்டபொம்மன், வாளால் பகைவரை வீழ்த்தி பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். வந்தபின்னரே, தானாபதியை காணாமல் திகைக்கிறார், மன்னர். தானாபதி, சேதுபதி அரண்மனையிலே ஆங்கிலேயர்களிடம் மாட்டிக்கொண்டுவிடுகிறார். சிலநாட்களில், தானாபதி விடுதலை செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். ஆங்கிலேயர்கள், வரியாக சேர்த்து வைத்திருந்த நெல்களஞ்சியத்தைக் கொள்ளையிடுகிறார். இது, ஆங்கிலேயர்களை இன்னமும் கோபமூட்டியது. ஆங்கிலேயரை பழி வாங்க தானாபதி வகுத்த இந்த வஞ்சகம், கட்டபொம்மனை தலைகுனிய வைத்தது.



பானர்மேன் தலைமையில், பீரங்கிப்படையுடன் ஆங்கிலேயரின் ஐவகைப்படைகள் பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி வளைக்கின்றன. இது எதிர்பாராத போர் என்றாலும், பாஞ்சாலங்குறிச்சியின் வீரர்கள், எதிரிகளின் பலத்தைக் கண்டும் அஞ்சாமல் கோட்டையின் மீது நின்று போர் புரிகின்றனர். கவண்கற்களாலும்,வேல்களாலும் போரில் வெற்றிபெறுகின்றனர். இந்தகோட்டையை, தகர்ப்பது பற்றிய பானர்மேனின் ப்ளூபிரிண்ட் இன்றும் லண்டன் ஆவண காப்பகத்தில் இருப்பதாக கூறினார்,அவர்.

வீரன் வெள்ளையத்தேவன், இந்த போரில்தான் இறந்துபோகின்றான். ஆங்கிலேயர் பக்கத்திலும்  நாசமே விளைகிறது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் பாதிப்படைகிறது. போரில் இறந்த வெள்ளைத்தளபதிகளுக்கு, ஒட்டப்பிடாரத்தில் கல்லறையும், நினைவுச்சின்னமும்  எழுப்பியுள்ளனர்.எதிரிகளுக்கு நினைவுச்சின்னம் எழுப்பிய  கட்டபொம்மனின் பண்பு! இதன்பிறகே, கட்டபொம்மனின் தலைக்கு விலை வைக்கப்படுகிறது.

கோட்டையிலிருந்து தப்பித்து விஜயரகுநாத தொண்டைமானின் அரண்மனையை அடைகிறார், கட்டபொம்மன். கோட்டையை கைப்பற்றுகின்றனர், ஆங்கிலேயர்கள். கோட்டையில் நாட்டப்பட்ட ஆங்கிலேயரின் கொடியை உடைத்து வீரச்சாவடைகிறார், சுந்தரலிங்கம் என்ற வீரர். தொண்டைமானின் அரண்மனையிலோ, கட்டபொம்மன் எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கப்படுகிறார். ஒப்புக்கு ஒரு விசாரணை வைத்து,   கயத்தாறில் நெடுஞ்சாலை பகுதியின் புளியமரத்தின் தூக்குக்கயிறை சுருக்கி, வாழ்வை முடித்துக்கொண்டார். மற்ற பாளையக்காரர்கள் எல்லாரும் வெறுமே பார்த்திருக்க, வணங்காமுடியாக உயிர்துறந்தார் கட்டபொம்மன். 

ஊமைத்துரை சூளுரைத்து இரண்டாம் முறையாக கோட்டையை கட்டுகிறார். இதைப்பற்றி, வரலாற்றில் படித்திருப்போம். முட்டையையும், வெல்லத்தையும், சுண்ணாம்பையும் கொண்டு ஆறே நாட்களில் ஏழாயிரம் எழுப்பிய கோட்டையென்று! மெக்காலே போர் தொடுத்து, கட்டபொம்மனின் சகோதர்களை,ஏராளமான பாஞ்சாலங்குறிச்சி வீரர்களையும் அழித்தொழிக்கின்றர். ஊமைத்துரை, மருது சகோதர்களுடன் சேர்ந்து விடுகின்றார்.


கயத்தாறில், கட்டபொம்மன் உயிர்நீத்த இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது. அவரை, தூக்கு மாட்டிய புளியமரம் பட்டுபோயிற்று என்று முடிக்கிறார், பராமரிப்பாளர்.



கதைசொல்லியைப்போலவும், அதே சமயம் வரலாற்று நிகழ்வுகளையும் ஒருசேர சுவாரசியமாக‌, படங்களை காட்டி விவரிக்கிறார், பராமரிப்பாளர். மற்றபடங்களில், வீரதீரமாக தெரியும் கட்டபொம்மன், இறுதிகட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனாக உருமாற்றம் அடைந்து இருக்கிறார். தூக்கிலிடும்போது கூட சிவாஜியாகவே இருக்கிறார்.உட்புறச்சுவரின் படங்கள் ஒரு சுற்று முடிந்ததும் இரண்டாம் சுற்று ஆரம்பிக்கிறது. நாமும் கோட்டையை உள்ளுக்குள்ளாகவே ஒரு முறை சுற்றியிருக்கிறோம். மனம் வேறு எதைப்பற்றியும் எண்ணாமல், கட்டபொம்மனையும்,போரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறது.

இரண்டாம் முறையும், கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர் வன்மத்துடன் கோட்டையை உருத்தெரியாமல் அழிக்கின்றனர். கோட்டை இருந்த இடம் முழுவதும் ஆமணக்கையும், முட்செடிகளையும் விதைக்கின்றனர். பார்க்கும் நமக்கு நெஞ்சமே எரிகின்றது. இப்போது இருக்கும் கோட்டை, ஒரிஜினல் கோட்டையின் மாதிரி மட்டுமே. அதில், ஒரு சிறு பங்குதான் இது என்று கூறி இரண்டாம் சுற்றுக்குப் பிறகு உள்ளே நுழைகிறார்.

பின் தொடரும் நம்மை, எதிர்கொள்வது, வீரபாண்டிய கட்டபொம்மன். கோட்டையின் மையப்பகுதியில், வாளோடு மிடுக்காக வீற்றிருக்கிறார். ஊமைத்துரை,தானாபதி,சுந்தரலிங்கம் சகிதம் அவ்விடம் ஒரு சிறு அரசவையாக காட்சியளிக்கிறது. நாம் விரும்பினால், அரசரோடு சேர்த்து நம்மை புகைப்படமெடுத்துத் தருவதாக பராமரிப்பாளரே முன்வருகிறார்.

எஞ்சியிருக்கும்  சில ஞாபகங்கள்

இன்று நாம் பார்க்கும் கோட்டை, 1974ஆம் ஆண்டில் நமது அரசால், கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக எழுந்து நிற்கிறது.
 நமது வரலாற்று ஆர்வத்தை பார்த்த பராமரிப்பாளர், கோட்டைக்குள் அகழ்வாய்வில் கிடைத்த கவண்கற்களையும், பீரங்கிகுண்டுகளையும் காட்டுகிறார்.  விம்மி நெகிழ்ந்த மனத்துடன், வெளியே வந்தால் எதிரில் ஜக்கம்மாவின் கோவில். இதுவும் புதிதாக கட்டியதுதான்.

 அதை அடுத்து, தொல்லியல் துறையின் தகவல் பலகை நம்மை வரவேற்கிறது. உள்ளே செல்ல இயலாதபடி வலைபோடப்பட்டிருக்கிறது. உள்ளே, கோட்டையின் அஸ்திவாரத்தை நன்கு காணமுடியும். அரசவையும், அந்தப்புரமும், மணமண்டபமும் நமது பார்வைக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இதன் அருகில்தான், ரகசிய பாதைகள் இருக்கின்றன.இன்று அவை தூர்ந்துபோய்  இருக்கின்றன‌.



பார்த்து முடிக்கும்போது, இன்னும் ஒன்றிரண்டு விருந்தினர்கள் கோட்டை வாயிலில் நுழைகின்றனர். ஒருகாலத்தில் பரபரப்பாகவும், வேல் ஈட்டிகளின் சப்தங்களாலும் நிறைந்த கோட்டை,இன்று, எப்போதாவது கேட்கும் பறவையின் குரலைத் தவிர, கோட்டை மிகுந்த அமைதி கொண்டிருக்கிறது. 


வரலாற்று பாடபுத்தகங்களைத் தவிர, பொதுவாக‌ மறக்கப்பட்ட இடமாக காட்சியளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் மறைக்கப்பட்ட புதையல்கள். நமது பிள்ளைகளை தவறாமல் அழைத்துச் சென்று காட்டப்பட‌ வேண்டிய இடங்கள். இப்படி எண்ணியபடி,கோட்டையின் கிரில்கதவுகளை திறந்துகொண்டு வெளியே வருகிறோம். கட்டபொம்மனின் கடைசி வாரிசு என்று அறிமுகத்துடன் ஒருவரை மரத்தடியில் கண்டோம்.


இன்று

கட்டபொம்மனின் உறவினர்கள் ஒரு 200 பேர் இப்பகுதியில் வசிக்கின்றனர். பெரும்பாலும், அன்றாடக்கூலிகளாக வாழ்க்கை நடத்துகின்றனர். அதில் ஒருவர்  பீமராவ் கட்டபொம்மு. கட்டபொம்முவின் கடைசி வாரிசு. தலையில் ஒரு தலைப்பாகைபோல கட்டிக்கொண்டிருந்தார்.  எங்களைக் கண்டதும், கையில் இருந்த பையைத் திறந்தார். போட்டோக்களையும், அச்சடிக்கப்பட்ட காகிதங்களையும் தந்துவிட்டு. "இதுல டேரக்ட்ன்னு போட்டிருக்கு" என்றார்.  அவர்தான் நேரடி வாரிசு என்பதற்கன அத்தாட்சிகளாம், அந்த அரசாணைகள்.  கலெக்டரிடமிருந்தும், சில அதிகாரிகளிடமிருந்தும் கையெழுத்துடனான அரசாணைகள்.ஊமைத்துரையின் மனைவி கர்ப்பிணியாக இருந்ததால் அவரை ஆங்கிலேயப்படை விட்டுவிட்டது. அதில் கடைசி வாரிசு.  'நீங்க எதுவும் படிக்கலையா?" என்றதற்கு, "வாய்ப்பு இல்லையில்ல" என்றார். கிட்டதட்ட 70 ஆண்டுகள் இவர்கள் புதுக்கோட்டைக்கு வரக்கூடாது என்று ஆணையிருந்ததாம். அதானால், நிலையில்லாத வாழ்க்கையை  வாழ்ந்தார்களாம். இப்போது, ஊரில் எந்த விழாவாக இருந்தாலும், இவருக்குத்தான் முதல்மரியாதை. அதில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை காட்டினார்.
நாங்கள், இவரிடம் பேசுவதைக் கண்டதும் எங்கிருந்தோ வந்தார் இன்னொருவர். பார்க்க ஏதோ பூசாரி போலவே இருந்தார். கூப்பிட்டு, தன்னை போட்டோ எடுக்கச் சொன்னார். எடுத்ததும், தன்னை அறிமுகப் படுத்திகொண்டார். மெய்காப்பாளர் சுந்தரலிங்கத்தின் கடைசி வாரிசாம் இவர். கோட்டையின் மீதிருந்து உயிர் துறந்த வீரன் சுந்தரலிங்கம்.

ஆனாலும், எங்கள் கவனம் கட்டபொம்மனின் கடைசி வாரிசின் மீதிருந்ததை கண்டதும், பப்புவை அழைத்தார். பப்பு சற்று அருகில் சென்றதும், பெயர் மற்றும் விபரங்களைக் கேட்டார். இதன் நடுவில் கட்டபொம்முவின் வாரிசு தொடர்ந்து,விடாமல் தன்னைப் பற்றிய விபரங்களை கூறியபடியிருந்தார். நான் பப்பு இருந்த இடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். பப்புவின் பெயரைச் சொல்லி, கோயில் இருந்த திசை நோக்கி ஒரு பாடலைப் பாடினார். தெலுங்கா தமிழா என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது, அது. பின்னர், 'நீ கண்டிப்பா டாக்டர்தான் ஆகப்போறே' என்றார் பப்புவிடம்.

கட்டபொம்முவின் வாரிசு ,இங்கு, விடாமல் பேசிக்கொண்டிருந்தார். அரசாங்கத்திடமிருந்து, மாதந்தோரும் ரூ 1000 மட்டுமே கிடைப்பதாக கூறி விட்டு, முத்தாய்ப்பாக‌ 'எங்கே, கையை காட்டுங்க' என்றார். 'அதிலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையில்லை' என்று மறுத்தோம். இதற்குள், டாக்சி டிரைவர், 'வாங்க வாங்க' என்று சைகை செய்தார். ஏறும்சமயம், சுந்தரலிங்கத்தின் வாரிசு, என் வயதையும் பெயரையும் கேட்டார். சொன்னதும், இதற்குப்பின் என்ன படிக்கப்போகிறேனென்று நினைத்தாரோ என்னவோ, கோயிலை நோக்கி பாடலைப்பாடி '35வயதில் சட்டசபைக்கு செல்வாய்' என்று  ஆசீர்வதித்தார்.

திரும்பவும் ஒவ்வொரு வாயிலாக கடந்து வந்தோம். கரிசல் பூமியிலிருந்து வீசியது காற்றின் வெம்மை. உள்ளே ஒரு மகத்தான வரலாற்றை கேட்டு வந்தால், யதார்த்தம் வெளியில் முகத்தில் அறைகிறது. 2000 பொன்கள், 100/150 கோட்டை நெல் என்று தனது ஆட்சியாளர்களுக்கு வாரி வழங்கிய கட்டபொம்மன், 'எடைக்கு எடை தங்கம் அளிக்கிறேன், நம்பி வந்தவர்களை காட்டிகொடுத்து பழக்கமில்லை' என்ற கட்டபொம்மனையும், வருபவர்களிடம் எதிர்பார்க்கும் அவனது  வாரிசு! அரசாங்கத்தின் சிக்கனத்தை, எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை.

இதற்கு நடுவில்,பப்பு வேறு அவள் பங்குக்கு!
'ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்' ஆக வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்த பப்பு, அவர் சொன்ன 'நீ டாக்டரா ஆயிடுவே' என்ற தீர்க்கதரிசனத்தைக் கேட்டு கலவரமடைந்திருந்தாள். 'அதெல்லாம் பொய்ப்பா, உனக்கே தெரியும் இல்ல, நீ என்ன ஆகணுமோ அதை நீதான் டிசைட் பண்ணனும்,அவருக்கு ஸ்பேஸ்ன்னா என்னன்னே தெரியாது, ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்ன்னு ஒன்னை கேள்வியேபட்டிருக்க மாட்டாரு,அதான்' என்று அவளுக்கு தெளிய வைக்க வேண்டியிருந்தது. அவளை திசைதிருப்ப, நுழைவாயிலில் வாங்கிய கட்டபொம்மனைப் பற்றி புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தோம்.


இடம்:

தூத்துக்குடியிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி 18 கிமீ
ஒட்டப்பிடாரம் அங்கிருந்து 2/3 கிமீ

நுழைவுக்கட்டணம் : ஒருவருக்கு 2 ரூ

புத்தகம்:

வீரம் விளைந்த மண்ணில் வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆசிரியர்: மு. முருகையா
விலை : ரூ 30

Saturday, April 06, 2013

ஒரு விளம்பரமும் சில நினைவுகளும்

ஒன்பதாம் வகுப்பில்தான், எங்கள் பள்ளியில் செக்ஷன் பிரித்து மாற்றுவார்கள். இரண்டு செக்சன்களே அப்போது இருந்தது. அப்படி எங்கள் 'ஏ' செக்சனில் வந்து சேர்ந்தாள் ரேணுகா. அவள் நன்றாக படிப்பாள் என்றும் எங்களுக்கெல்லாம் நல்ல போட்டி இருக்கும் என்றும் ஏதோ ஒரு ஆசிரியர் சொல்லியிருந்தார். அதிலும் அவள், இரண்டாவது ரோ‍வில்தான் அமர்ந்தாள்.சரி, இன்னொரு ஞானசௌந்தரி போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, எங்கள் அரட்டை கும்பலோடு அவளும் சேர்ந்து எல்லோரும் நல்ல நண்பர்களாகிவிட்டோம்.

ரேணுகாவின் மீது  வகுப்பிலிருந்த எல்லாருக்கும் லைட்டாக பொறாமை இருந்தது என்று நினைக்கிறேன். அவள் அணிந்திருக்கும் வளையல், தலையில் மாட்டியிருக்கும் விதவிதமான ஹேர்கிளிப்புகள் மற்றும் உடனுக்குடன் ஃபேஷனுக்கு வரும் அத்தனை விதமான மிடிகள்/பாவாடை சட்டை என்று கலர்புல்லாக வருவாள். சுடிதார் அணிய மட்டும் அவளது வீட்டில் தடை. உடைகளைவிட, அவளது வளையல், ஹேர் க்ளிப்புகளே எல்லாரையும் ஈர்த்தன.'எங்கே வாங்கினே' என்ற கேள்விக்கு 'பெரிய‌அக்கா வாங்கி தந்தாங்க' என்றோ 'நடுஅக்கா  கொடுத்தாங்க' என்றோ 'சின்ன அக்கா ஆரணிலேருந்து வாங்கிட்டு வந்தாங்க' என்றோ சொல்லுவாள். காந்திமதி ஒரு பெருமூச்சோடு, 'இருந்தா ரேணுகாவோட‌ அக்காங்க மாதிரி இருக்கணும்' என்பாள்.

கால் பரீட்சை/அரை பரீட்சை லீவு வந்தால் நண்பர்களின் வீடு வீடாக போவது வழக்கமாகியிருந்தது. ஒரு நாள் சபீனா வீடு, ஒரு நாள் எங்கள் வீடு என்று.
அப்படி, ஒரு நாள் ரேணுகா வீட்டுக்கு போனபோது அவளது அப்பா மதிய உணவுக்கு வந்திருந்தார். ரேணுகா, எங்களை சத்தம் போட்டு பேச வேண்டாமென்றும், சத்தமில்லாமல் சிரிக்கவும் கேட்டுக்கொண்டாள். ஒன்றுமில்லாமலே நாங்கள் 'கெக்கே பிக்கே' என்று சிரிப்பதாக அப்போது எல்லாரிடமும் பேர் வாங்கியிருந்தோம். சிரிக்காமலிருப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது, அப்போது. 


அவ்வப்போது, ரேணுகா, அவளது அப்பா ஸ்ட்ரிக்ட் என்று சொல்லியிருக்கிறாள்.  அது தெரிஞ்ச விசயம்தானே என்று நினைத்திருந்தேன். மேலும், எல்லார்  வீட்டிலுமே அந்த ஸ்ட்ரிக்டைதான் அனுபவித்  திருக்கிறோமே!   'இனிமே தெருவிலே விளையாடாதே!', 'நீ கடைக்கு போக வேணாம், தம்பி போகட்டும்', 'மாடிக்கு எதுக்கு அடிக்கடி போறே' என்று எல்லாருமே அனுபவிப்பதுதானே என்று!!  ரேணுகா அப்பாவின், அந்த ஸ்ட்ரிக்டின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது, அவளது பதட்டத்தையும் பயத்தையும் அப்போதுதான் நேரில் கண்டபிறகு. நாங்கள் மாடி அறையில் குசுகுசுவென்று  பேசி சிரித்துக்கொண்டிருந்தோம். ரேணுகாவோ, மாடிக்கும் கீழுக்கும் அலைந்து நாங்கள் பேசுவது கீழே கேட்கிறதா என்று டென்சனிலேயே இருந்தாள். ஒருவழியாக, அவளது அப்பா சென்றவுடன் சகஜமானாள். 'பெண்கள் சத்தமாக பேசுவதோ,சிரிப்பதோ கூடாதாம்,அவருக்கு'.

அதோடு, அவள் சொன்னதுதான் அதிர்ச்சி. அதாவது, பத்தாவதுக்குப் பிறகு அவள் படிப்பது சந்தேகம்தானாம். அவளது அக்காக்கள் எல்லோரும் ஏழாவது அல்லது எட்டாவதுதான் நின்று விடுவார்கள் என்றும், சில வருடங்கள் வீட்டிலிருந்தபின் கல்யாணம் செய்துகொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினாள். அப்புறம், வருடா வருடம் அக்காக்கள் யாரேனும் பிள்ளைபேறுக்காக வீட்டுக்கு வந்து தங்கிச் செல்வார்கள். ரேணுகா அடம்பிடித்து சாப்பிடாமல் எல்லாம் இருந்து  சண்டைபோட்டு ஒன்பதாவது வகுப்புக்கு வந்திருக்கிறாள்.  அதாவது, அவர் சர்வீசிலிருக்கும்போதே எல்லாருக்கும் கல்யாணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்பதுதான் அவர் பாலிசி.இதையெல்லாம் அவள் இவ்வளவுநாட்களாக எங்களிடம் சொன்னதேயில்லை. இதைக்கேட்டதிலிருந்து நாங்கள் ரொம்ப சோகமாகிவிட்டோம்.


 அவரோடு இருக்கும் நண்பர்கள்தான் அவரை கெடுப்பது என்று ரேணுகா அவ்வப்போது பொருமுவாள். 'வேலையிலிருக்கும்போதே கல்யாணம் செய்து கடமையை முடித்தால்தான் நமக்கு கௌரவம்' என்று அவர்கள் அவரிடம் சொல்லுவார்களாம். 'பொண்ணுங்க படிச்சு கையில ஒரு வேலையை வைச்சுக்கணும்' என்று ஆயா என்னை சொல்லி சொல்லி வளர்த்திருந்ததால் 'ஏன் இன்னும் பழங்காலத்து மாதிரி இருக்காங்க' என்று மட்டும் தோன்றியது. ஆனால், ரொம்பவெல்லாம் ஆராயவில்லை, அப்போது.

பத்தாவது முடித்ததும், எப்படியோ ரேணுகா கெஞ்சிக் கூத்தாடி அப்பாவிடம் அனுமதி பெற்று ப்ளஸ் ஒன் சேர்ந்துவிட்டாள்.அதுவே எங்களுக்கு சந்தோஷம் மற்றும் ஆச்சர்யம். ப்ளஸ் டூ முடியும்போதோ, எல்லாருக்கும் எந்த காலேஜில் சேருவோம்? என்ன படிக்கலாம்? என்ற பேச்சுவரும்போது மட்டும் நிச்சயமாக சொல்லிவிடுவாள், 'ஏதோ இது படிக்கிறதே பெரிய விஷயம்!! இதுக்கு மேலல்லாம் வீட்டுல கேக்க முடியாது!" என்று. ரிசல்ட் வந்து எல்லாரும் காலேஜில் செட்டிலானபிறகு, அந்த வருட பூஜா ஹாலிடேஜில் எல்லோரும் சந்தித்தோம். காலேஜ் கதைகளை பேசிப்பேசி, பள்ளிக்கூடம்தான் பெஸ்ட் என்றெல்லாம் பீலா விட்டுக்கொண்டிருந்தோம். ரேணுகாவுக்கு கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தோம். அவள் மகிழ்ச்சியாகவே இருந்தாள். 'இதுதான் லைஃப்' என்று தனது நிலைமையை ஏற்றுக்கொண்டதாகவே பட்டது. மாப்பிள்ளை வீட்டுக்கு அவளது  ஃபோட்டோ போயிருக்கிறதாம்.  விரைவில் அவர்கள் பார்க்க வருவார்களாம். அவளும் மாப்பிள்ளையின் போட்டோவை காட்டினாள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை மலர்ச்சியுடன் அவள் எதிர்கொள்வதாக நினைத்துக்கொண்டேன்.


சில மாதங்களில் ரேணுகாவும் திருமணமாகி வேறு ஊருக்கு போனாள். கல்லூரி விடுமுறைகளில் கல்லூரி நண்பர்கள் ஊர்களுக்குச் செல்வதும், ஊருக்கு வரும் நேரம் ரேணுகா சந்திக்க இயலாமலும் கிட்டதட்ட தொடர்பறுந்த நிலை. வெகுசமீபத்தில், பெரிம்மா கேட்டார், 'ரேணுகா உன்க்கிட்டே பேசுச்சா? ஃபோன் நம்பர் வாங்கிச்சு' என்று! ரேணுகாவின் கணவர் இறந்துவிட்டதாகவும், இரு பையன்களுடன் ஆம்பூருக்கே வந்துவிட்டதாகவும் சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். பெற்றோர்கள் இல்லாத நிலையில், தனியாக இருந்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுவதாக கூறினார். குடும்பத்துக்கான உலைக்காக அவள்தான் ஏதோ வேலைக்கு போவதாகவும், ஆனால் படிப்புக்கே பற்றவில்லையென்றும் சொன்னதை கேட்டபோது எனக்குள் இதயத்தை திருகுவதை போன்ற வலி!!

ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்திருந்தாள் ரேணுகா. ரொம்ப தூரம் அனுப்ப மனமில்லாவிட்டாலும், அரை மணித்தொலைவில் அமைந்திருந்த ஜெயின் கல்லூரிக்காவது அனுப்பியிருக்கலாம்.குறைந்தபட்சம், ஒரு டிகிரி படித்திதிருந்தாலாவது, ஏரியாவொக்கொன்றாக முளைத்திருக்கும் ஏதாவது பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக சேர்ந்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன்.  


ச்சே, நல்லா படிக்கிற பொண்ணை அவங்க அப்பா இப்படி பாழாக்கிட்டாரே என்று கோபமாகவும் வந்தது. இப்படி அவர்கள் பாதுகாத்து பாதுகாத்து என்ன பெரிதாக சாதித்துவிட்டார்கள்? உங்கள் பாதுகாப்பினால் உங்கள் மகளின் வாழ்க்கையை அல்லவா வீணாக்குகிறீர்கள்? இப்பொழுது நிலைமை கொஞ்சமாக மாறியிருக்கலாம், அதாவது பெண்ணை படிக்க வைப்பதற்கு மட்டும். ஆனால், வேலைக்கு போக வேண்டுமென்றோ,அவள் தனது காலில் நிற்க வேண்டுமென்றோ எத்தனை அப்பாக்கள் நினைக்கிறார்கள்? 

கற்பகத்தின் அப்பா, ஊருக்கு போகும்போதும் வரும்போதும் கல்லூரிக்கு வந்து அழைத்துச் செல்வார். அல்லது, துணைக்கு யாரையாவது அனுப்புவார். கணவன் தன்னை வெளிநாட்டில் அடித்து கொடுமைபடுத்துகிறான் எனும்போதுகூட அவளது பயமெல்லாம்,  டிக்கெட் புக் செய்தால் எப்படி தனியாக வருவது, பயமாக இருக்கிறது, கூட யாராவது வந்தால் பரவால்லை' என்பதுதான். 'கூடவே வந்து, கூடவே அழைத்துப் போய், கூடவே இருந்து எல்லாம் செய்து நீங்கள் வாரிக்கொண்டதுதான் என்ன? திருமணத்தை, வேறு ஒரு ஆடவனை நம்பும் நீங்கள் ஏன் உங்கள் பெண்ணை நம்ப மறுக்கிறீர்கள்?'
என்றெல்லாம் அவளது அப்பாவிடம் நறுக்கென்று கேட்க வேண்டும்போல இருந்தது. அவரிருந்தால் கேட்டிருக்கலாம்,ஒருவேளை! இப்பொழுது அவளுக்கு ஆறுதலைத்தவிர வேறு எதுவும் செய்ய இயலாதிருக்கிறது.

சிலநாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் பார்த்தேன். பேஸ்புக்கில் யாரோ பகிர்ந்திருந்தார்கள். ஆகோ ஓகோவென்று எல்லாரும் ஒரே புகழாரம். ஐசிஐசிஐ ப்ரூடென்சியலின் விளம்பரம் அது. உடையாமல் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்ப்பதில் தொடங்கி, தலையை இடித்துக்கொள்ளாமல் தான் கீழே போட்ட துண்டை எடுக்க மனைவை பாதுகாக்கும் கணவன் முதல்,  அப்பாவுக்கு அடுத்து பாதுகாக்க நான் இருக்கிறேன் என்று சொல்வதுவரை!! (இதில், ரொம்ப முரணானது, கீழே போட்ட துண்டை எடுக்கும் காட்சிதான்... அவ்வளவு அக்கறை இருந்தால் துண்டை அதற்குரிய இடத்தில் போட வேண்டியதுதானே! ;‍)) அதை பார்த்ததிலிருந்து இன்னும் உரக்க கத்த வேண்டும் போலிருக்கிறது, 'இப்படி பொத்தி பொத்தி வளர்க்கிறதை எப்பதாண்டா விடப்போறீங்க?'!!
 





இந்த விளம்பரம், மறுபக்கத்தில் எங்களை/பெண்களை கேலி செய்வது போலிருக்கிறது.பாதுகாக்க கூட ஒரு ஆண் இருந்தே ஆக வேண்டும் என்பதுபோல! ஆண் இல்லாமல் உங்களால் இந்த உலகில் தனித்து பாதுகாப்பாக வாழ இயலாது என்ற எண்ணத்தை கட்டமைக்கிறது. ஆண் துணையில்லாமல் குழந்தைகளை வளர்க்கும் பெண்களையும் சேர்த்தே இது தாக்குகிறது.அவர்களது உழைப்பை, தன்னம்பிக்கையை,வெற்றியை கணக்கில்கொள்ளாமல் ஆண் == பாதுகாப்பு என்று எல்லார் மனதிலும் விதைக்கிறது!இந்த விளம்பரத்தை, ரேணுகாவின் சார்பாக‌,கற்பகத்தின் சார்பாக‌, ஆண் துணையில்லாமல் ஆணும் பெண்ணுமாக ஐந்து பிள்ளைகளை படிக்க வைத்த ஆயாவின் சார்பாக கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

Thursday, April 04, 2013

ஆதிச்சநல்லூரில் தாழிகளைத் தேடி ஒரு பயணம்


இந்த வருட புத்தக கண்காட்சியில் ஒரு புத்தகம் வாங்கினோம். என்பிடியின் 'எலும்பு கல்லான கதை'. 

"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்தான் இது;" 

"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்பின் எலும்புதான் இது;"

 "ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்பின் எலும்பின் மீது மூடிய மண்தான் இது; "

என்று எலும்பின் மீது மூடிய மண், மண் மீது படிந்த ஆற்று மணல், மணலின் மீது ஓடும் ஆறு , அந்த ஆற்றின் நீரில் விளையாடும் சிறுமி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அடுக்கடுக்காக ,புதைந்து போன  டிரைசெரடாப்பின் படிமத்தை கண்டுபிடிப்பதாக அந்த கதை செல்லும். 

பப்புவுக்கும் அது போல தானும் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசை. அதோடு, சில அருங்காட்சியங்களில் கண்ட  தங்க,வெள்ளி நாணயங்கள், அரிக்க மேடு மணிகள்/நாணயங்கள், சாலர் ஜங்கின் விதவிதமான வாட்கள் என்று எல்லாமும் சேர்ந்து  பண்டைய காலத்தின் மீது ஒருவித ஈர்ப்பை உண்டாக்கியிருந்தன.

கடந்த வாரம் தூத்துக்குடி செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஆதிச்சநல்லூர்,சமீபத்தில் ஹெரிடேஜ் சைட்டாக அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. நிச்சயம் அங்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டோம். 

தூத்துக்குடியிலிருந்து திருவைகுண்டம் சென்றோம். அங்கிருந்து ஆதிச்ச நல்லூர் ஐந்து கி மீ தூரம்.  அந்த வழி முழுவதும் ஒரே  திருத்தலங்கள். நவதிருப்பதியாம். அங்கிருந்து ஆதிச்சநல்லூர் வந்தடைந்தோம்.  பாளையங்கோட்டை செல்லும் வழியில் ஒரு இடத்தில் இடதுபுறம் சாலை திரும்பியது. அந்த வழியில் பயணித்தால், ஒரே  தெரு.  இருபுறமும் வீடுகள். அதோடு சாலை முடிவுற்றது. இதற்குபின் எங்கு செல்வது, அல்லது அந்த அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்ட இடம் எங்கு இருக்கிறது என்ற எந்த விபரங்கும் தெரியவில்லை. ஊரிலோ ஈ காக்கை கிடையாது. 

வழியில் தென்பட்ட ஒருவர் ஓட்டுநருக்கு  வழி சொன்னார்.
நாங்கள் வந்த வழியிலேயே திரும்பி, இன்னும் சற்று முன்னால் போனால், வலது புறம் கோயில் வரும். அதற்கு எதிரில் திரும்பினால் ரயில்வே டிராக் வரும். அதுதான் இடம்.   கோயிலை பார்த்துவிட்டோம். அதற்கு எதிரில் இருந்த சாலையில் சென்றோம்.  வலதுபுறம் ஒரே மண்மேடு - முட்செடிகள். இடதுபுறம் ஏதோ பயிரிட்டிருந்தார்கள்.அருகில் ரயில்வே டிராக். ரயில்வே டிராக் தாண்டி இருபுறம் புளிய மரங்கள். 

இதற்கு மேல் எங்கு செல்வது என்று தெரியவில்லை. தாழிகள் இல்லாவிட்டாலும் ஹெரிடேஜ் சைட் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் ஒரு சிறு அறை/தகவல் பலகையையாவது எதிர்பார்த்திருந்தோம். எதுவுமில்லாமல், எந்த பக்கம் செல்வது என்றும் புரியாமல் அந்த மண்மேட்டில் நடக்கத் துவங்கினோம்.  மண்மேடு பரந்துவிரிந்தது. ஆங்காங்கே சிறு சிறு செடிகள். தொலைதூரத்தில் ஆடுகள் கூட்டமாக மேய்ந்துக் கொண்டிருந்தன. அருகில் மேய்ப்பர் முக்காடிட்டு நின்றுக்கொண்டிருந்தார்.  



வெயில் ஏறிக்கொண்டிருந்தது. கண்கள் ஏதேனும் ஏ எஸ் ஐ போர்ட் தென்படுகிறதா என்று தேடின. சற்று தூரம் நடந்தோம். ஒரு சில இடங்கள் பாறைகள் புதைந்திருந்தன. தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதையும் நாங்கள் காணவில்லை. ஆதிச்சநல்லூர் கிட்டதட்ட  கி மு பத்தாயிரத்துக்கும் முன்பாக காலகட்டத்தை சொல்கிறார்கள். கற்காலத்துக்கும் நியோலித்திக் காலகட்டத்துக்கும் இடைபட்டது. தாமிரபரணியின் ஆற்றங்கரையில் வளர்ந்த நாகரீகம். 

இத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இடத்தில் மக்கள் என்ன செய்திருப்பார்கள், எப்படி  வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணியபோது  அந்த எளிமையான   மண்மேடு வெறுமையாகக் காட்சியளிக்கவில்லை.  மனித குலத்தின் வரலாறாகவே தோன்றியது.இது இறந்தவர்களை புதைக்கும் இடம் எனில், அவர்கள் எங்கு வாழ்ந்திருப்பார்கள், அவர்கள் வீடு எப்படி இருந்திருக்கும் என்று அந்த கரடு முரடான நிலத்தில் யோசித்தபடி நடந்தோம். 

அங்கு கண்டெடுக்கப்பட்ட தாழிகளில், மனித எலும்புகளும், சமையல் பாத்திரங்களும்,  உலோகங்களும் இருந்ததாக சொல்கிறார்கள். தாழிகள் இரண்டு அடுக்குகளாக , ஒன்றை மூடி வைக்க இன்னொரு தாழியாக இருந்திருக்கிறது. அந்த தாழிகளின் மீது பல டிசைன்கள் வரையப்பட்டிருப்பதாக தொல்லியல் துறையின் தளத்தில் பார்த்திருந்தேன்.  இருந்தாலும், இவற்றுள்,  கூர்மையான சிறு சிறு ஆயுதங்கள்தான் ஹைலைட். அவை மிசோலித்திக் காலத்தை சேர்ந்தவை. சென்னைக்கருகில் இருக்கும் குடியம் குகைகள் நியோலித்திக் காலத்தை சேர்ந்தவை. இவை அதற்கும் முன்பாக, எனும்போது காலத்தை தாண்டிச் செல்லும் உணர்வு ஏற்பட்டது.

எதிர்பார்த்து வந்ததை, பப்புவுக்கு  காண்பிக்க முடியவில்லை . ஏமாற்றத்துடன்  கார் நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கு வந்தோம்.  எதிரில் இருந்த வயலில் ஒரு பைப்பிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடித்தது. அருகில் இருந்த இளைஞனிடம், விசாரித்தார் ஓட்டுநர். அதற்குள், எங்கிருந்தோ ஒருவர் வந்து சேர்ந்தார்.  தாழிகளை  தான் காட்டுவதாக அழைத்துச் சென்றார். நாங்கள் நடந்த இடத்துக்கு சற்று தொலைவிலேதான்.



கீழே பார்த்தால், புதையுண்ட தாழிகள். அவற்றுக்கு அருகிலேயே இன்னும் சில. அவற்றை தொல்லியல் துறையினர் இன்னும் தோண்டவில்லையாம்.



 ஆடுகள் மேய்ந்துக்கொண்டிருந்த பகுதியில்தான் அகழ்வாராய்ச்சி நடைபெற்றதாகவும் அனைத்தையும் சென்னைக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறினார். எங்களைப்போல் தேடி வருபவர்களுக்கு இந்த தாழிகளையும் தான் காட்டுவதாகவும் கூறினார். 


"அந்த காலத்தில் இறந்து போக மாட்டாங்கல்ல, குறுகிதான் போய்டுவாங்க, அவங்களை உள்ளே வைச்சு அவங்களுக்கு புடிச்சதை வைச்சு மூடிடுவாங்க"

அதற்குள் மேலும் சிலர் வந்து  விட்டனர். இவ்வளவு நேரம் எங்கிருந்தார்களோ தெரியவில்லை.

 
இந்த படங்களில் ஒரு கோடு போல புதையுண்ட பானைகளின் விளிம்பைக் காணலாம். உள்ளே எந்த பாட்டி அல்லது தாத்தா உறங்கிக்கொண்டிருக்கிறாரோ, தெரியவில்லை.



"இங்கனதான் போர்டு வைச்சிருந்தாங்க, மழையில விழுந்துடுச்சு" என்றார். அவர் காட்டிய இடத்தில் மற்றுமொரு தாழியின் உடைந்த பாகம் வெளித்தெரிந்தது. கம்பி மட்டும் கீழே கிடந்தது. 

 அதே மழைதான், இந்த தாழிகளையும் வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும், ரோம் மக்களோடு வாணிபம் செய்த அரிக்கமேட்டின்  மணிகளைm மண்ணிலிருந்து வெளியே கொண்டு வருவதுபோல! மழைதான் புதைந்துபோனவற்றை எப்படி மீட்டுக் கொண்டுவருகிறது, மண்ணிலிப்பவற்றையும் , மனதிலிருப்பவற்றையும்!!  

""உள்ளேருந்து நெறைய எடுத்தாங்க. நகையெல்லாம் இருந்துச்சு. தங்கக்காசு கூட இருந்துச்சு. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க" என்றார். (மிசோலித்திக்கில் நாணங்கள் இருந்தனவா அல்லது அவை பிற்காலகட்டத்தில் சேர்ந்தவையா?)

"இங்கதான் ஒரு வாட்ச்மேன் இருப்பார். இப்ப எங்கியோ போயிருப்பார் போலுக்கு,கவர்மென்டுலேருந்து ஆள் போட்டிருக்காங்க" என்றார், மேலும். 


நாங்கள், சற்று நேரம் அங்குமிங்கும் நடந்தோம். சில பாறைக் கற்களுக்கிடையில் உடைந்த பானைத்துண்டுகள் கிடந்தன. பப்புவுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும். உடைந்த பானைத்துண்டை நெடுநேரம் கையில் வைத்துக்கொண்டிருந்தாள். வந்தவர்கள் வந்ததுபோலவே, சட்டென்று வயல்களுக்குள் மறைந்து போனார்கள். மனித வரலாற்றின் கரையிலிருந்து, பிரமிப்பு அகலாமல் திரும்பினோம்.


Wednesday, April 03, 2013

டன் டிக்கிட்டு போய்ட்டா?

மெர்மெய்ட் என்றால் பப்புவுக்கு மிகவும் இஷ்டம். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசை கரைத்து தந்தேன். அதி உற்சாகமாகிவிட்டாள். அவற்றை மோல்டில் ஊற்றினாள். ஊற்றியவுடனே அசைத்து அசைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். "இதை தொட்டு பார்த்துக்கிட்டிருந்தா சரியா வராது, நைட் ஃபுல்லா இங்கியே இருக்கட்டும், அப்பதான் நல்லா காயும்" என்றேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா என்று பப்புவுக்கு பயம்/சந்தேகம் வந்துவிட்டது.

"பால்கனியில் விட்டுவைத்தால் திருடன் வந்து எடுத்துக்கிட்டு போய்ட்டா என்ன பண்றது?"

 அவள் செய்வது முக்கியமானது என்ற அவளது எண்ணத்தை கலைக்கவிரும்பாமல், 'நமக்கு முக்கியமானது எல்லாருக்கும் முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்க முடியாது' என்பதை அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று எண்ணியபடி லைட்டாக ஆரம்பித்தேன்.

"திருடங்க எல்லாம் ஏன் திருடறாங்க? அவங்ககிட்ட என்ன இல்லையோ  அதைத்தானே திருடறாங்க?"

உடனே இடைமறித்துக் கேட்டாள்,

"அப்போ, அவங்க இந்த மெர்மெய்டை திருடிட்டா நாம தப்பா எடுத்துக்கக்கூடாதுன்னு சொல்றியா?!!


அவ்வ்வ்வ்!!!

தலைப்பு: பப்புவுக்கு இந்த கதை ரொம்ப ஃபேவரிட். அதான்!

Thursday, March 21, 2013

பட்டர்பிளையில் சூரியனை பார்க்க ஒரு பயணம்

" ஒரு தேவதை வந்தது.அந்த தேவதைக்கு வயசாயிடுச்சுன்னு எனக்கு எல்லா மேஜிக்கும் கத்துக்குடுக்கறேன்னு கூப்பிட்டு போச்சு.ஒரு பெரிய ஜய்ஜாண்டிக் பட்டர்பிளை. அதுமேல நானும் தேவதையும் உட்கார்ந்துக்கிட்டோம்.  சூரியனுக்கு போலாம்னு சொன்னேன். பறந்து போய்க்கிட்டே இருக்கோம். தேவதைக்கு பசி வந்துடுச்சு. என்கிட்டேயும் எதுவும் இல்ல. அந்த தேவதை ஐஸ் மட்டும்தான் சாப்பிடும். அதுதான் அதோட ஃபுட். எங்க போறது ஐஸ்க்கு? பார்த்தா பட்டர்பிளை, ஒரு ஃபிரிட்ஜ் எடுத்துக்கிட்டு வந்திருக்கு. அதுல பார்த்தா ஐஸ் ட்ரேதான் இருக்கு. ஐஸ் க்யூப்ஸ் இல்ல. ஒரு பாட்டில்ல, ஐஸ் வாட்டர் இருக்கு. அதை தேவதை கையில ஊத்தினா அது ஐசா மாறிடுச்சு. தேவதை சாப்பிட்டுட்டு தூங்கிடுச்சு. நானும் பட்டர்பிளை மேல படுத்துக்கிட்டேன். அப்புறம் பார்த்தா சூரியன்னுக்குள்ள போயிட்டோம். அங்க ஒரே குளிர். ரொம்ப ஐஸா இருக்கு. பார்த்தா அது நெப்ட்யூன்!! நெப்ட்யூன்லதானே ஒரே ஐஸா இருக்கும்?! நெப்ட்யுனை சுத்தி பத்து நிலா....ஒன்னு க்ரீன், ஒன்னு பர்ப்பிள். ரெண்டு நிலாதான் நான் பார்த்தேன். 'வேணாம், நீ எர்த்துக்கு போ'னு பட்டர்பிளைக்கிட்டே சொன்னா அது பக்கத்துல இருக்க ஜூபிடருக்கு போயிடுச்சு."

அதுக்குள்ள ஸ்கூல் வந்துடுச்சி...ஈவினிங் சொல்றேன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போய்ட்டா பப்பு.


காலை எழுந்ததிலிருந்து 'கனவை சொல்கிறேன் கனவை சொல்கிறேன்' என்று ஒரே டயலாக். அதோடு 'நீ கேட்டா, உனக்கே ஆசையா இருக்கும்' என்று வேறு மார்க்கெட்டிங். 'ஸ்கூல் போறப்போ வழியில சொல்லு, இப்ப கிளம்பு" என்று அவளை கிளப்பியதில், இவ்வளவுதான் கேட்க முடிந்தது. மாலையில், மறந்திருப்பாள்.

சூரியனுக்கு உள்ளே போய் பார்க்க வேண்டும் என்றும், அதற்கேற்றாற்போல எரிந்துபோகாத உடையை சயிண்டிஸ்ட் ஆகி கண்டுபிடிக்கப்போவதாகவும் அவ்வப்போது சொல்லுவாள்.

அதோடு, சமீபமாக அவளது கனவில் அடிக்கடி ஒரு தேவதை வந்து உனக்கு 3 வரங்கள் தருகிறேன் என்று சொல்லும். அந்த தேவதை நேரில் வந்தால் கேட்பதற்கு, 3 விஷஸ் வைத்திருக்கிறாள்.

1. ஒரு மேஜிக் ஸ்டிக்
2.  எங்க பெரிய ஆயா திரும்ப உயிரோட வந்துவிட வேண்டும்.
3.எங்க ஃபேமிலில யாரும் இறந்தே போகக்கூடாது..எல்லோரும் அன்கவுண்டபிள் இயர்ஸ் வாழணும்!! 


அடிக்கடி இந்த விஷசை என்னிடம் சொல்லுவாள்.
இவை எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய கனவாக மலர்ந்துவிட்டதோ என்னவோ?!

Tuesday, March 19, 2013

ஆத்தா நான் பாசாயிட்டேன்!

மார்ச் ஏப்ரல் வந்துவிட்டால் போதும். சின்ன வயதில்தான் அந்த கேள்விக்கு பதில் சொன்னேன் என்றால், இப்போதும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக நான் எதிர்கொள்ளும் "எக்ஸாம் எப்போ" அல்லது "எக்சாம் முடிஞ்சுடுச்சா" என்ற கேள்விதான். பப்புவின் பள்ளியில் தேர்வுகளே கிடையாது. பெரும்பாலான  பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்றுதான் சொல்கிறார்கள், ஆனால் அப்படி தெரியவில்லை. (போன‌ ஜெனரேஷனுக்குஎக்சாம் இல்லையென்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லையோ?!)

முதல்முறை, பப்பு "எக்சாம்னா என்ன ஆச்சி" என்றாள்.(ஆம்பூரில், ஒருமுறை  "மார்க்ன்னா என்ன" என்று கேள்விகேட்டவரை அதிர்ச்சிக்குள்ளா க்கியதெல்லாம் வரலாறு.)கேள்வி கேட்பவருக்கு பதில் சொல்வதா, பப்புவுக்கு பதில் சொல்வதா என்று முழித்து ஒருவழியாக சமாளித்தேன். எக்சாம் இல்லையென்றால் ஒரு சிறு அதிர்ச்சி/புருவ உயர்த்தல். இப்போதாவது பரவாயில்லை, பப்புவுக்கு தமிழ் டிக்டேஷன் கொடுத்து பழகுவதால் அவளுக்கு 'எக்சாம்' என்பது பற்றி ஒரு ஐடியா கிடைத்திருக்கிறது எழுதிக் கொண்டேயிருப்பது என்பது போல.  சென்ற வருடம் ரொம்ப கஷ்டம்.(அவ்வ்வ்வ்வ்)எக்சாமுக்கு மார்க்,அதற்கு ரேங்க், அதிலும் அதிக மார்க்....எனக்கும் அதையெல்லாம் சொல்லி ஆப்போசிட் ரியாக்சன் ஆகிவிடபோகிறது என்று பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 'இந்த பள்ளிக்கூடம் முடித்து வேறு பெரிய பள்ளிக்கூடம் போகவேண்டும் என்றால் ஒரு பரிட்சை வைப்பார்கள். அதில் கேள்விகள் இருக்கும். அதை படித்து ஒரு பேப்பரில் எழுத வேண்டும்' என்று மட்டும் அவ்வப்போது சொல்லி வைப்பேன்..  உடனே, "ஆச்சி, அது  டேபிள்/சேர் போட்ட ஸ்கூலா ஆச்சி, அது வேணாம்" என்றாள். (அவ்வ்வ்வ்)

இந்த வருடமும், வீட்டுக்கு வந்தவர்கள்,நாங்கள் சந்தித்தவர்களிடமிருந்து அதே கேள்வியை எதிர்கொண்டோம். சென்ற வருடம் போலில்லை, பழகிவிட்டது.(ஹிஹி!) நேற்று ஏதோ கேள்வி கேட்டு விளையாடிக் கொண்டிருந்தாள் பப்பு. அவள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்பாள்.சத்தியமாக,பெரும்பாலும் அதற்கான பதில்கள் தெரியாது. 'புக்ல பார்த்து படிச்சுட்டு சொல்றேன்,பப்பு' என்பேன். "இப்போ, நீ என்னை கேளு" என்பாள். அதே கேள்வியை அவளை கேட்பேன்.
அவள் பதில் சொல்லுவாள்.(ஜூபிடர் சுத்தி இருக்க ரிங்ஸ் ஐஸும், தூசியும்தானாமே!!)

அதில், திடீரென்று, 'எங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்ல?" என்றாள்.

'சரி, அவளுக்கு புரியற மாதிரி சொல்லணும்' என்று எண்ணியபடி ஆயத்தமானேன். 'ப்ளான் பண்ண்ண்ணி சொல்ல‌ ஆரம்பிக்கணும்' என்று தயார்ப்படுத்திக்கொள்ள.....


"நீ என்னை கேளு"


"உங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்ல?"


"இப்போ எக்சாம்ல மார்க் வரும் இல்ல, அப்போ என்னாகும்? நெறைய மார்க் வேணும்ம்னு க்ரீடியாகிடுவோம் இல்ல. அதுக்குதான். அதுக்குதான் எங்களுக்கு எக்சாம்ஸ் இல்ல!"


......


"பவன் ஆன்ட்டியை கேட்டான், எங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்லன்னு. ஆன்ட்டி சொன்னாங்க, இப்போ நீங்க எல்லாரும் இருக்கீங்க. ஒருத்தர் நெறைய மார்க் வாங்கறீங்க.அப்போ மத்தவங்களுக்கு எப்படி இருக்கும்? எல்லாரும் ஆக்ட்விட்டி நல்லாதானே பண்றீங்க. அப்போ, ஒருத்தவங்களுக்கு மட்டும் கைதட்டினா ஹவ் வில் யூ ஃபீல்? க்ரீடி ரைட்? அதுக்குதான் எக்சாம்ஸ் இல்ல. புரிஞ்சுதா?"


Sunday, March 17, 2013

'கோயிங்....கோயிங்....கான்'

 கோவளம் கடற்கரை. ஒவ்வொருநாளும் சுமார் ஐந்தரைமணிக்கு  மக்கள் அங்கு கூடுகிறார்கள். கூட்டம் பலதரப்பட்டதாக இருக்கிறது. பெரும்பாலும் வடஇந்திய முகங்கள். தலைப்பாகைகளோடு, காந்தி தொப்பிகளோடு மற்றும்  சேலை தலைப்பால் முக்காடிட்ட முகங்கள். இது கன்னியாகுமரியின் கோவளம் கடற்கரை. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அறிவிப்புப் பலகை நம்மை வரவேற்கிறது.

கடற்கரைக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிரம்பிவிடுகின்றன. வாகனங்களிலிருந்து, விரைந்து இறங்கி கடற்கரைக்குச் அவசரம் அவசரமாக செல்ல முற்படுகிறார்கள், சிலர். 'கைய பிடி,' என்றும் 'ஓடாதே' என்றும் 'நில்லு நில்லு' என்றும் பொருள் தரக்கூடிய வார்த்தைகள் பல பாஷைகளில் கேட்கிறது.

'முத்து மாலை பார்க்கறீங்களா? ஒரிஜினல், மேடம். கிஃப்ட் குடுக்கலாம்' என்று கைகளில் மாலைகளுடன் சிலர் ஒவ்வொருவரையாக அணுகத் தொடங்குகிறார்கள். டாலர்களுடன் சில மாலைகள், டாலர்கள் இல்லாமல் சில என்று விதவிதமான வண்ணங்களில்,வகைகளில் மாலைகள் வாங்கத் தூண்டுகின்றன.

ஒவ்வொருவராக தத்தமது கூட்டத்துடன், குடும்பத்துடன் பாறைகளில் இடம் பார்த்து அமர்கிறார்கள். கால் நனைப்பவர்கள் கடலின் ஓரமாக சென்று நனைத்துவிட்டு திரும்புகிறார்கள். சிலர், பாறைகளின் நுனிக்குச் சென்று அடிக்கும் அலையின் சாரலை ரசிக்கிறார்கள். எதிர்பாராத நேரத்தில் உயரமான அலை அவர்களை நனைத்ததும் "ஓ" என்ற கூச்சல் எழும்புகிறது.

முக்காடிட்ட பெண், சற்று முதிர்ந்த வயதுடையவர். உடன் வந்த பெண்ணோடு கையை பிடித்தபடி, உயரம் குறைந்த ஒரு பாறையில் அமர்கிறார். அவருடன் வந்த ஆண்கள் ஜீன்சை மேலே உயர்த்தி,  அலைகளில்  விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது திரும்பி  இந்த பெண்களைப் பார்த்துக் கொள்கிறார்கள்.  வயதான பெண்மணியின் கணவர், சற்று தள்ளி நின்று கடலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று, அந்த ஆண்கள் இருவருடம் ஏதோ நினைவு வந்தவராய் குனிகிறார்கள். ஈர மணலைக் கூட்டி கட்டுகிறார்கள். அந்த இளம்பெண் தாயிடம் ஏதோ சொல்கிறார். அதற்குள்ளாக, அவர்களே தங்கள் தாயை கூப்பிட்டுக் காட்டுகிறார்கள். அவரும் சரி என்பதாக ஒரு தலையசைப்பைக் காட்டுகிறார். தனது கணவரை நோக்கி, "ஷிவ்லிங்க் பனாவோ" என்கிறார். அலை "ஷிவ்லிங்க்"கை  பாதியாக கரைத்திருக்கிறது.  கடற்கரையில், அடிக்கும் அலையின் அருகே சிவலிங்கம் அமைப்பது ஒரு சம்பிரதாயம் போல! 



இதற்குள்ளாக சூரியனின் உக்கிரம் கொஞ்சமாக குறைந்திருக்கிறது. ஐந்தரையிலிருந்து ஆறு மணி என்பது இவ்வளவு நேரமா என்று மலைப்பாக இருக்கிறது.  இப்போதும் சிலர் வேகவேகமாக வந்துபடி இருந்தனர், தாம்  எதையோ இழந்து விரும்பாதவர்களாக‌.  அன்றைய நாளின் வருகையாளர்கள் அனைவருக்காகவும் காத்திருப்பது போல ஒரே இடத்தில் அமைதியாக இருக்கிறது, சூரியன். இடையில்,ஒரு சிறு மேகக் கூட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விடுகிறது. இதற்குள், அலைகளில் ஆடிக்கொண்டிருந்த அனைவரும் ஆங்காங்கே அமர்ந்துவிட்டிருக்கின்றனர். படகுகளில், சற்றுத்தள்ளி இருந்த படிகளில், உயரமான பாறைகளில் நின்றபடி என்று மக்கள் கூட்டம் சட்டென்று அமைதியாகி விடுகிறது. வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை பார்க்கப்போகிறோம் என்பதுபோல எல்லா முகங்களும் சூரியனையே நோக்கியிருக்கின்றன.


கூட்டம் அமைதியடைந்ததும் தொடங்கும் நாடகம் போல, பொன்னிறம் சூழத் தொடங்குகிறது. அந்த மேகக்கூட்டத்திலிருந்து விடுபட்ட சூரியன், நம் கண்ணுக் கெட்டிய கடலின் ஓரத்தை எட்டித் தொடுகிறது.கூட்டத்தில் சிறு உற்சாகம். இந்த உற்சாகத்தைக் கண்டுக்கொண்டது போல, மெல்ல கடலில் மூழ்கத்தொடங்குகிறது சூரியன். பெரும்பாறை ஒன்றில் அமர்ந்திருந்தவர்கள், "கோயிங் கோயிங்" என்று கத்தத்தொடங்குகிறார்கள். இதில், எந்த வயது வித்தியாசமுமில்லை. அவர்களது உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. ஆனாலும், யாரும் அவர்களை திரும்பிப்பார்க்கவில்லை. ஒரு சிறு அசைவைக்கூட  பார்க்காமல் விட்டுவிடக்கூடாது என்பதுபோல கண்கள் அனைத்தும் சூரியன் மீதே இருக்கின்றன. 'இதோ பிடிக்க வரேன் பாரு' என்றதும் ஓடி ஒளியும் குழந்தையின் கண்ணாமூச்சியை நினைவுபடுத்துகிறது, இந்த 'கோயிங் கோயிங்' கோரஸ் குரல்களும், அதற்கேற்ப மறையும் சூரியனும்.


சூரியனையும், கடலையும் பார்க்க,  ஒரு கோன் ஐஸ்கிரீமை பார்ப்பது போல இருக்கிறது என்றாள் பப்பு,என்னிடம். கண்ணுக்குத் தெரியாத கோன் கடலுக்குக் கீழேயும், முக்கால் பாகம் வெளியே தெரியும் சூரியனும் செவ்வண்ண ஐஸ்க்ரீமை நினைவுபடுத்தின போலும். சூரியன் நம் கண்முன் மறையும் ஒவ்வொரு விநாடியும் உண்மையில் பூமியின் சுழற்சியே என்கிறேன் அவளிடம். சூரியனிலிருந்து திரும்பிய பப்பு, இப்போது பூமியிலிருந்து  சூரியனை நோக்கத் தொடங்குகிறாள். கோன் ஐஸ்க்ரீம் இப்போது தலைக்கீழாகி விட்டதுபோல இருந்தது,எனக்கு. சூரியனின் கால்வாசியே கடலுக்கு வெளியே. கிரகணத்தின்போது தெரியும் மோதிரத்தின் கல்லாக பளிச்சிடுகிறது சூரியன்,இப்போது.



"கோயிங் கோயிங்" போய் "கான்" என்று கத்துகிறார்கள்,அவர்கள். உடனே ஒரு கவுண்ட்டவுன் தொடங்குகிறது. "டென்...நைன்" என்ற இளைஞர்களின் ஒருமித்த குரல் சூரியனுக்கு கேட்டிருக்க வேண்டும். ஒன் என்று முடிக்கும் போது, சூரியனின் சின்னஞ்சிறு விள்ளலும் கடைசியாக கடலுக்குள் மறைகிறது. கூட்டத்தில் ஆங்காங்கே கைத்தட்டல்.   'ஆம், எல்லாம் ஒழுங்காக நடைபெற்றது' என்பது போல! தத்தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்துக்கொள்கிறார்கள், ஒரு மிகச்சிறந்த பர்ஃபார்மென்ஸை பார்த்ததுபோல‌. கைத்தட்டல், பாராட்டுகளோடு  சூரியன் ,உலகின் மறுமுனையில் ஏதோ ஒரு மலையின் உச்சியிலோ அல்லது பாலத்தில் மீதோ அல்லது வேறு கடலின் மற்றொரு கரையிலோ காத்திருக்கும் முகங்களைக் இதே நேரத்தில் கண்டிருக்கும்.  

 உலகின் மறுமுனையில் உதயமாவதைக் காண, இந்த சூரியனோடு கூடவே சென்றால் என்ன  என்று ஆசையாக இருந்தது.ஆனால், ஒரு இரவு பொறுத்தால் 'இதே சூரியன் இதே கடலில்' உதயமாவதை காணலாம்.சூரியன் மறைவதை கோவாவின் கடற்கரைகளில், கேரளாவின் ஏரியில்  கண்டிருக்கிறோம். அங்கெல்லாம் இவ்வளவு பெரிய கோளமாகக்  கண்டதில்லை. ஒரு மாபெரும் சூரியபந்து, தெளிவாக‌ ஒவ்வொரு கோடாக  கடைசிச் சுற்று வரை மறைவது இங்குதான். பப்புவால்  பூமி சுற்றுவதை உணர முடிந்ததாம்.  அப்போது, தலையும் லேசாக சுற்றுவது போல உணர்ந்தாளாம்.

கூட்டம் பாதியாக குறையத் தொடங்கியது. இன்னமும் வெளிச்சமாகத்தான் இருந்தது. ஆனால், இவ்வளவு நேரமும் 'சாலை' என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் இருந்தது. ஹாரன் ஒலிகளும், வாகனங்களை உயிர்ப்பிக்கும் ஒலிகளும் 'நாம் திரும்பிச் செல்ல வேண்டும்' என்பதை உணர்த்தின. நடப்பவர்களுக்கு இடமே இல்லாமல் வாகனங்கள் வரிசையாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன. கடலையும், செஞ்சாந்து தீட்டப்பட்ட வானத்தையும்  பார்த்துக்கொண்டே மெதுவாக நடக்கத்துவங்கினோம். அவ்வப்போது திரும்பிப்பார்த்துக்கொண்டோம். நெருப்பூட்டப்பட்ட பஞ்சு போல காட்சியளித்தது மேகம், இப்போது.



காலையில், நாங்கள் சூரிய உதயத்தை இதே கடலில் கண்டிருந்தோம். மாலையில், இதே கடலில் சூரியன் மறைவதையும் கண்ட பப்புவுக்கு இது எத்தனையாவது நாள் என்ற குழப்பம் வந்திருக்க வேண்டும். ஏனெனில், சூரிய உதயத்தை அல்லது சூரியன் மறைவதைத்தான் கண்டிருக்கிறாள். இரண்டையும், ஒரே நாளில் ஒரே கடலில்/இடத்தில் பார்ப்பது இங்குதான். அவளது சந்தேகத்தை என்னால் சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. 

"புரியலை, இன்னொரு தடவை சொல்லு?" என்றேன்,அவளிடம்.

ஏற்கெனவே இரண்டு முறை சொல்லியும் எனக்கு புரியாததால் அலுத்துப்போன பப்பு, சொன்னாள் "உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்"

:‍-)  


இடம்:

சன்செட் பாயிண்ட்
பே வாட்ச் மியூசியத்துக்கு அருகில்
கன்னியாகுமரி பஸ் நிறுத்தத்துக்கு அருகிலிருந்து 2 கிமீ தொலைவில்
தமிழக அரசு சுற்றுலாத்துறையின் அறிவிப்பு பலகையை காணலாம்.
இந்த குறிப்பிட்ட இடத்தில் சன் செட் மிக அருமையாக தெளிவாக இருக்கிறது. அருகில் அமைந்த சாலையின் வழியே சென்றால் கண்ணுக்கினிய கடற்கரைகள்,மீனவ கிராமங்கள் இருக்கின்றன.

Saturday, March 16, 2013

பப்பு டைம்ஸ்





                                                        பப்புவோட நாட்டுப்பற்று ;‍)


சோபாவில் இதைப்பார்த்ததும், எது அவளை தூண்டியிருக்கும் என்று அறிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தது. மூன்று கலர்களை பார்த்ததுமா அல்லது வெள்ளையின் நடுவில் இருக்கும் அந்த முத்திரையா என்று! ஆனால், கேட்கவில்லை. அவளுக்குத் தெரியாமல் போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டேன்.

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



முன்பெல்லாம், பள்ளியில் என்ன நடந்தது என்று வாயே திறப்பதில்லையே என்று கவலைப்படுவேன். இப்பொழுதெல்லாம், திறந்த வாய் மூடுவதில்லை. வகுப்பறையில் நடந்தது, சாப்பிடும் போது நடந்தது, க்ரௌண்டில் நடந்தது, ஃப்ரெண்ட்ஸ்கிடையிலான சண்டைகள் (ஸ்ஸ்ஸ்....என்னா பாலிடிக்ஸ்!!), யார் யாருக்கு ஃப்ரெண்ட் என்பதெல்லாம் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறாள். ஏதோ ஒரு தருணத்தில், விலாசினி குட்டி பொண்ணுதானே, இப்போதானே   சீனியருக்கு வந்தா என்று சொல்லிவிட்டேன்.  'பச்சமொளகா'வுக்கு சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!

"விலாசினியை சின்னப்பொண்ணுன்னு நினைக்காதே ஆச்சி, அவளுக்கு "பார்ட்ஸ் ஆஃப் எலபண்ட்'ஏ தெரியும்!! "


அவ்வ்வ்வ்வ்!!    :-))) 'பெரியவர்கள் என்பதற்கு என்னவெல்லாம் தெரியவேண்டியிருக்கு' என்றெண்ணி எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அவளது எதிரில் சிரித்தால் இன்னும் சுர்ர்ர்ர்ர்ர் ஆகி விடுவாள் என்பதால் சிரிக்கவில்லை!! 



குறிப்பு: பப்பு இப்பொழுது வளர்ந்துவிட்டாள். என்றாலும் அவள் இன்னும் சிறுமிதான். ஆனால், குட்டிப்பெண்ணாக இருக்கும்போது 'பெரியமனுசத்தனமாக' பேசினால் புன்னகைப்பேன். ஆச்சரியப்படுவேன். இப்பொழுது, வளர்ந்தபின்னால், குட்டிப்பெண்ணின் அறியாமையோடு பேசினால் சிரிப்பு வருகிறது!! என்னே, காலம் செய்த கோலம்!! (ஹிஹி...எல்லாம் ஒரு ஃபீலிங்ஸ்தான்!!)

Friday, March 15, 2013

"what for you?"

சாப்பிட சொன்னால் கண்டுக்கொள்ளாமல் அவள் இஷ்டத்துக்கு அங்கு செல்வதும் இங்கு செல்வதுமாக இருந்தாள். சற்று குரலை உயர்த்தி, இப்போ சாப்பிட வரலைன்னா அடிதான் என்றேன்.

கொஞ்சம் லேசாக மிரட்டினாலே பப்புவின் தன்மானம் பாதிக்கப்பட்டுவிடும்.சுர்ரென்று கோபம்.

நானும் விடாமல் 'இப்போ வரப்போறியா,இல்ல அடி குடுக்கட்டுமா' என்றேன்.

'நான் சாப்பிடமாட்டேன்.உனக்கென்ன?' - பப்பு

'உனக்கென்ன எனக்கென்னன்னுல்லாம் பேச கூடாது.பேட் மேனர்ஸ்.' - அடியேன்

'நான் பேட் மேனர்ஸா இருந்தா உனக்கென்ன? - பப்பு

'இன்னொரு வாட்டி உனக்கென்னன்னு வாயில் வரக்கூடாது.' என்றேன் கண்டிப்ப்பான குரலில்.

'what for you?' - பப்பு,என் குரலுக்கு சரியாக,சுவற்றிலடித்த பந்துபோல.

'ம்ம்..ஓகே..கடகடன்னு சாப்பிடு.' _ அவள் ஏதோ சொல்கிறாள் என்று நினைத்துக்கொண்டு,நான்.

'What for you?'

அப்புறம் தான் பல்பு பளிச்!பளிச்!!

உனக்கென்ன வோட இங்கிலீஷ் வெர்சன் தான் அதுவென்று!

Tuesday, March 12, 2013

"நான் அம்மாவாக போறேன்"

காலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்றுகொண்டிருந்தோம். (இப்போல்லாம் அப்டிதான் ஆகிடுச்சு, பப்புவுக்கு முன்னாடி நான் ரெடியாகி பப்புவோட லஞ்ச் பேகும் கையுமா முன்னாடி நிக்கிறது நாந்தான்!!!)


பின்னால் அமர்ந்துக்கொண்டிருந்த பப்புவிடமிருந்து ஒரு குரல்.

"எனக்கு அம்மா வேணும்"

(அவ்வ்வ்...சிலநாட்கள் முன்பு இந்த தேவதைகள் கதைகளை கண்ட/படித்த பாதிப்பில், "நீ என் ரியல் அம்மா இல்ல, நிஜ அம்மாகிட்டே கொண்டு போய்விடு" என்று சீரியசாக சொல்ல ஆரம்பித்து, பின்னர் கிண்டலுக்காக சொல்லுவாள். கொஞ்சநாட்களாக அதுவும் மறந்துபோயிருந்தது. 'சரி, அதுமாதிரிதான் போல,  ஆனால் இப்போது என்ன?  அவளை எதுவும் திட்டவோ கண்டிக்கவோ இல்லையே' என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே, திரும்பவும்,"

"ஆச்சி, எனக்கு அம்மா வேணும்"

"சரி, போய் தேடி கண்டுபிடிக்கலாம்" என்றேன்.

"இல்ல, எனக்கு ஜெயலலிதா அம்மா வேணும்"

(அவ்வ்வ்வ்வ்.....என்னா வில்லத்தனம்!!)

"சரி, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போலாம். "

"ஆச்சி, நான் அம்மாவாக போறேன்!!"

(ஆவ்வ்வ்வ்வ்...இதுக்கெல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணனும் யூசர் மானுவல் இருந்தா பரவால்லையே என்று நினைக்குபோதே)

"நான் ஜெயலலிதா அம்மாவாக போறேன். நானும் கலெக்ஷ‌ன்ல்ல நின்னு.."

ஏதாவது தவறாக சொல்லிவிட்டால் குரல் மெலிதாக ஆகிவிடும்.

"அது கலெக்சன் இல்ல....எலக்ஷன்"

"ஹேய்ய்ய்...நான் எலக்சன்னுதான் சொன்னேன். உன் காதுதான்...டப்பி காது. நீ காதுல பட்ஸ் விட்டு நோண்டறே இல்ல,அதான் உனக்கு கேக்கலை"

(அவ்வ்வ்வ் எனக்கு தேவைதான்!!)

"நான் எலக்ஷன்லே நின்னு சீஃப் மினிஸ்டராக போறேன்.அப்ப நாந்தானே அம்மா"

('அப்பா,என் வயித்தில பாலை வார்த்தே' என்று என் டயலாக் இருக்க வேண்டுமோ?!!) :‍)))

பப்புவுக்கு பெரிதாக ஆகி என்னவாக ஆவோம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினை. ஏதாவது ஒன்றாகத்தான் ஆக முடியும் என்பதையும் அவளால் ஒப்புக்கொள்ளவே முடியாது. 'ஒரே நேரத்துல எப்படி எல்லாமாக ஆவது' என்பதுதான் அவளது ஒரே கவலை அல்லது சவால். அவளுக்கு "ஆன்ட்டி"யாக மாறி பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். பின்னர், டெய்லராக ஆக வேண்டும். அதே சமயம், பெட்ரோலும் போட வேண்டும்('அவங்க கைலதானே காசு நிறைய இருக்கு' எனபது அதற்கான காரணம். ஏன்னா,பெட்ரோல் போட்டதும் அவர்கள் கையில்தானே எல்லாரும் காசு கொடுக்கிறோம்...ஹிஹி)அதே சமயம், ஸ்பேஸ் சயிண்டிஸ்ட் ஆகி ராக்கெட்டில் செல்ல வேண்டும்.புளூட்டோவையும் நெப்டியூனையும் போய் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்புறம், சுனாமி வராமல் இருக்க கண்டுபிடிக்க வேண்டும்.அப்புறம், 'உன்னை மாதிரி சாப்ஃட் எஞ்சினியர் ஆகணும்". இந்த நெவர் என்டிங் வாலில் கடைசியாக சேர்ந்திருப்பது,  'ஜெயலலிதா அம்மாவாக வேண்டும்....'

Saturday, March 09, 2013

"நான் முக்கியமா, காசு முக்கியமா?"

"ஆச்சி, உனக்கு நான் முக்கியமா இல்ல மில்லியன் லாக்ஸ் முக்கியமா?"-  பப்பு

பப்புவின் அகராதியில், அன்கவுண்டபிளுக்குப் அடுத்தபடியான அதிக மதிப்புகொண்ட எண் இந்த 'மில்லியன் லாக்ஸ்'.

 ஏன் திடீரென்று இந்த கேள்வி, எது பப்புவை இப்படி கேட்க வைத்ததென்று 

யோசித்தப்படியே....

"நீதான் முக்கியம்"

"ம்ம் கரெக்ட்!!" - பப்பு

"ஏன் கேட்டே?" (ஹப்பாடா! நான் பாஸ்ஸ்!!யே!!!)

"நீ கரெக்ட்டா திங்க் பண்றியா. ஹவ் யூ கேன் திங்க் குட்ன்னு பாக்கிறதுக்கு" - பப்பு

"ஓ...உன்னை கேட்டா நீ என்ன சொல்லியிருப்ப?"

உடனே ரோல் ப்ளே ஆரம்பமாகிவிட்டது.

"நீ பப்புவா இரு, நாந்தான் ஆச்சி. இப்ப நீ என்னை கேளு..." - பப்பு

"ஆச்சி, உனக்கு நான் உனக்கு முக்கியமா இல்ல மில்லியன் லாக்ஸ் முக்கியமா?" - நானேதான்!

"நீ தான் முக்கியம் பப்பு. ஏன் சொல்லு? நம்ம காசு போயிட்டா போலீஸ்கிட்ட சொல்லலாம். பப்பு போயிட்டா?! தோண்டிதானே எடுக்க முடியும்." -  பப்பு

"தோண்டி எடுக்க முடியுமா? அப்படின்னா?"

"இங்க பாரு, எனக்கு ஹார்ட் இருக்கு. காசுக்கு ஹார்ட் இருக்கா? எனக்கு சதை எல்லாம் இருக்கு. காசுக்கு அது எல்லாம் இருக்கா?  நான் செத்துட்டேன்னு வைச்சுக்கோ, எனக்கு உயிர் வைக்க முடியுமா? " - பப்பு

'ஒருவேளை நானும் இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டுமோ' என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே இப்படியெல்லாம் சொல்கிறாளே எனறு திடுக். 


எனது முகத்தில் தெரிந்த கிலியை புரிந்துக்கொண்டவள் போல மேலும் விளக்குகிறாள். (ஏற்கெனவே, 'உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது, உனக்கு புரிய வைக்கிறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்' என்றெல்லாம் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறேன்.இப்போ, இதுவேற!)

"இப்ப,ஆயா இருக்காங்க...இல்ல, பெரியாயா இருக்காங்க.ஓகே! பக்கத்துல காசு இருக்கு, நெறைய! அப்ப, காசு திருடன் எடுத்துக்கிட்டு போயிடறான். பெரியாயா இறந்துட்டாங்க இல்ல, அவங்களை நாம எங்க வைச்சிருக்கோம்? கீழதானே புதைச்சிருக்கோம். அவங்களை தோண்டி எடுக்க முடியுமா?ஆனா, போலீஸ் திருடனை புடிச்சு காசு கண்டுபிடிப்பாங்க இல்ல, அதான்." - பப்பு


பெரியாயாவின் இழ(ற‌)ப்பு பப்புவை படுத்தி எடுக்கிறது,போலும்!

Thursday, February 28, 2013

Innocence


Sandy Arabian sea shore
   friendly waves
    unmindful fishermen
       scattered sea shells
          of various sizes,
              different hues
                lovely patterns


Myself and my grand daughter
  walked hand in hand
    Now and then
        she shouted
'see here, what a lovely shell!'
'See there,another shell!'
and collected in a small bag
   soon filled the bag
"I want to show it to my
               great granny"
 who passed away recently,
  who loved her deeply,
    who lived her last days
         only for her
A big lump in my throat.

"Oh! She has become a star"

"Alright,I'll take it to the open terrace of our house
  and keep it there.

She will see my lovely collection from there"


I stunned.
  Her Love,
     innocence
        openness

Let them live long in her.

குறிப்பு: பெரிம்மா எழுதியது. சேமிப்புக்காக இங்கு.
 

Monday, January 28, 2013

"மை" "மை"

பப்புவுக்கு படித்த கதைகளை எனாக்ட் செய்வது மிகவும் விருப்பம். சிறுவயதிலிருந்தே இந்த பழக்கம் தொடர்கிறது என்றாலும் பெரும்பாலும் மற்றவர்களை நாடாமல், அவளாகவே விளையாடுவாள். பொம்மைகள்தான் அவளுக்கு விளையாட்டு நண்பர்கள்.அதோடு, மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்றும் எண்ணுவாள் போல. பார்ப்பது தெரிந்துவிட்டால்  கோபம் வந்துவிடும். அதனாலேயே, கண்டும் காணாமல் இருந்துவிடுவோம்.

 

அவ்வப்போது என்னைத்தான் போட்டு படுத்துவாள். அவள் சொல்வதற் கெல்லாம்  தலையாட்டுவதுதான் காரணம். , ' ஓடில்லாம் வர மாட்டேன்,இங்கியேதான் படுத்திருப்பேன்' என்ற எனது நிபந்தனை களுக்குட்பட்டு விளையாட்டை அமைத்துக்கொள்வாள். அதுவும், இந்த கதை நாடகம் ஒவ்வொரு சீசனுக்கும் மாறும், அவள் கேட்கும்/பார்க்கும் கதைகளைப் பொறுத்து.  மேலும் சொந்த சரக்கும் சில நேரங்களில்.


சில சமயங்களில், ராணி கதைகளில் நான் தான் பிரின்சஸ்.  ஒரே ராணி. அது அவள்தான். 'எனக்கு பர்தே டே பார்ட்டி' என்றும்,  என்னை பள்ளிக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு அவள் 'ஆபீஸ் செல்லும் விளையாட்டு' (அந்த விளையாட்டில் நான் அழவேண்டும், அவள் "பை" "பை" என்று சந்தோஷமாக ஆபீஸ் செல்வாள், அவளை தொடர்ந்து வரும் என்னை விட்டுவிட்டு.) என்னை போர்வை அல்லது பெரிய துண்டு போட்டு மூடி அலங்கரித்து என்று ஒரு களேபரம் செய்வாள். "ஆச்சி, இப்போ என்ன விளையாடப் போறோம்?பிரின்சசசசசஸ்" என்று அவள் சொன்னாலே படுக்கையை விட்டு எழுந்து ஓடிப்போய் எங்காவது ஒளிந்துக்கொள்வேன். அந்த அளவுக்கு பிரின்சஸ் விளையாட்டு என்னை பயமுறுத்திவிட்டது. ஆனாலும், சளைக்காமல், அவள் பிரின்சஸ் விளையாட்டுக்கு மார்க்கெட்டிங் செய்வாள். 'இந்த கேம்ல, அது இருக்கும், இது இருக்கு, அடுத்த பார்ட்ல மாடில பிரண்ட்ஸ்...' பார்ட் 1 பார்ட் 2 என்றாலே கிலி!!


இந்த‌ பொம்மை கட்டப்பட்டிருக்கும் துப்பட்டாவின் மறுமுனை பப்புவின் தலையில் கட்டப்பட்டிருந்தது. நீளமான தலைமுடியாம். கட்டிலின் மேல் தலைமாட்டுக்கருகில் நின்றுக்கொண்டு அவளது நீண்ட தலைமுடியில் மறுமுனையை கீழே விட்டு விட்டு இழுத்துக்கொண்டிருந்தாள். ஓ!! பப்புதான்   ரப்புன்சல். கூந்தலில் மறுமுனையில் கட்டப்பட்டிருப்பது அவளது அம்மா!!

சில சமயங்களில், ஜங்கிள் அனிமல் விளையாட்டு. அதுவும் புலி/சிங்கம், குருவி கதை.  தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தின் மீது குருவி விளையாடி எழுப்பி விடும். கோபம் வந்த குருவி அதன் பிடியிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பிவிடும். இதுதான் கதை. நான் தான் தூங்கிக்கொண்டிருக்கும் புலி/சிங்கம். என்மேல் வந்து விழுந்து விளையாடும் குருவி துரத்தி மிரட்ட வேண்டும். அதற்கு அவள் பயந்து ஓட வேண்டும்.  ஸ்ஸ்ப்பா!!


கொஞ்ச(ரொம்ப!!) நாட்களாக காணாமல் போயிருந்த இந்த விளையாட்டு நேற்று நினைவுக்கு வந்துவிட்டது,பப்புவுக்கு. திடீரென்று இந்த சதிவலையில் மாட்டிக்கொண்டேன். தூங்கவிடாமல், மேலே விழுந்து விழுந்து "கா" "கா" என்று கத்திக்கொண்டிருந்தாள் . 'ஹேய், அது காக்காவா? " என்று நான் சிரித்ததும், "இல்ல நான் மைனா..." என்று சொல்லிவிட்டு "மை மை " என்று கத்த ஆரம்பித்தாள். நான் சிரிப்பதை பார்த்ததும்   அவளுக்கும் புரிந்துவிட்டது போல..சிரிப்பில் சேர்ந்துக்கொண்டாள். அப்புறம், பெரிம்மாவிடம் சென்று, 'ஆயா, மைனா எப்படி கத்தும்" என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.  :-)))

Monday, January 21, 2013

A promise to keep....

"இப்ப குளிக்க போகப்போறியா இல்லையா" என்று பப்புவை தேடிக்கொண்டிருந்தேன். பேனாக்களும்(!) நோட்டும் இருந்தால் போதும். ஏதாவது எழுதிக்கொண்டிருப்பாள்.பாத்ரூமில் தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்க இங்கே உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தாள். செம கோவம். "அடி வாங்காம போக மாட்டேன்னு நினைக்கிறேன்" என்றபடி அருகில் சென்றேன். "வெயிட் பண்ணு வெயிட் பண்ணு" என்று இந்த பக்கத்தை கையில் கொடுத்தாள். "நீ தவுசண்ட் இயர்ஸ் இருக்கணும்" என்று என்னிடம் ப்ராமிஸ் வாங்கிய இரவோ அல்லது அதற்கு மறுநாளோதான் இதை எழுதியிருக்க வேண்டும். 


"I like you mom very much my dear
thank you mom. you are my real mom ocay (ஸ்ஸ்....சின்ட்ரெல்லாக்களும் ரப்புன்சல்களும் எனக்குக் கொடுத்த பேறு(ரு) இது! சண்டை போடும்போது "நீ என் ரியல் மாம் இல்ல" என்பாள். இப்போது பாச மிகுதியில் ரியல் மாம் ஆகிவிட்டேன்!) you shood not become star are (or) moon.
realy not ly(lie) are (or) story. I like you very much realy okay. it is a trooth (ஹிஹி...நம்பறேன் மகளே?!)"